29 ஜனவரி 2018

புனைவு என்னும் புதிர் - விமலாதித்த மாமல்லன்

சென்னையிலிருக்கும் போது எனக்கும் என் நண்பனுக்கும் அடிக்கடி புத்தக விஷயமாக விவாதம் வரும். அவன் புத்தகங்கள் படிப்பதே குறைவு, அதுவும் அர்த்தமுள்ள இந்துமதம் மாதிரி புத்தகங்கள். நான் புனைவுகள். அவனின் வாதம் புனைவுகள் உனக்கு எதை கற்று தருகின்றன. இதற்கு பதிலை என்னால் விளக்கமாக சொல்ல முடிந்ததில்லை. அதிகம் விவாதத்திற்குள்ளும் போக விரும்பாதவன் என்பதால், புனைவுகளிடமிருந்து பெறுவது என்பது அவரவர் கற்பனையை பொறுத்தது என்று அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிடுவது வழக்கம். 

இணையத்தில் வலம் வந்த பின்பு பல புத்தகப்பிரியர்களின் தளங்களில் புத்தக விமர்சனங்கள், மதிப்புரைகள் இன்னபிற உரைகளை காண முடிந்தது. பெரும்பாலனவை புத்தக விமர்சனம் என்ற பெயரில் கதைச் சுருக்கததை கூறுவதுடன் முடிந்தது. ஆர். வி, அறிமுகத்துடன் அவரை அப்புத்தகம் எப்படி பாதித்தது என்பதை மட்டும் எழுதும் பாணி பிடித்திருந்தது. நான் இந்த தளத்தில் எழுதும் போது அதே முறையை முடிந்த வரை கையாள ஆரம்பித்தேன். இது புதிய வாசகனுக்கு பயன்படாது, குறிப்பாக அசோகமித்திரனின் கதைகள் என்ன சொல்கின்றது என்பதை எப்படி விளக்க? அது ஒரு அனுபவத்தை தருகின்றது, அதை விளக்கமாக சொல்வது ஒரு ஆசிரியருக்குத்தான் கை வரும் இல்லை ஒரு நல்ல எழுத்தாளரால் முடியும்.