24 பிப்ரவரி 2017

உடையும் இந்தியா? - ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன்

எச்சரிக்கை - 1
பெரிய பதிவு. கொஞ்சம் சுய புராணமும், அந்நிய மதவிமர்சனமும் கலந்திருக்கின்றது. 
எச்சரிக்கை - 2
இது புத்தகத்தைப் பற்றிய முதல் பதிவு, இரண்டாம் பாகம் விரைவில்.

ஆங்கிலத்தில் Breaking India என்ற பெயரில் வெளிவந்த நூல், மூல நூலின் ஆசிரியர்களில் ஒருவரான அரவிந்தன் நீலகண்டனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. வெளிவந்த போதே வாங்க நினைத்த புத்தகம், எப்படியோ தவறிவிட்டது. கிண்டல் அன்லிமிட்டடில் கிடைக்கின்றது.

நம்மில் பெரும்பாலனவர்கள் தினசரி செய்திகளில் பார்க்கும் பல நிகழ்வுகளை போகின்ற போக்கில் படித்துவிட்டு போய்விடுவோம். நம் வாழ்க்கையில் அது என்ன பெரிய தாக்கத்தை உண்டாக்கி விடப் போகின்றது என்பதே நம் எண்ணமாக இருக்கும். ஆனால் பல சமயம், அதன் பின்னால் மிகப் பெரிய சர்வ தேச சதி இருந்தால் கூட ஆச்சர்யப்பட முடியாது. ஜல்லிக்கட்டிற்கு தடை என்பது நம் தினசரி வாழ்வில் எந்த தாக்கத்தை உண்டாக்க போகின்றது. ஒன்றுமில்லை. ஆனால் அதன் பின்னால் இருக்கும் வலை மிகப்பெரியது என்பதை இன்று பலர் அறிந்திருக்கின்றார்கள். அதுவும் அதன் ஒரு பகுதியைத்தான். நாட்டு மாட்டை ஒழிக்க முயற்சி என்பதாகத்தான் அதைப் பார்க்கின்றார்கள், ஆனால் அதனோடு இந்து மதம் சார்ந்த , நமது மண்ணின் பாரம்பர்ய, நிகழ்வை அழிக்க செய்யும் முயற்சி என்பது மறைக்கப்படுகின்றது. ஒருவேளை அதை மறைக்கவே நாட்டுமாட்டினம் என்பதை கூட பெரிதாக்கியிருக்கலாம். ஃபேஸ்புக்கில் ஒருவர் ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார் "இன்று ஜல்லிக்கட்டு கொண்டாடக்கூடாது என்று சொல்பவர்கள் நாளை பொங்கல் வைக்கக் கூடாது என்பார்கள்" என்று, மிகத்தாமதம். அது ஏற்கனவே நடந்துவிட்டது. நமது பாரம்பர்யமுறைப்படி வீட்டு வாசலில் பொங்கல் வைப்பதை பிற மதத்தவர்கள் எதிர்க்கின்றார்கள் என்ற காரணத்திற்காக தடை செய்ய காவல்துறையே வந்தது. ஆனால் இது எல்லாம் நமக்கு தெரிவதில்லை. 

07 பிப்ரவரி 2017

உன்னைப் போல் ஒருவன் - ஜெயகாந்தன்

ஜெயகாந்தனின் குறுநாவல், விகடனில் வந்து பின்னால் அவரால் திரைப்படமாகவும் எடுக்கப்பட்ட நாவல்.  

பெரும்பாலும் முன்னுரைகள் என்பவை அப்புத்தகத்தை பற்றிய சிறு குறிப்பாக அமையும், ஆனால் ஜெயகாந்தனின் முன்னுரைகள் பெரும்பாலும் ஒரு கட்டுரை போலவே அமையும். நூலையொட்டிய அவரது பல கருத்துக்கள், நாவல் என்னும் சட்டகத்தில் அடைக்க முடியாத எண்ணங்களை அவர் முன்னுரையில் எழுதுகின்றாரோ என்றும் தோன்றும். சில சமயம் அது ஒரு விளக்கம் போலவும், நாவலை படிக்க ஒரு கோனார் நோட்ஸ் போலவும் இருக்கும். அந்த காரணத்திற்காகவே அவரது முன்னுரைகளை படிப்பதில்லை. நாவலை படித்து முடித்த பின் அதை படிப்பது வழக்கம். "வாழ்வின் இருண்ட பக்கங்களை மட்டுமே காட்டுபவன்" என்ற பெயர் தனக்கிருப்பதாக அவரே மற்றொரு புத்தகத்தின் முன்னுரையில் கூறுகின்றார். அதற்கான பதில் இப்புத்தகத்தின் முன்னுரையில் கிடைக்கின்றது. ஒளிமிகுந்த நகரத்தில்தான் இருளடைந்த குடிசைகளும் இருக்கின்றன. இரண்டும் சேர்ந்ததுதான் நம்முலகம். ஏதாவது ஒன்றை மட்டும் பற்றிக் கொண்டு கூவுவது முட்டாள்த்தனம். அதைத்தான் முன்னுரையில் கொஞ்சம் பெரிய நடையில் விளக்குகின்றார்.

