27 டிசம்பர் 2016

Siva Triology - Amish Thiripathi

ஆங்கிலப் புத்தகங்களை பெரும்பாலும் படிப்பதில்லை. முதல் காரணம், அந்தளவிற்கு ஆங்கில அறிவு கிடையாது. 12 வரை தமிழ் மீடியம் என்பதால், ஆங்கிலத்தை மூளைக்குள் மொழி பெயர்க்காமல் படிக்க முடியாது. பொறுமை தேவை. ஆங்கில அகராதியை வைத்து கொண்டு படிக்கும் பொறுமையெல்லாம் கிடையாது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களின் நடை கொஞ்சம் படிக்கின்றபடி இருக்கும். சேத்தன் பகத்தின் முதல் மூன்று, நான்கு நாவல்களை படித்திருக்கின்றேன்ன். ஆர்வக்கோளாறு என்ன செய்ய. குப்பை நாவல்கள் என்பதை தவிற வேறு எதுவும் கூற இல்லை. மூன்றாம்தர சினிமா கூட பரவாயில்லாமல் இருக்கும். மட்டமான மசாலா. குழந்தைகள் பிறந்தபிறகு அப்புத்தகங்களுக்கு பயன் இருந்தன. 

சேத்தன் பகத் தந்த நம்பிக்கையில் வேறு எதையும் ஆங்கிலத்தில் வாசிக்க விரும்பவில்லை. சிவா டிரையாலஜி, விளம்பரம் அடிக்கடி கண்ணில் பட்டுக்கொண்டிருந்து. இந்தியாவின் டோல் கின் என்ற அடைமொழி வேறு. (டோல் கின்னின் கதைகள் பாதி படித்து அந்தரத்தில் நிற்கின்றது). பல மில்லியன் விற்ற நாவல் என்பதாலும், சும்மா ஒரு மாறுதலுக்காகவும் வாங்கினேன். தமிழில் மொழி பெயர்த்திருந்தாலும், ஆங்கில நூலை வாங்கியதன் முக்கிய காரணம் விலை குறைவு. மூன்று புத்தகங்களும் சேர்ந்து 500க்குள் வந்ததுதான். இரண்டாவது, மொழி பெயர்ப்பாளர்கள் மீது இருக்கும் அதீத நம்பிக்கை. 

புராணங்களை மீண்டும் எழுதுவது என்பது வழக்கமான ஒன்று. மகாபாரதம் அப்படி பல முறை எழுதப்பட்டுள்ளது. ஆனால் புராண பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு கதையை பின்னுவது என்பதை இப்போதுதான் படிக்கடிகின்றேன். முழுக்க முழுக்க கற்பனையான ஒரு மசாலா நாவல். ஆனால் அமீஷ் திரிபாதி, புத்திசாலித்தனத்துடன் எழுதியுள்ளார். புராண பாத்திரங்ளை மனிதர்களாக கற்பனை செய்து, சில நிகழ்ச்சிகளை கற்பனையாக சேர்த்து எழுதியுள்ளார். சிவன் அழிக்கும் கடவுள். தீயவற்றை அழிப்பது அவர் வேலை. அதுவே இதன் அடிப்படையும். நாம் படிக்கும் போது சிந்து சமவெளி நாகரீகம் என்று இருந்தது இன்று சரஸ்வதி சிந்து சமவெளி நாகரீகமாக மாறியுள்ளது. அதை ஒரு அடிப்படையாக வைத்து கொண்டு, அன்றைய பாரதத்தை காட்ட ஒரு முயற்சி செய்திருக்கின்றார். 

28 நவம்பர் 2016

கூகை - சோ. தர்மன்

சோ.தர்மன் எழுதிய மற்றொரு நாவல். தூர்வைக்கு பின் வெளிவந்தது. அப்படியே தூர்வைக்கு நேர் எதிரான ஒரு நாவல். தூர்வை ஒரு ஆனந்தமான வாழ்க்கையிலிருந்து மெதுவாக சரியும் ஒரு கதை. இது போராட்டத்திலேயா வாழ்ந்து முன்னேறி மெதுவாக சரியும் ஒரு கதை. இரண்டையும் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை என்றாலும், இரண்டுமே அக்கால தலித் மக்களின் வாழ்க்கையின் பகுதிகளை காட்டுகின்றது என்ற வகையில் ஒப்பிடவே தோன்றுகின்றது.

நாவலின் மொழி இதில் வேறுவிதமாக அமைந்துவிட்டது. இரவில் மட்டும் விழித்திருக்கும் ஒரு ஆற்றல் மிகுந்த பறவை, பகலிலேயெல்லாம் குட்டி குட்டி பறவைகளாலும் துன்புறுத்தப்படும் கூகை இங்கு தாழ்த்தப்பட்ட மக்களின் குறியீடாக வருகின்றது என்று அனுமானித்துக் கொள்ளலாம். 


இதில் அனைத்து ஜாதிகளின் பெயர்களும் தெளிவாக கூறப்படுகின்றன. அவர்களுக்கிடையிலான வித்தியாசங்கள், உழக்கில் கிழக்கு மேற்கு என்பது போன்று அவர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் வந்து போகின்றன. சீனிக்கிழவனை மையமாக கொண்டு கதை போகின்றது. கூலிக்காரர்களாகவும், ஜமீன் நிலங்களிலும், மற்ற உயர் சாதி நிலங்களிலும் ஓசிக்கும் வாரச்சோற்றுக்கும் வேலை செய்யும் மக்களிடம், ஒரு பிராமணர் தன் நிலத்தை ஓப்படைத்து செல்கின்றார். அதை வைத்து முன்னேறும் அவர்கள், வேறு வகையில் மீண்டும் அதே பெரிய மனிதர்களிடம் மாட்டிக் கொள்வதுடன் கதை முடிகின்றது.

07 நவம்பர் 2016

நம்பக்கூடாத கடவுள் - அரவிந்தன் நீலகண்டன்


ஹிந்துத்துவ சிந்தனைகள் என்று உப தலைப்புடன் வந்துள்ளது. தமிழ்பேப்பர் இணைய தளத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு

பலருக்கு ஹிந்த்துதுவம் என்பதை நேரடியாக ஏற்றுக்கொள்ள சில தடைகளிருக்கும். காரணம், தங்களுக்கு தாங்களே ஒரு நேர்மையாளன் பட்டம் தந்திருப்பார்கள். அடுத்தவன் என்ன நினைப்பானோ என்ற கவலை வேறு. தான் நம்பும் ஒரு விஷயம் உயர்ந்தது என்பதை நம்ப மறுப்பவர்கள், தான் நம்பும் சில விஷயங்களால் ஒரு தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள்.  இவர்களை மாற்றுவது என்பது எளிதல்ல. இன்னொரு வகை, ஹிந்துத்துவம் என்பதை ஒரு அடிப்படைவாத குழு என்ற வகையில் நினைப்பது. தவறான புரிதல். உண்மையில் இத்தகையவர்களே அதிகம். இதற்கு காரணம் கூட நமது பாரம்பர்யம் கற்று தந்திருக்கும் பெருந்தன்மையே. ஒரு வகையில் அவர்களும் இந்துத்துவர்களே.

பலர் நமது பாரம்பர்யம் என்பதை பக்தியோடும், புராணங்களோடும் நிறுத்திக் கொள்கின்றனர். பலருக்கு உண்மையில் நமக்கு இருக்கும் பாரம்பர்யம் எத்தகையது என்பதை பற்றிய் முழு பார்வையும் கிடையாது.  இந்த கட்டுரைகள் அதை நமக்கு கற்று தருகின்றன.


அரவிந்தன் நீலகண்டன், பல ஆண்டுகளாக இணையத்தில் எழுதி வரும் சிந்தனையாளர். எந்த ஒரு விஷயத்தையும் போகின்ற போக்கில் அள்ளி விடாமல் அதற்கான தரவுகளை பல இடங்களிலிருந்து தருவது சிறப்பு. அதற்கான உழைப்பு பெரியது. ஆச்சர்யத்தை தருவது.

29 அக்டோபர் 2016

தூர்வை - சோ. தர்மன்

தூர்வை

தூர்வை என்ற வார்த்தையே இப்புத்தகத்தின் மூலமே கேள்விப்படுகின்றேன். தூர் என்றால் வேர் என்ற அர்த்தமுண்டு என்பது தெரியும் ஏதோ வேர் சம்பத்தப்பட்ட வார்த்தை என்று யூகித்தேன். சரிதான். அருகம்புல்லுக்கு அந்த பெயர். அருகம்புல்லின்  வேர் ஆழமானதாகவும், படர்ந்தும் இருக்கும். எளிதில் முழுவதும் அழிக்க முடியாது. மறுபடியும் துளிர்க்கும். 

