24 மார்ச் 2013

தாயார் சன்னதி - சுகா

டீவியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த போது அதில் யாரோ திருநெல்வேலித் தமிழை பேசிக் கொண்டிருந்தனர். நானும் விளையாட்டாக அதே போல் என் பெண்ணுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த தமிழ் கொஞ்ச நேரத்தில் என் மனைவிக்கு தலைவலியை உண்டாக்குகின்றது என்று தெரிந்தவுடன் இன்னும் பலமாக ஆரம்பித்து பேசிக் கொண்டிருந்தேன். ஒரிஜினல் திருநெல்வேலிக்காரர்கள் கேட்டிருந்தால் உதை கிடைப்பது நிச்சியம். அப்படியே இப்புத்தகம் நினைவிற்கு வந்தது, எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

தாயார் சன்னதி என்ற தலைப்பை பார்த்த உடன் ஸ்ரீரங்கத்தை பற்றிய கதை என்றுதான் நினைத்தேன். அட்டைப்படமும் அதே போல் இருந்தது. ஒரு கோபுரம் ஒரு யானை, எனக்கு ஸ்ரீரங்கம் நினைவே வந்தது. வாங்கியபின் ஒரு சிறிய ஏமாற்றம். 

ஆனால் அது முழு  ஏமாற்றமல்ல. ஸ்ரீரங்கக்கதையல்ல தின்னவேலி கதை. திருநெல்வேலி என்றால் நினைவிற்கு வருவது அல்வா, அதே போல் அந்த தமிழ். இப்புத்தகத்தை படிக்கும் போது அந்த அல்வாவையும் அந்த தமிழையும் ருசித்து மகிழ்ந்த ஒரு திருப்தி கிடைக்கின்றது.

பாலுமகேந்திராவின் சிஷ்யர் சுகா. அவரின் தளத்தில் (அ) சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. புதிதான சரக்கை தன் கடையில் உடனே சூடாக போடும் விகடன் மூங்கில் மூச்சு என்ற பெயரில் தொடர்ந்தது. இப்போது வேறு பெயரில் வேறு யாரோ ஒருவரால் வருகின்றது. ஒரிஜினல் போல் அது இல்லை. கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்துவிட்டது.

தாயார் சன்னதி என்பது சுகா எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு. அவரது தாயாரை மருத்துவமனையில் சேர்ந்திருந்த போது அவர் கண்ட மற்ற தாயார்களை பற்றிய ஒரு கட்டுரை. மிகவும் நெகிழ்ச்சியான கட்டுரை.

13 மார்ச் 2013

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்

பேய்கள் சுவாரஸ்யமானவை. அனைவருக்கும் ஏதாவது பேய்க்கதைகள் கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பேய்கள் பரிச்சியமாயிருக்கும். சிறுவயதில் சாதாரண கதைகளை கேட்பதில் உள்ள சுவாரஸ்யத்தை விட அமானுஷ்யக்கதைகள் தரும் சுவாரஸ்யம் அதிகம். என் பேய்கள் எனது பள்ளியிலேயே இருந்தது, தேடி அலைய வேண்டியதில்லை. பற்றாக் குறைக்கு எதிரில் இருந்த பள்ளிவாசல் மாடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஜின் வேறு. 

பெரும்பாலும் பேய்கள் என்பது நமது மனதில் உருவாவதுதான். தேவதைகளும் அது போலத்தான். சிலரின் பேய்கள் சிலருக்கு தேவதையாகக் கூடும். பேய் பயம் என்பது பெரும்பாலும் உருவாக்கப்படுவதுதான். தானாக அது உருவாவது, உண்மையான பேயை பார்க்கும் போதுதான். தனியாக பல நாள் இருந்த வீட்டில், கூட இருந்தவனின் பேய் அனுபவம் என்னை தூங்க விடாமல் தடுத்தது. 

தமிழகத்தை விட மலையாளத்தில் அதிக அமானுஷ்ய கதைகள் உண்டு என்று நினைக்கின்றேன். தமிழில் அமானுஷ்யக் கதைகளுக்கு என்று வெகு சிலரே இருக்கின்றனர். சிறுவயதில் படித்தது கலாதர் என்பவரின் கதை. அஷ்டமாசித்திகளை விஞ்ஞானத்துடன் கலந்து எழுதியிருந்தார். பிறகு பேய்க்கதை மன்னன் :) பி.டி சாமி. ஆனால் அந்தளவிற்கு உவப்பாயில்லை. சிறுவயதில் படிக்கும் போதே பயம் வரவில்லை. 

இவ்விஷயத்தில் ஓரளவு வெற்றி அடைந்தவர் இந்திரா சவுந்திரராஜன். அவரது ரகசியம், விட்டுவிடு கறுப்பா, ருந்திர வீணை, சிவம், சிவமயம், காற்று காற்று உயிர் என்று அனைத்தும் படிக்க விறுவிறுப்பானவை.  ரகசியம் விகடனில் படு ஆர்வத்துடன் படித்த கதை. கதையின் சஸ்பென்ஸ் உடையும் இடம் கடைசி வரி. அது டி.வி தொடராக இன்னும் அட்டகாசமாக வந்தது. (டிவிடி கூட வந்துள்ளது, செம காஸ்ட்லி. வாங்க நினைத்தவன், மனைவியின் முறைப்பை கண்டு வைத்துவிட்டேன்) காற்று... கதையை இரவில் தனியாக படிக்க ஆரம்பித்து பயந்து வைத்துவிட்டேன். விஞ்ஞானத்தையும், அமானுஷ்யத்தையும் கலந்து, முடிக்கும் போது இரண்டில் எதை நம்புவது என்பதை வாசகனிடம் விட்டு விடும் திறமை இவரது சிறப்பு.

