01 நவம்பர் 2014

காவல் கோட்டம் - வெங்கடேசன்

மதுரை நகரை பற்றி எப்போதும் ஒரு ஆச்சர்யம் உண்டு. பல நூறு ஆண்டு வரலாறு கொண்ட நகரம். இன்றும் உயிர்ப்போடு இருக்கும் நகரம். பாண்டியர்களின் தலைநகரம். பல முறை பலரால் வெற்றி கொள்ளப்பட்டு மீண்டும் மீண்டும் எழுந்த நகரம். கோவிலை மையமாக கொண்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம். மதுரையை பற்றிய நாவல் என்ற காரணத்தால் மட்டுமே வாங்கினேன். கோம்பை பற்றிய சில விபரங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. (கோம்பை எனது சொந்த ஊர்)

ஆனால் உண்மையில் இது மதுரையின் வரலாறு அல்ல. தாதனூரின் கதை. கள்ளர்களின் கதை. காவலர்களின் கதை. மதுரை நாகமலை புதுக்கோட்டை பக்கம், கீழக்குயில்குடி என்று ஒரு ஊர் இருக்கின்றது. அந்த ஊரின் கதை என்று கூறப்படுகின்றது. குற்றப்பரம்பரை என்று ஆங்கிலேயர்களால் முத்திரை குத்தப்பட்ட பரம்பரையினரின் கதை. அவர்களின் வாழ்வு மதுரையுடன் பிணைக்கப்பட்டுள்ளது, அவர்களின் வரலாறு மூலம் மதுரையின் வரலாறு சொல்லப்படுகின்றது.

வரலாறு என்பது பெரும்பாலும் மன்னர்களின் வரலாறு என்பதாகவே இருந்து வருகின்றது. எந்த மன்னர் எங்கு சென்றார், எத்தனை போர் செய்தார். மக்களின் வரலாறு சொற்பமே. வரலாற்று நாவல்கள் என்றால் கல்கியிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கின்றது. அவரின் கதை வரலாறு எண்ணும் வண்ணத்தை கொஞ்சம் தொட்டு கொண்டு அவரது கற்பனையை முழுக்க முழுக்க கலந்து தந்த ஓவியங்கள். சாண்டில்யன் கதைகளில் வரலாறு என்பது அதில் வரும் மன்னர் பெயர்கள் மட்டுமே என்பது என் எண்ணம்.

26 அக்டோபர் 2014

வாஸவேச்வரம் - கிருத்திக்கா

கிருத்திகாவை அறிமுகம் செய்தது ஆர்வியின் தளம். ஜெயமோகனின் தளத்திலும் அந்த பெயர் பரிச்சியம். இந்த நாவலை பற்றி சிலாகித்து பேசியிருப்பதை கண்டே வாங்கினேன். முன்னுரையை முதலில் படித்து தொலைத்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது, இருந்தும் தொடர்ந்து படித்த பின்னரே தெரிந்தது இது ஒரு முக்கிய நாவல் என்று.

வாஸவேச்வரம், ஒரு மலையோர கிராமம். செழிப்பான பூமி. சுகவாசிகள். உற்சவம், உற்சாகம் என்று வாழ்பவர்கள். அவர்களை பற்றிய ஒரு சிறிய பார்வை. பிராமணர்கள் மட்டுமே பாத்திரங்கள். வாஸ்வேச்வரம், கிருத்திகா கண்ட பல கிராமங்களின் கலவை என்று கூறுகின்றார். ஒரு கற்பனை கிராமம். எந்த இடம் என்று கூட கூறவில்லை, தஞ்சாவூர் பக்கம் இருப்பதாக நினைத்து கொள்ளலாம். முன்னுரையில் 1930 கதை நடக்கும் காலம் என்கின்றார். அது எல்லாம் செல்லாது, கதையின் படி கிராமத்தில் வீட்டிற்கு வீடு குழாயில் தண்ணீர் வருகின்றது. அக்காலத்தில் எத்தனை கிராமங்களுக்கு அந்த வசதி கிடைத்திருந்தது. சிப்பாய், கச்சேரி, கம்யூனிசம் என்று பேசுவதை கண்டால் சுதந்திரமடைந்து பத்திருபது வருடங்களை சேர்த்து கொள்ளலாம்.

23 அக்டோபர் 2014

சிங்கமய்யங்கார் பேரன் - சுஜாதா

கரும்பு தின்ன கூலியா என்று கேட்பார்கள், சாப்பிடவும் கூலி தருவதும் உண்டு என்று தெரிந்த காரணத்தால் அதை மேற்கோள் காட்ட முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். உங்களுக்கு தெரிந்த நல்ல பழ மொழியை பயன்படுத்தி கொள்ளவும். ..... போல, புத்தகத்தையும் தந்து அதற்கு ஒரு மதிப்புரை(!!!)யும் எழுத சொன்னால் வேண்டாம் என்றா சொல்வார்கள். அதைத் தானே இங்கு செய்து கொண்டிருக்கின்றேன் என்று முயற்சி செய்தேன். உடனே புத்தகமும் கிடைத்தது. மதிப்புரை.காமில் வெளியான எனது புத்தகத்தை பற்றிய எனது கருத்துக்கள். 


சினிமா காலத்திற்கு முன்பு மக்களை மகிழ்வித்தது நாடகங்களே. நாடக நடிகர்களைக் கடவுளாகப் பார்த்த மக்களைக் கொண்டது நம் தமிழகம். பெரும்பாலான நாடகங்கள் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை, மெதுவாக சமூகக் கதைகள் உள்ளே வர ஆரம்பித்தன. திராவிட இயக்கங்களின் தாக்கம் அதை மேலும் வளரச் செய்தது. புராணங்கள் மூலம் பக்திக் கண்ணீரை பெருக்கெடுக்க வைக்கும் நாடகங்கள், குடும்ப, சமூகக் கதைகள் மூலம் சோகக் கண்ணீரை பெருக்கெடுக்க வைத்த நாடகங்கள், உள்ளத்தைக் கொதிப்படைய வைத்து வியர்வையைப் பெருக்கும் அரசியல் நாடகங்கள் என்று இருந்ததை மாற்றி, நக்கலும் கிண்டலுமாக மக்களை அடைந்தவர் எம். ஆர். ராதா. அந்த வகையில் சினிமாவின் வெற்றிக்கு பின்னும் நாடக உலகில் வெற்றி பெற்றவர் ராதா.


அதன் பின்னர் அத்தகைய வெற்றியை கண்டவர் சோ. சோவின் சிறப்பு நாடக எழுத்தாளரும் அவர்தான். சோவின் நாடகங்கள் அந்தக் காலத்தை ஒட்டியவை, நாடகத்தை ரசிக்க அக்கால கட்டத்தைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். நாடகம் என்றவுடன் இவர்களைத் தவிர மற்றவர்கள் பட்டென்று நினைவில் வரமாட்டார்கள். காரணம் நாடகத்தை அழகாகக் கையாண்டவர்கள் மிகவும் குறைவு. அப்படி குறிப்பிடத்தகுந்த நாடக ஆசிரியர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன், சுஜாதா.

18 செப்டம்பர் 2014

அசோகமித்திரனின் பேட்டி - காலச்சுவடு

காலச்சுவட்டில் அசோகமித்திரனின் பேட்டி வெளியாகியுள்ளது

http://www.kalachuvadu.com/issue-177/page40.asp

அவரது எழுத்துக்கள் போலவே மிக எளிமையான பேட்டி.

அவரது வார்த்தைகளில் எங்கும் ஒரு எதிர்மறைத்தன்மை இல்லை. கஷ்டப்பட்டிருந்தாலும் (எழுத்தை தொழிலாக கொண்டவர் என்ன செய்திருக்க முடியும்) அதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், அதை முழு மனதோடு ஏற்று கொண்ட இவரது வார்த்தைகள்.


கல்கியை பற்றி அவர்து கருத்துக்கள் ஒன்றே  போதும், அவர் தன்னை ஒரு பெரிய இலக்கியவாதி என்று சொல்ல விரும்பவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

அவரது நகைச்சுவை உணர்வுக்கு கடைசி பாரா. பேட்டி எடுத்தவர்களுக்கு எப்படி இருந்திருக்குமோ.