ஒரு காலகட்டத்தை பற்றிய பதிவே இந்த தூர்வை. கோபல்ல கிராமம் நாவலுக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டும் கரிசல்காட்டு வாழ்க்கையை பேசுகின்றது, கிராமத்து வாழ்க்கை. ஒரு குடும்பத்தை வைத்துக் கொண்டு அவர்கள் கதை வழியாக ஊரின் கதையை சொல்வது. இரண்டிலும் உள்ள முக்கிய அம்சம், கதை. எழுதும் கதைகள் வேறு, சொல்லும் கதைகள் வேறு. சொல்லும் கதைகள் சுருக்கமானவை, அதில் ஒரு சுவாரஸ்யம், சொல்பவனின் கற்பனையும் கலந்தது இருக்கும். காதுகள் வழியே சென்று நமக்கு கற்பனானுபவத்தை தரும்.

தூர்வை அது போன்று கதைகளின் கலவை. மினுத்தான் - மாடத்தி குடும்பத்தை வைத்து ஒரு உருளக்குடி கிராமத்து கதையை சுவையாக கூறுகின்றார். எழுதவில்லை. கூறுகின்றார். நாம் எழுத்து வடிவில் கேட்கின்றோம். அத்தியாயம் என்று எதுவும் கிடையாது. எவ்வித பகுப்பும் இல்லை. எங்கு எப்பகுதி ஆரம்பித்து முடிகின்றது என்பதெல்லாம் கிடையாது. அவர் பாட்டிற்கு சொல்லிக் கொண்டே செல்கின்றார். கேட்ட, கண்ட அனைத்தையும் கொட்டிவிட வேண்டும் என்ற எண்ணமோ என்னவோ. ஆனால் எங்கும் சுவாரஸ்யம் குன்றவில்லை.

26 அக்டோபர் 2016

வலம் மாத இதழ்

வலம் இதழ் கைக்கு கிடைத்தது. முதலில் அனுப்பிய இதழ் பெயருக்கேற்றபடி வேறெங்கோ வலம் வந்து கொண்டிருக்கின்றது.  என் கைக்கு வரவில்லை. வலம் இதழுக்கு மின்னஞ்சல் அனுப்பிய பின் அவர்கள் உடனடியாக மற்றொரு இதழை அனுப்பினர். வெள்ளிக்கிழமை அனுப்பியது இன்று கையில் கிடைத்தது. முதல் இதழ் தவறியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. 

அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, ஹரன் பிரசன்னா ஆகிய மூவரும் ஆசிரியர்கள். கவிதையெல்லாம் இல்லையாம். அதை படித்த பின்னரே தைரியமாக பணம் கட்டினேன்.

ஒட்டப்பட்ட தபால் தலைகூட பத்திரிக்கையின் தலைப்பிற்கேற்றபடி இருந்தது. எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மியும்,கணித மேதை ராமானுஞரும். அதுவாக அமைந்ததோ, திட்டமிட்டதோ. பாலிதீன் கவரில் முகவரியுடன் சேர்த்து அதையும் டேப் போட்டு ஒட்டியதில், பாவம் கஷ்டப்பட்டு அதில் பேனாவை வைத்து டிக் அடித்திருந்தனர். (முத்திரையெல்லாம் இப்போது கிடையாதா? இருந்தாலும் இதில் அடித்திருக்க முடியாது. எல்லாப்பக்கமும் பாலிதீன் கவர்.)

20 அக்டோபர் 2016

வெய்யோன் - ஜெயமோகன்

வெய்யோன் 

ஜெயமோகன் எழுதும் வெண்முரசின் ஒன்பதாவது நாவல். இதன் பிறகு இரண்டு நூல்கள் வெளிவந்துவிட்டது. 

வெண்முரசின் முக்கிய அம்சம் பாரதத்தை பல்வேறு கோணங்களில் பார்ப்பதே. விடுபட்ட கண்ணிகளை சேர்க்கும் ஒரு முயற்சி. சிறிய பாத்திரங்கள் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றார்கள். வெய்யோன், கர்ணனை இன்னும் சற்று அருகில் சென்று பார்க்கும் ஒரு முயற்சி.

வெய்யோன், கர்ணனை நாயகனாக வைத்து எழுதப்பட்ட நாவல். நட்பிற்கு இலக்கணமாக கூறப்படும் கர்ணனின் பெயரைக்கேட்டதும், சிவாஜி கணேசன், கண்களை மூடிக்கொண்டு அம்மா, அம்மா என்று அழுது புலம்புவதும், சிவாஜி மீசையை முறுக்கிக்கொண்டு கர்ஜிப்பதோ அல்லது சிவப்பு விளக்கு மேனியில் பட்டு ஜொலிக்க வேதனையை காட்டுவதோ நினைவில் வந்தால் நீங்கள் கண்டிப்பாக பாரதத்தையும், வெய்யோனையும் படிக்க வேண்டும். காரணம் இரண்டிற்குமான வித்தியாசம். வயதிலிருந்து காட்சிகள் வரை. கர்ணன் ஒரு நல்ல திரைப்படம்தான் (நமக்கேன் வம்பு). 

வெண்முரசு வரிசையில் வெண்முகில் நகரத்திற்கு பின்னால் வந்த இரண்டு நாவல்களும் பாரதத்தின் மைய கதையை விட்டு வெகுதூரம் தள்ளிப் போய்விட்டது. தனி நாவலாக சரிதான். ஆனால் வெண்முரசின் வரிசையில் வைத்து பார்த்தால் ஒரு பெரிய இடைவெளி. இந்நாவல் அந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கியுள்ளது.  

26 செப்டம்பர் 2016

டணாயக்கன் கோட்டை - பாலகிருஷ்ண நாயுடு

பல சரித்திரக்கதைகளை படிக்கும் போது எப்போதும் தோன்றும் ஒரு எண்ணம்  " இத்தனை கோட்டைகள், சுரங்கங்கள் எல்லாம் எங்கே போயின". பள்ளியில் படிக்கும் போது படித்த இத்தகைய பல கதைகளின் விளைவால், எங்கள் கோவில் சுவர்களை எல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன்.  கடைசியில் சுவரிடுக்கிலிருந்த பல்லியை கண்டதே மிச்சம். கோவிலுக்கு அருகிலிருந்த ஓரிடத்தில் ஒரு இயற்கை பள்ளம் திடீரென தோன்றியது. ஒரு ஆய்வு குடுவை போல, ஏதோ ரகசிய குகை என்ற ஆர்வத்தில் உள்ளிறங்கி வெளியே வர மற்றவர்கள் உதவ வேண்டியிருந்தது.  அவ்வளவு ஆர்வம் (அ) ஆர்வக்கோளாறு.

சரித்திரத்தில் இடம் பெற்ற பகுதிகளை பார்க்க ஆர்வம் வந்ததற்கு காரணமே இப்புத்தகங்கள்தான்.  பெங்களூர் அருகிலிருக்கும் நந்தி மலையும் சரித்திர புகழ் பெற்ற இடம் என்று அங்கு சென்ற பின்னர் தெரிந்தது. அங்கிருக்கும் குட்டி குட்டி மதில் சுவர்களை கண்டு ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. ஆனால் ஸ்ரீரங்கப்பட்டினம் சென்று வந்த பின்னரே தெரிந்தது அது ஒரு சரித்திரப் புகழ் பெற்ற ஒரு இடம் என்று. நான் அதை ஒரு கோவில் என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்தேன். முன்னமே தெரிந்திருந்தால் இன்னும் சற்று நேரம் செலவழித்து முழுவதும் பார்த்திருக்கலாம். அந்த ஸ்ரீரங்கப்பட்டினத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை டணாயக்கன்  கோட்டை.

டணாயக்கன்  கோட்டை பாலகிருஷ்ண நாயுடுவால் எழுதப்பட்டது. 1956ல் நவ இந்தியா பத்திரிக்கையில் தொடர்கதையாக வெளிவந்த நாவல். 1959ல் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு கரம்வீர் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

டணாயக்கன்  கோட்டை இன்று பவானி சாகர் அணைக்கட்டின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்த ஒரு அரண்மனை. இன்றும் அக்கோட்டையிலிருக்கும் கோவில், அணையின் நீர்மட்டம் குறையும் போது வெளிப்படுகின்றது. 

