24 டிசம்பர் 2013

வெள்ளையானை - ஜெயமோகன்

யானை ஒரு வலிமையான மிருகம். அதைவிட வலிமையானது அதன் மனம். யானை எதையும் மறப்பதில்லை அதன் வலிமையை கூட, அதை தேவையில்லாமல் பயன்படுத்துவதில்லை. அது தன்னை அடக்கியாள்வதை அனுமதிக்கின்றது. ஒரு சிறிய தளைக்கு கட்டுபட்டு நிற்கின்றது. ஒரு எல்லை வரை. அதை தாண்டினால் எல்லாம் தூசு. நமது இந்தியாவையும் அப்படி ஒரு யானையுடன் ஒப்பிடலாம். நமது நாட்டின் வலிமை அளப்பறியது. அந்த வலிமையை பலர் அடக்கியாண்டார்கள். இன்று வரை வேறு வேறு வடிவங்களில் அது அடக்கி ஆளப்பட்டு வருகின்றது. கடைசியில் காந்திவழியே தன் வலிமையை அறிந்து திருப்பி அடித்தது. ஆனால் இன்று மீண்டும் அடங்கியுள்ளது. எப்போது மறுபடியும் தன் வலிமையறியுமோ? அந்த யானையை கட்டியிருந்தது வெள்ளையர்களின் தளை. பயம் என்னும் இழையாலும், அதிகாரம் என்னும் இழையாலும் செய்யப்பட்ட தளை. அதன் ஊடே அதை உறுதியாக்க உதவியது நமது ஜாதியடுக்கு என்னும் மற்றொரு இழை.
வெள்ளையானை - கதையின் ஆரம்பத்தில் வரும் ஐஸ் ஹவுஸின் பெரிய பனிப்பாளத்திற்கு உவமையாக வருகின்றது. இறுதியில் கூறப்படுவது போல வெள்ளையானை என்பது ஒரு நோயுற்ற யானை. நம் நாட்டிற்கும் உவமையாகலாம்.

நம்மை முழுவதும் சுரண்டியவர்கள் ஆங்கிலேயர்கள். அந்த சுரண்டலின் விளைவு கொடிய பஞ்சங்கள். அத்தகைய கொடிய பஞ்சம், தாது வருட பஞ்சம் என்றழைக்கப்பட்ட பஞ்சம். 1876 - 78ல் கொடிய பஞ்சம் தாக்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் ஒரு கோடிக்கு மேல் எனப்படுகின்றது. கணக்கில் வந்ததே ஒரு கோடி என்றால் கண்டிப்பாக அதற்கு மேலாகவே இருக்கும். 

19 டிசம்பர் 2013

தீராக்காதலி - சாருநிவேதிதா

தமிழகத்தின் முக்கிய உணவு சினிமா. அது இல்லாமல் பலர் வாழ்வது கடினம். பலருக்கு சினிமா மீதான காதல் அபரிமிதமானது. ஆட்சியையே தூக்கி கொடுக்கும் மனதுடையவர்கள் நாம். அத்தகைய சினிமா நாயகர்களில் சிலரை பற்றிய குறிப்புகள்தான் இப்புத்தகம். உயிர்மையில் வெளிவந்து புத்தகமாகவும் வந்துள்ளது.

ரஜினி - கமல் என்றுதான் என் சிறுவயது சண்டைகள், இன்று விஜய் - சூர்யா என்று நடந்து கொண்டிருக்கின்றது. ஏனோ அஜித் சிறுவர்கள் மனம் கவரவில்லை. அவர் அடுத்த படிக்கு போய்விட்டாரோ என்றுதான் எண்ண தோன்றுகின்றது, அது வேறு கவலை. இதற்கு எல்லாம் முன்னோடி, எம்.ஜி.ஆர் - சிவாஜி? இல்லை. அதற்கும் முன்னும் தமிழ்சினிமா இருந்திருக்கின்றதல்லவா? எம்.கே.டி - பி.யூ. சின்னப்பா. இப்புத்தகம் அவர்களில் ஆரம்பித்து பல முன்னோடிகளை பேச விருப்பப்பட்டு, விரைவில் முடிந்து விட்டது.

இதில் வரும் சினிமா பிரபலங்கள்

எம்.கே.டி
பி.யூ.சின்னப்பா
எஸ்.ஜி.கிட்டப்பா
கே.பி.சுந்தராம்பாள்
எம்.ஆர்.ராதா
எம்.ஜி.ராமசந்திரன்

11 டிசம்பர் 2013

கடலுக்கு அப்பால் - ப. சிங்காரம்

கடலுக்கு அப்பால். ஒரு வகையில் புயலிலே ஒரு தோணியின் தொடர்ச்சி எனலாம், அதே சமயம் இரண்டும் வேறு வேறு கதைகள். ஒன்றை விட்டு இன்னொன்றை படிக்கலாம். கதையின் கால வரிசைப்படி புயலிலே ஒரு தோணி முதலில், எழுதப்பட்ட கால வரிசைப்படி முதலில் எழுதப்பட்டது கடலுக்கு அப்பால்,சில கதாபாத்திரங்கள் இரண்டிலும் வருகின்றன. அவ்வளவுதான். இரண்டு கதைகளையும் அவர் யோசித்து வைத்திருக்கலாம். புயலிலே ஒரு தோணியின் ஒரு லீட், கடலுக்கு அப்பாலில் இருக்கின்றது. இதில் வரும் செல்லையா, அதில் ஒரு காட்சியில் தோன்றி மறைகின்றான். 

