30 ஆகஸ்ட் 2017

திரைகளுக்கு அப்பால் - இந்திரா பார்த்தசாரதி

ஒரு டெல்லி நாவல். 

கறுப்பு நிறத்தால் கணவனைவிட்டு விலகி வாழும் பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவல். தாழ்வுமனப்பான்மை ஒரு எல்லைக்கு மேல், ஒரு உயர்வு மனப்பான்மையை உண்டாக்கி, ஒரு முரட்டுத்தனமான முகமூடியை போட்டு கொள்ளும். பின்னர் அந்த முகமூடியை கழட்ட முடியாமல் அதோடு திரிய வேண்டியிருக்கும். என்றாவது ஒரு நாள் அந்த முகமூடி எவராலோ கிழிக்கப்படும் போது அதை தாங்க முடியாது. 

முகமூடி அணிந்த ஒரு பெண்ணின் கதைதான் இது. வழக்கமான இ.பா டைப் பாத்திரங்கள். எதிராளியை குத்தி கிழித்து அனுபவிக்கும் பாத்திரங்கள், அறிவுஜீவி முகமூடிகள், மெலிதான காமம். 

வெளிவந்த காலத்தில் பரபரப்பாக இருந்திருக்கலாம், ஆனால் இன்று ஒரு சராசரி நாவல் என்பதற்கு மேலேக ஒன்றுமே தோன்றவில்லை.

29 ஆகஸ்ட் 2017

குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

விகடனில் ஈ.வெ.ரா பற்றிய தொடர் வரலாற்று நாயகர்கள் தொடரின் ஒரு பகுதியாக வெளிவந்து கொண்டிருந்தது. அலுவலகத்தில் அப்போது வெட்டியாக இருந்த காரணத்தால் விகடன் பின்னூட்டப் பகுதியில் அனைவருடனும் சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். ஈ.வெ.ரா பற்றிய எனது விமர்சனங்களுக்கு பலர் வந்து என்னுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தனர். 

கீழ வெண்மணி சம்பவத்தைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை என்று எங்கோ படித்ததை ஒரு வாதமாக அங்கு வைத்த போது அதற்கு பதில் மட்டும் வரவில்லை. விதவிதமா விளக்கெண்ணை பதில்கள் கிடைத்தன. அதைப் பற்றி தேடிப்படித்த போது பல விபரங்கள் கிடைத்தன. அதிலொன்று அதை அடிப்படையாக வைத்து இ.பா ஒரு நாவல் எழுதியிருக்கின்றார். 

குருதிப்புனல் என்ற நாவலின் பெயர் அதற்கு முன்னரே பரிச்சியம். கமல் அதை தன் படத்திற்கு தலைப்பாக வைத்ததும், “ப்” ஐ விட்டுவிட்டு தலைப்பை வெளியிட்டதும் பின்னர் அதை சேர்ததும், பின்னர் தலைப்பை வைத்து இது இ.பாவிற்கு சொந்தமான தலைப்பு என்று சர்ச்சையானதும் நினைவிலிருக்கின்றது.

26 ஆகஸ்ட் 2017

சுதந்திர பூமி - இந்திரா பார்த்தசாரதி

டெல்லி வாழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர் இ.பா. அவரது நாவல்கள் எனக்கு ஒரு வித சலிப்பையே தந்திருந்தன. காரணம் ஒரே அறிவுஜீவித்தனமான பாத்திரங்கள். அனைத்து பாத்திரங்களும் சிந்தித்துக் கொண்டே இருப்பது. குறிப்பாக வெந்து தணிந்தன காடுகள், மாயமான் வேட்டை. அதீத பேச்சுக்கள். 

ஆனால் இந்த நாவல் அந்தளவிற்கு இல்லை. ஓரளவிற்கு அறிவுஜீவித்தனமான பேச்சுகள் இல்லை. நாவலின் களம், பாத்திரங்கள் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். அரசியல்வாதிகள் - அறிவுஜீவித்தனம். சேருவது கடினம்தான்.

அரசியல் என்பது எந்த காலகட்டத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது. முகுந்தன் என்னும் ஒரு தமிழன் ஏதோ ஒரு மிஸ்ராவிடம் சமையல்க்காரனாக சேர்ந்து மந்திரியாவதுதான் கதை. 

கதை வழியே பல விஷயங்களை விமர்சனம் செய்கின்றார். நாவல் நடக்கும் காலகட்டம் இந்திராகாந்தியின் ஆட்சிக்காலம் என்று யூகிக்கமுடிகின்றது. இன்றுவரை அந்த நிலையை மாறாமல் வைத்திருப்பதில் காங்கிரஸ்ஸின் பங்கு பெரியது.

02 ஆகஸ்ட் 2017

குருத்தோலை, கொட்டு மொழக்கு - செல்லமுத்து குப்புசாமி

இரண்டு நாவல்கள். பாத்திரங்கள் அதேதான். ஆனால் இரண்டும் வேறு வேறு களம். 

குருத்தோலை ஒரு சிறுவனனின் பதின் பருவத்தில் ஆரம்பித்து மத்திம வயதில் முடிகின்றது. கிராமத்து மனிதர்களின் கதை. கொங்கு வட்டார கிராமத்தை ஓரளவிற்கு காட்ட முயற்சித்திருக்கின்றது. அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. முதலில் வரும் சில பகுதிகளை படிக்கும் போது வேறு ஒரு எழுத்தாளர் எழுதியதோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. 

ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகளை ஒரு பார்வை பார்த்து செல்லும் கதை. அந்த பகுதி மக்களின் வாழ்வை கொஞ்சம் நுணுக்கமாக சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அழுத்தமான சம்பவங்கள் ஏதுமில்லாமல், முழுமையான பாத்திரங்கள் ஏதுமின்றி ஓடுகின்றது. 

சுமாரான நாவல்.

கொட்டு மொழக்கு - முதல் நாவலில் வரும் ஒரு சிறுவன் தன் தாத்தாவின் சாவிற்கு வருவதுதான் கதை. முந்தைய நாவலுடன் ஒப்பிடுகையில் இதை சிறப்பானது எனலாம். ஒரு சாவு என்பது சாதரண விஷயமல்லவே. நாவல் முழுவதும் அந்த சாவை ஒட்டி நடக்கு விஷயங்கள்தான். எழவு வீட்டிற்கு செல்பவனின் தர்மசங்கடம், அங்கு நடக்கு சில அபத்தங்கள், இரண்டு காலகட்டத்திற்கு நடுவில் நடக்கும் விஷயங்கள் என்று பல விஷயங்களை காட்டுகின்றார். ஒருவன் இறந்து போனால் அதன் பின் நடக்கும் விஷயங்கள் எத்தனை. எவ்வளவு சடங்குகள், அதற்கான வழிமுறைகள். அந்த சடங்குகளில் இருக்கும் சமூகப் பிரச்சினைகள் என அனைத்தையும் காட்டுவதில் வெற்றி பெற்று இருக்கின்றார். கதை எழுதும் போது ஆசிரியருக்கு வந்த ஏதோ ஒரு தொலைபேசி உரையாடலையும் உள்ளே வைத்துவிட்டார் போலா. சாரு பாணி. ஒட்டாமல் தெரிகின்றது.

குருத்தோலையை விட கொட்டுமுழக்கு சிறப்பாக இருக்கின்றது.