21 டிசம்பர் 2017

நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி - ஜெ. ராம்கி

1991ம் ஆண்டு என்றவுடன் நினைவிற்கு வருவது ராஜீவ் காந்தியின் படுகொலை. இந்திய சரித்திரத்தை மாற்றியமைத்த சில சம்பவங்களில் அதுவும் ஒன்று. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியின் விளிம்பில் இருந்தது. ராஜீவ்காந்தி படு கொலைக்கு முன்னால் நடந்த வாக்குபதிவுகளில் காங்கிரஸ் பெற்ற ஓட்டுக்கள் குறைவே. ராஜீவின் அனுதாப அலை காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பலத்தை சேர்த்துவிடவில்லை. ஒரு மைனாரிட்டி அரசாகத்தான் அமரமுடிந்தது. அந்த அரசிற்கு முன்னாலும் பின்னாலும் பல அரசுகள் முழு ஆதரவின்றி நடந்திருக்கின்றன. எதுவும் தன் ஆட்சிகாலத்தை முழுவதும் முடித்ததில்லை. ஆட்சியில் இருந்த போதும் ஏதும் செய்ய முடியாமல் ஆட்சியை காப்பாற்றி கொள்வதை மட்டுமே செய்ய முடிந்தது.

நிலையான ஆட்சியை விட மிகப்பெரிய இக்கட்டாக இருந்தது அன்றை இந்தியாவின் பொருளாதர நிலை. முந்தைய வி.பி.சிங், ராஜீவ் காந்தி போன்றவர்களின் ஆட்சியின் திறன், இந்திய பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளியிருந்தது. புதிய கடனுதவி ஏதும் கிடைக்காமல், அந்நியச் செலாவணி குறைந்த நிலையில், வெளிநாட்டு இந்தியர்களும் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற ஆரம்பித்திருந்தனர். காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் என்று உள்நாட்டு கலவரங்கள் வேறு. இவையனைத்தையும் திறம்பட கையாண்டு, நாட்டை மீட்டவர் இன்று பலராலும் மறக்கப்பட்ட, சொந்த கட்சியினராலேயே திட்ட்மிட்டு மறக்கடிக்கப்பட்ட ஒரு தலைவர், பி.வி.நரசிம்மராவ்.

05 டிசம்பர் 2017

சாதேவி - ஹரன் பிரசன்னா

ஹரன் பிரசன்னா வலையுலகில் பிரபலர். http://www.haranprasanna.in/ என்ற வலைதளத்தில் பல ஆண்டுகளாக எழுதி வருபவர். பல கவிதைகள் புனைந்திருக்கின்றார், கிழக்கு பதிப்பகத்தில் பணிபுரிந்து வரும் இவர் வலம் இதழின் ஆசிரியர்களில் ஒருவர். முன்பு இவரைப் பற்றி பல வதந்திகளும் உண்டு, தவறாக ஏதுமில்லை. இட்லிவடை வலைதளத்தின் அதிபர், பிறகு ஏதோவொரு நெடுஞ்செழியன் என்ற பெயரில் பயங்கர கவிதை புனைவார் என்பது போன்ற வதந்திகள். 

இவரது கதைகள் பல அவரது தளத்தில் வெளியானவை, கவிஞர் என்று கண்டு கொண்டதால், இவரது கதைகளை விட்டு கொஞ்சம் தள்ளியே இருந்தேன். அவரது புதிய சிறுகதை தொகுப்பு சாதேவி. முதலில் என்னடா நூலுக்கு தலைப்பு இப்படியிருக்கின்றதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகு அட்டைப்படத்தை கண்டபின் ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது.

பிரசன்னாவிற்கு பிடித்த எழுத்தாளர் அசோகமித்திரன் என்று தோன்றுகின்றது. பெரும்பாலான கதைகள் அவரது சாயல் தெரிகின்றது. அசோகமித்திரனின் சிறப்பு அவர் கதையை சிக்கலாக்குவதில்லை. சின்ன சின்ன வரிகளில் உணர்ச்சிக் கொந்தளிப்பின்றி சொல்லி செல்வது. அது போன்ற பாணியை தனதாக்கிக் கொண்டுள்ளார். ஒன்றிரண்டு வரிகளில் பெரிய நிகழ்வை காட்டும் கலை கைவந்துள்ளது.