25 டிசம்பர் 2015

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில்நாடன்

சொல்ல மறந்த கதை. அழகி படம் பார்த்த ஹேங் ஓவரில் என் நண்பன் என்னை இழுத்துக் கொண்டு போனான். அழகியே என்னை பொருத்தவரையில் ஒரு குப்பை படம்தான். இளையராஜா இல்லாதிருந்தால் படம் பப்படமாகியிருக்கும். டைட்டில் போடும் போது தலைகீழ் விகிதங்கள் என்னும் நாவலை அடிப்படையாக கொண்டது என்று போட்டிருந்தது. முணுக் முணுக்கென்று அழுகும் சேரன் படத்தையே ஒவ்வாததாக செய்திருந்தார். படத்தை பார்த்து நொந்து வந்த பின் நாவலாசிரியர் மீது ஒரு எரிச்சலே இருந்தது. நாவலாசிரியர் யார் என்று தேடினால், நாஞ்சில்நாடன். பெரிதாக படிக்கும் ஆர்வம் வரவில்லை.

ஜெயமோகனின் தளத்தில் அவரை பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதியிருந்தார். தாடகை மலையடிவாரத்தில். அவரை பற்றிய ஒரு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அதன் பின் ஜெயமோகன் அவரை பற்றி பல இடங்களில் எழுதியிருந்தார். ஜெயமோகன் எழுத்துக்கள் மூலம் அவர் ஏதோ மிகவும் தெரிந்தவர் போல ஆகிவிட்டார். அவரின் முதல் நாவல் இப்புத்தகம்.

20 டிசம்பர் 2015

கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்

சில புத்தகங்கள் ஒரே மூச்சில் படிக்க வைக்கும். புத்தகம் சிறியதாக இருக்கலாம், இல்லை புத்தகம் சுவாரஸ்யமாக இருக்கலாம். சில புத்தகங்கள் பெரிதாக இருந்தாலும் நம்மை கீழே வைக்க விடாது. சமீபத்தில் படித்த இரண்டு புத்தகங்களும் இரண்டு வகை. ஒன்று வெண்முகில் நகரம். வைக்க மனமின்றி, கிடைத்த நேரத்திலெல்லாம், இரவெல்லாம் படித்து மூன்றே நாட்களில் படிக்க வைத்தது. இரண்டாவது கோபல்ல கிராமம்.  சிறிய புத்தகம், ஒரே நாள் விடுமுறையில் படித்து விடலாம். சில மணி நேரங்களே போதும்.

புத்தகம் சிறியது என்பதால் மட்டுமல்ல, சுவரஸ்யத்தாலும்.

கி.ராஜநாரயணன் என்ற பெயர், விகடன் மூலமே பரிச்சியம். ஒன்றிரண்டு சிறு கதைகள் படித்த நினைவு. ஒரு கிராமத்து பெரியவரின் புகைப்படம். ஏற்கனவே படித்த எழுத்தாளர்களில் இருந்து புதிய எழுத்தாளர்களை படிக்கும் முயற்சியில் கி.ரா.

கரிசல் மண் எழுத்தாளர், கிராமத்து கதைகளை எழுதுபவர். அவரது புகழ் பெற்ற புத்தகம் கோபல்ல கிராமம். இக்கதையையே அவர் ஒரு ஆயிரம் பக்கத்திற்கு, ஆழி சூழ் உலகு, கொற்கை, காவல் கோட்டம் வகையில் எழுதியிருக்கலாம். ஆனால் சுருக்கமாக ஒரு நூறாண்டுகால வரலாற்றை காட்டியிருக்கின்றார்.

