27 ஜனவரி 2017

ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள் - ஜெயகாந்தன்

ஜெயகாந்தனின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கூறப்படும் நாவல். பீம்சிங் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்துள்ளது. ஜெயகாந்தன கதைகளின் பிரச்சினை, அது பேசக்கூடிய பொருளின் காலம். சிலவற்றின் தேவை இன்று இல்லை. இந்நாவல் அது போன்ற தோற்றத்தை தரும் நாவல்.  கதை சுருக்கம், கல்யாணி நாடக நடிகை, ரங்கன் பத்திரிக்கை ஆசாமி. இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். பின்னர் விவாகரத்து செய்ய விண்ணப்பிக்கின்றனர். ஆனால் கல்யாணியின் உடல்நலக்குறைவு அம்முடிவை சோதிக்கின்றது. 

சிறிய நாவல். கிண்டில் அன்லிமிட்டடில் படித்தது. கல்யாணியை ஒரு குற்றங்குறையில்லாத பெண்ணாக படைத்துவிட்டார். ரங்கனின் மீது அவளுக்கு இருப்பது எதிர்ப்பார்ப்புகளற்ற காதல். அது ஒரு பருப்பொருளாக் இருந்திருந்தால் ஏதாவது மியூசியத்தில் வைத்து காத்திருக்கலாம். கடைசியில் பைனரியாக வைத்து காக்கவேண்டியதுதான். சரி. ரங்கனின் மீது இருக்கும் இருப்பு அவளை அவன் பக்கம் இழுத்தாலும், திருமண என்பதை எதிர்பார்க்காததால், அவன் விலகிச்செல்லும் போதும் அதே மகிழ்ச்சியுடன் அவளாள் சிரிக்க முடிகின்றது என்று நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

ரங்கன் என்றைக்குமான ஆண். அவனுக்கு அவனது பாசங்கற்ற உள்ளம் திருமணம் செய்யதூண்டுகின்றது. அதுவே அவனை விவாகரத்திற்கும் செலுத்துகின்றது. சில உறவுகள் எட்ட இருந்தால் மட்டுமே இனிக்கிம். அருகில் சென்றால் அது தொடர்வது கஷ்டம். உண்ணும் உணவிலிருந்து அரசியல் வரை எங்காவது உரசி தொலையும். திருமணம் என்பது கொஞ்சம் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. திருமணம் கிட்டத்திட்ட ஒரு கட்டு. ஒரு ஒப்பந்தம், அதில் ஆரம்பிப்பது மெதுவாக மலர்ந்து ஒரு கடினமான பந்தமாக நிலை பெறுகின்றது. முதலில் அந்த ஒப்பந்தத்தை மதிப்பது அவசியம். ஒருவருடன் வாழும் போது, விட்டு கொடுத்தலும், அன்பும் தேவை. அந்த அன்பே அடிநாதம் என்பதையே நாவலும் காட்டுவதாக தோன்றுகின்றது. ஏதேதோ காரணங்களால் பிரிந்து சென்றாலும், இறுதியில் கல்யாணியின் உடல்நிலை காரணமாக அவளுடன் வாழுவதற்கு காரணம் அன்பேயன்றி ஜெயகாந்தனே கூறுவது போல மனிதாபிமானமாகது என்று தோன்றுகின்றது.

பாத்திரங்கள் வழக்கமான ஜெயகாந்தன் பாத்திரங்கள். பேசிக்கொண்டே அல்லது சிந்தித்துகொண்டே இருக்கின்றன. எதையும் ஆழக்கீறி ஆராய்ந்து பார்க்கின்றனர். வளவளவென்று பேசுவதும், அவர்கள் சிந்திப்பதை படிப்பது இந்நாவலில் மிகவும் சோர்வூட்டுகின்றது. அதுதான் எனக்கு பட்ட குறை.

மற்றபடி ஒரு நல்ல நாவல். ஆனால் எழுதப்பட்டமுறையும் நடையும் இன்றைக்கு எனக்கு அந்நியமாக தோன்றுவதால் ஒரு சிறந்த நாவலென்று கூற முடியாது.

