28 நவம்பர் 2016

கூகை - சோ. தர்மன்

சோ.தர்மன் எழுதிய மற்றொரு நாவல். தூர்வைக்கு பின் வெளிவந்தது. அப்படியே தூர்வைக்கு நேர் எதிரான ஒரு நாவல். தூர்வை ஒரு ஆனந்தமான வாழ்க்கையிலிருந்து மெதுவாக சரியும் ஒரு கதை. இது போராட்டத்திலேயா வாழ்ந்து முன்னேறி மெதுவாக சரியும் ஒரு கதை. இரண்டையும் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை என்றாலும், இரண்டுமே அக்கால தலித் மக்களின் வாழ்க்கையின் பகுதிகளை காட்டுகின்றது என்ற வகையில் ஒப்பிடவே தோன்றுகின்றது.

நாவலின் மொழி இதில் வேறுவிதமாக அமைந்துவிட்டது. இரவில் மட்டும் விழித்திருக்கும் ஒரு ஆற்றல் மிகுந்த பறவை, பகலிலேயெல்லாம் குட்டி குட்டி பறவைகளாலும் துன்புறுத்தப்படும் கூகை இங்கு தாழ்த்தப்பட்ட மக்களின் குறியீடாக வருகின்றது என்று அனுமானித்துக் கொள்ளலாம். 


இதில் அனைத்து ஜாதிகளின் பெயர்களும் தெளிவாக கூறப்படுகின்றன. அவர்களுக்கிடையிலான வித்தியாசங்கள், உழக்கில் கிழக்கு மேற்கு என்பது போன்று அவர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் வந்து போகின்றன. சீனிக்கிழவனை மையமாக கொண்டு கதை போகின்றது. கூலிக்காரர்களாகவும், ஜமீன் நிலங்களிலும், மற்ற உயர் சாதி நிலங்களிலும் ஓசிக்கும் வாரச்சோற்றுக்கும் வேலை செய்யும் மக்களிடம், ஒரு பிராமணர் தன் நிலத்தை ஓப்படைத்து செல்கின்றார். அதை வைத்து முன்னேறும் அவர்கள், வேறு வகையில் மீண்டும் அதே பெரிய மனிதர்களிடம் மாட்டிக் கொள்வதுடன் கதை முடிகின்றது.

07 நவம்பர் 2016

நம்பக்கூடாத கடவுள் - அரவிந்தன் நீலகண்டன்


ஹிந்துத்துவ சிந்தனைகள் என்று உப தலைப்புடன் வந்துள்ளது. தமிழ்பேப்பர் இணைய தளத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு

பலருக்கு ஹிந்த்துதுவம் என்பதை நேரடியாக ஏற்றுக்கொள்ள சில தடைகளிருக்கும். காரணம், தங்களுக்கு தாங்களே ஒரு நேர்மையாளன் பட்டம் தந்திருப்பார்கள். அடுத்தவன் என்ன நினைப்பானோ என்ற கவலை வேறு. தான் நம்பும் ஒரு விஷயம் உயர்ந்தது என்பதை நம்ப மறுப்பவர்கள், தான் நம்பும் சில விஷயங்களால் ஒரு தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள்.  இவர்களை மாற்றுவது என்பது எளிதல்ல. இன்னொரு வகை, ஹிந்துத்துவம் என்பதை ஒரு அடிப்படைவாத குழு என்ற வகையில் நினைப்பது. தவறான புரிதல். உண்மையில் இத்தகையவர்களே அதிகம். இதற்கு காரணம் கூட நமது பாரம்பர்யம் கற்று தந்திருக்கும் பெருந்தன்மையே. ஒரு வகையில் அவர்களும் இந்துத்துவர்களே.

பலர் நமது பாரம்பர்யம் என்பதை பக்தியோடும், புராணங்களோடும் நிறுத்திக் கொள்கின்றனர். பலருக்கு உண்மையில் நமக்கு இருக்கும் பாரம்பர்யம் எத்தகையது என்பதை பற்றிய் முழு பார்வையும் கிடையாது.  இந்த கட்டுரைகள் அதை நமக்கு கற்று தருகின்றன.


அரவிந்தன் நீலகண்டன், பல ஆண்டுகளாக இணையத்தில் எழுதி வரும் சிந்தனையாளர். எந்த ஒரு விஷயத்தையும் போகின்ற போக்கில் அள்ளி விடாமல் அதற்கான தரவுகளை பல இடங்களிலிருந்து தருவது சிறப்பு. அதற்கான உழைப்பு பெரியது. ஆச்சர்யத்தை தருவது.