17 செப்டம்பர் 2014

பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்

புகாரின். லெனின் குழுவிலிருந்த முக்கிய நபர். கம்யூனிச அரசை கட்டமைத்த ஒரு முக்கிய தலைவர். அதே கம்யூனிச அரசால் துரோகி என தண்டிக்கப்பட்டவர். ஆனால் அவர் குற்றமற்றவர் என்று முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் அறிவிக்கப்பட்டது. அக்கதையை ஒரு இழையாக வைத்து சுற்றி பல வித இழைகளல் பின்னப்பட்டது இக்கதை.

அரசியல் நாவல் என்றவுடன் தயங்கி தயங்கியே வாங்கினேன். அதுவும் ரஷ்ய நாட்டு தலைவரை பற்றிய கதை என்றவுடன் ஒரு மாதிரி செயற்கையாக இருக்குமோ என்ற எண்ணம் வேறு இருந்தது. (ஏதாவது மொழி பெயர்ப்பு புத்தகம் போல இருந்து வைத்தால் என்ன செய்வது என்ற எண்ணம்). ஜெயமோகன் என்னும் பெயரை நம்பி களத்தில் இறங்கினேன். நம்பினார் கெடுவதில்லை. கொஞ்சம் கூட தொய்வடையாமல், நடு இரவு தாண்டிய பின்னும் படிக்க வைத்த புத்தகம், இரவு இரண்டு மணி, மூன்று மணி வரை. எந்த புத்தகத்தையும் அடுத்தடுத்து படித்ததில்லை, இது என்னை மூன்று முறை தொடர்ச்சியாக படிக்க வைத்துவிட்டது. 

வெகுநாட்களுக்கு நாவல் என்றால் தொடர்கதை என்பதுதான் எண்ணம். கல்கி, சுஜாதா இவர்களின் புத்தகங்கள் அனைத்தும் தொடர்கதைகள் என்பதால் அந்த எண்ணம் அப்படியே இருந்தது. படித்த ஒன்றிரண்டு ஜெயகாந்தனின் நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவையே. அந்த எண்ணத்தை உடைத்தெறிந்தவர் அசோகமித்திரன். அவரின் பதினெட்டாம் அட்சக்கோடு, இப்படியும் நாவல் எழுத முடியுமா என்று வியப்பை தந்தது, அடுத்தடுத்து அவரது கரைந்த நிழல்கள், ஒற்றன், தண்ணீர் எல்லாம் ஒவ்வொன்று ஒவ்வொரு வகை. நாவலின் பல சாத்தியங்களை உணர வைத்தது. இது மற்று மொரு சாத்தியம். நாவல்களில் விவாதங்கள் வருவதுண்டு, ஜெயகாந்தன் கதைகளில், இந்திரா பார்த்தசாரதி கதைகளில். ஆனால் அவை அனைத்தும் என் பார்வையில் வறண்டு போனவை. அதில் எவ்வித உயிர்ப்பும் இல்லை, ஒரு பிரச்சாரம். இந்த நாவல், அனைத்து சாத்தியங்களையும் கையாண்டுள்ளது, சிறுகதை, நாடகம், அபத்த நாடகம், கடிதம், கவிதை, கட்டுரை. அதற்கான யுக்தி அபாரம். உதவிக்கு பல உண்மை பாத்திரங்கள் ஜெயமோகன், ராமசாமி (சுந்தர ராமசாமி?). பல பாத்திரங்கள் பல உண்மை மனிதர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம், யாருக்கு தெரியும். 

எச்சரிக்கை : சற்றே பெரிய கட்டுரை. பெரிய புத்தகமல்லவா?

26 ஆகஸ்ட் 2014

காடு - ஜெயமோகன்

காட்டை பற்றிய கனவு சிறிய வயது முதல் உண்டு. மலையடிவார கிராமம் என்றாலும், மலை மேல் ஏறியதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார கிராமம், ஆனால் காடு என்று ஏதுமில்லை. சோம்பேறித்தனத்தாலும், இது போன்ற விஷயங்களுக்கான தகுந்த துணையில்லாததாலும், வீட்டில் உதை கிடைக்குமென்பதாலும் அந்த பக்கம் போனதில்லை. இருந்தும் காட்டை பற்றி பல கதைகள், சாகச கதைகள் எல்லாம் படித்து படித்து ஒரு மயக்கம் உண்டு.

சில சந்தர்ப்பங்களில் காட்டை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும் ஏமாற்றம் தான். சுருளி அருவி பகுதி நல்ல அடர்ந்த காட்டு பகுதி. ஆனால் எங்கும் நுழைய முடியாத படி வனத்துறை கட்டுப்பாடு உண்டு. தப்பித்தவறி சென்றாலும் பாட்டில்கள் காலை கிழிக்கும் அபாயமுண்டு. குற்றாலம் பற்றி பெரிய கனவுடன் சென்ற எனக்கு, மெயினருவி தந்தது ஏமாற்றம். மரங்களுக்கு நடுவில் சத்தத்தை மட்டும் முதலில் காட்டி சுருளி அருவி தரும் அந்த தரிசனம் இதிலில்லை. மொட்டை பாறையில் கடைகளுக்கு நடுவிலிருக்கும் அருவி எனக்கு பிடிக்கவில்லை, ஒரு குரங்கு கூட இல்லாத அருவி என்ன அருவி.

பெங்களூருக்கு வந்த பின் அலுவலக நண்பர்கள் மலையேற்றத்திற்கு அழைத்தனர், ஆர்வத்துடன் சென்று காரிலிருந்து இறங்கி பார்த்தவனுக்கு அதிர்ச்சி. ஒரு பெரிய மொட்டை மலை. காட்டு ஆசை கொஞ்சம் பூர்த்தியானது கோவா சென்ற போது. யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஏற்பாடு செய்த மலையேற்றம், ஓரளவிற்கு காட்டு ஆசையை திருப்தி செய்தது. ஓரளவிற்கு அடர்ந்த காடு, எப்போதும் ஒரு பக்கத்தில் சிறிய ஓடை, குளிர்.

12 ஆகஸ்ட் 2014

லஜ்ஜா (அவமானம்) - தஸ்லிமா நஸ்ரின்

லஜ்ஜா - தஸ்லிமா நஸ்ரினின் உயிருக்கு விலை வைத்த புத்தகம். இப்போது தமிழில். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஜவர்லால் (ஜவகர்லால் இல்லை) மொழி பெயர்த்துள்ளார். 

உலகெங்கும் பரபரப்பை கிளப்பிய புத்தகம் என்று கூறப்படுகின்றது. நமது உள்ளூர் (இந்து) மதச்சார்பற்றவர்களுக்கு பங்களாதேசத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தஸ்லிமா நஸ்ரின் தொடுத்த போரை எதிர்த்து போராட ஒரு வாய்ப்பை அளித்த புத்தகம். 

அவர் மீது பத்வா பிறப்பித்து, தலைக்கு விலை வைக்கும் அளவிற்கு இதில் என்ன இருக்கின்றது என்ற ஆர்வத்தில்தான் புத்தகத்தையே வாங்கினேன். ஒரு வேளை இஸ்லாமிற்கு எதிராக பல கருத்துக்கள் இருக்குமோ என்று நினைத்தால், அப்படி எதுவுமில்லை. இதற்கு பத்வா என்றால், நாட்டிலிருக்கும் பல செய்தி பத்திரிக்கைகளுக்கும் சேர்த்து பத்வா பிறப்பிக்க வேண்டும், ஊரிலிருக்கும் எல்லா செய்திபத்திரிக்கையாளர்கள் தலைக்கும் விலை வைக்க வேண்டும்.