27 நவம்பர் 2015

சம்ஸ்காரா - யூ. ஆர். அனந்தமூர்த்தி

மோடி பிரதமரானால் நாட்டை விட்டு செல்வேன் என்று சூளுரைத்தவர் என்பதே இவரை பற்றிய அறிமுகம். நாட்டை விட்டு எல்லாம் செல்லவில்லை என்பது வேறு கதை. தேர்தல் சமயத்தில் கூறுவதை எல்லாம் சீரியசாக எடுத்து கொள்ளலாமா. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மறைந்துவிட்டார். அவரின் புகழ் பெற்ற நாவல். பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

சம்ஸ்காரா என்றால் தகனம் என்றும் சொல்லலாம், ஆச்சார அனுஷ்ட்டானங்கள் என்றும் சொல்லலாம். இதில் இரண்டுமே இருப்பதால், அதற்கேற்ற தலைப்புதான். இதை ஒரு குறியீட்டு நாவல் என்கின்ற்னர்.

பழமைக்கும் அதை எதிர்த்து கிளம்பும் கலகத்தை பற்றியதுமானது எனப்படுகின்றது. இதை யாரும் அந்தளவிற்கு விளக்கமலே புரிகின்றது. குறியீட்டு நாவல் என்று தெரிந்து கொண்ட பின் எல்லாவற்றிலும் அதை தேட வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டு என் வழியில் படித்ததை பற்றி மட்டுமே இங்கே

17 நவம்பர் 2015

உயிர்த்தேன் - தி. ஜானகிராமன்

உயிர்த்தேன்.

தலைப்பு எதை குறிக்கின்றது என்பது கொஞ்சம் குழப்பமான விஷயம். கதையில் நாயகியையா இல்லை, கதையில் வரும் விவசாயத்தையா? ஏதோ ஒன்று, பெரும்பாலும் கதைக்கும் தலைப்பிற்கு சம்பந்தமிருப்பதில்லை.

தி. ஜாவின் சுமாரான கதை என்ற வரிசையில் தான் இதை என்னால் வைக்க முடியும். கதையமைப்பிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி மிகவும் சாதரணமான கதை.

சொந்த ஊருக்கு வந்து வாழ நினைக்கும் பூவராகனுக்கு செங்கம்மாவின் அறிமுகம். தி. ஜாவின் நாயகர்களை போல அவளை மனதில் வைத்து போற்றும் பூவராகன் ஒரு பக்கம், அதே போற்றுதலை செய்யும் பழனி ஒரு பக்கம். திருமணம் ஆனவள் என்பதால், பூவராகனின் போற்றுதல், ஒரு வித பக்தியாகின்றது. பழனியின் தாபம், வெறியாகின்றது.

11 நவம்பர் 2015

நளபாகம் - தி. ஜானகிராமன்

நளபாகம். 
சமையலில் சிறந்தவர்கள் நளனும், பீமனும் என்பார்கள். இது ஒரு நளபாகம் படைக்கும் ஒருவனின் கதை.

தி. ஜானகிராமனின் வழக்கமான அனைத்து விஷயங்களும் உண்டு. 

ஆரம்பமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றது. யாத்ரா ஸ்பெஷல், ரயிலில் ஆரம்பிக்கும் கதை.

காமேச்வரன், யாத்ரா ஸ்பெஷெலில் யாத்ரீகர்களுக்கு வேண்டியதை வாய்க்கு ருசியாக சமைத்து போடும் தலைமை பரிசாரகன். அம்பாள் உபாசகன். அதே வண்டியில் வரும் ரங்கமணி என்னும் பெண் (வேறு பெயர் கிடைக்கலையா அய்யா) தன் மகனின் ஜாதகத்தை காட்டி, உடன் வரும் பெரிய  பண்டிதரிடம் கேட்க அவர் கூறும் பதில் விபரீதமாக இருக்கின்றது.

04 நவம்பர் 2015

மலர் மஞ்சம் - தி. ஜானகிராமன்

நீண்டநாள் கழித்து மீண்டும் தி. ஜானகிராமன்.

மதுரை புத்தக கண்காட்சியில், விடுபட்டு போன சில புத்தகங்களை வாங்கினேன்.  பெரும்பாலும் தி. ஜா.

தி. ஜானகிராமன், ஒரே கதையே திரும்ப திரும்ப எழுதுகின்றார் என்ற கருத்து சிலருக்கு உண்டு. எனக்கு அப்படி தோன்றவில்லை, பாத்திரங்களின் தன்மை அப்படி அமைந்துவிடுவதுதான் அதற்கு காரணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அவரின் பல பாத்திரங்கள், ஒரே சாயல் கொண்டதாக தோன்றும்.

