21 பிப்ரவரி 2015

வெண்முரசு - வண்ணக்கடல் - ஜெயமோகன்

மழைப்பாடலின் அரசியல் விளையாட்டிற்கு பின் வரும் நாவல். மனித உணர்ச்சிகளும், அரசியலும் கலந்த நூல்.

இந்த  நூலில் கதை சொல்ல ஒரு வித்தியாசமான முறையை எடுத்து கொண்டுள்ளார். இளநாகன் என்னும் பாணன், தென் தமிழகத்திலிருந்து அஸ்தினாபுரியை நோக்கி பயணிக்கின்றான். அவன் வழியே கதை சொல்லப்படுகின்றது. உண்மையான அஸ்தினாபுரியை விட பாணர்கள் உண்டாக்கிய அஸ்தினாபுரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக காட்டுகின்றார். இள நாகனின் வழி அக்கால பாரத்தின் பகுதிகளை காட்டுகின்றார். மாறும் அரசுகள், உணவு பழக்கங்கள், கால நிலைகள், வணிகங்கள், கட்டிடக்கலை, வெவ்வேறு வழிபாட்டு முறைகள் என்று ஒரு பெரிய சித்திரத்தை தருகின்றார் ஆசிரியர். இளநாகனின் காலமும், மகாபாரத்தின் காலமும் வெவ்வேறு என்பதை சிறு சிறு குறிப்புகள் மூலம் தெளிவு படுத்துகின்றார்.

வெண்முரசில் வரும் பாத்திரங்களின் மாற்றமே மிகவும் கவனிக்கத்தக்கது. மனித மனங்களின் கோணல்களை மிக தெளிவாக காட்டுகின்றது. நூறு சதம் நல்லவன் நூறு சதம் கெட்டவன் என்று யாரும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை ஒருவனை மாற்ற முயலும், மனதில் உறுதியுள்ளவன் அதிலிருந்து தப்பிக்கலாம், இல்லை அதனுடன் சென்று ஓடலாம். துரியோதனன் பீமன் வரும் ஆரம்ப காட்சிகள் மெதுவாக மாறி இருவரும் மாறும் இடம், தர்க்க ரீதியாக விளக்கப்பட்டுள்ளது.

14 பிப்ரவரி 2015

வெண்முரசு - மழைப்பாடல் - ஜெயமோகன்

வெண்முரசு நாவல் வரிசையில் இரண்டாவது நாவல்.

மகாபாரதத்தை ஒருவர் தன் கற்பனையில் விவரித்து எழுத முடிவு செய்தால் அவருக்கு ஒரு ஆயுள் போதாது, ஏனென்றால் அவ்வளவு பாத்திரங்கள், ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மை வாய்ந்தது. பல தலைமுறைகளை தொட்டு செல்லும் கதை. அதை அனாயசமாக செய்து வருகின்றார் ஜெயமோகன். இரண்டாவது புத்தகத்தை படித்துவிட்டு அதைப்பற்றி சிறிய குறிப்பை எழுத இவ்வளவு நாளாகிவிட்டது. அவர் ஆறாவது நூலுக்கு சென்றுவிட்டார். ஐந்தாவது நூல் அச்சிற்கு தயாராகிவிட்டதது. அது கைக்கு வந்து படித்து முடிக்கும் முன் ஏழாவது நூல் வந்துவிடும். படிப்பவர்களின் ஈகோவை கிளறிவிடுகின்றார்.

முதற்கனல், மகாபாரதத்தின் விதை,முதல் தலைமுறை பாத்திரங்களை பற்றி பேசுகின்றது. இரண்டாம் நாவல் அடுத்த தலைமுறை பாத்திரங்களை விவரிக்கின்றது. பாண்டு, திருதராஷ்டிரன், விதுரன், சகுனி, காந்தாரி, குந்தி இவர்களே முக்கிய பாத்திரங்கள். அதிக கவனம் பெறாத, பாரதக்கதை தெரிந்தவர்கள் கூட அதிகம் கவலைப்படாத பாத்திரங்களுக்கும் இதில் இடமுள்ளதே இதன் சிறப்பு. 