இந்தியாவில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி எனப்படும் கட்டிடத்தை இடித்ததன் பின் விளைவை பற்றியதுதான் இக்கதை. இந்துக்களின் நிலை எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான். அவர்களுக்கு அரசியல் ஆதரவு கிடையாது. இப்போது பா.ஜ.க அசுரபலத்துடன் இருக்கின்றது. இருந்தாலும் அவர்களாலும் இந்துக்களுக்கு முழு ஆதரவு தரமுடியாது. காரணம் மதச்சார்பன்மை என்ற பெயரில் பிற கட்சிக்கள் எடுக்கும் ஓட்டு பிச்சை. இந்துக்கள் அதிகமிருக்கும் இந்தியாவில் இந்த நிலை என்றால், இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் மற்ற இடங்களில், அதுவும் அடிப்படைவாதிகள் கையில் அதிகாரம் இருக்கும் இடத்தில், மற்ற மதங்களை அடியோடு வெறுக்கும் மதத்தலைவர்களின் கையில் அதிகாரம் இருக்கும் இடத்தில் இந்துக்களின் நிலை எப்படி இருக்கும். அதைத்தான் காட்டுகின்றது இப்புத்தகம்.

05 ஆகஸ்ட் 2014

சாமானியனின் முகம் - சுகா

தாயார் சன்னதி எழுதிய சுகாவின் மூன்றாவது புத்தகம் சாமானியனின் முகம். அதிகம் சினிமா பற்றிய கட்டுரைகளே உள்ளது அதிலும் குறிப்பாக சினிமா இசை பற்றிய கட்டுரைகள்.

யாரும் அறியாத புதிய விஷயம் எதுவும் சொல்லவில்லை. சினிமா ஆள் என்பதால் சினிமா வம்புகள் தேடினால் ஒன்றுமில்லை. சும்மா அங்கங்கு நாலு கிசுகிசுவை சேர்த்திருக்கலாம்.

சுகா சிறுவயதிலிருந்து இசை கற்றவர் என்பது, இசைக் கருவிகளை வாசிப்பவர் என்பதும் அவரது முதல் புத்தகத்திலேயே தெரிந்துவிட்டது. இதில் அவரது திரையிசை பற்றி பல கட்டுரைகளும் நடுவில் மானே தேனே என்று வேறு சில கட்டுரைகளும் உள்ளது.


இப்புத்தகம் இளையராஜா ரசிகனால், இளையராஜா ரசிகர்களுக்கு பிடிக்கும் படி எழுதப்பட்டது. நான் ஏ.ஆர். ரகுமான் ரசிகனாக இருந்து ராஜாவிற்கு மாறியவன். ரேடியோ கேட்டு வளர்ந்ததில்லை, டீவி அவ்வளவாக பார்ப்பதுமில்லை. சொந்தமாக டேப் வாங்கி பாடல் கேட்கும் வசதி வந்த போது ஏ.ஆர். ரகுமான் வந்துவிட்டார். சென்னை வந்தபின், ரேடியோ மிர்ச்சியில் இரவும் 11 - 1 வரை ஒலிபரப்பாகி வந்த காதல் காதல் (பெயர் சரிதானோ என்னவோ?)  ராஜாவை அதிகம் கேட்கவைத்து, ராஜாவை மட்டும் கேட்க வைத்துவிட்டது. 

24 ஜூலை 2014

கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா

சுஜாதாவின் மற்றுமொரு பெயர் பெற்ற நாவல்.

சிறு வயதில் பக்கத்து வீட்டு மாடியில் குப்பைக்கு நடுவில் கண்டெடுத்து படித்தது. மீண்டும் படிக்கலாம் என்று வாங்கினேன். சின்ன நாவல். ஒன்றிரண்டு மணி நேரத்தில் படித்துவிடலாம். 

கதை. மர்மக்கதை. துப்பறியும் கதை விதிப்படி ஒவ்வொரு அந்தியாயத்தின் முடிவில் ஒரு சின்ன சஸ்பென்ஸ். கொஞ்சம் அமானுஷ்யம். இரவில் சத்தம். பழைய வீடு. ஒரு கொலை, கொலை செய்தவனை விட்டு விட்டு யாரையோ பிடிக்கும் போலிஸ், கடைசியில் கொலைகாரன் தானே மாட்டி கொண்டு சுபம்.

நாட்டு பாடல் சேகரிக்கவரும் கல்யாணராமன் தங்குவது ஒரு பழைய ஜமீன் மாளிகையில். அடுத்தநாளே ஜமீன் பேத்தியும் ஆஜர். ஜமீன்ந்தார் மனைவி மரணமடைந்து ஆவியாக அலைவதாக பேச்சு. கிராமத்து பெண் வெள்ளி, அவளது முறைமாமன் மருதமுத்து. வெள்ளி மீது கல்யாணராமனுக்கு ஒரு ஈர்ப்பு, வெள்ளிக்கு மருதமுத்து என்றால் உயிர், மருதமுத்திற்கு சினேகலதா மீது ஒரு ஆசை. சினேகலதா, கல்யாணராமனை சீண்டி விளையாடுகின்றாள், கடைசியில் தலையில் அடிபட்டு செத்து போகின்றாள். வெள்ளி காணமல் போகின்றாள். கல்யாண ராமன் அடி வாங்குகின்றான், மருதமுத்து அடி கொடுக்கின்றான். போலிஸ் வேடிக்கை பார்க்கின்றது. கொலைகாரன் மாட்டிக் கொள்கின்றான். போலிஸ் பிடித்து செல்கின்றது. முடிந்தது.

22 ஜூலை 2014

அப்புசாமி சீதாப்பாட்டி

பெரிது பெரிதாக இரண்டு புத்தகங்களை படித்த களைப்பில் குட்டியாக படிக்கலாம் என்று தேடிய போது கிடைத்தது அப்புசாமியும் 1001 இரவுகளும். படு பயங்கர தீவிர வீர இலக்கியவாதிகள் கொஞ்சம் எட்ட நின்று பார்த்துவிட்டு விலகுங்கள், இல்லாவிடில் கெட்ட கனவுகள் வரலாம்.  

அப்புசாமி சீதாப்பாட்டியை, குமுதத்தில் நடுப்பக்கத்தை தவிர உள்ளடக்கத்தையும் (முன்பு அது போன்ற ஒரு வஸ்து குமுதம், விகடனில் இருந்தது, இதை படித்துவிட்டு இப்போது போய் தேடி ஏமாந்து என்னை திட்ட வேண்டாம்) படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும்.  நான் குமுதத்தில் படித்ததில்லை, எங்கள் ஊர் நூலகத்தில் படித்தது. அப்போது மிகவும் பிடித்து ரசித்து படித்த வரிசை. அந்த பழைய நினைவில் வாங்கியிருந்தேன். இப்போது பிடிக்குமோ பிடிக்காதோ என்று நினைத்து படித்து பார்க்கலாமே என்று வாங்கியது. மோசமில்லை. படிக்க முடிந்தது.   

பாக்கியம் ராமசாமி, ஜ.ரா.சுந்தரேசன். குமுதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர். நகைச்சுவை இலாகா. பல நகைச்சுவை கதைகளை, கட்டுரைகளை எழுதியுள்ளார். அடிக்கடி நான் ரா.கி.ரவுடன் குழப்பிக் கொள்வேன். இவருடைய நகைச்சுவையல்லாத கதைகளில் கொஞ்சம் புஷ்பா தங்கதுரை எட்டி பார்ப்பார்.  விகடனில் கொஞ்ச நாள் நகைச்சுவை கட்டுரைகள் எழுதி வந்தார், ஓரளவிற்கு சுமாராக இருந்தது.

15 ஜூலை 2014

கொற்கை - ஜோ டி குரூஸ்

முதற்கனல் முடித்த பின்னால் அடுத்து கையில் எடுத்தது கொற்கை.

வாங்கி வைத்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இரண்டு முறை ஆரம்பித்து படிக்க முடியாமல் வைத்துவிட்டேன். இந்த முறை விடவில்லை, நீயா நானா என்று பார்க்கலாம் என்று அமர்ந்துவிட்டேன். முதலில் படிக்க முடியாமைக்கு காரணம் ஆழி சூழ் உலகை படித்த கையோடு இதை எடுத்ததுதான். அதே நினைவில் இதை படிக்க முற்பட்டது, கதைக்கு உள்ளே நுழைய விடாமல் அடித்துவிட்டது.