மலர் மஞ்சம், மீண்டும் ஒரு தஞ்சாவூர் கதை. தி.ஜாவின் பெரும்பாலான கதைகளின் அடிநாதம் ஆண் - பெண் உறவு, அதுவும் கொஞ்சம் நடைமுறைக்கு மீறிய, அதே சமயம் சாத்தியமான ஒன்று. ஒரு ஆணிற்கு இரண்டு பெண்கள் மீது ஆசை வருமா என்று கேள்வியே கேட்க முடியாது. பலதார மணம் சாதரணமாக இருந்த இடம். இரண்டு பெண்களிடமும் ஒரே மாதிரியான அன்பு, காதல் இருக்குமா என்றால், அதுவும் சாத்தியம்தான். ஆணிற்கு சாத்தியமென்றால், பெண்ணிற்கு?

பல குடும்பங்களில் நடக்கும் முட்டாள்த்தனம், ஒரு பெண் பிறந்தவுடனே அதற்கு மாப்பிள்ளை நிச்சயிப்பது, அவர்கள் முன்னாலே அதை பேசி பேசி, அவர்களை உருவேற்றி, இறுதியில் வேறு வகையில் செல்லும் போது புலம்புவது. அது போன்ற கதைதான் இது.

பெண்ணிற்கும் இரண்டு ஆண்களின் மீது காதல் வரலாமா? வந்தால் என்னவாகும். இந்த முடிச்சை வைத்து கொண்டு, ஒரு பெரிய நாவலை எழுதியிருக்கின்றார். முடிச்சு விழுவது என்னவோ முக்கால் நாவல் முடிந்த பின்னர்தான், அது வரை கதையை, அவரது எழுத்து வன்மையால் அடித்து தூக்கிக் கொண்டு போகின்றார்.

02 நவம்பர் 2015

ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்

ஊரில் எனது வீட்டின் எதிரில் பள்ளி வாசல், பள்ளிவாசலில் ஒலிக்கும் பாங்கு ஒலி கணீரென்று கேட்கும். வேறு வேலையில் இருக்கும் போது கூட அவ்வொலி நேரத்தை காட்டிவிடும். மாலை நேரங்களில் கூட்டமாக குழந்தைகளுடன் பெண்களை காணலாம், மந்திரிக்க வருவார்கள். 

கொஞ்சம் வளர்ந்தபின் முதலில் ஆச்சர்யத்தை அளித்தது, இறந்தவர்களின் உடல் உள்ளேயே புதைக்கப்படும் என்பது. இரண்டாவது கொஞ்சம் பயத்தையும், உடன் படித்தவர்களின் கதைகள். உள்ளே ஒரு ஜின் இருக்கின்றது, அதை கைகளை கட்டி உள்ளே அடைத்து வைத்திருக்கின்றார்கள். ஜின் என்பது ஒரு பேய் என்றளவிற்கு விபரம் தெரியும். மாமா ஒரு இஸ்லாமியரிடம் வேலை செய்ததால், இன்னும் கொஞ்ச விபரங்களும் தெரிந்து கொண்டேன். 

எனக்கு எப்போதும் அவர்களின் பக்தியும், நம்பிக்கையும், ஆச்சர்யமூட்டுபவை. மார்கழி மாதம் ஏதாவது ஒரு நாள் காலையில் கோவிலுக்கு போவதே, பெரிய கொடுமையாக தோன்றும் எனக்கு. ஆனால் சின்ன சின்ன சிறுவர்கள், காலை தொழுகைக்கு தினமும் போவது என்பது மிகவும் போற்றக்கூடியது. அவர்களின் கடவுள், மார்க்கம், கட்டளை மீதான நம்பிக்கை மதிப்பிற்குரியது. 



பலர் கூறுவது போல இஸ்லாமியர்கள் ஒன்று ஒரு தனிப்பட்ட சமூகமாக வாழ்வது போன்று எனக்கு தெரிந்ததில்லை. பலர் அப்படி கூற என்ன காரணம் என்று தெரியவில்லை, ஒரு வேளை நான் சரியாக கவனிக்கவில்லையோ என்ற எண்ணம் தோன்றுவதுண்டு. 