இரண்டு சின்ன சம்பவங்களாக படித்த பல இதில் பெரிதாக விவரிக்கப்பட்டுள்ளன. தலைப்பிற்கேற்ப மழை புத்தகம் முழுவதும் பெய்து கொண்டே இருக்கின்றது. பக்ககங்கள் ஈரமாகாததுதான் பாக்கி.

முதற்கனல் உணர்ச்சிகரமான, நாடகீய காட்சிகள் நிறைந்த ஒரு நூல். அதில் மனித உணர்ச்சிகள், அவற்றின் கொந்தளிப்புகள் அதிகம். மாறாக மழைப்பாடலில் அரசியல்,தர்க்கம் அதிகம் இடம்பெறுகின்றது.

07 பிப்ரவரி 2015

சாயாவனம் - சா. கந்தசாமி

காட்டை அழித்து கொஞ்சம் கொஞ்சமாக மனித வாழிடத்தை விஸ்தரித்து கொண்டு போவதன் விபரீதத்தை இன்று கண் கூடாக கண்டு வருகின்றோம். இந்த பிரச்சினைகளை ரப்பர், காடு நாவல்களில் காணலாம். அதே பிரச்சினையை வேறு ஒரு தளத்தில் காட்டுவது சாயாவனம்.

ஒரு குறுங்காட்டை அழிப்பதுதான் நாவலின் கதை.

வெளிநாட்டிலிருந்து வரும் சிதம்பரம், தன் சொந்த ஊருக்கு அருகிலிருக்கும் ஒரு நிலத்தில் சர்க்கரை ஆலை கட்ட நினைத்து, அதை முடிப்பதை விலாவாரியாக விவரித்துள்ளார். எப்போதும் புதிய எழுத்தாளர்களை படிக்க நினைத்தால் அவரின் சிறந்த நாவல் என்று பலர் சிபாரிசு செய்யும் ஒன்றை முதலில் படித்து ஓகே என்றால் மேலும் முன்னேறுவது வழக்கம்.அந்த வகையில் சா. கந்தசாமியின் சாயா வனம்.

ஒரு குறுங்காட்டின் அழிவை காட்சிப்படுத்தியுள்ளார். பாத்திரங்களும் அதிகமில்லை. சிதம்பரம், அவரது மாமா, இரண்டு உதவியாள சிறுவர்கள் அவ்வளவே.

பல நூறு ஆண்டுகளாக உண்டான காட்டை  சில மாதங்களில் அழித்து அவன் கட்டும் ஆலை ஊருக்குள் பல மாற்றத்தை கொண்டு வருகின்றது. பணம் என்பது முதன்முதலில் ஊருக்கு வருகின்றது, பயிரிடும் பயிர்கள் மாறுகின்றன. ஆனால கடைசியில் ஒரு வெறுமையும் உண்டாகின்றது. 

இதை பற்றி அதிகம் எழுத எனக்கு ஒன்றுமில்லை. காடு அழிப்பது என்பதை குறியீடு என்று கருதுபவர்கள் அதை நாட்டுடன் பொருத்தி பார்த்து,  கூடவே உலகமயமாக்கல், தொழில்மயமாதல், மறு காலனியாதிக்கம் போன்ற வார்த்தைகளையும் சேர்த்துக் கொண்டு உருகலாம். எனக்கு அப்படி எல்லாம் ஒன்றும் தோன்றவில்லை. ஒரு சுமாரான நாவல். காட்டின் அழிவு வருத்தம் தர வைக்கும் விஷயம். அதையும் இது அழுத்தமாக ஒன்றும் கூறவில்லை. காட்டை அழிப்பதை ஒரு சாகசமாகவே காட்டுகின்றது.

கதை நடக்கும் காலம், நடக்கும் இடம் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை. ஆனால பண்டமாற்றை பற்றி பேசுவதாலும், காங்கிரஸ் பற்றிய குறிப்புகள் வருவதாலும் 1930  - 40 என்று இருக்கலாம். 

படிக்கலாம்.