25 டிசம்பர் 2015

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில்நாடன்

சொல்ல மறந்த கதை. அழகி படம் பார்த்த ஹேங் ஓவரில் என் நண்பன் என்னை இழுத்துக் கொண்டு போனான். அழகியே என்னை பொருத்தவரையில் ஒரு குப்பை படம்தான். இளையராஜா இல்லாதிருந்தால் படம் பப்படமாகியிருக்கும். டைட்டில் போடும் போது தலைகீழ் விகிதங்கள் என்னும் நாவலை அடிப்படையாக கொண்டது என்று போட்டிருந்தது. முணுக் முணுக்கென்று அழுகும் சேரன் படத்தையே ஒவ்வாததாக செய்திருந்தார். படத்தை பார்த்து நொந்து வந்த பின் நாவலாசிரியர் மீது ஒரு எரிச்சலே இருந்தது. நாவலாசிரியர் யார் என்று தேடினால், நாஞ்சில்நாடன். பெரிதாக படிக்கும் ஆர்வம் வரவில்லை.

ஜெயமோகனின் தளத்தில் அவரை பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதியிருந்தார். தாடகை மலையடிவாரத்தில். அவரை பற்றிய ஒரு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அதன் பின் ஜெயமோகன் அவரை பற்றி பல இடங்களில் எழுதியிருந்தார். ஜெயமோகன் எழுத்துக்கள் மூலம் அவர் ஏதோ மிகவும் தெரிந்தவர் போல ஆகிவிட்டார். அவரின் முதல் நாவல் இப்புத்தகம்.

20 டிசம்பர் 2015

கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்

சில புத்தகங்கள் ஒரே மூச்சில் படிக்க வைக்கும். புத்தகம் சிறியதாக இருக்கலாம், இல்லை புத்தகம் சுவாரஸ்யமாக இருக்கலாம். சில புத்தகங்கள் பெரிதாக இருந்தாலும் நம்மை கீழே வைக்க விடாது. சமீபத்தில் படித்த இரண்டு புத்தகங்களும் இரண்டு வகை. ஒன்று வெண்முகில் நகரம். வைக்க மனமின்றி, கிடைத்த நேரத்திலெல்லாம், இரவெல்லாம் படித்து மூன்றே நாட்களில் படிக்க வைத்தது. இரண்டாவது கோபல்ல கிராமம்.  சிறிய புத்தகம், ஒரே நாள் விடுமுறையில் படித்து விடலாம். சில மணி நேரங்களே போதும்.

புத்தகம் சிறியது என்பதால் மட்டுமல்ல, சுவரஸ்யத்தாலும்.

கி.ராஜநாரயணன் என்ற பெயர், விகடன் மூலமே பரிச்சியம். ஒன்றிரண்டு சிறு கதைகள் படித்த நினைவு. ஒரு கிராமத்து பெரியவரின் புகைப்படம். ஏற்கனவே படித்த எழுத்தாளர்களில் இருந்து புதிய எழுத்தாளர்களை படிக்கும் முயற்சியில் கி.ரா.

கரிசல் மண் எழுத்தாளர், கிராமத்து கதைகளை எழுதுபவர். அவரது புகழ் பெற்ற புத்தகம் கோபல்ல கிராமம். இக்கதையையே அவர் ஒரு ஆயிரம் பக்கத்திற்கு, ஆழி சூழ் உலகு, கொற்கை, காவல் கோட்டம் வகையில் எழுதியிருக்கலாம். ஆனால் சுருக்கமாக ஒரு நூறாண்டுகால வரலாற்றை காட்டியிருக்கின்றார்.