30 செப்டம்பர் 2015

அமெரிக்காவில் கிச்சா - கிரேசி மோகன்

பாலஹனுமான் தளத்தில் கிரேசி மோகனின் பேட்டி (துக்ளக்கில் வந்தது என்று நினைக்கின்றேன்) இரண்டு பகுதிகளாக வந்துள்ளது. கிரேசி மோகனின் நாடகம் மட்டுமல்ல, பேட்டியும் ஒரே மாதிரிதான். புதிய பேட்டியை படித்தாலும் எங்கோ படித்தது போல இருக்கும். காரணம், அனைவரும் அவரை ஒரே மாதிரி கேள்வி கேட்பதுதான். அவரின் பதிலும் ரெடி மேடாக இருக்கும். அவரின் ஆனந்த விகட பக்தி, ஜானகி டீச்சர், நண்பர் ரவி, சேப்பு குழந்தை கருப்பு குழந்தை உதாரணம் என்று சொல்லலாம்

இந்த பேட்டியில் கொஞ்சம் புதிய தகவல்கள், அவரின் நாடகத்தை பார்த்துவிட்டு சொல்லப்பட்டது, 'ஒன்று நாடகம் ப்ளாப், ஊத்தி மூடிக்கும். இல்லை இனிமே இதுதான் நாடகம்'.இரண்டாவது பலித்து விட்டது. கிரேஸி மோகனின் பாணி நகைச்சுவை என்பது துணுக்கு தோரணம் என்றாலும், வார்த்தை விளையாட்டு, ஆள் மாறாட்ட குழப்பம், அதையும் மீறி சில இடங்கள் மிகவும் ரசிக்கும் படி இருக்கும். ஏதோ ஒரு நாடகத்தில் முடி திருத்துபவரை பார்த்து ஒரு பெண் 'உங்களை எங்கயோ பார்த்திருக்கிறேனே' என்று கூற, அவர் 'சே சே, ஐ அம் ஒன்லி ஃபார் மென்' என்பார். என்னதான் சொன்னாலும் இன்றைய தேதியில் ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளர் என்றால் இவரைத்தான் சொல்ல முடியும்

இவரால் வேறு வகை எழுத்து எழுத முடியும். இவரது படு சீரியசான கதை ஒன்றை ஒரு தீபாவளி மலரில் படித்திருக்கின்றேன். கவிதை (வெண்பா??) வேறு எழுதியிருக்கின்றார். கவிதைக்கு இன்ஸ்ப்ரேஷன் வாலி போல. விகடனில் இவருக்கு ஒரு ஆஸ்தான இடமுண்டு பல தொடர்களை எழுதியிருக்கின்றார். அதில் ஒன்று அமெரிக்காவில் கிச்சா

10 செப்டம்பர் 2015

உப்புவேலி - ராய் மாக்ஸிம்

வரலாற்று பாடம் என்பது எனக்கு எப்போதும் தலைவலியை தரும் ஒன்று. குறிப்பாக வருடங்கள். ஆறாம் வகுப்பிலோ, எட்டாம் வகுப்பிலோ, ஒரு பெரிய பகுதி. இந்திய வரலாற்றை முழுவதும் கரைத்து புகட்டும் ஆர்வத்தில் எவரோ தயாரித்தது. ஏகப்பட்ட வருடங்கள், காந்தி இர்வின் ஒப்பந்தம், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம். தேர்வில் அப்படியே எழுதுவது என்பது, புத்தகத்தை வைத்துக் கொண்டு கூட சாத்தியமில்லாதது. என்னைப் பலரின் தூக்கத்தை கெடுத்த , பத்தாம் வகுப்பு வரை  படித்த வரலாற்றில் ஒரு வரி கூட இல்லாத ஒன்றை பற்றி பேசுகின்றது இந்த புத்தகம்.