ஸ்ரீரங்கப்பட்டினக் கதைக்கு எதற்கு டணாயக்கன்  கோட்டை என்ற பெயர் என்ற கேள்வி சரிதான். கோட்டை வரிசைக் கதையில் வருவதாக இருந்திருக்கும். மற்றபடி டணாயக்கன்  கோட்டை வருவதே கொஞ்ச நேரம் மட்டுமே. கதை பெரும்பாலும் நடப்பது இன்றைய கர்நாடகாவில். திப்பு சுல்தான் காலத்தில் அவனது ராஜ்ஜியம் திண்டுக்கல் வரை பரவியிருந்ததாக கூறப்படுகின்றது. எங்கள் கோவிலில் ஒரு அழகான பெருமாள் சிலை உண்டு. அது நடுவில் திருடப்பட்டு, எங்கோ தோப்பில் கிடந்து கிடைத்தது. அவ்வளவு அழகான விக்கிரகம். அது திப்பு சுல்தான் காலத்தது என்பார்கள், அவனே தந்தது என்று சிலர் சொல்ல கேள்வி. திண்டுக்கல்லையும் தாண்டி பரவியிருந்திருக்கின்றது அவனது ராஜ்ஜியம்.

07 செப்டம்பர் 2016

ஸ்க்ரூ

சும்மா ஒரு மாறுதலுக்கு - பழைய குப்பைகளை கிளறியபோது கிடைத்த கதை(???)

ஒரு சின்ன ஸ்க்ரூ அவன் வாழ்க்கையை மாற்றும் அளவிற் பிரச்சினை தரும் என்று அவனுக்கு தெரிந்திருந்தால் அவன் அந்த பழைய இத்துப் போன ட்ரான்ஸ்ஸிஸ்டரை கழற்றியிருக்க மாட்டான். டெக்னிக்கல் ஆர்க்கிடெக்ட்டாக (தமிழில் என்ன?) பணி புரியும் அவன், அவ்வப்போது தான் படித்தது எலெக்ட்ரானிக்ஸ் என்பதை தனக்கும்,  மனைவிக்கும் நினைவுபடுத்த செய்யும் வேலை. அது கொஞ்சம் பழைய ட்ரான்ஸிஸ்டர், மொட்டைமாடியில் வைத்துக் கொண்டு இளையராஜா பாட்டு கேட்க வேண்டும் என்று ஆசை.

"ஏங்க காபி வேணுமா" என்று கேட்டபடி அவன் மனைவி குழந்தையுடன் வந்தாள்.

"கொண்டு வா" என்றான்.

"இந்தாங்க இவன கொஞ்சம் பாத்துக்கங்க" என்று குழந்தையை விட்டு விட்டு உள்ளே சென்றாள்.

"வேலையா இருக்கேன் இல்ல இவன இங்க விட்டுட்டு போற. டேய் ஒன்னையும் தொடக்கூடாது , தொட்ட அடி"

பையன் அதை எல்லாம் கண்டு கொள்ளாது, ஒன்றொன்றாக கலைத்து விளையாட ஆரம்பித்தான்.

"இனி இவன வச்சிட்டு ஒரு வேலையும் செய்ய முடியாது" என்று முனங்கி விட்டு, அனைத்தையும் திரும்ப அசெம்பிள் செய்ய ஆரம்பித்தான்.

தொலைபேசி மணி அடித்தது.

"என்னடா சொல்லு" "வரலியா?" "இதுக்கு எல்லாமா பொண்டாட்டிகிட்ட கேக்கனும். அவங்களுக்கு என்னடா தெரியும்" "என்ன எழவோ பண்ணு, கன்ஃபார்ம் பண்ணிட்டு கூப்டு"

பேசிவிட்டு திரும்பி பார்த்தான். குழந்தை அருகில் இல்லை, டீவியை அருகில் ஜாலியாக தரையை ஈரமாக்கிக் கொண்டிருந்தான்.

டிரான்ஸிஸ்டர் கவரை மாட்டிவிட்டு, ஒவ்வொரு ஸ்க்ரூவாக மாட்ட ஆரம்பித்தான்.  ஒரு ஸ்க்ரூவை காணவில்லை. தரை, சோபா, என அனைத்து இடத்தையும் தேடிப் பார்த்தான், கிடைக்கவில்லை.

"என்னத்த தேடிட்டு இருக்கீங்க" என்றபடி அவன் மனைவி வந்தாள்

"ஒரு ஸ்க்ரூவ காணோம், அத மாட்டிட்டா வேலை முடிஞ்சிடும், எங்கயோ விழுந்துடிச்சி போல, விளக்குமாற எடுத்துட்டு வா?"

"பையன் பக்கத்துல இருந்தானா?"

"ஆமா"

பையன் மெதுவாக நகர்ந்து பால்கனி பக்கம் போயிருந்தான். அங்கிருந்த க்ரில் நடுவில் இரண்டு காலையும் வெளியில் தொங்கப்போட்டுக் கொண்டு யாரையோ பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.

"கண்ணு, அப்பாகிட்டருந்து ஏதாவது எடுத்துட்டு வந்தியா"

மெதுவாக கையை விரித்து காட்ட ஒரு குட்டி ஸ்க்ரூ.

"இவன் கிட்ட இருக்கு, டேய் கொண்டா அது அப்பாவுக்கு வேணும்"

டக்கென்று கையை பின்னால் வைத்துக் கொண்டு, "ம் ஹூம்" என தலையை ஆட்டிவிட்டு ஓட ஆரம்பித்தான். விரட்டி சென்று பிடித்தவுடன், ஸ்க்ருவை டபக்கென்று வாயில் போட்டுவிட்டான்.

"டேய், டேய் துப்பு துப்பு" என்று வாயில் விரலை விட்டு துழாவினாள், இல்லை.

கண்கள் மாறியது, வாந்தி வருவது போல குமட்டினான். ம்ஹூம். வாயை திறந்து திறந்து மூடி, கண்கள் சொருகியது. மயங்கி விழுந்தான்.

அவள் பையனை மடியில் குப்புற போட்டு முதுகில் தட்டினாள், லேசாக இருமினானே ஒழிய, ஸ்க்ரு வரவில்லை.

பிரமை பிடித்தது போல பார்த்துக் கொண்டிருந்த அவன் ஓ வென்று அழுக ஆரம்பித்தான்.

"ஏங்க, போய் ஆட்டோ கூட்டிட்டு வாங்க. ஆஸ்பத்திரிக்கு போலாம்"

அவள் கூறியது எதுவும் அவன் காதில் விழவில்லை. பையனை மடியில் போட்டுக் கொண்டு ஏதோ புலம்பிக் கொண்டிருந்தான். அவனை உலுக்கி உலுக்கி பார்த்துவிட்டு, ஒன்றும் செய்வதற்கில்லை என்று ஆட்டோ பிடிக்க வெளியே ஓடினாள்.

அவன் பிரமை பிடித்தவன் போல குழந்தையை வைத்துக் கொண்டிருந்தான். அவள் குழந்தையை எடுத்துக் கொண்டு, அவனையும் ஒரு கையால் இழுத்துக் கொண்டு ஓடினாள். இருவரையும் டாக்டரிடம் காட்ட வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது.

ஆட்டோ ஓடிய வேகத்திற்கும், குலுக்கலுக்கும் கூட ஸ்க்ரூ வெளியே வரவில்லை.

குழந்தை மூச்சு விடுவதே தெரியவில்லை. உடலின் நிறமும் மாற தொடங்கியது. நீலமாக போவது போல அவளுக்கு தெரிந்தது.

விடாமல் அவனை தட்டி தட்டி எழுப்பிக் கொண்டே வந்தாள். அவன் தன் புலம்பலை விடாமல் தொடர்ந்து கொண்டே இருந்தான். "யோவ் சும்மா இருய்யா, அந்தம்மாவே தைரியமா வருது, ஞை ஞை ன்னுட்டு"

மருத்துவமனையில், மருத்துவர்

"ஆணி உள்ளே போகவில்லை, மூச்சுக் குழலுக்கும், உணவு குழலுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டது போல உள்ளது. ரொம்ப நேரம் இருந்தால் உயிருக்கு ஆபத்து. உடனே ஸ்கேனும் எக்ஸ்ரேயும் எடுக்க வேண்டும். அதன் பின் எப்படி எடுப்பது என்று முடிவு செய்ய வேண்டும்" என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு சென்றார்.

ஸ்கேன் எடுக்கும் இடத்தில் பயங்கர கூட்டம்.

பையனை மடியில் வைத்துக் கொண்டு தளர்ந்து ஒரு சேரில் விழுந்தான். இந்த உலகத்தில் இருப்பவன் போலவே இல்லை. பிரமை முற்றிய பைத்தியக்காரன் போல இருந்தான். "முதல்ல அவன என்கிட்ட கொடுங்க, போய் எமெர்ஜென்சின்னு சொல்லி சீக்கிரம் ஸ்கேன் எடுக்க சொல்லுங்க" என்று கூறியப குழந்தையை இழுத்தாள். அவன் தராமல் இன்னும் இறுக்கிக்  கொண்டு ஏதோ புலம்ப ஆரம்பித்தா. இவள் இழுக்க, இழுக்க அவன் குழந்தையின் வயிற்றை பலமாக அழுத்தி பிடித்து தன்னிடம் வைத்துக் கொண்டான். அழுத்திய வேகத்தில் குழந்தை பலமாக இருமியது. டொ

ஸ்க்ரு வெளிய வந்து விழுந்தது.

