23 மே 2017

அசுரன் - ஆனந்த் நீலகண்டன்

புராண இதிகாசங்களை வரலாற்று பார்வையுடன் மீண்டும் எழுதுவதை பல மொழிகளில் பலர் செய்து இருக்கின்றனர். உதாரணமாக ஜெயமோகனின் வெண்முரசு, பைரப்பாவின் பர்வா, எம்.டி வாசுதேவ நாயரின் இனி நான் உறங்கலாமா. இவை அனைத்தும் மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டவை. ராமாயணத்தை அப்படி யாரும் மாற்றி எழுதியதாக எனக்கு தெரியவில்லை. சமீபத்தில் அமிஷ் திரிபாதி ஒரு நாவல் தொடரை எழுத ஆரம்பித்துள்ளார், முதல் பகுதி வெளிவந்து விட்டது. இரண்டாம் பகுதி அடுத்த வாரம் வெளிவருகின்றது.

அசுரன் - அந்த வகையில் ராமாயணத்தை அடிப்படையக கொண்டு எழுதப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்ட நூல்களில் வேறு ஒரு அம்சம் உண்டு, இதிகாசங்களை ஒரு வரலாற்று பார்வையுடன் பார்ப்பது. இதிகாசங்களில் விடுபட்ட இடங்களை நிரப்புவது, சில இடங்களை விரித்து எழுதுவது என்று. அமிஷ், இதிகாச கதையை கொஞ்சம் வரலாறு, விஞ்ஞானம் என்று கலந்துகட்டி ஒரு மசாலா நாவலாக எழுதுகின்றார். அசுரன் இதில் எந்த வகையிலும் சேராமல், தனக்கு தோன்றியதுதான் வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்ட ஒரு பெரிய குப்பை.

ராமாயணங்களில் பல வித ராமாயணங்கள் உண்டு, வெளிநாடுகளில் கூட ராமாயணங்கள் உண்டு. ஜைன, புத்த மதங்கள் கூட தங்கள் மதத்தை பரப்ப தங்களுக்கென்று ராமாயணங்களை எழுதிக் கொண்டார்கள் என்று கூறுவார்கள். அதில் ஏதோ ஒரு ராமாயணத்தில் வரும் கதை, சீதை ராவணனின் மகள் என்பது. அதை அடிப்படையாக கொண்டு, அசுரர்களின் கதையை எழுதுகின்றே பேர்வழி என்று ராவணன் முதற்கொண்டு அனைவரையும் கேவலமாக சித்தரித்து ஒரு தண்டத்தை எழுதியிருக்கின்றார் ஆனந்த் நீலகண்டன்.

18 மே 2017

கொசு - பா. ராகவன்

அரசியலை அடிப்படையாக் கொண்ட எழுத்துக்கள் மிகக்குறைவு. சோவின் நாடகங்கள் தனி ரகம். கதைகள், நாவல்கள் வெகு குறைவு. இந்திரா பார்த்தசாரதி வேதபுரத்து வியாபாரிகள், மாயமான் வேட்டை  போன்ற நாவல்களை எழுதியிருக்கின்றார். வேறு யாரும் எழுதியிருக்கின்றார்களா என்று தெரியவில்லை. கொசு, ஒரு அரசியல் நாவல். அரசியல்வாதிகளை பற்றி பேசும் நாவல். தலைப்பை கண்டு வழக்கமான பா ராகவனின் நகைச்சுவை கட்டுரை தொகுப்பு என்று நினைத்து கொண்டேன். நாவல் என்றது கொஞ்சம் ஆச்சர்யம். அவரது தொடர்கதை ஒன்றை கல்கியில் படித்த நினைவிருக்கின்றது. அலை உறங்கும் கடல். ஓரளவிற்கு நல்ல கதை.