ஜெயகாந்தனை பற்றி பலர் கூறும் விமர்சனம், அவரது கதைகளின் இன்றைய தேவை. அக்னிபிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள், பாரீஸுக்கு போ போன்றவை இன்று கொஞ்சம் காலாவதியான விஷயம் போல இருக்கலாம். ஆனால் எங்கோ ஒரு மூலையில் அதற்கான தேவையிருக்கின்றது என்பது செய்திதாள்கள் காட்டும். இந்த நாவல், என்றைக்கும் தேவையிருக்கும் நாவல். நாவலில் பாத்திரங்கள் ஒரு சேரிப்பகுதி வாழ் மக்கள். ஆனால் நாவலில் வரும் அதே பிரச்சினை பங்களாவிலும் வரலாம்.

03 பிப்ரவரி 2017

வலவன் - சுதாகர் கஸ்தூரி

முதலில் வளவன் என்பதைத்தான் தவறாக வலவன் என்று படித்துவிட்டேனோ என்று நினைத்தேன். இல்லை, வலவன்தான். வலம் வருபவன் வலவன். அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தேன்.  வலம் வர உதவுபவன் வலவன். ஓட்டுனர். "வலவன் ஏந்தா வானூர்தி" என்று ஒரு சங்கப்பாடல் இருப்பதாகவும், அது ஓட்டுனர் இல்லாத வான ஊர்தி பற்றியது என்றும், தமிழர்கள் அக்காலத்திலேயே செவ்வாய் கிரகத்திற்கு சென்றார்கள், என்று "உண்மையான் தமிழனாக இருந்தால் 'சேர்' செய்" கோஷ்டிகளில் ஒன்று எழுதியிருந்தது. சங்ககால வலவன்களை பற்றி எழுத எங்கு போக, இந்தக்கால வலவன்களான கார் ஓட்டுனர்கள் பற்றிய கதைகள்.

நாம் சந்திக்கும் ஓவ்வொருவரிடமும் கதைகள் ஏராளமாக இருக்கும். கற்பனையாசிரியர்கள் கற்பனை செய்வதை விட நிஜத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சிலருக்கு என்னை மாதிரி பல புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பது அரிது. தினமும் அதே மனிதர்கள். ஆனால் பயணம் செய்பவர்களுக்கு, ஏகப்பட்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பயணத்தை தொழிலாக கொண்டவர்களுக்கு எழுதவும் தெரிந்தால், நமக்கும் அந்த மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர் சுதாகர் கஸ்தூரி, தொழில் முறையில் அதிக பயணம் செய்பவர் என்று நினைக்கின்றேன். அந்த பயணங்களில் சந்தித்தவர்களை கதைகளாக்கியிருக்கலாம் என்பது அனுமானம். ஆனால் நம்மால் அவர் சந்தித்த மனிதர்களை, நம மனதிற்குள் சந்திக்க முடியவில்லை.

02 பிப்ரவரி 2017

டர்மரின் - 384

சுதாகர் கஸ்தூரியின் புதிய நாவல். இதற்கு முன் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கின்றார். படித்ததில்லை. இதுதான் முதல். விஞ்ஞானத்தை பின்புலமாக வைத்து பலர் பல கதைகள் எழுதியிருக்கின்றார்கள். சுஜாதா, ஜெயமோகன், மாலன் என்று. அவை வேறு வகை. இக்கதைக்கும் விஞ்ஞானத்திற்கும் சம்பந்தம் கிடையாது.  இதை அந்த வகையில் சேர்க்கமுடியாது.  இது விஞ்ஞான ஏரியாவில் நடக்கும் குற்றங்களை பற்றிய கதை. இந்த வகையில் ராஜேஷ்குமார் ஏகப்பட்ட கதைகளை எழுதிதள்ளியிருக்கின்றார். 