ஆழி சூழ் உலகு, பரதவர்களின் கதை. இதுவும் அதேதான் ஆனால் வேறு வகை. பரதவர்கள் மீன் பிடித்தொழிலுடன், தோணித்தொழிலும் உள்ளார்கள். அவர்களின் வாழ்க்கையோடு, கொற்கையின் சரித்திரத்தை சொல்லுவதே இக்கதை. சுமார் 70 வருடக்கதை. 

கதை யாரையும் மையமாக கொண்டு அமைந்ததல்ல. கொற்கை நகரை அச்சாக கொண்டது. கொற்கை நகரின் மாற்றங்களே கதை. கொஞ்சம் தப்பினாலும் தூர்தர்ஷன் டாக்குமெண்டரி மாதிரி ஆகியிருக்கும். ஜோ.டி. குருஸின் திறமையால் சுவாரஸ்யமாகியுள்ளது. சில இடங்களில் தொய்வுண்டாகிறது, அலுப்பும் தட்டுகின்றது. நல்லவேளை அம்மாதிரியான பக்கங்கள் அதிகமில்லை.

25 ஜூன் 2014

வெண்முரசு : முதற்கனல் - ஜெயமோகன்


முதற்கனல் புத்தகம் வந்து பல மாதம் ஆகிவிட்டது. இருந்தும் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை. காரணம் மற்றுமொரு புதுவரவு. நேரம் கிடைத்ததும் இரண்டு முறை படித்து விட்டேன். தினமும் ஆன்லைனில் படித்தாலும் எனக்கு அது அந்தளவிற்கு பிடித்தமானதாக இல்லை, படித்தவுடன் மறந்துவிடும். பலருக்கு அதுதான் பிடித்திருக்கின்றது போல, படித்துவிட்டு நாளெல்லாம் அதைப்  பற்றி நினைத்து கொண்டிருக்க வசதியாக இருக்கின்றது என்கின்றார்கள், ஆனால் எனக்கு அலுவலகம், குடும்பம் என்று இருப்பதால் அதற்கும் கொஞ்சம் நினைவை தர வேண்டியிருக்கின்றது. முழுப்புத்தகமாக கையில் வைத்து படிப்பதுதான் எனக்கு திருப்திதரக்கூடியது. அதைப் பற்றி எழுதுவதற்கு இன்னும் அதிக நேரம் பிடித்துவிட்டது. எதை விட்டு எதைப் பற்றி எழுத.

மகாபாரதம். 

இல்லாதது எதுவுமில்லை என்று அனைத்தையும் கொண்ட இதிகாசம். இதிகாசம் என்றால் இது நடந்தது என்று பொருளாம். மேலோட்டமாக பார்த்தால் மகாபாரதம் முழுவதும் அரசியல் சதுரங்கமாகத்தான் தோன்றும். அரசியல் சதிகள், போர்கள். ஆனால் மகாபாரதம் முழுவதும் பேசப்படுவது தர்மம். ஜெயமோகனின் மகாபாரதம் என்பதால் அறம் என்றே சொல்வோம். 

எது தர்மம், எவ்விடத்தில் எது தர்மம் என்று பல விவாதங்களை கிளப்பி அதற்கு விடையை கூறிச்செல்லும். இது ஒரு பரிமாணம் என்றால் மறுபுரம் பல தரப்பட்ட பாத்திரங்களை படைத்து அவற்றை மோதவிட்டு பார்க்கும் ஒரு பரிமாணம். கருப்பு வெள்ளை போல பாத்திரங்கள் தட்டையானவை அல்ல. சராசரி மனித உணர்ச்சிகளின் கலவை. நம்மை போன்ற மனிதர்கள்தான். இதுதான் மகாபாரதத்தை பலருக்கும் நெருக்கமானதாக காட்டுகின்றது. பாத்திரங்கள் அனைவரும் அந்தந்த நேரத்திற்கு தர்மானதை செய்கின்றனர்.

பாண்டவர்களுடன் சமாதானமாக போகச்சொல்லும் சகுனிதான் வேறுவழியின்றி துரியோதனனுக்கு பகடையாடி நாட்டை வென்று தருகின்றான். பழி வாங்க சபதம் ஏற்கும் பீமனும் அர்ச்சுனனும் போருக்கு முன் சமாதான பேச்சிற்கு ஆதரவளிக்கின்றனர். இந்த முரண்பாடுகள்தான் சுவாரஸ்யத்தை தருகின்றன.

22 மே 2014

கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து

வைரமுத்துவின் புத்தகங்களில் நான் முதலில் படித்தது இதுதான். வைகை அணைக் கட்டுமானத்தை வைத்து அப்பகுதி மக்களை பற்றி எழுதப்பட்டது. சொந்தக்கதை. 

பேயத்தேவர் என்னும் ஒரு வைரக்கிழவனாரின் கதை. அவர் மூலமாக அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையை, பழக்க வழக்கங்களை எழுதியுள்ளார். சுமாரான கதைதான். ஓஹோ என்று புகழமுடியாவிட்டாலும், சுத்த திராபை என்றும் கூற முடியாது. 

பாத்திரங்கள் வெகு இயல்பு. வெள்ளந்தி கிராமத்து மனிதர்கள். கோபமோ, பாசமோ தன்னை திறந்து கொட்டும் மனிதர்கள். விவசாயியின் கஷ்டம். அதிகாரிகளின் இயந்திரத்தனம் எல்லாம் அங்கங்கு வந்து போகின்றது.

மாட்டிற்கு பிரசவம் பார்ப்பது, சாராயம் காய்ச்சுவது, கோழி குழம்பு வைப்பது, ஆடு திருடுவது, கிணறு வெட்டுவது என்று சின்ன சின்ன நுணுக்கங்கள்.  வட்டார வழக்கு, எங்கள் பகுதி வழக்கு. மதுரை தமிழில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் வேறு பட்டிருக்கும். அப்பகுதிகாரர்களுக்கு அது தெரிந்து விடும். அதை படிக்க மிக சந்தோஷம். அணை கட்ட ஆரம்பித்தவுடன் கதை பரபரவென்று போகின்றது. 

01 மே 2014

இரவுக்கு முன் வருவது மாலை - ஆதவன்

சென்ற வருட பெங்களூரு புத்தக கண்காட்சியில் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் புத்தகத்தை வாங்கினேன். அப்போது அங்கிருந்தவர் அவரது மற்ற நாவல்களை பரிந்துரை செய்தார். தயக்கமாக இருந்ததால் வாங்கவில்லை. ஆனால் அப்புத்தகம் நன்றாக இருந்தது. துணிந்து மற்ற புத்தகங்களும் வாங்கினேன்.

இரவுக்கு முன் வருவது மாலை ஆதவனின் குறுநாவல்களின் தொகுப்பு. "இந்த திறமையான இளைஞரின் குறுநாவல்களை ஏன் நீங்கள் புத்தகமாக வெளியிடக் கூடாது" என்று சுஜாதாவால் அனுப்பி வைக்கப்பட்டு முதல் பிரசுரம் வந்துள்ளது. மீண்டும் இப்போது கிழக்கு செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது.
    
எ.பெ.ரா நாவலின் மூலம் கிடைக்கும் ஆதவனின் பிம்பம் இதிலும் தொடர்கின்றது கொஞ்சம். ஆதவனின் எழுத்துக்கள் அனைத்து மனிதனின் உள்ளே புகுந்து பார்க்க விளைகின்றது. சாதரண மனிதனின் உள்ளே ஓடக்கூடிய எண்ணங்களை பிரித்து நம் கண்முன் வைக்கின்றது.

29 ஏப்ரல் 2014

கழுகும் கிளியும்

ஒரு காட்டில் இருந்த வயதான கழுகிற்கு ஒரே பசி.

காட்டில் ஏதும் கிடைக்கவில்லை, ஏனென்றால் அங்கு காடே இல்லை. 

மனம் போன போக்கில் பறந்த கழுகு கடைசியில் ஒரு மலையுச்சியை அடைந்தது.

மலையுச்சியில் ஒரு சிறிய குகை. 

குகை வாசலில் பசியோடு சென்று விழுந்த கழுகு, நிமிர்ந்து பார்த்தது.