அடுத்த வாரம் முதல் அவள் மீண்டும் வேலை தேட ஆரம்பித்தாள்.

06 செப்டம்பர் 2016

இரும்பு குதிரைகள் - பாலகுமாரன்

கடந்த சில நாட்களுக்கு முன்னால் மதுரை, சென்னை செல்ல வேண்டியிருந்தது. தொடர்வண்டி நிலையத்திலிருந்த புத்தகக்கடையில் மேய்ந்ததில் ஒன்று தெரிந்தது. சென்ற வருடம் பார்த்ததற்கும் இந்த வருடம் பார்ப்பதற்கும் எவ்வித வித்தியாசமுமில்லை. அதே புத்தகங்கள். யாரும் வாங்குவதில்லையா என்ன? வழக்கம்போல பாலகுமாரனே அதிகம். சென்னையில் கொஞ்சம் பக்தி, கண்ணதாசன் போன்றவை. சரி, பாலகுமாரனையே வாங்குவோம் என்று இரும்பு குதிரைகளும், மெர்க்குரிப் பூக்களும் வாங்கினேன். 

பாலகுமாரனின் புத்தகங்களை முடிந்தவரை தவிர்ப்பது என் வழக்கம். காரணம், முன்பே ஏதோ ஒரு பதிவில் சொன்னதுதான். கல்லூரியில் சிலரின் கையில் இருந்த பாலகுமாரன் அவர்களை மாற்றியிருந்த விதம். சுத்த தொணதொணப்பு. எதைப்பற்றியும் ஒரு கருத்து இருப்பதாக நினைத்துக் கொண்டு அபத்தமாக பேசுவது, எதிராளியை பேச விடாமல் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பது. மற்றவர்களை விட நான் வித்தியாசமானவன் என்று அலட்டிக் கொள்வது என்று ஒரே போலித்தனம்.  சமீபத்தில் பார்த்த போது தெரிந்தது இன்னமும் திருந்தவில்லை. நான் எப்படி வேலை செய்ய வேண்டும், எங்கு வேலை செய்ய வேண்டும், எப்படி முதலீடு செய்யவேண்டும் என்று ஒரே அலட்டல். தாங்க முடியவில்லை. காரணம், எளிது. பாலகுமாரனையும், ஜெயகாந்தனையும் படித்து அதை போலி செய்ய முயற்சிக்கின்றார்கள். 

பாலகுமாரன் கதைகளில் எப்படியும் அவர் எங்காவது வந்து அமர்ந்து கொள்கின்றார். ("ஸீ, இதைச் சொல்றது பாலகுமாரன்தான். கேரக்டர் மூலமா அவர்தான் பேசறார்) அதற்கு பெயர் கட்டுரை. ஆனால் நான் படித்து பார்த்த நாவல்கள், பாலகுமாரன் "எழுத்து சித்தராக" பரிணாம வளர்ச்சி அடைந்த பின் எழுதியவை. இவ்விரண்டு நாவல்களும் அவரது நாவல்களில் ஓரளவு சுமாரானவை என்று கேள்விப் பட்டதால் துணிந்து வாங்கினேன். நல்லவேளை.

வருடத்திற்கு பத்து பதினைந்து தடவை சொந்த ஊருக்கு பஸ்ஸில் போவதுண்டு. பெரும்பாலும் சாந்திநகரில் ஏறினால், மடிவாலா வரும் முன்பே தூங்கிவிடுவேன். மறுபடியும் முழித்து பார்ப்பது தேனி வரும்போது. ஒரு முறை சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. காரில். தூக்கம் வரமுடியாத சூழல். அன்றுதான் நெடுஞ்சாலைகளை தெளிவாக பார்த்தேன். எத்தனை வண்டிகள். லாரிகள். பெரிய பெரிய கண்டெய்னர்கள். ஒவ்வொரு கனரக வண்டியிலும் எத்தனை விதமான பொருட்கள். காற்றாலை விசிறிகள், பெரிய பாய்லர்கள், இனம் தெரியாத பொருட்கள். ஒரு லாரியில் ஒரு பெரியகல். ஒரே ஒரு கல். ஒரு பெரிய கண்டெய்னர் அளவில். அங்கங்கு இளைப்பாறும் வண்டிகள். ஒரு புதிய உலகு இங்குள்ளது என்று காட்டியது. பின்னர் அலுவலக ரீதியாக மேலும் இதைப்பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது. ஒரு பெரிய பொருளை ஓரிடத்திலிர்ந்து இன்னொரு இடத்திற்கு அனுப்புவது என்பது எத்தனை பெரிய வேலை என்பது தெரியவந்தவுடன் ஒரு மலைப்பு. நமக்கு தெரியாத பல உலகங்கள் உள்ளன. பல கோடி மதிப்பிலான பொருளை, ஒரு ட்ரைவர், க்ளீனரை நம்பி அனுப்பி வைப்பவனுக்கு எப்படியிருக்கும். அதுவும் சில பொருட்கள் செல்ல மாதக்கணக்கில் ஆகும். ஓட்டிச் செல்பவனுக்கான பொறுப்பு எத்தகையது. எங்கு சாப்பிடுவார்கள், மற்ற இயற்கை கடன்களை எப்படி தீர்ப்பார்கள், தூக்கம் எப்படி, அத்தனை நாள் குடும்பத்தை விட்டு செல்லும் அவர்களின் மனநிலை...

இந்த பெரிய உலகில் ஒரு சிறிய துளியை நமக்கு காட்டுகின்றது இப்புத்தகம். அந்தவகையில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த புத்தகம். 

தண்ணித்தொட்டி தெரு. லாரிகள் புழங்குமிடம். இரண்டு லாரிக்கம்பெனிகள். காந்திலால், ராவுத்தர். ராவுத்தரின் லாரிகள் இரண்டும் ஒரே நாளில் பிரச்சினையில் மாட்டுகின்றன. ஒன்று ஆளை அடித்து போட்டுவிட்டு வருகின்றது. இன்றொன்று கிணற்றை இடித்து தொற்றிக் கொண்டு நிற்கின்றது. காந்திலாலின் லாரி, இங்கிலீஷ் கம்பெனியின் லோடை ஏற்றி வரும் வழியில் காணவில்லை. அதைத்தேடி இங்கிலீஷ்க் கம்பெனி ஆள் விஸ்வநாதன் போகின்றான். இங்குதான் கதை ஆரம்பம். லாரிகள் அடிபடமுதல் காரணமாக, கீறல்விட்ட சக்கரத்தை தட்டி, ஒட்டி விற்பதில் ஆரம்பிக்கின்றது. காயலாங்கடையில் எடுத்த சக்கரம், லாரியில் மாட்டப்படுகின்றது. யாரோ ஒருவருடைய வியாபர தந்திரம், மற்றொருவருடைய வியாபாரத்தை சாய்க்கின்றது. 

சாதரணமாக நாம் பார்க்கும் ஒரு லாரியின் பின்னால் எத்தனை கைகள் உள்ளன. லாரியின் முதலாளி, வாடகைக்கு எடுத்து ஓட்டும் டிரைவர் அல்லது லாரிக் கம்பெனியின் டிரைவர். லாரிக்கு லோடு பிடித்து தரும் தரகர்கள், லோடை ஏற்றிவிட்டு பத்திரமாக சேர்ந்ததா என்று நகம் கடிக்கும் கைகள். லோடிற்கு மேல் லோடடிக்கும் டிரைவர்கள், க்ளீனர்கள். லாரியில் பணம் குடுத்து செல்லும் பிரயாணிகள். இவர்களை நம்பி பிழைக்கும் ரோட்டோரப் பெண்கள், அவர்களுக்கு ஆள் பிடிக்கும் பையன்கள். பெரிய வலை. அவையனைத்தையும் இதில் காட்டுகின்றார் பாலகுமாரன்.

டிரைவர்களுக்கும், க்ளீனர்களுக்குமான உறவுமுறை. எழுதப்படாத சட்டங்கள். குருதட்சிணை. வண்டியை ஓட்டுவது என்பது அந்த வண்டியை கையாள்வது மட்டுமல்லவே, மனிதர்களையும் சேர்த்து கையாள வேண்டியது. மற்ற வண்டிகளை ஒட்டும் ஓட்டுனர்கள், முதலாளிகள், அங்கங்கு இருக்கும் டோல் கேட், காவல்துறை எனப்பலவித சூட்சுமங்களை க்ளீனருக்கு, ட்ரைவர் கற்று தருகின்றான். அதற்கான தட்சிணை, கட்டைவிரலுக்கு பதிலாக சிறைவாசம். 

