11 ஆகஸ்ட் 2016

மிஸ்டர் வேதாந்தம் - தேவன்


தமிழின் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான தேவனின் நாவல்.

முன்பு தொடர்கதை எழுத ஒரு டெம்ளேட் இருந்திருக்க வேண்டும். நல்லவன் ஒருவன், அவனுக்கு அடுத்தடுத்து துயரம், துக்கம், வேதனை, அழுகை. அவனுக்கு உபத்திரம் செய்ய ஒரு கூட்டமே வேலை செய்ய வேண்டும். அதே சமயம் அவனுக்கு உதவி செய்யவும் சில மாயாவிகள் வர வேண்டும். கதை முடிவதற்கு ஒரு மாதம் வரை துக்கப்பட்டு, துன்பப்பட்டு தொடர்கதை முடியப்போகின்றது என்று தெரிந்தவுடன், துக்கம் எல்லாம் மாயமாய் மறைந்து, துன்பம் செய்த தூர்த்தர்கள் எல்லாம் திருந்தி அல்லது அதற்கான தண்டனை அடைந்து, நல்லவன் வென்றான் என்று முடியவேண்டும்.

தேவன் பல நல்ல கதைகள் எழுதியிருந்தாலும் இது ஒரு டெம்ப்ளேட் கதைதான். லக்ஷ்மி கடாட்சம் என்று ஒரு தொடர்கதை உண்டு. அதே போன்ற ஒரு கதை. வேதாந்தம் ஒரே அந்தியாத்தில் தகப்பனாரை இழந்து, கடனுக்கு சொத்தை இழந்து, வீட்டையும் இழந்து, பி.ஏவும் தோற்று நிற்கின்றான். அதன் பின் ட்யூஷன் வாத்தியாரி, எழுத்தாளருக்கு உதவியாகி, டுபாக்கூர் பத்திரிக்கைக்கு ஆசிரியராகி, இதற்கெல்லாம் நடுவில் கதைகளும் எழுதி, இறுதியில் பத்திரிக்கை உதவியாசிரியராகி, அத்தை மகளை திருமணம் செய்து கொள்கின்றான். நடுவில் அவனுக்கு துரோகம் செய்த உறவினர்களின் நிலையை கண்டு வருந்தி .................

இத்தனையும் மீறி எதற்கு படிக்க வேண்டும் என்கின்றீர்களா, ஒன்று எதையும் படிக்கலாம் என்ற எண்ணம், இரண்டு இதையும் படிக்க வைத்த தேவனின் எழுத்து சாதுர்யம். விறுவிறுப்பான நடை. எதிர்பார்த்த அல்லது தெரிந்த முடிவு என்றாலும், அதைப் சுவாரஸ்யமாக்கும் எழுத்து.

அங்கங்கு வரும் நகைச்சுவை. தேவன் உண்டாக்கும் பாத்திரங்கள் கொஞ்சம் தனித்துவமானவை. இதிலும் அதுமாதிரி பல பாத்திரங்கள்.

வாங்கி படியுங்கள். படுபயங்கர செறிவான, கடினமான, இலக்கியமான நாவல்கள் படித்தாலும், அவ்வப்போது அதிலிருந்து வேறுபட்டு கொஞ்சம் எளிதாக்கிக் கொள்ள இது போன்ற புத்தக்ங்களும் தேவை. குழந்தைகளுக்கு கொடுங்கள். வேகமாக படிக்கும் வழக்கத்தை இது போன்ற புத்தகங்கள் எளிதாக உண்டாக்கும்.

இங்கே கிடைக்கின்றது.

1 கருத்து:

  1. வேதாந்தம் நாவலைக் கொஞ்சம் படிக்க ஆரம்பிச்சாலும் எங்க குழந்தைங்க அதன் சோகம் தாங்க முடியலைம்மா, வேணாம்னு சொல்லிடுவாங்க! லக்ஷ்மி கடாக்ஷத்துக்கும் அதே தான்! :)

    பதிலளிநீக்கு