27 ஏப்ரல் 2014

மாயமான் வேட்டை

வெந்து தணிந்த காடு சுட்ட சூட்டின் ரணம் ஆறாமல் இப்புத்தகத்தை எடுத்தேன். நல்ல வேளை சூட்டின் வலி கொஞ்சம் குறைந்தது.

அரசியல்.டெல்லி வாலாக்களின் கதைகளில் கொஞ்சம் மறைவாக எட்டி பார்க்கும் ஒரு விஷயம். வேதபுரத்து வியாபாரிகளில் கொஞ்சம் மிகைப்படுத்தி கூறிய அரசியல் விளையாட்டை இதில் கொஞ்சம் யதார்த்ததிற்கு கொண்டு வந்துள்ளார் என்று கூறலாம்.

அரசியலை பற்றி அனைவருக்கும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும், ஆனால் அதில் இறங்குவது என்பது அனைவராலும் முடியாது. முழுக்க முழுக்க நல்லவர்களாக இருந்தாலும் கூட அரசியலில் தாக்கு பிடிப்பது சந்தேகம். ஏனென்றால் அரசியல் ஒரு புத்திசாலிகளின் விளையாட்டு. சதுரங்கம் போல. பலவித காய்களின் இயல்பையும், சேர்க்கைகளையும் ஆராய்ந்து, பலவித சினாரியோக்களை (தமிழ் வார்த்தை என்ன?) ஆராய்ந்து விளையாட வேண்டிய விளையாட்டு. எப்போதும் வெற்றி என்பது சாத்தியமில்லை.

நாட்டிற்கு நல்லது செய்ய நினைப்பது மட்டும் போதும் என்ற எண்ணம் எல்லாம் அரசியலுக்கு உதவாது. அன்னா ஹசாரே மாதிரி ஆக வேண்டியதுதான். கொஞ்சம் கிரிமினல் புத்தியும் வேண்டும் . கேஜ்ரிவால் மாதிரி இல்லை, மோடி மாதிரி கடின உழைப்புடன் சாதுர்யமும் வேண்டும்.

25 ஏப்ரல் 2014

கதை, வெறும் கதை

இரவு ஏழு மணி

வெளிச்சமில்லா சாலையில் சைக்கிளில் போய் கொண்டிருந்தவன் மீது வேகமாக மோதியது ஒரு மோட்டார் சைக்கிள்

பறந்து சென்று ஒரு மரத்தில் மோதி விழுந்தான்.

எட்டு மணி

இறந்து போனான்

ஒன்பது மணி

யாரோ ஒருவன் அவனை பார்க்காமலேயே கடந்து சென்றான்

23 ஏப்ரல் 2014

வெந்து தணிந்த காடுகள் - இந்திரா பார்த்தசாரதி

"உயிர்த் துடிப்பான பாத்திரங்களை படைத்து, அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு, நெருப்பு பொறி பறக்கும் விவாதங்களை உருவாக்குகிறார் இந்திரா பார்த்தசாரதி, பக்கங்களை புரட்டும் போதே கை விரல்களில் தீப்பற்றிக் கொள்கின்றது" என்று பின்னட்டையில் அச்சிடப்பட்டிருந்ததை படித்தவுடன் ஒரே அதிர்ச்சி. அப்படிப்பட்ட புத்தகத்தை சர்வசாதரணமாக பல புத்தகங்களுக்கு நடுவில் வைத்திருந்தனர். உடனே அதை கைப்பற்றி கடையை காப்பாற்றி விட்டேன்.  படிக்கும் போது எந்த ஆபத்தும் வரவில்லை, என் பெண் கூட அதை வைத்து விளையாடுகின்றாள். படித்த பின்னர் அது கிழக்கு பதிப்பகத்தின் அவதூறு என்று அறிந்து கொண்டேன்.

கொஞ்சம் முன்கதை,

கல்லூரியில் படிக்கும் போது என்னுடைய நண்பன் ஒரு நாள் வீட்டிற்கு வந்தான். அப்போது என்னிடம் இருந்த வசதிக்கு கொஞ்சம் கல்கி புத்தகங்களை வாங்கி வைத்திருந்தேன். அதை பார்த்த அவனுக்கு சந்தோஷம். கண்டேன் புத்தகப்புழுவை என்று. எனக்கும் சந்தோஷம். கொஞ்ச நாளைக்குதான். அவன் படிக்கும் புத்தகங்கள் பாலகுமாரனும், ஜெயகாந்தனும். நல்லவேளையாக பாலகுமாரனை அப்போது படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. படித்த முதல் ஜெயகாந்தனின் புத்தகமே ரிஷிமூலமாக போனது எனது துரதிர்ஷ்டம். புத்தகத்தை பதுக்கி வைத்து திரும்ப தந்துவிட்டேன். என்னிடம் இருந்து அவன் சில கல்கி புத்தகங்களை வாங்கி சென்றான். திரும்ப தரும் போது "என்னடா உங்க ஆள் (!!) கல்கி, பி.ஏ ஃபெயிலா போய் தற்கொலை செஞ்சிக்கப் போய்ட்டாரே" என்றான். தூக்கிவாரி போட்டது. கல்கி பி.ஏவா? அவன் வாங்கி சென்ற புத்தகங்களை ஆராய்ச்சி செய்த போது ஒரு அரிய உண்மை புலப்பட்டது. அன்னார் கூறியது சரிதான், ஆனால் அது "ஒற்றை ரோஜா" கதையில் வரும் சம்பவம், பாத்திரமே கதை சொல்லும் படி எழுதப்பட்டது. அதை படித்துவிட்டு குழம்பிய அவனுக்கு அதை எப்படி புரிய வைப்பது என்பது தெரியவில்லை. (இதை படிக்கும் துரதிஷ்டம் அவனுக்கு வாய்த்தால் அவனுக்கு : இப்போதாவது அது உனக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்)

15 ஏப்ரல் 2014

புதுவரவு

வீட்டிற்கு ஒரு புது வரவு.

ஆண் குழந்தை. வெள்ளிக்கிழமை காலை. தாயும் சேயும் நலம்.

பத்து பதினைந்து நாட்களுக்கு இங்கு லீவு, "யார் கேட்டார்கள்" என்றாலும், கடைக்கு லீவு விடும் போது சொல்வது கடமையல்லவா? 

08 ஏப்ரல் 2014

அபிதா - லா. ச. ரா

பின்னட்டையில் இருக்கும் அந்த தாத்தாவின் முறைப்பை பார்த்துவிட்டு யோசித்தேன் வாங்கலாமா வேண்டாமா என்று. ஆனால் அடிக்கடி இவர் பெயரை சுஜாதா கதைகளில் படித்ததால் சரி வாங்கித்தான் பார்ப்போமே என்று வாங்கி வைத்தேன். படிக்கவில்லை. போன வாரம்தான் வீட்டிலிருந்த புத்தகங்களை ஆராய்ச்சி செய்தேன், வாங்கி படிக்காமல் வைத்திருப்பது, கொஞ்சம் படித்து விட்டு வைத்தது, அவசரத்தில் படித்தது எல்லாம் எடுத்து வைத்திருக்கின்றேன். 

முதலில் இதுதான் கண்ணில் பட்டது. ஒரு முறை படித்துவிட்டு முடியாமல் வைத்து விட்டேன். அதோடு வாசகர்கூடத்தில் வேறு இதைப் பற்றி எழுதியிருந்தார்கள்.

பலரால் பாராட்டப்படும் இவரது புத்தகம் என்னை கவரவில்லை. கவித்துவமான நடை என்கின்றார்கள். எனக்கு கவிதை என்றாலே உடல் உதறிக்கொள்ளும். இதில் கவிதை சேர்ந்த நடை என்றால் அவ்வளவுதான். 

05 ஏப்ரல் 2014

நான் நாகேஷ்

நாகேஷ்.