ஒரு நல்ல முதலாளி என்பவன் தான் வளர்வதுடன், தன் தொழிலாளர்களையும் சேர்த்து வளர்ப்பது. இப்போதும் அது போன்ற மனிதர்கள் இருப்பார்கள் என்று நம்புகின்றேன். ஜெயகாந்தனின் "லவ் பண்ணுங்கோ சார்" கதை என்று நினைக்கின்றேன், அதில் முதலாளி - தொழிலாளியை பற்றி அழகாக வரும். கோஷம் போடும் கூட்டம் வரும் முன்னமே, இங்கு பெரும்பாலனவர்கள் அப்படித்தான் இருந்திருக்கின்றனர். ராவுத்தர் பாத்திரம் அப்படிப்பட்ட ஒன்று. 

டீஸல், பெட்ரோல் கண்டெய்னர்களில் இருந்து அவை கொஞ்சம் திருடப்படும் என்பது தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை. சென்னையில் இருந்த போது, எனக்கு தெரிந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் கூறியது, டீஸல் கண்டெய்னகள், பங்கில் சரக்கை சேர்த்த பின்னும் கண்டெய்னரில் கொஞ்சம் இருக்கும். கண்டெய்னரின் உருளை வடிவத்தால் அடியில் கொஞ்சம் இருக்கும் அதை பம்ப் செய்ய முடியாது. வண்டியை ஸ்டார் செய்து, சடன் ப்ரேக் அடிக்கும் போது வண்டி குலுங்கும், அந்த குலுக்கலில் டீஸல் பைப் வழியாக வெளிய கொட்டும். அப்படியே மிச்சமிருக்கும் டீஸல் பெட்ரோல் எடுக்கப்படும். இப்புத்தகத்தில் வருவது இன்னும் சயன்டிஃபிக்கான முறை. 



லாரிக்கதைகளுடன் மனிதக்கதைகளையும் அழகாக கோர்த்துள்ளார். விஸ்வநாதன் அவரது நண்பர் சுப்ரமணிய ராஜுவின் கேரக்டர் என்று முன்னுரையில் மாலன் கூறுகின்றார். அவரும் ஒரு எழுத்தாளர். பாலகுமாரன் விஸ்வநாதன் பாத்திரத்தையும், காயத்ரி பாத்திரத்தையும் எழுதும் போது வந்து உட்கார்ந்து கொள்கின்றார். விஸ்வநாதன் கூட ஓகே, ஏதோ எழுத்துக்கும், வாழ்க்கைக்கும் நடுவில் போராடும் ஒரு சராசரி ஆசாமி. விஸ்வநாதனின் மனைவியாக வரும் தாரிணி பாத்திரம் யதார்த்தவாதி, கற்பனையில் பறக்கும் புருஷனை தலையில் தட்டி தரைக்கு கொண்டுவருகின்றாள். நான் ஒரு கவிஞன், எழுத்தாளன் எனவே எனக்கு மரியாதை அதிகம் என்று கூறுவதை கண்டிருக்கலாம். ஆனால் அனைத்தையும் விட, ஒரு நல்ல மனிதனாக வாழ்பவன், தன் வாழ்க்கையின் மூலமாக அவர்களை விட பல செய்திகளை சொல்லிவிட்டு போகின்றான். தாரிணி கூறுவது அதையே. அனைவரும் பாரதியாக முடியாது.  

பாலகுமாரன் ஏன் தவிர்க்கமுடியாத எழுத்தாளர் ஆனார் என்பதற்கும் விடை கிடைக்கின்றது. கதை மாந்தர்வாயிலாக இயல்பாக வரும் சின்ன சின்னவிஷயங்கள். அப்பம் வடை தயிர்சாதம் நாவலில் வரும் ஒரு சின்ன விஷயம் "பிழைக்க ஊரைவிட்டு வரக்கூடாது, வந்தால் அதைப்பற்றியே நினைத்துபுலம்பக்கூடாது" எனபது போன்றுவரும். இதன் முன்னும், பின்னும் வரும் விஷயங்கள், ஹோம்சிக் வந்து பெங்களூரில் புலம்பிக்கொண்டிருந்த என்னை கொஞ்சம் மாற்றியது. இப்புத்தகத்திலும் அது போன்று இயல்பாக வரும் விஷயங்களே கவர்கின்றது. கெளசல்யாவிற்கு முதலி சொல்லும் யோசனைகள், ராவுத்தர் பேசும் வார்த்தைகள் என்று. பலருக்கு இது போன்ற நேரடியான அறிவுரையும் தேவையாக இருக்கின்றது.

நாவலை கெடுப்பது என்பது நான் நினைப்பது காயத்ரி பாத்திரம் மட்டுமே.  

இம்மாதிரி பாத்திரங்கள்தான், நான் முதல் பத்தியில் சொன்ன ஆசாமிகளை உருவாக்குவது. ஓவர் இண்டெல்க்சுவலாக நினைத்துக் கொண்டு பேசுவது. எரிச்சல்தான் வருகின்றது. கல்யாணமாகாமல் குழந்தையை மட்டும் பெற்றுக் கொள்ள விரும்பும் பெண். அது ஒன்றும் பெரிய அதிர்ச்சி லெவல் இல்லை, ஆனால் பேசுவது அப்பா. தாங்க முடியவில்லை.

நாவலில் வரும் கவிதைகள், மற்றுமொரு ஸ்பீட் ப்ரேக்க்கர். ஏகப்பட்ட கவிதைகள். கவிதை விரும்பிகள் படித்து இன்புறுவார்களாக.

அவரரிந்த உலகில் ஒரு சிறு பகுதியை இதில் காட்டியுள்ளதாகவே நினைக்கின்றேன்.

இதுவரை படித்த பாலகுமாரனின் பல நாவல்களின் இதுதான் நல்ல நாவல் என்று நினைக்கின்றேன். இது போன்ற நாவல்கள் என்றால் படிக்கலாம்.

பாலகுமாரனின் தளம்

இரும்பு குதிரைகள் வாங்க

02 செப்டம்பர் 2016

ஹிந்துத்துவ சிறுகதைகள் - அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்ஹிந்து தளத்தில் ஆலந்தூர் மள்ளன் என்ற புனைப்பெயரில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கதைகளின் தொகுப்பு. 

அரவிந்தன் நீலகண்டனை எனக்கு அறிமுகம் செய்தது திண்ணை இணைய தளம். அவரது பல கட்டுரகள் எனக்கு பல புதிய அறிமுகங்களை தந்துள்ளன. அவரின் கம்யூனிசம் பற்றிய புத்தகம் வெகு சுவாரஸ்யமான, விவரங்கள் நிறைந்த ஒரு புத்தகம். 

சிறுகதைகள் என்பது மிகக்கடினமான ஒரு வடிவம். பலர் அதை பலவிதமாக கையாண்டுள்ளனர். அதில் ஒரு வகை சிறுகதைகளை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது. கல்கி மதுவிலக்கை பற்றி ராஜாஜியின் இதழ்களில் பல கதைகள் எழுதியிருக்கின்றார். அவை மிக வெளிப்படையான பிரச்சாரக்கதைகள். அவற்றில் அவர் கூறவந்த கருத்து வெகு தெளிவாக, வெளிப்படையாக வரும். பேங்கர் வினாயக்ராவ் என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வந்துள்ளது ஆனால் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இக்கதைகள் அனைத்தும் அத்தகையவை அல்ல. ஒரே ஒரு சிறுகதையை மட்டும் அப்படி முழுக்க முழுக்க பிரச்சாரக்கதை என்று கூறலாம். மற்றவை அனைத்தும் சிறந்த சிறுகதைகள் என்ற அளவிலேயே படிக்கலாம். வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம்.

25 ஆகஸ்ட் 2016

காலந்தோறும் நரசிங்கம் - ஜடாயு


ஜடாயு பல ஆண்டுகளாக இணையத்தில் இயங்கி வருபவர். கம்பராமாயண ரசிகர். ஆர்.எஸ்.எஸ்க்காரர். (ஆமாம் முற்போக்குவாதிகள் / அறிவுஜீவிகள்  எல்லாம் கிளம்பலாம்). ஆழ்ந்த தமிழ் புலமை கொண்டவர். அவர் எழுதிய முதல் நூல் காலந்தோறும் நரசிங்கம்

ஹிந்துத்துவம் என்பதே ஒரு கெட்டவார்த்தை என்பது போன்ற தோற்றத்தை உண்டாக்க நமது போலி முற்போக்காளர்கள் முயன்றுவருகின்றனர். அவர்களுக்கு உதவ சில குழுக்களும் திரிகின்றன. ஸ்ரீராம் சேனா, அந்த சேனா என்று பல உதிரிகள் செய்யும் அடாவடித்தனங்களையும் ஹிந்துத்துவம் என்ற ஒரே குடையில் கொண்டுவர முயற்சிக்கின்றனர். எது உண்மையான ஹிந்துத்துவம்? கொஞ்சம் சிக்கலான கேள்வி. அதற்கு பதில் தர பல புத்தகங்கள் உள்ளன. ஜடாயுவின் புத்தகம் அதில் ஒன்று. 