தொண்டனுக்கு ஒரு நல்ல பதவியை அடைவது என்பது எப்போதும் கனவாகவே இருக்கும். அந்த கனவுடன் இருக்கும் முத்துக்குமாருக்கு அவன் கட்சியின் சீனியர்கள் கற்று தருவது என்ன என்னபதுதான் கொசு. கட்சியில் பல ஆண்டுகளாக காலம் தள்ளியும் வெறும் வட்டமாக இருப்பவருக்கு, பெரியவட்டமாக ஆசை. அதற்கு ஐடியா கேட்க முத்துக்குமாரை அழைக்கின்றார். அதிலிருந்து மெதுவாக முத்துக்குமார் முன்னேற முயற்சிக்கின்றான். முதல்வன் பட இறுதியில் ஒரு வசனம் வரும், என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களேடா, அதுதான் இங்கும்.

16 மே 2017

வைரமுத்து சிறுகதைகள்

திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து சிறுகதைகள் எழுதுவதாக விளம்பரம் பார்த்தேன். குமுதம் தடபுடலாக விளம்பரம் செய்திருந்தது. மூன்றாம் உலகப்போரின் சூடுதாங்காமல் விகடன் விலகிவிட்டது போல. 

சிறுகதைகள் எழுதிமுடித்த கையோடு உடனே அது புத்தகமாகவும் வந்துவிட்டது, பெரிய விழா, விஜய் டீவியில் பட்டி மன்றம், மலையாள மொழி பெயர்ப்பு. வைரமுத்து ஒரு நல்ல வியாபாரி. தன் புத்தகங்களை விளம்பரப்படுத்தவும், வலுக்கட்டாயமாக விற்பனை செய்யவும் தெரிந்தவர். கிண்டில் அன்லிமிட்டடில் கிடைத்ததால் படிக்க ஆரம்பித்தேன். பொறுமையை மிகவும் சோதித்து விட்டது.

முன்னுரையில் பல பெரிய பெரிய எழுத்தாளர்களையேல்லாம் வைத்து சிறுகதை பற்றி பெரிதாக எழுதியுள்ளார் ஆனால் உள்ளே சுத்தம். வாரமலரில் கூட வெளியாக தகுதியில்லாத கதைகள். சிறுகதை என்பது இறுதியில் ஒரு திருப்பத்தை தருவது என்ற அளவில் எழுதப்பட்டவை, இல்லை சொல்லப்பட்டவை. எந்த கதையும் அவர் கையால் எழுதியது போல இல்லை, வாயால் சொல்லப்பட்டவை போன்றே இருக்கின்றது. இதே பிரச்சினைதான் அவரது கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கும் நேர்ந்தது. எழுதும்போது நம்மை அந்த உலகிற்கு அழைத்து சென்று நம்மையும் கதையில் ஈடுபடுத்தும். சொல்லப்படும் போது அதை இழக்கின்றது.

13 மே 2017

பழைய கணக்கு - சாவி

சாவி புகழ் பெற்ற பத்திரிக்கையாளர். ஆனந்த விகடன், கல்கி, தினமணிக்கதிர் போன்ற இதழ்களில் பணிபுரிந்துள்ளார். சாவி என்னும் இதழையும் நடத்திவந்தார். குங்குமம் இதழை இவருக்காகவே கருணாநிதி தொடங்கினார் என்றும் எங்கோ படித்த நினைவு. சாவியுடன் நெருக்கமாக பணி புரிந்த ரவி பிரகாஷ் தளத்தில் அவரைப் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். 

சாவியின் இளவயது அனுபவங்களை முன் பின் தொடர்ச்சியில்லாது எழுதி கட்டி வைத்த ஒரு புத்தகம் பழைய கணக்கு. மிகப்பழைய கணக்கு, அனேகமாக எனக்கு ஒன்றிரண்டு வயதிருக்கும் போது வந்திருக்கும் போல. சாவியின் சிறுவயது அனுபவங்கள், பத்திரிக்கை துறையில் அடைந்த சுவாரஸ்யமான அனுபவங்களின் தொகுப்பு. சாவி சிறு வயதில் அதிக கஷ்டப்பட்ட ஒருவர், அதே சமயம் மிகுந்த சேட்டைக்கார ஆசாமி போல. அடிக்கடி வீட்டை விட்டு ஓடுவது, கோவில்களில் உண்டக்கட்டி வாங்கி தின்றுவிட்டு சுற்றுவது, காசில்லாமல் போகும் போது மீண்டும் வீடு திரும்புவது என்று ஜாலியாக இருந்திருக்கின்றார். ஏகப்பட்ட வேலைகளும் செய்திருக்கின்றார். கிங்காங் - தாராசிங் மல்யுத்தத்தை நடத்துவது, விளம்பர பலகைகள் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது என்றும் இருந்திருக்கின்றார்.