நடிகர்கள் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் மனதில் பதிவது என்பது அவ்வளவு பெரிய விஷயமல்ல. பாட்ஷா, வேலு நாயக்கர், அலெக்ஸ் பாண்டியன், etc etc. ஹீரோக்களுக்கு இது சரி, எத்தனை நகைச்சுவை நடிகர்களின் பாத்திரப்பெயர் நமக்கு நினைவில் இருக்கின்றது. அவ்வளவாக நினைவில் இருக்காது. ஏனென்றால நாம் அங்கு பார்ப்பது நகைச்சுவை நடிகர்களைத்தான், பாத்திரங்களை அல்ல. அதற்கு பெயர் அவ்வளவாக அவசியமில்லாதது. விதிவிலக்கு வெகு சிலர் நாகேஷ், வடிவேலு.

நாகேஷ் என்றவுடன் நினைவில் வருவது படங்களல்ல, தருமியும், வைத்தியும், ஓஹோ ப்ரொடெக்‌ஷன் செல்லப்பாவும்தான்.

தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்த்துவிட்டுதான் புத்தகத்தை படித்தேன். படிக்கும் போது சிவாஜி, பத்மினி உருவங்கள் எல்லாம் மறைந்து, என் கற்பனை உருவமே கதை முழுக்க நிறைந்தது. ஆனால் வைத்தியை பற்றி படிக்கும் போது நாகேஷ்தான் என் கண்ணில் தெரிந்தார். இத்தனைக்கும் ஒரிஜினலுக்கும் சினிமாவிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருந்தும் சினிமாவில் இல்லாத காட்சியில் கூட நாகேஷ்தான் தெரிந்தார். அந்தளவிற்கு அதற்கு உயிரை கொடுத்திருக்கின்றார்.

01 ஏப்ரல் 2014

ரப்பர் - ஜெயமோகன்

ஜெயமோகனின் முதல் நாவல். அகிலன் நினைவு பரிசு பெற்ற நாவல்.

மனிதன் எங்கெல்லாம் தன் காலடியை வைத்தானோ அங்கெல்லாம் தான் காலடி வைத்த இடத்தை அழித்து நாசமாக்கிவிடுவது வழக்கம். மனிதனின் தேவையும் ஆசையும் அவ்வளவு பெரியது. இயற்கையை அளித்து உண்டாக்கிய பல விஷயங்களில் முக்கியமானவை காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்கள்.

உலகில் அதிக ரப்பர் உற்பத்தி செய்யும் நாட்டில் நமது நாடும் ஒன்று. முக்கிய இடம் கேரளா. ரப்பர் உற்பத்தி என்பது ஒரு வகையில் வளர்ச்சி என்றாலும் அந்த வளர்ச்சி உருவானது காடுகளை அழித்து. ரப்பரும் ஒரு வகை மரம்தானே என்றாலும், அது நம் நாட்டிற்கேற்ற மரமல்ல. அது உறிஞ்சும் தண்ணீர் மிக அதிகம். இரண்டாவது மனிதர் காலடி படாத இடத்தில் மனிதனல்லாத மற்ற உயிர்களுக்கு சுதந்திரம் இருக்கும். மனிதன் வந்துவிட்டால அவனுக்கு போகத்தான் மற்ற உயிர்களுக்கு. மனித நடமாட்டம் மிகுந்த பல இடங்களிலிருந்து மற்ற மிருகங்கள் வெளியேறி ஓடுகின்றன. இதனை பிண்ணனியாக வைத்து எழுதப்பட கதை ரப்பர். இரப்பர் என்று எழுத வேண்டும் என்பார்கள், இரப்பர் என்றால பிச்சைக்காரர்கள் என்றாகி குழப்பமாகிவிடும். எனவே ரப்பர்தான்

27 மார்ச் 2014

கணேஷ் - வசந்த் கதைகள் - 1

என்னடா மறுபடியும் சுஜாதாவா என்பவர்களுக்கு, சாரி, என்ன செய்வது மனநிலையை பொறுத்துதான் படிக்கும் புத்தகமும் இருக்கும். ஜாலியான, கலகலப்பான புத்தகங்களை படிக்கலாம் என்பதால் சுஜாதா மட்டுமே மேஜையில்.

சுஜாதாவின் பிரபல நாயகர்கள் கணேஷ் - வசந்த். சீரியசான ஒரு சீனியர், அவனுக்கு ஜாலியான ஒரு ஜூனியர். ஏதோ ஆங்கில நாவலாசிரியரின் கதபாத்திரங்களின் இன்ஸ்ப்ரேஷன் என்று ஒரு வதந்தி கூட உண்டு. அவர்கள் தோன்றும் அனைத்து கதைகளும் சிறப்பானவை என்று கூற முடியாது. பெரும்பாலான கதைகள் பல பத்திரிக்கைகளுக்கு தொடர்கதைகளாக எழுதப்பட்டவை. பத்திரிக்கைகளின் தரத்தை பொறுத்தும் கதையின் தரம் வேறுபடும்.

உயிர்மை அவரின் பெரும்பாலான எழுத்துக்களை தொகுத்துள்ளது. அதில் குறுநாவல் வரிசையில் இது மூன்றாவது தொகுதி, கணேஷ் - வசந்த் கதைகளில் முதல் பகுதி. அதில் உள்ள கதைகள் பற்றி இனி

22 மார்ச் 2014

பள்ளிகொண்டபுரம் - நீல பதமநாபன்

திருவனந்தபுரத்தை மையமாக வைத்து நீல.பத்மநாபன் எழுதிய கதை.

அனந்தன் நாயரின் இரண்டு தினங்கள்தான் நாவல். பத்மநாபன் பள்ளிகொண்டுள்ள கோவிலில் ஆரம்பிக்கும் கதை, அனந்தன் நாயரின் வீட்டில் முடிகின்றது. அனந்தன் நாயரின் ஐம்பதாவது பிறந்தநாள் காலையில் ஆரம்பிக்கும் கதை அவரின் மரணத்தில் முடிகின்றது. அடுத்த இரண்டு நாட்களும் அவரது நினைவில் சுழன்றடிக்கும் அவரது வாழ்க்கை சூறாவளிதான் கதை. மிகச்சாதரண கதையாக போயிருக்க வேண்டிய கதை, அந்த நகருடன் கொண்ட பிணைப்பினால் ஒரு நல்ல கதையாக உருவெடுத்துள்ளது.

அனந்தன் நாயரின் மனைவி கார்த்தியாயனி, இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு வேறொருவருடன் ஓடிவிடுகின்றாள். அவளின் நினைவை ஒதுக்க முடியாமல் "மருந்தை குடிக்கும் போது குரங்கை நினைக்ககூடாது" கதையாய் அவளை மறக்க முயற்சி செய்கின்றார். 

ஒரு மனிதனுக்கு தான் செய்வது என்பது என்றும் தவறாக தோன்றாது, தோன்றுவது வெகு அபூர்வம். அதோடு அவன் செய்யும் செயல் மற்றவரிடம் வேறுபட்டால், மற்றவர்களை விட ஒரு படி மேலானாதாக தோன்றினால் கேட்கவே வேண்டாம். அனந்தன் நாயருக்கு அவரின் மனைவி அவரை விட்டு ஓடிய பிறகு தனியாக வாழ்ந்து அவரின் மக்களை வளர்த்தது ஒரு பெருமையாகவும், அதன் காரணமாகவே அவருக்கு நடக்கு எதிர்மறை நிகழ்ச்சிகள் அனைத்தும் நியாயமற்றவையாகவும் தோன்றுகின்றது.

19 மார்ச் 2014

நிழல் முற்றம் - பெருமாள் முருகன்

என்னிடம் இருக்கும் புத்தகங்கள் அனைத்தும் வெகுநாட்கள் முன்னர் வெளிவந்தவை. சமீபகால எழுத்தாளர்களில் ஜெயமோகனை தவிர யாரையும் படித்ததில்லை. காரணம் ஒரு தயக்கம், எப்படி இருக்குமோ என்று. ஆர்வி சிபாரிசினால் பெருமாள் முருகனின் இப்புத்தகத்தை வாங்கினேன்.