ஹிந்துமதம் குறித்து பக்தி நோக்கில் எழுதப்படும் கட்டுரைகளுக்கோ, எழுதுபவர்களுக்கோ எவ்விதப்பிரச்சினையுமில்லை. ஹிந்துமதத்தை அரசியல், பண்பாட்டு, வரலாற்று ரீதியில் அணுகும் எழுத்தாளர்களுக்கு மட்டுமே பிரச்சினை. இந்த நிலையில் ஹிந்துமதத்தை பற்றி ஆராய்ச்சி பூர்வமாக கட்டுரை எழுதுபவர்கள் வெகு குறைவு. அவர்களில் ஒருவர் ஜடாயு.

தமிழ் ஹிந்து (ஒரிஜினல். தி ஹிண்டு இல்லை) தளத்தில் பல கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். காலைத்தேநீருடன் இந்துத்துவா என்று வரிசையாக பல கட்டுரைகளை எழுதினார். அக்கட்டுரைகளிலிருந்து சிலவும், வேறு தலைப்புகளில் அதே தளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு காலந்தோறும் நரசிங்கம். இதில் வரும் பல கட்டுரைகளைப் பற்றியும் அதோடு தொடர்புடைய என் கருத்துக்கள், நினைவுகள், அனுபவங்கள் கீழே.

17 ஆகஸ்ட் 2016

வீரபாண்டியன் மனைவி - அரு. ராமநாதன்

சரித்திர நாவல்கள் என்றால் நினைவிற்கு வருவது கல்கி, சாண்டில்யன் மட்டுமே. இவர்களைத் தவிர இன்னும் பலர் எழுதியிருந்தாலும் இவர்கள் இருவர் அளவிற்கு புகழடைந்தவர்கள் எவருமில்லை. கல்கியின் கதைகளில் சரித்திரம் என்பது வெகு சொற்பமே. சரித்திர சம்பவங்களை ஒரு அடிப்படையாக வைத்துக் கொண்டு, முழுக்க முழுக்க தன் கற்பனையால் வாசகர்களை கவர்ந்தார். ஒரு ஃபேண்டசி வகையில்தான் சேர்க்க வேண்டும். கல்கி வெகு குறைவாகவே எழுதினாலும், ஒவ்வொன்றையும் வித்தியாசமாக எழுதியதால் எங்கும் அலுப்பு தட்டாத நாவல்கள். சாண்டில்யன், கல்கியை ஒட்டியே எழுதினாலும், இவர் வித்தியாசப்படுவது வர்ணனைகளால். சிருங்கார வர்ணனைகள், அமானுஷ்யமான கதாநாயகர்கள். இரும்புச் சலாகையால் உரசும் குரல் வில்லன்கள்.ஒரே டெப்ளேட். இருந்தும் ஒரு சில கதைகள் சுவாரஸ்யமானவை. தொடர்கதைகளுக்கேற்றவை. ஒரு நல்ல எடிட்டரை கொண்டு வெட்டி எறிந்தால், க்ரிஸ்ப்பான

பல நாவல்களும், பல சிறுகதைகளும் கிடைக்கும்.

இவர்கள் இருவரை தவிர மற்றவர்கள் எழுதிய சரித்திர கதைகள் பெரும்பாலும் அலுப்பூட்டுபவையாகவே இருக்கின்றது. பாண்டிமாதேவி, மணி பல்லவம் என்று இரண்டு நாவல்கள். தண்டத்திற்கு காசு கொடுத்து வாங்கியதற்கு இன்று வரை வருந்துகின்றேன். அவை என் கண்ணில் படக்கூடாது என்று ஊரிலேயே வைத்துவிட்டு வந்திருக்கின்றேன். சுஜாதா எழுதிய காந்தளூர் வசந்தகுமாரன் கூட ஒரு சுமாரான நாவலே. அகிலன், ஜெகச்சிற்பியன், உதயணன், என்று  பலர் பல சரித்திர தொடர்கதைகளை எழுதியுள்ளார்கள். ஆனால் அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை என்று எதையும் சொல்ல முடியவில்லை. அனைத்து கொஞ்சம் ஃபேண்டசி கதைகள். படிக்கவும் சுவாரஸ்யமற்ற மொக்கைகளே. ஆனால் வீரபாண்டிய மனைவியை அந்த வகையில் சேர்க்க முடியாது.

சரித்திரக் கதைகள் என்ற அளவில்லல்ல. சரித்திரத்தை அடிப்படையாக் கொண்ட, சுவாரஸ்யமான கற்பனை நாவல் (அ) தொடர்கதை ஆசிரியர் என்ற வகையில். கல்கி, சாண்டில்யனுக்கு அடுத்த வகையில் அரு. ராமநாதனை வைக்கலாம். அரு. ராமநாதன் பிரேமா பிரசுரத்தில் பணி புரிந்தார் என்று தகவல். உரிமையாளரா என்பதெல்லாம் தெரியவில்லை. பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். வீரபாண்டியன் மனைவி அரு. ராமநாதனின் காதல் என்னும் பத்திரிக்கையில்  வெளிவந்த ஒரு தொடர்கதை. தொடர்கதைகளுக்குரிய பலவீனங்களை கொண்ட ஒரு நாவல். தியாக வினோதர் என்று பட்டம் பெற்ற குலோத்துங்கச்சோழன், பாண்டிய மன்னனான வீரபாண்டியனை வென்று அவன் சகோதரான் விக்கிரமபாண்டியனை அரியணை ஏற்றினான் என்ற சரித்திர சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு நாவல்.

11 ஆகஸ்ட் 2016

மிஸ்டர் வேதாந்தம் - தேவன்


தமிழின் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான தேவனின் நாவல்.

முன்பு தொடர்கதை எழுத ஒரு டெம்ளேட் இருந்திருக்க வேண்டும். நல்லவன் ஒருவன், அவனுக்கு அடுத்தடுத்து துயரம், துக்கம், வேதனை, அழுகை. அவனுக்கு உபத்திரம் செய்ய ஒரு கூட்டமே வேலை செய்ய வேண்டும். அதே சமயம் அவனுக்கு உதவி செய்யவும் சில மாயாவிகள் வர வேண்டும். கதை முடிவதற்கு ஒரு மாதம் வரை துக்கப்பட்டு, துன்பப்பட்டு தொடர்கதை முடியப்போகின்றது என்று தெரிந்தவுடன், துக்கம் எல்லாம் மாயமாய் மறைந்து, துன்பம் செய்த தூர்த்தர்கள் எல்லாம் திருந்தி அல்லது அதற்கான தண்டனை அடைந்து, நல்லவன் வென்றான் என்று முடியவேண்டும்.

தேவன் பல நல்ல கதைகள் எழுதியிருந்தாலும் இது ஒரு டெம்ப்ளேட் கதைதான். லக்ஷ்மி கடாட்சம் என்று ஒரு தொடர்கதை உண்டு. அதே போன்ற ஒரு கதை. வேதாந்தம் ஒரே அந்தியாத்தில் தகப்பனாரை இழந்து, கடனுக்கு சொத்தை இழந்து, வீட்டையும் இழந்து, பி.ஏவும் தோற்று நிற்கின்றான். அதன் பின் ட்யூஷன் வாத்தியாரி, எழுத்தாளருக்கு உதவியாகி, டுபாக்கூர் பத்திரிக்கைக்கு ஆசிரியராகி, இதற்கெல்லாம் நடுவில் கதைகளும் எழுதி, இறுதியில் பத்திரிக்கை உதவியாசிரியராகி, அத்தை மகளை திருமணம் செய்து கொள்கின்றான். நடுவில் அவனுக்கு துரோகம் செய்த உறவினர்களின் நிலையை கண்டு வருந்தி .................

இத்தனையும் மீறி எதற்கு படிக்க வேண்டும் என்கின்றீர்களா, ஒன்று எதையும் படிக்கலாம் என்ற எண்ணம், இரண்டு இதையும் படிக்க வைத்த தேவனின் எழுத்து சாதுர்யம். விறுவிறுப்பான நடை. எதிர்பார்த்த அல்லது தெரிந்த முடிவு என்றாலும், அதைப் சுவாரஸ்யமாக்கும் எழுத்து.

அங்கங்கு வரும் நகைச்சுவை. தேவன் உண்டாக்கும் பாத்திரங்கள் கொஞ்சம் தனித்துவமானவை. இதிலும் அதுமாதிரி பல பாத்திரங்கள்.