இது உயிரியல் ஆராய்ச்சியின் பிண்ணனியில் எழுதப்பட்ட கதை. தாஸ் எண்ணும் விஞ்ஞானி, தன் ஆராய்ச்சி தகவல்களை அபிஜித் என்பவனிடம் தருகின்றார். தாஸ் காணாம்ல போகின்றார், தகவல் அடங்கிய 'எழுதுகோல் ஓட்டியும்' (பென்ட்ரைவ் :-) ) காணாமல் போகின்றது. போலிஸ் வேட்டையில் இதன் பின்னால் இருப்பது டர்மரின் என்னும் மூலக்கூறு அதனுடன் ஒரு எண் என்பது கண்டுபிடிக்கப்படுகின்றது. காப்புரிமை, அந்நிய நாட்டு சதி என்று கதை நடக்கின்றது

களம் பெரிய களம், நன்றாக அடித்து ஆடியிருக்க வேண்டும். சறுக்கி விழுந்திருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் ஒரு சிறிய பரபரப்புடன் ஆரம்பிக்கும் கதை பின்னால் டொய்ங்ங் என்று போகின்றது. படிக்கும் வாசகனை கொஞ்சம் கூட உள்ளிழுக்காத நடை . உயிரியல் ஆராய்ச்சி என்பதை எளிதாக புரியவைக்க வேண்டும் என்று நினைப்பது சரிதான், ஆனால் அதை எளிமையாக சொல்லியிருக்க வேண்டும். சில தொழில்நுட்ப ரீதியான வார்த்தைகளை தமிழில் மொழிபெயர்க்கும் போது அது சுத்தமாக புரியாமல் போகத்தான் வாய்ப்பிருக்கின்றது. மின்கடத்தி, அயனி என்பதெல்லாம் தமிழ், சரிதான், ஆனால் அது முழுக்க அறிவியல் விஷயங்களை தமிழிலேயே படிக்கும் தலைமுறைக்குத்தான் சரியாகும். அனைவரும் +2விற்கு பிறகு அனைத்தையும் ஆங்கிலத்திலேயே படிக்கும் போது இவையெல்லாம் புரியாது. அதை அப்ஸ்ட்ராக்ட்டாக சொல்லியிருந்தால் கூட போதுமானது. கொஞ்சம் ஆழமாக விளக்க போகி அது விலக்கத்தைதான் தருகின்றது.

01 பிப்ரவரி 2017

எக்ஸைல், ராஸ்லீலா , தேகம் - சாருநிவேதிதா

சாருநிவேதிதா ஒரு சுவாரஸ்யமான பத்தி எழுத்தாளர். ஆனால் அவர்து நாவல்கள் எனக்கு அலர்ஜ்ஜியையே தருகின்றன. ஜீரோ டிகிரி வாங்கி படித்து, ஒரு எழவும் புரியாமல் கட்டி பரணில் வைத்துவிட்டேன். அடுத்ததாக பாதிவிலைக்கு கிடைக்கின்றதே என்ற அல்ப ஆசையில் எக்ஸைல் என்ற நாவலை வாங்கி, அதையும் ஜீரோ டிகிரியுடன் துணைக்கு வைத்துவிட்டேன். இந்தமுறை எந்த செலவுமில்லை, தைரியமாக கிண்டில் அன்லிமிட்டடில் இரண்டையும் இறக்கி படித்து பார்த்தேன். 

தேகம் புத்தக வெளியீட்டு விழாவில், இந்த புத்தகத்தை மிஷ்கின் சரோஜாதேவி புத்தகம் என்று கூறி வாங்கி கட்டிக்கொண்டார். அது எல்லாம் கொஞ்சம் ஓவர். அந்தளவிற்கு மோசமாக எல்லாம் இல்லை. ஆனால் படிக்கும் போதே ஒரு ஆயாசம் ஏற்படுகின்றது. அவரை தொடர்ச்சியாக படித்துவருபவர்களுக்கு மறுபடியும் அதே கதையா என்றுதான் தோன்றும். வாதையை பற்றிய கதை, வதையில் ஆரம்பித்து காமத்தின் வழி சென்று கடவுளை அடையும் கதை என்று ஒரு உபாசகர் இந்த நாவலை பற்றி எழுதியிருந்தார். உபாசகர்கள் அப்படி பாஷ்யம் எழுதாவிட்டால்தான் அதிசயம். ஒரு பக்தர், ஜீரோ டிகிரியை அடிக்கடி வாங்குவாராம். பாவம் ஏதாவது ஒரு பிரதியிலாவது அது புரிந்து விடாதா என்ற எண்ணமோ என்ன எழவோ?

ராஸலீலா அவரது அஞ்சல்துறை அனுபவங்களோடு ஆரம்பித்து எங்கெங்கோ போகின்றது. எக்ஸைலும் அதே.