கடலுக்கு அப்பால் வாழும் தமிழர்களின் கதை. செல்லையா வானா யீனால் மார்க்காவின் அடுத்தாள். ஐ.என்.ஏவில் லெப்டினெட்டாக இருக்கும் செல்லையாவிற்கு, வயிரமுத்துப் பிள்ளையின் மகள் மீது காதல். வான யீனா, சண்டைக்கு போய்ட்டு வந்த பயலால், வட்டித் தொழில் செய்ய முடியாது என்று மகளை வட்டி தொழிலுக்கென்று பிறந்த ஒருவனுக்கு கட்டி தருகின்றார். செல்லையா தன் வழியில் போகின்றான்.

செல்லையா ஒரு சாதரண அடுத்தாள், ஐ.என்.ஏவில் சேர்ந்ததும் அவன் ஒரு போர் வீரனாக மாறுகின்றான். நேதாஜி இறந்ததும், வேறு வழியின்றி முகாமில் இருந்து வெளியேறி வீரர்களை சட்டை மாற்றி விடுகின்றனர். பின் மீண்டும் நெற்றியில் பட்டையுடன் பழைய செல்லையாவாக மாறுகின்றான். பாண்டியனின் ஒரு எதிர் துருவம் செல்லையா எனலாம். பாண்டியன் தேடிக் கொண்டே இருக்கின்றான், எதிலும் அவன் தன்னை முழுக்க ஈடுபடுத்திக் கொள்வதில்லை. செல்லையா அனைத்தாலும் பாதிக்கப்படுவன், உணர்ச்சிகளால் தூண்டப்படுவன். பாண்டியன் தேடி தேடி அடுத்தடுத்து போகின்றான், செல்லையா வாழ்வின் யதார்த்தை எதிர்கொண்டு அமைதியாகின்றான். ஐ. என். ஏவில் இருந்தவரைதான் போர் வீரன், அதற்கு பின் அவன் ஒரு சாதரணன் என்பதை உணர்ந்து கொள்கின்றான். மரகதத்தின் மீதான காதல் தோற்றபின் செல்லையா உணர்வது அவனை, அவனின் காதல் தோல்வியல்ல அவனது ஆணவத்தின், அகங்காரத்தின் தோல்வி. அதை அறிவதுடன் கதை முடிகின்றது.

08 டிசம்பர் 2013

புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று எழுதிவைத்ததால் தேடினார்களோ இல்லை அப்படி தேடியதால் எழுதி வைத்தார்களோ தெரியவில்லை. பல நூறு ஆண்டுகளாக நமது மக்கள், பல நாடுகளுக்கு சென்று திரவியம் தேடி வந்துள்ளனர். அதில் முக்கிய இடங்கள் மலேசியா,பர்மா, சிங்கப்பூர், இந்தோனேஷியா. இரண்டாம் உலகப் போரில் அதிக பாதிப்பு அடைந்தவர்களும் இங்கிருந்தவர்கள். அப்படி இரண்டாம் உலகப்போர் காலத்து தமிழர்களின் வாழ்வினை காட்டுகின்ற ஒரு நாவல் புயலிலே ஒரு தோணி. ஒரு சாகசக் கதை என்று பலர் குறிப்பிடுகின்றார்கள். எனக்கு இதில் வரும் சாகசம் எல்லாம் போதாது. கொஞ்சம் சாகசம் உள்ள கதை என்று வைத்துக் கொள்ளலாம்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில்தான் நேதாஜி இந்திய தேசியப் படையை அமைத்தார். ஐ.என்.ஏ ஜப்பானியர்களுடன் சேர்ந்து கொண்டு பிரிட்டாஷாரை எதிர்த்து போரிட்டது. நேதாஜியுடன் சேர்ந்தவர்களில் தமிழர்கள் அதிகம். வெளிநாட்டில் பிழைக்க சென்ற ஏராளமான தமிழர்கள், நேதாஜியுடன் சேர்ந்து கொண்டனர். அப்படி சேர்ந்த ஒரு தமிழனின் கதை.


பாண்டியன் தென்பாண்டி நாட்டை சேர்ந்தவன்.  அன்னெமெர் பாண்டியன் இந்தோனேஷியாவில் கெர்க் ஸ்ட்ரீட்டில் அறிமுகமாகி, அங்கிருந்து பினாங் சென்று வியாபாரம் செய்கின்றான். நேதாஜியின் ஐ.என்.ஏவில் சேரும் அவன், அங்கு ஒரு முகாமில் நடந்த சண்டையின் காரணமாக தண்டனை அடைந்து வெளியேற்றப்படுகின்றான். பின்னர் ஒரு முக்கிய பணியில் அமர்த்தப்பட்டு அதில் வெற்றி பெறுகின்றான். நேதாஜியின் திடீர் மரணம், ஐ.என்.ஏவில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. பெரும்பாலனவர்கள் பிரிந்து அவரவர் பழைய தொழிலை பார்க்க திரும்புகின்றனர். பாண்டியனால் அது முடியவில்லை. இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் சுதந்திர போரில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றான்.