17 ஜனவரி 2017

இந்திரா செளந்திரராஜன் நாவல்கள்

சீரியஸ் புத்தகங்களாக் படித்து படித்து மண்டை காய்ந்து போயிருந்தது. ஜாலியான, விறுவிறுப்பான கதைகளை படிக்க வாய்ப்பில்லை. அது போன்ற கதைகளை ஒருதடவை அல்லது இரண்டு தடவை படிக்கலாம். பணம் கொடுத்து வாங்க மனமில்லை. என்ன செய்ய என்று யோசித்த போது கண்ணில் பட்டது கிண்டில் அன்லிமிட்ட. மாதம் 199 மட்டும், கிண்டில் அன்லிமிட்டட் வகையில் வரும் புத்தகங்கள் அனைத்தையும் இலவசமாக படிக்கலாம். நல்ல சான்ஸ். கிண்டில் வாங்க வேண்டும் என்றும் நீண்டநாள் ஆசை. இரண்டையும் சேர்த்ததில் ஏராளமான புத்தகங்கள் கையில். வகையாக மூன்று நாள் பொங்கல் விடுமுறை வேறு. படித்து தள்ளிவிட்டேன். உண்மையில் சொல்லப்போனால், சிறு வயதில் படித்த அந்த வேகம் மீண்டும் கிடைத்த குஷி. சும்மா சொல்லக்கூடாது கிண்டில் சூப்பர்தான். கண் வலி, கை வலி ஏதுமில்லை. புத்தகத்தில் படிப்பது போன்ற பிரமையும் தருகின்றது. என்ன சைஸ் தான் கொஞ்ச சிறியது.

முதலில் படிக்க நினைத்தது மசாலா கதைகள்தான். சிறுவயதில் விகடனில் தொடராகவந்த ரகசியாமாய் ஒரு ரகசியம். விகடனை வாரா வாரம் எதிர்பார்க்க வைத்த ஒரு தொடர். ஒரு கச்சிதமான மர்ம நாவல். அதில் ஆரம்பித்து இந்திரா செளந்திரராஜனின் பெரும்பாலான நாவலகளை படித்து முடித்தேன். மூன்று நாட்கள் போனது தெரியவில்லை. 

க்ரைம் கதைகள் எழுதுவது ஒரு வகை.சில பல கொலைகள், அதற்கு சில காரணங்கள். பணம், புகழ், பதவி. இவை பெரும்பாலும் நவீன யுக கதைகள். அதில் கொஞ்சம் அமானுஷ்யத்தை சேர்த்தால், இவரின் கதைகள். ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிராபகர், சுபா இவர்களின் கதைகள் ஒரு வகை. இந்திரா செளந்திரராஜன் பாணி தனி பாணி. இவரை போன்று எழுதும் மற்ற எழுத்தாளர்கள் மிகக்குறைவு. கலாதர் என்று ஒருவரின் சில கதைகள் படித்திருக்கின்றேன், பிறகு தெலுங்கு எழுத்தாலர் எண்டமூரி வீரேந்திரநாத். இவர்களின் எழுத்து நமது பாரதத்திலிருக்கும் பல அமானுஷ்ய, பழைய விஷ்யங்களை நவீன குற்றங்களுடன் கலந்தளிப்பது. முடிவில் எது உண்மை என்பதை வாசகர் யூகத்திற்கே விட்டுவிட்டு போவது. உதாரணம் எண்டமூரி வீரேந்திரநாத்தின் துளசி. சைக்கியாட்ரிஸ்ட், மந்திரவாதி, டாக்டர் மூவருமே தன் வெற்றி என்பதாக கதை முடியும். 

12 ஜனவரி 2017

Scion of Ikshvaku - Amish Tiripathi

அமிஷ் திரிபாதியின் அடுத்த நாவல். ராம் சந்திரா சீரீஸ் என்ற தலைப்பில் ஆரம்பமாகியுள்ளது. 

ராமாயணத்தை முந்தயை நாவல் பாணியில் எழுத ஆரம்பித்துள்ளார். ராமாயணத்தை மாற்றி எழுதுவது கொஞ்சம் சுலபமானதுதான். ஏனென்றால் ஏற்கனவே பல ராமாயணங்கள் வழக்கில் இருக்கின்றன. புத்திசாலியான எழுத்தாளர் அனைத்தையும் கலந்து கட்டி ஒரு புதிய ராமாயணத்தை உண்டாக்கிவிடலாம். ராவணன் சீதையை கடத்துவதுடன் நாவல் ஆரம்பமாகின்றது. ஏன்? அப்பொழுதுதானே வாசகன் முதல் அந்தியாத்திலேயே எழுந்து உட்காருவான். பிறகு மெதுவாக முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் கதை செல்கின்றது.

