29 அக்டோபர் 2016

தூர்வை - சோ. தர்மன்

தூர்வை

தூர்வை என்ற வார்த்தையே இப்புத்தகத்தின் மூலமே கேள்விப்படுகின்றேன். தூர் என்றால் வேர் என்ற அர்த்தமுண்டு என்பது தெரியும் ஏதோ வேர் சம்பத்தப்பட்ட வார்த்தை என்று யூகித்தேன். சரிதான். அருகம்புல்லுக்கு அந்த பெயர். அருகம்புல்லின்  வேர் ஆழமானதாகவும், படர்ந்தும் இருக்கும். எளிதில் முழுவதும் அழிக்க முடியாது. மறுபடியும் துளிர்க்கும். 

ஒரு காலகட்டத்தை பற்றிய பதிவே இந்த தூர்வை. கோபல்ல கிராமம் நாவலுக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டும் கரிசல்காட்டு வாழ்க்கையை பேசுகின்றது, கிராமத்து வாழ்க்கை. ஒரு குடும்பத்தை வைத்துக் கொண்டு அவர்கள் கதை வழியாக ஊரின் கதையை சொல்வது. இரண்டிலும் உள்ள முக்கிய அம்சம், கதை. எழுதும் கதைகள் வேறு, சொல்லும் கதைகள் வேறு. சொல்லும் கதைகள் சுருக்கமானவை, அதில் ஒரு சுவாரஸ்யம், சொல்பவனின் கற்பனையும் கலந்தது இருக்கும். காதுகள் வழியே சென்று நமக்கு கற்பனானுபவத்தை தரும்.

தூர்வை அது போன்று கதைகளின் கலவை. மினுத்தான் - மாடத்தி குடும்பத்தை வைத்து ஒரு உருளக்குடி கிராமத்து கதையை சுவையாக கூறுகின்றார். எழுதவில்லை. கூறுகின்றார். நாம் எழுத்து வடிவில் கேட்கின்றோம். அத்தியாயம் என்று எதுவும் கிடையாது. எவ்வித பகுப்பும் இல்லை. எங்கு எப்பகுதி ஆரம்பித்து முடிகின்றது என்பதெல்லாம் கிடையாது. அவர் பாட்டிற்கு சொல்லிக் கொண்டே செல்கின்றார். கேட்ட, கண்ட அனைத்தையும் கொட்டிவிட வேண்டும் என்ற எண்ணமோ என்னவோ. ஆனால் எங்கும் சுவாரஸ்யம் குன்றவில்லை.

26 அக்டோபர் 2016

வலம் மாத இதழ்

வலம் இதழ் கைக்கு கிடைத்தது. முதலில் அனுப்பிய இதழ் பெயருக்கேற்றபடி வேறெங்கோ வலம் வந்து கொண்டிருக்கின்றது.  என் கைக்கு வரவில்லை. வலம் இதழுக்கு மின்னஞ்சல் அனுப்பிய பின் அவர்கள் உடனடியாக மற்றொரு இதழை அனுப்பினர். வெள்ளிக்கிழமை அனுப்பியது இன்று கையில் கிடைத்தது. முதல் இதழ் தவறியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. 

அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, ஹரன் பிரசன்னா ஆகிய மூவரும் ஆசிரியர்கள். கவிதையெல்லாம் இல்லையாம். அதை படித்த பின்னரே தைரியமாக பணம் கட்டினேன்.

ஒட்டப்பட்ட தபால் தலைகூட பத்திரிக்கையின் தலைப்பிற்கேற்றபடி இருந்தது. எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மியும்,கணித மேதை ராமானுஞரும். அதுவாக அமைந்ததோ, திட்டமிட்டதோ. பாலிதீன் கவரில் முகவரியுடன் சேர்த்து அதையும் டேப் போட்டு ஒட்டியதில், பாவம் கஷ்டப்பட்டு அதில் பேனாவை வைத்து டிக் அடித்திருந்தனர். (முத்திரையெல்லாம் இப்போது கிடையாதா? இருந்தாலும் இதில் அடித்திருக்க முடியாது. எல்லாப்பக்கமும் பாலிதீன் கவர்.)

20 அக்டோபர் 2016

வெய்யோன் - ஜெயமோகன்

வெய்யோன் 

ஜெயமோகன் எழுதும் வெண்முரசின் ஒன்பதாவது நாவல். இதன் பிறகு இரண்டு நூல்கள் வெளிவந்துவிட்டது. 

வெண்முரசின் முக்கிய அம்சம் பாரதத்தை பல்வேறு கோணங்களில் பார்ப்பதே. விடுபட்ட கண்ணிகளை சேர்க்கும் ஒரு முயற்சி. சிறிய பாத்திரங்கள் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றார்கள். வெய்யோன், கர்ணனை இன்னும் சற்று அருகில் சென்று பார்க்கும் ஒரு முயற்சி.

வெய்யோன், கர்ணனை நாயகனாக வைத்து எழுதப்பட்ட நாவல். நட்பிற்கு இலக்கணமாக கூறப்படும் கர்ணனின் பெயரைக்கேட்டதும், சிவாஜி கணேசன், கண்களை மூடிக்கொண்டு அம்மா, அம்மா என்று அழுது புலம்புவதும், சிவாஜி மீசையை முறுக்கிக்கொண்டு கர்ஜிப்பதோ அல்லது சிவப்பு விளக்கு மேனியில் பட்டு ஜொலிக்க வேதனையை காட்டுவதோ நினைவில் வந்தால் நீங்கள் கண்டிப்பாக பாரதத்தையும், வெய்யோனையும் படிக்க வேண்டும். காரணம் இரண்டிற்குமான வித்தியாசம். வயதிலிருந்து காட்சிகள் வரை. கர்ணன் ஒரு நல்ல திரைப்படம்தான் (நமக்கேன் வம்பு). 

வெண்முரசு வரிசையில் வெண்முகில் நகரத்திற்கு பின்னால் வந்த இரண்டு நாவல்களும் பாரதத்தின் மைய கதையை விட்டு வெகுதூரம் தள்ளிப் போய்விட்டது. தனி நாவலாக சரிதான். ஆனால் வெண்முரசின் வரிசையில் வைத்து பார்த்தால் ஒரு பெரிய இடைவெளி. இந்நாவல் அந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கியுள்ளது.