எச்சரிக்கை - 1
பெரிய பதிவு. கொஞ்சம் சுய புராணமும், அந்நிய மதவிமர்சனமும் கலந்திருக்கின்றது.
எச்சரிக்கை - 2
இது புத்தகத்தைப் பற்றிய முதல் பதிவு, இரண்டாம் பாகம் விரைவில்.
ஆங்கிலத்தில் Breaking India என்ற பெயரில் வெளிவந்த நூல், மூல நூலின் ஆசிரியர்களில் ஒருவரான அரவிந்தன் நீலகண்டனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. வெளிவந்த போதே வாங்க நினைத்த புத்தகம், எப்படியோ தவறிவிட்டது. கிண்டல் அன்லிமிட்டடில் கிடைக்கின்றது.
நம்மில் பெரும்பாலனவர்கள் தினசரி செய்திகளில் பார்க்கும் பல நிகழ்வுகளை போகின்ற போக்கில் படித்துவிட்டு போய்விடுவோம். நம் வாழ்க்கையில் அது என்ன பெரிய தாக்கத்தை உண்டாக்கி விடப் போகின்றது என்பதே நம் எண்ணமாக இருக்கும். ஆனால் பல சமயம், அதன் பின்னால் மிகப் பெரிய சர்வ தேச சதி இருந்தால் கூட ஆச்சர்யப்பட முடியாது. ஜல்லிக்கட்டிற்கு தடை என்பது நம் தினசரி வாழ்வில் எந்த தாக்கத்தை உண்டாக்க போகின்றது. ஒன்றுமில்லை. ஆனால் அதன் பின்னால் இருக்கும் வலை மிகப்பெரியது என்பதை இன்று பலர் அறிந்திருக்கின்றார்கள். அதுவும் அதன் ஒரு பகுதியைத்தான். நாட்டு மாட்டை ஒழிக்க முயற்சி என்பதாகத்தான் அதைப் பார்க்கின்றார்கள், ஆனால் அதனோடு இந்து மதம் சார்ந்த , நமது மண்ணின் பாரம்பர்ய, நிகழ்வை அழிக்க செய்யும் முயற்சி என்பது மறைக்கப்படுகின்றது. ஒருவேளை அதை மறைக்கவே நாட்டுமாட்டினம் என்பதை கூட பெரிதாக்கியிருக்கலாம். ஃபேஸ்புக்கில் ஒருவர் ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார் "இன்று ஜல்லிக்கட்டு கொண்டாடக்கூடாது என்று சொல்பவர்கள் நாளை பொங்கல் வைக்கக் கூடாது என்பார்கள்" என்று, மிகத்தாமதம். அது ஏற்கனவே நடந்துவிட்டது. நமது பாரம்பர்யமுறைப்படி வீட்டு வாசலில் பொங்கல் வைப்பதை பிற மதத்தவர்கள் எதிர்க்கின்றார்கள் என்ற காரணத்திற்காக தடை செய்ய காவல்துறையே வந்தது. ஆனால் இது எல்லாம் நமக்கு தெரிவதில்லை.