சினிமா தியேட்டர். தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கம். டூரிங் டாக்கிஸில் ஆரம்பித்து மல்டி ப்ளெக்ஸில் நிற்கின்றது. எங்கள் ஊரில் எங்களது நிலத்தில் ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. நான் மிகச்சிறுவனாக இருந்த போது போன நினைவு வெகு மங்கலாக வருகின்றது. அப்பாவுடன் பல படங்களுக்கு போயிருக்கின்றேன். சிறிய ஒரு அறையில் பெஞ்சு / சேர் (நினைவில்லை), மண் சுவர் தடுப்பிற்கு அந்தப்பக்கம் தரை டிக்கெட். எங்கள் நிலம் என்பதால் சினிமா ஓசி. 

அதே தியேட்டர் நகர்ந்து ஊருக்குள் வந்தது. சேர், பெஞ்ச் என்று. இப்போது டிக்கெட் வாங்க வேண்டியிருந்தாலும், சலுகையால் மெயின் கேட் வழி உள்ளே போய்விடுவோம். ஒரு முறை அதிக ஆர்வத்தில் சென்று, முதல் ஷோவின் க்ளைமேக்ஸ் காட்சியை ப்ரொஜெக்டர் ரூமின் ஓட்டை வழியாக பார்த்து கொண்டிருந்தேன். ராஜ சின்ன ரோஜா. சினிமாவிற்கு போவதே பாப்கார்னும், ஐஸ்கீரீமும் சாப்பிடத்தான். ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டுமானால் பக்கத்து ஊர் தியேட்டருக்கு போக வேண்டும், கொஞ்சம் புதிய படம் வரும். தியேட்டரின் திரை தூக்குவதை பார்க்கவும் அப்போது ஒலிக்கும் இசையை கேட்கவுமே எப்போதும் சீக்கிரம் போக வேண்டும் என்று விரும்புவேன். சைட் ஸ்பீக்கரில் திடீர் என்று கேட்கும் ஒலி எப்போதும் குஷிதான்.

15 மார்ச் 2014

கொலையுதிர் காலம் - சுஜாதா

பரபரபரபரபரபர

மேற்கண்ட வரியை சுமார் அத்தியாத்திற்கு ஒன்று என்று படித்துக் கொள்ளவும். அத்தனை பரபரப்பு. நேற்று இரவுதான் வந்தது, பேய்க்கதை என்பதால் இரவில் படிக்காமல் பகலில் படித்தேன். இரண்டு மணி நேரத்தில் படித்து முடித்துவிடலாம். 

சுஜாதாவின் வழக்கமான கணேஷ் வசந்த் கதைகளில் எனக்கு தெரிந்து இதுதான் செம விறுவிறுப்பு. அமானுஷ்ய கதைகள் என்றாலே ஒரு பரபரப்பு இருக்கும். அதுவும் சுஜாதாவின் கதை என்றால் இன்னும் வேகம்.

லீனா வியாச குடும்பத்தின் வாரிசு. அவளது பதினெட்டாம் வயதில் குடும்ப சொத்துக்கள் அனைத்தும் அவளின் சித்தப்பா குமார வியாசரிடமிருந்து வர வேண்டும். அதை சரிபார்க்க லீனாவின் காதலனால் அனுப்பப்படும் கணேஷ் வசந்த் அங்கு விபரீத சூழலில் மாட்டிக்கொள்கின்றனர். லீனா மீது ஆவி இறங்கி ஒருவனை அடித்து ரத்தம் குடித்தது என்று குமார வியாசன் சொல்வதை ஆராய்வதில், அவர்கள் கண்ணிற்கும் அந்த ஆவி தரிசனம் கிடைக்கின்றது. மற்றொரு கொலை. 

08 மார்ச் 2014

வசந்த் வசந்த் - சுஜாதா

ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு தளத்தை எடுத்துக் கொள்ளும் சுஜாதா இக்கதைக்கு எடுத்துக் கொண்டது சரித்திரம்.

சரித்திர பேராசிரியரின் மகளுக்கு ரூட் போடும் வசந்த், அப்பேராசிரியரின் தொலைந்து போன கட்டுரையை தேடி போய், இக்கதையை ஆரம்பித்து வைக்கின்றனர். வழக்கம் போல ஆக்‌ஷனை வசந்தும், லாட்ரல் திங்கிங்கை கணேஷும் பிரித்துக் கொள்கின்றனர்.  இந்த கதையில் வசந்திற்கு ஆபத்து கொஞ்சம் ஓவர் டோஸாக் போய், சினிமா கதையாக மாறிவிட்டது.

அதிகம் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாத கதை. குற்றவாளிகளுக்கு தேவையில்லாத அந்த கட்டுரையை ஏன் திருட வேண்டும் என்ற கேள்வியை கேட்டாலே கதை ஓவர். கட்டுரையை வைத்து கதையை எழுத நினைத்து, பின்னால் மனசு மாறி கதையை வேறு எங்காவது ஓட்டிச் சென்றிருக்க வேண்டும். கடைசி வரை முடிவை யூகிக்க முடியாமல்தான் கதை நகர்த்தியிருக்கின்றார். 

05 மார்ச் 2014

விடிவதற்குள் வா! - சுஜாதா

ஆழி சூழ் உலகில் பல விஷயங்களிருந்தாலும் அதில் வரும் முக்கிய விஷயமான கிறிஸ்துவ மத மாற்றம் சம்பந்தமான உரையாடல்கள் அதிகம் கவர்ந்தது. கிறிஸ்துவர்களை தவிர மற்ற மதத்தினர் அவர்கள் மதத்தை பற்றி அதிகம் பேசி நான் பார்த்ததில்லை. பேசுவார்கள், பரஸ்பர ஆர்வத்தை பொறுத்து. கோவில்களில் அல்லது பண்டிகை நாட்களில் இது போன்றுதான் இருக்கும். ஆனால் கொஞ்சம் இடம் கிடைத்தாலும் போதனை செய்யும் பல கிறிஸ்துவர்களை கண்டுள்ளேன். போதனை, தங்கள் மதத்தின் சிறப்பு, அவர்களது பெருமை. அதோடு இருந்தால் பரவாயில்லை மற்றவர்களை வம்பிழுப்பதுதான் பிரச்சினை.

எனது ஊரில் இப்போது ஒவ்வொரும் மணிக்கும் பைபிள் வசனம் ஒலிப்பெருக்கி வழியே ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் என் வீடு வரை கேட்கின்றது. அனுமதி இலவசம். எங்கள் கோவில் ஊருக்கு வெளியே மலையடிவாரத்திலிருக்கின்றது. பெரும்பாலும் யாரும் வருவதில்லை, சனிக்கிழமைகளில் ஒன்றிரண்டு பேர் வருவதுண்டு. புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளில் நல்ல கூட்டமுண்டு. இந்த கூட்டம் கண்ணை உறுத்தி அங்கு சர்ச் கட்ட இடம் வாங்கி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பின்னர் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டது. இது போன்று பல கோவில்களுக்கு அருகில் கட்டப்பட்ட சர்ச்சுகளின் கதைகள் ஏராளம்.

27 பிப்ரவரி 2014

ஆழி சூழ் உலகு - ஜோடி குரூஸ்

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல், எப்போதோ பள்ளியில் படித்தது.

மீனவர்களுக்கும் கடலுக்கும் இடையிலான உறவை அழுத்தமாக சொல்லும் கதை எதையும் படித்ததில்லை. முதலில் கடற்கரை பற்றிய கதைகளே படித்ததில்லை. பா. ராகவனின் அலை உறங்கும் கடல், ராமேஸ்வரத்தை மையமாக கொண்ட கதை என்றாலும், அதில் மீனவர்களை பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகளே.

கடல் என்றால் அலுக்காத ஒரு காட்சி பொருள் என்றுதான் பல நாட்களாக என் எண்ணம், அதை மாற்றியது சுனாமி. அந்த அலைகளுக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி அமைதியாக உள்ளது என்பது தெரியவந்த பின் அதைக் காணும் போதெல்லாம் ஒரு சிறிய பயம் தோன்றும். சுனாமியின் போது துணிந்து இறங்கி பலரை காப்பாற்றியது மீனவர்கள், அதில் அதிகம் பாதிப்படைந்ததும் அவர்கள்தான். ஆனால் வெகுவிரைவில் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டனர்.