வாங்கி படியுங்கள். படுபயங்கர செறிவான, கடினமான, இலக்கியமான நாவல்கள் படித்தாலும், அவ்வப்போது அதிலிருந்து வேறுபட்டு கொஞ்சம் எளிதாக்கிக் கொள்ள இது போன்ற புத்தக்ங்களும் தேவை. குழந்தைகளுக்கு கொடுங்கள். வேகமாக படிக்கும் வழக்கத்தை இது போன்ற புத்தகங்கள் எளிதாக உண்டாக்கும்.

இங்கே கிடைக்கின்றது.

09 ஆகஸ்ட் 2016

பருவம் - எஸ்.எல்.பைரப்பா

மகாபாரதத்தின் தனித்தன்மையே, அதை நம்மால் பல்வேறு தளங்களில் வைத்து வாசிக்க முடியும் என்பதுதான். பல்வேறு முடிச்சுகள் கொண்ட ஒரு சுவாரஸ்யமான கதையாகவும் வாசிக்க முடியும், தர்ம - அதர்ம விவாதங்களை காட்டும் ஒரு தர்ம நூலாகவும் படிக்க முடியும், முழுக்க முழுக்க ஒரு அரசியல் நூலாக, அரசுகளுக்கிடையிலான விவகாரங்கள், அரசியல் சதிகள் என்று ஒரு அரசியல் நூலாகவும் படிக்க முடியும். அனைத்தையும் விட்டு விட்டு, வெறும் மனிதர்கள், அடிப்படை மனித உணர்ச்சிகள், உறவுகள், அது காட்டும் வித்தைகள் என்று வாசிக்கலாம். அக்கால குடிமுறைகளை கூறும் நூலாகவும் படிக்கலாம். 

மகாபாரதத்தை பலர் பல கோணங்களில் எழுதியிருக்கின்றார்கள். ராஜாஜியின் எளிய சுருக்கம், சோவின் மகாபாரதம் பேசுகின்றது, அதை ஒரு தர்ம - அதர்ம விவாத நூலாகவும், அரசியல் நூலாகவும் பார்க்கின்றது. வெண்முரசு மகாபாரதத்தை பல வித கோணங்களில் காட்டும் ஒரு நூல். பாரதியாரின் பாஞ்சாலி சபதம், வில்லி பாரதம், இரண்டாம் இடம், இனி நான் உறங்கலாமா,காண்டேகரின் யயாதி, இ.பாவின் கிருஷ்ணா கிருஷ்ணா என்று இன்னும் பல ஆக்கங்கள் உள்ளன. சுமார் 300 மகாபாரத ஆக்கங்கள் இருப்பதாக கூறுகின்றனர். நண்பர் ஆர்.வி பலவித மகாபாரதக்கதைகளை தொகுத்து இங்கு அளித்துள்ளார். (அவரே பல மகாபாரத சிறுகதைகளையும் எழுதியுள்ளார்) இவற்றில் முக்கியமான ஆக்கங்களில் ஒன்று பர்வா. ஜெயமோகனும் பலவித மகாபாரத வடிவங்களை பற்றி இங்கே கூறுகின்றார்

பைரப்பா ஒரு புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர். அவரைப்பற்றிய ஒரு சிறப்பான அறிமுகத்தை ஜெயமோகன் எழுதியிருக்கின்றார். ஆர்வியும் சிலிக்கான் ஷெல்பில் எழுதியிருக்கின்றார்.

30 ஜூலை 2016

அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - சோ

சோ.

ஒரு எழுத்து என்றாலும் அதன் பின்னால் இருக்கும் ஆளுமை பெரியது. வழக்கறிஞர், நாடக நடிகர், நாடக ஆசிரியர், நாடக இயக்குனர், திரைப்பட நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல்வாதி என்று பல முகங்கள். அவரது சமீபத்திய சில செயல்பாடுகளில் உடன்பாடில்லை என்றாலும், எனக்கு மிகப்பிடித்த ஒருவர். இவரின் பலமும், பலவீனமும் இவரது நகைச்சுவை உணர்வே.

மகாபாரதத்தை நன்கு கற்றவர். அவரது மகாபாரதம் பேசுகின்றது நூலே, எனக்கு மகாபாரதத்தை பற்றிய மற்றொரு பார்வையை அளித்தது. அதுவரை எனக்கு அது ஒரு சுவாரஸ்யமான கதை நூலே. ராமாயணமும், அதே போல் கம்பராமாயண பகுதிகளுடனும், துளசிதாசரின் ராமாயண பகுதிகளையும் சேர்த்து தந்திருந்தார். 

அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் அவரது வாழ்க்கையில் அவர் சந்தித்த முக்கியமானவர்களுடனான அவரது அனுபவங்கள். ஆரம்பம் முதல் கடைசி வரை அக்மார்க் சோ குசும்பு. இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதுதான் அவரது உண்மையான குணம் என்றால், அனைத்தும் அதிர்ஷ்டம்தான். கடவுள் அவருக்கான வாய்ப்பை அருமையாக அமைத்து தந்திருக்கின்றார், அதை அவர் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். உண்மையில் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த அனுபவங்கள். அனைத்தும் தற்செயலாக நடந்தவை, ஆனால் அதை ஏற்றுக் கொண்டு அதில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருந்திருக்கின்றது.

21 ஜூலை 2016

எட்டு திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்

தலைகீழ் விகிதங்களுக்கு பிறகு வாங்கிய நாஞ்சிலாரின் நாவல்.

வீட்டை விட்டு சென்ற ஒருவனின் கதை. வீடு என்பது வெறும் தங்குமிடமட்டுமல்ல, குடும்பம் என்ற அமைப்பு. அதனுள் இருக்கும் வரை அது ஒரு பெரும் பாதுகாப்பு. வீட்டை விட்டு வெளியேறுதல் என்பது, குடும்பத்தை துறப்பது. தனியனாக இருப்பது. முதலில் வருவது ஒரு பாதுகாப்பின்மை, பயம். அதுவே ஒரு துணிவையும் தரும். அத்துணிவின் எல்லை, முதலில் அடைந்த பயத்தை பொறுத்தது.

கதையின் தலைப்பை பார்த்தே வாங்கினேன். தலைப்பை தவிர வேறு எதுவும் தெரியாது. தலைப்பு, ஒரு மத யானை கட்டின்றி எங்கும் திரிவது போன்ற ஒரு காட்சி தோன்றியது.

தோன்றிய காட்சி சரிதான். கொஞ்சம் நாயகன், புதுப்பேட்டை படங்கள் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அதிகம் நினைவிற்கு வருவது ஜெயமோகனின் புறப்பாடு. ரயில் நிலையங்களும், வட இந்தியாவும் அந்த நினைப்பை தருவதை தவிர்க்க முடியவில்லை. இதைப் படிக்கும் போது அதுவும், அதை படிக்கும் போது இதுவும் நினைவில் வந்து வந்து போகின்றது.

18 ஜூலை 2016

காண்டீபம் - ஜெயமோகன்

மகாபாரத வரிசையில் இந்திரநீலத்திற்கு அடுத்த நூல்.

காண்டீபம், பாரதத்தின் கதையோட்டத்திலிருது விலகி செல்லும் ஒரு நாவல். வெண்முகில் நகரத்திற்கு பின் கதை வெகுதூரம் விலகி விட்டது. இந்திரநீலம். கிருஷ்ணனின் திருமணங்களை பற்றி கதை. பெண்களை வென்ற கதை. காண்டீபம் அர்ஜுனனின் திருமணங்களை பற்றியகதை.

பாரதத்தில் மிகவும் குழப்பமான ஒரு விஷயம். காலம். வருடங்களின் கணக்குகள் எல்லாம் மிகவும் குழப்பமானவை. பல கதைகளின் இடைச்சொருகல்கள் காரணமாக நேர்ந்திருக்கலாம். அதே சமயம் எவை இடைச்சொருகல் என்று காண்பது எளிதல்ல. எவற்றையும் ஒதுக்க முடியாது. ஜெயமோகன், இம்மாதிரி விஷய்ங்களுக்கு கையாளும் உத்தி சூதர் கதைகள். நம்ப முடியாத கதைகளை சூதர்கள் சொல்வதாக அமைத்து விட்டால் ஒரு தொல்லை விட்டது.

அர்ஜுனன். பாண்டவர்களில் தேடல் நிறைந்தவன். பாரதம் முழுக்க திரிந்தவன். காண்டீபம் அர்ஜுனனின் வில். காண்டீபனின் கதையை சொல்வது காண்டீபம்.

13 ஜூலை 2016

இந்திரநீலம் - ஜெயமோகன்

நீலத்திற்கு பின்னால் கிருஷ்ணனை நாயகனாக கொண்ட நாவல். கிருஷ்ணனின் திருமணங்கள் பற்றிய புத்தகம். 