ராய் மாக்ஸம் என்னும் ஆங்கிலேயேர் எழுதிய THE GREAT HEDGE OF INDIA என்னும் நூலின் தமிழாக்கம். தமிழில் சிறில் அலெக்ஸ் மொழி பெயர்த்துள்ளார். இப்புத்தகம் வெளிவந்த பொழுதே ஜெயமோகன் இதைப் பற்றி சிறந்த அறிமுகத்தை தந்திருந்தார். ஆங்கிலத்தை விட தமிழில் படிப்பது எனக்கு சுலபமாக இருந்தது.

இணையத்தில் கண்டதையும் படிக்க ஆரம்பித்த புதிதில் தன் விஷயங்கள் புரியாமல் இருந்தன. முக்கியமானது பலருக்கு இருக்கும் இந்திய வெறுப்பு. அவர்களை பொறுத்த வரை இந்தியா எப்போதும் சிறப்பாக இருந்ததே இல்லை. ஆங்கிலேயர்கள் வந்த பின்னால் தான் இந்தியா பல துறைகளில் முன்னேறியது. எப்படி சிலரால் அந்தளவிற்கு முட்டாள்த்தனமாக யோசிக்க முடியும் என்பது ஆச்சர்யமாகவும், பின்னர் வேடிக்கையாகவும் இருந்தது.

05 செப்டம்பர் 2015

வெண்முரசு - பிரயாகை - ஜெயமோகன்

கடந்த திங்களன்று மதுரை புத்தக கண்காட்சி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதிகம் கண்ணில் பட்டவை இரண்டு. முதல் இடம் பொன்னியின் செல்வனுக்குதான். பெரும்பாலான அரங்குகளில் பொன்னியின் செல்வன். வித விதமான வடிவங்களில், படங்களுடன், படங்கள் இல்லாமல், பல வடிவங்களில். இரண்டாவது வெண்முரசு. நற்றிணையிலும், கிழக்கிலும் திரும்பிய பக்கமெங்கும் வெண்முரசு.

வெண்முரசு வரிசையில் ஐந்தாவது நாவல். முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை. இருப்பதிலேயே நீலம் சிறிய புத்தகம் என்றாலும், இரண்டு முறை முழுவதும் படித்திருந்தாலும் மனதில் அது முழுவதும் சென்று அமரவில்லை. பெரும்பாலும் அதை பயணத்தின் போது படித்ததால் வந்த விளைவாக இருக்கும். ஒரு நாள் முழுவதையும் முழுக்க முழுக்க செலவிட்டு படிக்கவேண்டும்.

பிரயாகை, பாஞ்சாலியின் கதை, அவளின் ஆளுமையை காட்டும் கதை, என்று கூறப்பட்டாலும், கதை முழுக்க அவளில்லை. அவள் வரும் நேரம் கொஞ்சம் என்றாலும் அவளின் பாத்திரம் விஸ்வரூபமடைந்து, தான் யார் என்று காட்டிவிடுகின்றாள்.

துருவனின் கதையுடன் ஆரம்பமாகின்றது பிரயகை. சிறுவயதில் கேட்ட கதை. சிறுவயதில் கேட்கும் போது, ஒரு பரிதாப சிறுவன் என்றுதான் தோன்றியிருக்கும். யாருக்கும் கிடைக்காத ஒரு இடத்தை பெற்றவன், என்றும் மாறா உறுதி கொண்டவன். அவனே இக்கதையின் ஆரம்பம்.

02 செப்டம்பர் 2015

ஆ - சுஜாதா

வெகு நாட்கள் கழித்து மீண்டும் புத்தகங்களை கையில் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

வார்ம் அப்பிற்காக சுஜாதாவிலிருந்து.

ஆ - கணேஷ் - வசந்த் கதை. சும்மா வருகின்றார்கள்.

எதில் தொடர்கதையாக வந்தது என்று தெரியவில்லை. தலைப்பை வைத்துவிட்டு கதையை யோசித்தாரோ, இல்லை நினைத்த கதைக்கு கிடைத்த தலைப்பு என்று வைத்தாரோ. தலைப்பை ஆ என்று வைத்ததால் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் ஆ. எரிச்சலாகவும், குழந்தைத்தனமாகவும் இருக்கின்றது. எவர் தந்த யோசனையோ!!!!