தசரதனுக்கும் ராவணனுக்குமான் போரில் கதை ஆரம்பிக்கின்றது. சரியாகத்தான் எழுதியிருக்கின்றேன். தசரதன் தோற்கின்றான். ராமன் பிறக்கின்றான். ராமனை தோல்விக்கு காரணமானவாக கருதி தசரதன் வெறுக்கின்றான். நான்கு சகோதரர்களுக்கான குணங்களை சமைப்பதில் மகாபாரதத்தை கடன் வாங்கிக் கொண்டிருக்கின்றார். ராமன் சத்தியசீலன், விதிகளை கண்டிப்பாக பின்பற்றுபவன் தர்மபுத்திரனின் சாயலை அதிகமாக புகட்டியுள்ளார். பரதன் ஜாலியான் ஆள், பெண்கள் விஷயத்தில் அர்ஜ்ஜுனன். லக்ஷ்மணன், பீமன் சாயல் நல்ல உணவு, பலசாலி. சத்ருக்கணன் - சகாதேவன். படிப்பாளி.  தசரதனின் ஆட்சியில் அயோந்தியின் நிலை பரிதாபமாக இருக்கின்ற நிலையில், ராமன் நாட்டின் பாதுகாப்பை பொறுபேற்று கொண்டு சிறப்பாக செயல்படுகின்றான். மந்திரை ஒரு பணக்கார வியாபாரியாக வருகின்றாள். ராமனின் மீதான அவள் வன்மத்திற்கு வேறு ஒரு காரணத்தை காட்டுகின்றார். இருபுறமும் தவறில்லாமல் பேலன்ஸ் செய்யும் வகையில் அமைத்து தன் ஐஐடி புத்திசாலித்தனத்தை காட்டுகின்றார்.

09 ஜனவரி 2017

வெக்கை - பூமணி

கரிசல் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர். அஞ்ஞாடி நாவலுக்கு விருது பெற்றவர். அஞ்ஞாடி வாங்க ஆசைதான், முதலில் ஒரு சாம்பிள் பார்ப்போம் என்று வெக்கை நாவலை வாங்கினேன். ஜெயமோகன் எழுதிய ஒரு கதையை நினைவு படுத்தியது. தன் நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்த ஒருவனை வெட்டிவிட்டு சிறைக்கு செல்லும் ஒருவரை பற்றிய கதை. அதே மாதிரியான ஒரு கதை. நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்து அது முடியாமல், தன் அண்ணனை கொன்ற வடக்கூரானை கொன்று விட்டு தலைமறைவாக இருக்கும் செலம்பரத்தின் நினைவுகளாக, அவனுக்கும் அவன் தந்தைக்குமான உரையாடல்களாக செல்கின்றது.

முதல் பாராவிலேயே கதை ஆரம்பித்து விடுகின்றது. எவ்வித ஆர்ப்பாட்டமும், வர்ணனைகளும் இல்லாத ஆரம்பம். கரிசல் மண் சார்ந்த கதை என்று சொல்வதற்கில்லை. எங்கும் நடந்திருக்க கூடிய கதை. 

தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று கொஞ்சம் யூகிக்க முடிகின்றது. அவ்வளவே, எங்கும் ஜாதி பற்றிய குறிப்புகள் இல்லை. வடக்கூரானை சிதம்பரம் கொல்வதில் ஆரம்பிக்கும் கதை அவர்கள் காவல்துறையில் சரணடைய செல்வதில் முடிகின்றது. பெரும்பாலும் உரையாடல்களாகவே கதை நகர்கின்றது. சிதம்பரத்தின் தந்தையும் இதே காரணத்திற்காக ஒருவனை கொன்ற கதை, தலைமுறைகள் மாறினாலும் பிரச்சினைகள் மாறுவதில்லை என்பதை சிறிய கோடாக காட்டிவிட்டு போகின்றது.