ஒவ்வொரு நாவலுக்கும் ஒவ்வொரு வகையான கதை சொல்லலை எடுத்துகொள்ளும் ஜெயமோகன், இதில் எடுத்துகொண்டது, சியமந்தகம். சியமந்தகத்தின் கதையே ஒரு சுவாரஸ்யமான கதை. என் பெண்ணிற்கு பல நாள் அக்கதையை சொல்லியிருக்கின்றேன். இ.பாவும் இக்கதையை கிருஷ்ணா கிருஷ்ணாவில் எழுதியுள்ளார். ஆனால் அதை வேறு கோணத்தில் காட்டி, அதை மையமாக வைத்துக் கொண்டு, கிருஷ்ணனின் திருமணங்களின் கதைகளையும், யாதவர்களின் அரசியலையும் கூறுகின்றார். வெண்முகில் நகரத்திற்கு பூரிசிரவஸ் போல இதில் திருஷ்டத்துய்மன்.

வழக்கம் போல ஒரு சூதர் கதையுடன் ஆரம்பிக்கின்றது.விஸ்வாமித்திரரின் கதை. திருஷ்டத்துய்மன் துவாரகைக்கு போகின்றான். அவனும் அங்குள்ள அரசியல் சூழலில் மாட்டிக் கொண்டு, கிருஷ்ணனை அறிகின்றான், தன்னையும் சுப்ரை மீதிருக்கும் தன் காதலையும் அறிகின்றான்.

01 ஜூலை 2016

உபசாரம் - சுகா

உபசாரம்

சுகாவின் நான்காவது புத்தகம். வழக்கம்போல கட்டுரை தொகுப்பு. தாயார் சன்னதி, மூங்கில் மூச்சு, சாமானியனின் முகம் வரிசையில் அடுத்த புத்தகம். 

புத்தகத்தில் பல கட்டுரைகள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அனைத்தும் பிரமாதம் என்று கூற முடியவில்லை. மூன்று வருடங்களில் எழுதிய அனைத்தையும் கலந்து கட்டி வைத்துள்ளனர். பெரும்பாலும் மறைந்தவர்களை பற்றிய கட்டுரைகள். அவர்களை பற்றிய ஒரு நினைவை நம்முள் கிளப்பிவிடுகின்றது. ஜெயகாந்தன், பாலு மகேந்திரா, கல்பனா, கலாபவன் மணி, வெங்கட் சாமிநாதன், எம்.எஸ்.வி பற்றிய கட்டுரைகள்  எல்லாம் அவர்கள் மறைவின் போதும் அதையொட்டியும் எழுதப்பட்டவை. அவர்களை பற்றிய பொதுவான கட்டுரைகளாக இல்லாமல், அவர்களுடனான தன் அனுபவங்களை கூறியிருப்பதுத்தான் அவற்றை சிறப்பாக்குகின்றது.

26 ஜூன் 2016

நைலான் கயிறு - சுஜாதா

சுஜாதாவின் முதல் கதை.

இறங்கினான் என்பதை ஒவ்வொரு வரியில் எழுதினார் என்பது போன்ற புதுமைகளை(!) பலர் பல இடங்களில் வியந்தோதியிருப்பதை படித்திருக்கலாம். இப்புத்தகம் பதிப்பில் இருக்கின்றதா இல்லையா என்பதை கண்டுபிடிக்கவே கொஞ்ச நாள் ஆனது. உயிர்மையின் சுஜாதா தொகுப்புகளில் இது இல்லை. கணேஷ் வசந்த் தொகுதியில் இது இல்லை. தொகுப்பும் இரண்டுடன் நின்று விட்டது. கிழக்கில் வெளியானதும் கவனத்தில் படாமல் போய்விட்டது. 

கதை வெளிவந்த ஆண்டை கவனத்தில் வைத்து படித்தால், இதன் வீச்சு புரியும். கணேஷ் மட்டும் அறிமுகம். வசந்தை கணேஷ் என்ற பெயரில் அறிமுகம் செய்திருக்கின்றார். 

22 ஜூன் 2016

கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்


கோபல்ல கிராமம் நாவலின் தொடர்ச்சி. 

ஒரு எழுத்தாளர், ஒரு கான்செப்ட் வெற்றி பெற்று விட்டால் உடனே அதை பயன்படுத்திக் கொள்வதில் விகடன் எப்போதும் முந்திக்கொள்ளும். ஆனால் அது பெரும்பாலும் முதல் முயற்சி பெற்ற வெற்றியை அடையாது. ஒரு செயற்கைத்தனம் வந்துவிடும். சுகா எழுதிய தொடர் ஒரு உதாரணம். கோபல்ல கிராமம் நாவலுக்கு அடுத்து எழுதப்பட்டது இது. முதல் நாவலில் இருந்த அந்த உயிரோட்டம் இதில் இல்லை என்பது என் கருத்து.

முதல் நாவலை ஒப்பிடாமல் இதை பற்றி மட்டும் பேசுவது என்பது முடியாது. 

முதல் பகுதி மட்டும் முந்தைய பகுதியின் தொடர்ச்சி போல இருக்கின்றது. இரண்டாம் பகுதி எங்கெங்கோ சுற்றி வருகின்றது. பம்பாயில் நடந்த மாலுமிகளின் கலவரம் எல்லாம் சுவாரஸ்யமாக இருந்தாலும் ஒட்ட மறுக்கின்றது.

முதல் பகுதியில் வரும் அந்தசில்லுவின் கதை சுவாரஸ்யம், உயிரோட்டமாக உள்ளது. அதில் வரும் காரியின் கதை போனஸ். வெட்டுக்கிளிகளின் அட்டகாசம் காவல்க்கோட்டத்திலும் வரும் ஒரு சம்பவம், நான் ஏதோ ஒரு இடத்தில் நடந்திருக்கும் என்று நினைத்தல், அது ஒரு தமிழகத்திம் பல இடங்களை பாதித்திருக்கின்றது போல. முதல் பகுதி முழுவதும் கோபல்ல மக்களின் வாழ்க்கை, குடும்பம் என்று போகின்றது.

இரண்டாம் பகுதி அவர்களின் சமூக வாழ்வை பெசுகின்றது. வெள்ளையன் கொண்டுவந்த புதியவிஷயங்களின் மக்களின் தயக்கம், தயங்கியவர்களே பின்னர் அதில் மூழ்கிய விந்தை, ஜாதி, வர்க்கம் பற்றிய மக்களின் புரிதல்களின் மாற்றம். 

சுதந்திரப்போராட்டத்தின் ஆரம்ப வீரர்களை பற்றிய கதைக் குறிப்புகளும் கிடைக்கின்றன. காந்தியடிகளை பற்றிய விமர்சனம், பாமர மக்களிடையே இருந்த அவரது பிம்பம்.

ஆனால் தீடிரென வரும் பம்பாய் மாலுமிகளின் போராட்டம் துண்டாக தெரிகின்றது. 


கோபல்ல கிராமத்தில் கிடைக்கும் ஒரு அனுபவம், கோபல்ல கிராமத்து மக்களிடம் கிடைக்கவில்லை என்பது உண்மை.

01 மார்ச் 2016

வெண்முகில் நகரம் - ஜெயமோகன்

வெண்முகில் நகரம் - வெண்முரசு வரிசையின் ஆறாவது நாவல். அதற்கடுத்து இரண்டு புத்தகங்கள் வந்துவிட்டன. புத்தகம் வந்த கையோடு எனது மடிக்கணிணி வேலை செய்ய மறுத்து விட்டது. ஒரு சில ’கீ’க்கள் மட்டும் வைகுண்டம் போய் விட்டது. ஒரு வழியாக சரியாகி வந்த பின் வேறு புத்தகங்கள் வந்துவிட்டது. 

ஜெயமோகன் நாவல் எழுதும் வேகத்தில் நாவலைப் பற்றிய நம் கருத்தையும் எழுதுவது என்றால் எங்கே போவது. நானெல்லாம் நல்ல நாளிலேயே சோம்பேறி, சுய புராணம் முடிந்தது இனி நாவல் பற்றி.

நாவல் வந்து பல நாள் ஆகிவிட்டது. அனைவரும் படித்திருப்பார்கள். இருந்தும் எழுதுவதன் காரணம் என்ன. ஒரு விஷயத்தை எழுதும் போது, நமக்கே தெரியாத, தோன்றாத பல புதிய விஷயங்கள் தோன்றும். சில குழப்பங்கள் தெளிந்து ஒரு கோர்வையாக ஒரு பார்வை கிடைக்கும். பிரயாகையை பற்றி எழுத ஆரம்பித்த பின்னரே அதில் வரும் வித விதமான தந்தைகளை பற்றிய பார்வை கிடைத்தது.