நன்றாக தினமும் அலுவலகம் சென்று, ரிசெசன், அப்ரைசல், எச் ஆர் தொந்தரவு ஏதுமின்றி, ப்ரொகராம் (தமிழில் என்ன? ஆ, நிரலி, பல்லில் சிக்கிய பருப்பை தேடும் நினைப்பு வருகின்றது) மட்டும் எழுத வேண்டியிருந்த பொற் காலத்தில் இருக்கும் ஒருவனுக்கு ஏற்படும் பிரச்சினை.

22 ஏப்ரல் 2015

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்

ஒரு நகைச்சுவை எழுத்தாளர் என்று மட்டும் பலரால் அறியப்படும் தேவன் பல வித்தியாசமான முயற்சிகளையும் செய்துள்ளார். ராஜத்தின் மனோரதம் என்னும் கதை முழுக்க முழுக்க ஒரு வீடு கட்டுவதை அடிப்படையாக கொண்டது. சி.ஐ.டி சந்துரு ஒரு இரண்டு நாளில் பல இடங்களில் நடக்கும் கதையை சொல்வது, துப்பறியும் சாம்பு அனைவருக்கும் தெரியும்.

ஜஸ்டிஸ் ஜகந்நாதன், முழுக்க முழுக்க ஒரு நீதிமன்ற விசாரணையை காட்டும் ஒரு நாவல். ஒரு கொலை வழக்கை பற்றிய கதை. ஒருவன் தன் மாமனாரை கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிற்கின்றான். அவன் கொலை செய்தான் என்று கூறும் சாட்சிகள், இல்ப்லை செய்திருக்க மாட்டான் என்று நிரூபிக்க வரும் சாட்சிகள், ஜுரிகள், நீதிபதி, வக்கீல்கள் இவர்களே பாத்திரங்கள். 

மொத்த கதையும் விசாரணைகள் மட்டும்தான். ஒவ்வொரு சாட்சியையும் அரசாங்கத்தரப்பு, எதிர்தரப்பு வக்கீல்களின் விசாரணை செய்வதை வைத்தே மொத்த கதையையும் நகர்த்திச் சென்றிருக்கின்றார். விருமாண்டிக்கு முன்னோடி. ஒரே சம்பவத்தின் பலவித வெர்ஷன்கள். கேள்வி - பதில் வாயிலாக மொத்த சம்பவங்களையும் காட்டி விடுகின்றார். குற்றவாளியா இல்லையா என்பதை கூட சொல்வதில்லை. 

19 ஏப்ரல் 2015

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

கல்கி எழுத்திற்கு பின்பு எனக்கு அறிமுகமானவர் ஜெயகாந்தன். கல்லூரியில் படிக்கும் போது நண்பன் கையில் எப்போதும் சில புத்தகங்கள் இருக்கும். கண்டிப்பாக பாட புத்தகங்கள் அல்ல. பாலகுமாரன், ஜெயகாந்தன், ஓஷோ. நல்ல காம்பினேஷன் இல்லையா?

இவர்களில் பாலகுமாரன் மீது அந்தளவிற்கு ஒரு ஈர்ப்பு இல்லை. காரணம் அவரின் பேட்டி ஒன்றை எங்கோ படித்ததுதான். ஜெயகாந்தன் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை. நண்பனிடமிருந்து ஜெயகாந்தனின் இரண்டு புத்தகங்களை வாங்கி சென்றேன். ஒரு சிறுகதை தொகுப்பு. எதுவும் இன்று நினைவில் இல்லை. மற்றுமொரு புத்தகம், ரிஷிமூலம். ஜெயகாந்தனை அதிகம் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். கல்கியை படித்தவனுக்கு இந்த புத்தகம் கொஞ்சம் அதிகம்தான். அந்த புத்தகத்தை மொட்டைமாடியில் புகைபோக்கியில் படுத்து கொண்டு படித்தேன். அங்கேயே பதுக்கி வைத்துவிட்டு வந்தே. யார் கண்ணிலாவது பட்டால் என்னாவது?