பல சம்பவங்கள் ஒரு நல்ல சிறுகதைக்கான கருக்களை கொண்டிருக்கின்றது. அவரது நவகாளி யாத்திரை கட்டுரையை பற்றி பலர் எழுதியிருக்கின்றார்கள், ஆனால் அவர் காந்தியுடன் இருந்தது இரண்டு நாட்கள் என்பதுதான் உண்மை. விகடனில் வேலை வாங்க விகடன் பெயரில் பத்திரிக்கை ஆரம்பிப்பதாக கூறி,அதை வைத்தே வேலை வாங்கி, நடத்ததாத பத்திரிக்கையை மூட விகடனிடமே பணத்தையும் பெற்றது எல்லாம் பெரிய நரிகுளிப்பாட்டித்தனம்தான்.

10 மே 2017

Bhim: Lone Warrior - M.T. Vasudevan Nair

மலையாளத்தில் ரெண்டாமூழம் என்ற பெயரில் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய மகாபாரதக்கதை. பர்வா மொழிபெயர்ப்பை படித்த பின் மற்ற மொழி பெயர்ப்புகளை படிக்க கொஞ்சம் பீதியாக இருக்கின்றது. பருவம் நூலில் அத்தனை பிழைகள். இதுவும் அதே சாகித்ய அகடமி பிரசுரம் என்பதால், ஆங்கில மொழிபெயர்ப்பையே படிப்பது உசிதம் என்று நினைத்தேன். பிறகு எப்படி ஆங்கில அறிவை வளர்ப்பதாம். அந்நூலை மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் திரைப்படமாக எடுக்கவிருக்கின்றார்கள் என்ற செய்தி புத்தகத்தை உடனே வாங்க தூண்டியது. இதை திரைப்படமாக்கினால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்துடனே படித்தேன்.

மகாபாரதத்தை பலரும் பலவிதமாக மாற்றி எழுதிப்பார்த்திருக்கின்றார்கள். இது முழுக்க முழுக்க பீமனனின் பார்வையில் நகரும் கதை. இரண்டாவது இடம் எப்போதும் கொஞ்சம் கடினமானது. நமக்கு முன்னாலிருப்பவனை முந்தாமல், அதே சமயம் மிகவும் பின்தங்காமல் சென்று கொண்டிருக்க வேண்டும். முதல்வனின் முட்டாள்த்தனம் தெரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது, அதன் விளைவுகளை பங்கு போடவும் தயாராக இருக்க வேண்டும். பீமன் இரண்டாமவன் அதை மையமாக வைத்து தலைப்பை இட்டிருக்க வேண்டும்.

பாண்டவர்களில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் பீமன். குழந்தை (அ) இளம் பருவத்தில் முதன் முதலாக பாரதம் படிக்கும் எவரையும் கவரும் பாத்திரம் பீமன்தான். வலிமை. பதினாயிரம் யானைகளின் பலம் கொண்டவன் என்பதே அற்புதமான விஷயம் அல்லவா. ஆனால் பீமனுக்கு அந்த இடம் கிடைத்ததா என்பது கேள்விதான். ஆரம்பம் முதல் தர்மன் நம்புவது பீமனை மட்டுமே, கெளரவர்கள் கூட அஞ்சுவது பீமனை  மட்டுமே. ஆனால் அவனை விட அர்ஜ்ஜுனன் பெரிய வீரன் என்று கூறப்படும் இடங்களே அதிகம்.