இடிந்தகரையில் பல ஆண்டுகளாக போராடிவரும் மீனவர்களை கண்டால் எனக்கு வியப்புதான். அவர்களின் தலைவர்களின் நோக்கம், அவர்களின் செயலில் எனக்கு சந்தேகம் இருந்தாலும், இப்பரதவர்களின் கட்டுப்பாடு ஆச்சர்யமளிக்கின்றது. அதுமாதிரியான கட்டுப்பாடு எப்படி வந்தது என்ற கேள்விக்கு விடை தருகின்றது இப்புத்தகம். வங்கக்கடலில் பரந்துள்ள மீனவர்களை சேர்த்துக் கட்டுவது கத்தோலிக்கம். சவேரியாரியால் மதம் மாற்றப்பட்டவர்கள். நன்றிக்காக மதம் மாறியவர்கள். உள்ளூர் மக்களுடன் ஏற்பட்ட போரில் தங்களுக்கு உதவி செய்த போர்ச்சுகீசியர்களுக்காக மதம் மாறினார்கள். . தங்களுக்கு போரில் உதவி செய்தவர்களுக்கு நன்றியாக  மதம் மாறினாலும் அவர்களின் தாய் மதத்தின் தொடர்ச்சியை விடாதவர்கள். பின்னாளில் சவேரியாரால் முழுவதும் மாறியவர்கள். அவர்களின் வாழ்க்கையை பற்றிய ஒரு புத்தகம். பதிவும் கொஞ்சம் பெரியது, பெரிய நாவலில்லையா!!!!

12 பிப்ரவரி 2014

ஈராறு கால்கொண்டெழும் புரவி - ஜெயமோகன்

ஜெயமோகனின் மற்றுமொரு நாகர்கோவில் குறுநாவல். ஈராறு கால்கொண்டெழும் புரவி. சித்தர் பாடல்கள், பட்டினத்தார் பாடல்கள் தெரிந்தவர்களுக்கான கதை. பாதிக்கு மேல் ஒன்றும் புரிய வில்லை. குறிப்பாக கடைசி பகுதி, புரிந்தவர்கள் மறக்காமல் இங்கு வந்து என்ன என்று தெரிவிக்கவும். தன்யனாவேன்.

இது போன்ற கதைகள் போரடித்துவிடும், இது அவ்வளவாக போரடிக்கவில்லை. காரணம் அவரின் நடை, ஊடாடும் நகைச்சுவை. மதுரை பக்கத்துக்காரன் என்றாலும், அம்மா வழி தமிழான திருநவேலி தமிழும் கொஞ்சம் பழக்கம், அதனாலோ என்னவோ நாகர்கோவில் தமிழும் பிடித்துவிட்டது. கதையை நான் முழுக்க படித்ததற்கு காரணம் அத்தமிழ்தான்.

07 பிப்ரவரி 2014

கன்னிநிலம் - ஜெயமோகன்

வழக்கமாக ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொருவிதமான எழுத்துக்களே கை கூடி வரும். அவர்களின் ஏரியா தாண்டினால் சொதப்பிவிடும். ஆனால் ஜெயமோகனுக்கு எல்லா வகை எழுத்தும் அட்டகாசமாக வருகின்றது.

வெள்ளிக்கிழமை வேலை செய்தால் உடலுக்கு நல்லதில்லை என்பதால், இவர் தளத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். ஏகப்பட்டதை எழுதி குவித்திருக்கின்றார், மூடுக்கு தகுந்தமாதிரி ஒன்றிலிருந்து ஒன்றாக தாவுவது வழக்கம். இன்று இக்கதை. ஆன்லைனில் படிப்பது அவ்வளவாக பிடிக்காது, ஆனால் வேறுவழியில்லை. சமீபத்தில் இப்படி ஒரு விறுவிறுப்பான கதையை படிக்கவில்லை. 

வடகிழக்கு மாநிலத்தில் ஏதோ ஒரு மூலையில், பர்மா எல்லையில் இருக்கும் ஒரு ராணுவ முகாமில் தொடங்கும் கதை, யாருமற்ற நிலத்தில் முடிவடைகின்றது. ராணுவ லெஃப்டினெட் நெல்லையப்பன், காட்டிற்குள் ஒரு போராளி பெண்ணை கைது செய்கின்றான். அவள் மேல் கொண்ட காதலால், காட்டிற்கு அலைந்து, துரோகியாகி, மீண்டும் அவளை அடைகின்றான்.

கதையை மூன்றாக பிரிக்கலாம், முதல் பகுதி ஆக்‌ஷன், இரண்டாம் பகுதி ரொமாண்டிக், கடைசி பகுதி ட்ரமாட்டிக். 

14 ஜனவரி 2014

பஞ்சம் படுகொலை பேரழிவு - கம்யூனிசம்

ஊரில் சிறுவனாகத் திரிந்து கொண்டிருக்கும் போது, தெருமுனையில் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் நடந்தது, பக்கத்து வீட்டு அண்ணன், "டேய் வர்றியா கம்யூனிஸ்ட் கூட்டத்துல போய கல்லெறியலாம்" என்று விளையாட்டிற்குக் கேட்டுவைக்க, அன்று யாரோ நிஜமாகவே கல்லெறிந்து கலவரம் ஆனது. அப்படித்தான் கம்யூனிசம் அறிமுகம். அவர்களின் பெருங்கூட்டம் சைக்கிள்காரர்களுக்குக் கூட தொந்தரவின்றி அடிக்கடி நடக்கும். இவர்களை விடத் தீவிர கம்யூனிஸ்டுகளின் அறிமுகம் எங்கள் கோவில் சுவரில், மகாபாரத்தத்தைக் கொளுத்துவோம், ராமாயணத்தை எரிப்போம் என்று வந்தார்கள். நானும் அவர்கள் குறிப்பிடும் தேதியில் ஏதாவது நடக்குமா என்று காத்திருப்பேன். ஒன்றும் நடந்ததாக நினைவில்லை. 

பள்ளியில் ரஷ்யப் புரட்சி பற்றி படித்த நினைவு. பரிட்சைக்குப் படித்ததால் அப்போதே மறந்துவிட்டது. ஓரளவிற்கு அறிவு வந்ததும், கம்யூனிஸ்டுகள் மீது ஒரு மரியாதை வந்தது. காரணம் அவர்கள் மக்களுக்கு ஏதோ செய்யவேண்டும் என்று நினைக்கின்றார்கள் என்பதும், தைரியமாக இறங்கி போராடுகின்றார்கள் என்பதும். தலைவர்கள் மீது எக்காலத்திலும் எந்த மரியாதையும் கிடையாது. அவர்களுக்கு பதவி மட்டும்தான் குறி.

இணையத்தில் படிக்க ஆரம்பித்தபின் தான் தெரிந்தது ஏகப்பட்ட புரட்சியாளர்கள் இருப்பது. அவர்களுக்கு கீ போர்ட் இருந்தால் போதும். நாலுவரி கோபமாக எழுதிவிட்டு, புரட்சி வாழ்க என்றோ அல்லது புரட்சியே இதற்கு தீர்வு என்று கூறினால் போதுமானது, முக்கியமாக தோழர் என்றழைப்பதே அனைத்தையும் விட முக்கியமானது. நாட்டில் நடக்கும் அனைத்தையும் குற்றம் சொல்ல வேண்டியது. பொதுவாக அனைவரும் முட்டாள்கள், மட்டிகள். அவர்களுக்குப் புரட்சி மூலம் ஞானஸ்தானம் அளிக்க வேண்டும். யாரையும் எவரையும் ஏதாவது ஒரு வகையில் வர்க்க எதிரியாளர்களாக்கி விடும் திறமை உண்மையில் மெச்சத்தகுந்தது. ஏதோ ஒரு வகையில் அவர்களால் ஒரு மரத்தைக் கூட வர்க்க எதிரி என்று நிரூபிக்க முடியும். இவர்களைப் படிக்கும் போது எனக்குத் தெரிந்த ஒரு பாட்டிதான் நினைவில் வருகின்றார். அவரால் முடிந்தது திட்டுவது. அனைவரையும் திட்டுவார், என்ன செய்தாலும் திட்டுவார். அதுதான் இதுவும்.