21 பிப்ரவரி 2015

வெண்முரசு - வண்ணக்கடல் - ஜெயமோகன்

மழைப்பாடலின் அரசியல் விளையாட்டிற்கு பின் வரும் நாவல். மனித உணர்ச்சிகளும், அரசியலும் கலந்த நூல்.

இந்த  நூலில் கதை சொல்ல ஒரு வித்தியாசமான முறையை எடுத்து கொண்டுள்ளார். இளநாகன் என்னும் பாணன், தென் தமிழகத்திலிருந்து அஸ்தினாபுரியை நோக்கி பயணிக்கின்றான். அவன் வழியே கதை சொல்லப்படுகின்றது. உண்மையான அஸ்தினாபுரியை விட பாணர்கள் உண்டாக்கிய அஸ்தினாபுரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக காட்டுகின்றார். இள நாகனின் வழி அக்கால பாரத்தின் பகுதிகளை காட்டுகின்றார். மாறும் அரசுகள், உணவு பழக்கங்கள், கால நிலைகள், வணிகங்கள், கட்டிடக்கலை, வெவ்வேறு வழிபாட்டு முறைகள் என்று ஒரு பெரிய சித்திரத்தை தருகின்றார் ஆசிரியர். இளநாகனின் காலமும், மகாபாரத்தின் காலமும் வெவ்வேறு என்பதை சிறு சிறு குறிப்புகள் மூலம் தெளிவு படுத்துகின்றார்.

வெண்முரசில் வரும் பாத்திரங்களின் மாற்றமே மிகவும் கவனிக்கத்தக்கது. மனித மனங்களின் கோணல்களை மிக தெளிவாக காட்டுகின்றது. நூறு சதம் நல்லவன் நூறு சதம் கெட்டவன் என்று யாரும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை ஒருவனை மாற்ற முயலும், மனதில் உறுதியுள்ளவன் அதிலிருந்து தப்பிக்கலாம், இல்லை அதனுடன் சென்று ஓடலாம். துரியோதனன் பீமன் வரும் ஆரம்ப காட்சிகள் மெதுவாக மாறி இருவரும் மாறும் இடம், தர்க்க ரீதியாக விளக்கப்பட்டுள்ளது.

14 பிப்ரவரி 2015

வெண்முரசு - மழைப்பாடல் - ஜெயமோகன்

வெண்முரசு நாவல் வரிசையில் இரண்டாவது நாவல்.

மகாபாரதத்தை ஒருவர் தன் கற்பனையில் விவரித்து எழுத முடிவு செய்தால் அவருக்கு ஒரு ஆயுள் போதாது, ஏனென்றால் அவ்வளவு பாத்திரங்கள், ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மை வாய்ந்தது. பல தலைமுறைகளை தொட்டு செல்லும் கதை. அதை அனாயசமாக செய்து வருகின்றார் ஜெயமோகன். இரண்டாவது புத்தகத்தை படித்துவிட்டு அதைப்பற்றி சிறிய குறிப்பை எழுத இவ்வளவு நாளாகிவிட்டது. அவர் ஆறாவது நூலுக்கு சென்றுவிட்டார். ஐந்தாவது நூல் அச்சிற்கு தயாராகிவிட்டதது. அது கைக்கு வந்து படித்து முடிக்கும் முன் ஏழாவது நூல் வந்துவிடும். படிப்பவர்களின் ஈகோவை கிளறிவிடுகின்றார்.

முதற்கனல், மகாபாரதத்தின் விதை,முதல் தலைமுறை பாத்திரங்களை பற்றி பேசுகின்றது. இரண்டாம் நாவல் அடுத்த தலைமுறை பாத்திரங்களை விவரிக்கின்றது. பாண்டு, திருதராஷ்டிரன், விதுரன், சகுனி, காந்தாரி, குந்தி இவர்களே முக்கிய பாத்திரங்கள். அதிக கவனம் பெறாத, பாரதக்கதை தெரிந்தவர்கள் கூட அதிகம் கவலைப்படாத பாத்திரங்களுக்கும் இதில் இடமுள்ளதே இதன் சிறப்பு. 

இரண்டு சின்ன சம்பவங்களாக படித்த பல இதில் பெரிதாக விவரிக்கப்பட்டுள்ளன. தலைப்பிற்கேற்ப மழை புத்தகம் முழுவதும் பெய்து கொண்டே இருக்கின்றது. பக்ககங்கள் ஈரமாகாததுதான் பாக்கி.

முதற்கனல் உணர்ச்சிகரமான, நாடகீய காட்சிகள் நிறைந்த ஒரு நூல். அதில் மனித உணர்ச்சிகள், அவற்றின் கொந்தளிப்புகள் அதிகம். மாறாக மழைப்பாடலில் அரசியல்,தர்க்கம் அதிகம் இடம்பெறுகின்றது.

07 பிப்ரவரி 2015

சாயாவனம் - சா. கந்தசாமி

காட்டை அழித்து கொஞ்சம் கொஞ்சமாக மனித வாழிடத்தை விஸ்தரித்து கொண்டு போவதன் விபரீதத்தை இன்று கண் கூடாக கண்டு வருகின்றோம். இந்த பிரச்சினைகளை ரப்பர், காடு நாவல்களில் காணலாம். அதே பிரச்சினையை வேறு ஒரு தளத்தில் காட்டுவது சாயாவனம்.

ஒரு குறுங்காட்டை அழிப்பதுதான் நாவலின் கதை.

வெளிநாட்டிலிருந்து வரும் சிதம்பரம், தன் சொந்த ஊருக்கு அருகிலிருக்கும் ஒரு நிலத்தில் சர்க்கரை ஆலை கட்ட நினைத்து, அதை முடிப்பதை விலாவாரியாக விவரித்துள்ளார். எப்போதும் புதிய எழுத்தாளர்களை படிக்க நினைத்தால் அவரின் சிறந்த நாவல் என்று பலர் சிபாரிசு செய்யும் ஒன்றை முதலில் படித்து ஓகே என்றால் மேலும் முன்னேறுவது வழக்கம்.அந்த வகையில் சா. கந்தசாமியின் சாயா வனம்.

ஒரு குறுங்காட்டின் அழிவை காட்சிப்படுத்தியுள்ளார். பாத்திரங்களும் அதிகமில்லை. சிதம்பரம், அவரது மாமா, இரண்டு உதவியாள சிறுவர்கள் அவ்வளவே.

பல நூறு ஆண்டுகளாக உண்டான காட்டை  சில மாதங்களில் அழித்து அவன் கட்டும் ஆலை ஊருக்குள் பல மாற்றத்தை கொண்டு வருகின்றது. பணம் என்பது முதன்முதலில் ஊருக்கு வருகின்றது, பயிரிடும் பயிர்கள் மாறுகின்றன. ஆனால கடைசியில் ஒரு வெறுமையும் உண்டாகின்றது. 

இதை பற்றி அதிகம் எழுத எனக்கு ஒன்றுமில்லை. காடு அழிப்பது என்பதை குறியீடு என்று கருதுபவர்கள் அதை நாட்டுடன் பொருத்தி பார்த்து,  கூடவே உலகமயமாக்கல், தொழில்மயமாதல், மறு காலனியாதிக்கம் போன்ற வார்த்தைகளையும் சேர்த்துக் கொண்டு உருகலாம். எனக்கு அப்படி எல்லாம் ஒன்றும் தோன்றவில்லை. ஒரு சுமாரான நாவல். காட்டின் அழிவு வருத்தம் தர வைக்கும் விஷயம். அதையும் இது அழுத்தமாக ஒன்றும் கூறவில்லை. காட்டை அழிப்பதை ஒரு சாகசமாகவே காட்டுகின்றது.

கதை நடக்கும் காலம், நடக்கும் இடம் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை. ஆனால பண்டமாற்றை பற்றி பேசுவதாலும், காங்கிரஸ் பற்றிய குறிப்புகள் வருவதாலும் 1930  - 40 என்று இருக்கலாம். 

படிக்கலாம்.