09 மார்ச் 2013

உதயசூரியன் - தி. ஜானகிராமன்

உதயசூரியன் உதிக்கும் நாடு ஜப்பான். ஜப்பானுக்கு சென்ற ஜானகிராமனின் அனுபவங்கள்தான் உதயசூரியன். ஜப்பானுக்கும் நமது பாரதம் போல நீண்ட பாரம்பர்யம் உண்டு. அணுகுண்டு என்னும் பெரிய அடிக்கு பின் அவர்களின் முன்னேற்றம் அளப்பரியது. எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும், விவசாயத்திலும் அவர்களின் நவீன் உத்திகள் மற்றவர்களை விட ஒரு மேலானாதாகவே இருக்கின்றது.

ஜப்பானில் போய் வத்தல்குழம்பு சாப்பிட்ட கதை மட்டும் இல்லை. ஜப்பானைப் பற்றி பல செய்திகளை கூறுகின்றார். வெறுமனே கூறிக் கொண்டு சென்றால் டாக்குமென்டரி படம் பார்த்த மாதிரி இருக்கும். ஆனால் தி. ஜாவின் பண்பட்ட எழுத்தில் அது அழகான சிறுகதை போல அமைந்துவிட்டது. 

கட்டுரை ஏதோ பத்திரிக்கையில் தொடராக வந்துள்ளது போல, ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சின்ன அழகான முடிவுடன் அமைந்துள்ளது. ஜப்பானிற்கு சென்றாலும் அங்கும் நாம் காண்பது மனிதர்களைத்தான். அனைத்து மனிதற்களுக்கும் உள்ள உணர்ச்சிகள் அவர்களுக்கு உண்டு, ஆனால் ஜப்பான் என்னும் தேசம் அவர்களை எப்படி வடித்துள்ளது என்பதை காட்டுகின்றார். அதனுடன் ஜப்பானை பற்றியும் அதன் அழகையும் பழமையையும் நகைச்சுவையுடன் எழுதியுள்ளார்.

ஜப்பான் போக விமானத்தில் ஏறும் போது ஆரம்பிக்கின்றது. விமான பயம் என்பது பொதுவானது, அந்த பயத்துடம் ஆரம்பிக்கும் அவரது பயணம் அதே விமானத்தில் ஒரு அழகான சிறுகதைக்கான முடிவுடன் நிறைவடைகின்றது. 

06 மார்ச் 2013

வாஷிங்டன்னில் திருமணம் - சாவி

வீட்டைக் கட்டி பார், கல்யாணம் செய்து பார் என்ற பழமொழி எக்காலத்திற்கும்  பொருந்தும் போல. இன்று இந்த இரண்டும் காண்டிராக்டர்களால் செவ்வனே நடத்தி முடிக்கப்படுகின்றது. இருந்தும் கல்யாண பையனுக்கு மனைவி மட்டும் அல்ல, கல்யாண காண்டிராக்டரும் அமைவது இறைவன் கொடுத்த வரம். 

காண்டிராக்டர் கையில் அனைத்தையும் கொடுத்துவிட்டாலும், உள்ளே ஒரு டென்ஷன் ஓடிக் கொண்டே இருக்கும். அதை யாரிடமும் தர முடியாது. அந்த கடவுளே வந்து கவலையை விடு நான் பார்த்து கொள்கின்றேன் என்றாலும், நமக்கு அவர் யாரவது ஆதிமூலமே என்று கூப்பிட்டு ஓடிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் இருக்கும். 

இன்றைய விஞ்ஞான வசதிகள் நிறைந்த காலத்திலேயே ஒரு திருமணத்தை நடத்தி வைப்பது இவ்வளவு சிரமம் என்றால், ஒரு ஐம்பது, அறுபது வருடம் முன்பு எப்படி இருக்கும். இங்கு நடக்கும் கல்யாணத்தை அமெரிக்காவில் செய்தால் என்னவாகும்? 

திருவையாறில் வெள்ளைக்காரர்களை பார்த்த சாவி, அதை கொஞ்சம் மாற்றி யோசித்ததன் விளைவு இக்கதை. விகடனில் தொடராக வந்து பெரிய வெற்றி பெற்றது. நாடகமாக கூட வந்துள்ளது என்று நினைக்கின்றேன்.

02 மார்ச் 2013

ஏழாம் உலகம் - ஜெயமோகன்


அதிகாலையிலேயே முழிப்பு வந்த பண்டாரத்திற்கு நிலைகொள்ளாமல் தவிக்கின்றார். அவரது சினைகண்ட மாட்டை நினைத்து. எப்போது பிரசவமாகும், காவலுக்கு ஆளிருந்தும் ஒரு முறை ஒரு குட்டியை நரி கொண்டு போய்விட்டது என்று பயந்து கொண்டிருக்கின்றார். மனைவி தான் பிரசவிக்கும் போது கூட இப்படி இல்லை, இப்போது என்ன இவ்வளவு தவிப்பு என்று அலுத்துக் கொள்கின்றாள். அவர் அவசர அவசரமாக அவரது மாட்டை காண போகின்றார். இப்படி நினைத்துக் கொண்டுதான் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு கையும் காலும் கண்ணும் இல்லாத முத்தம்மைதான் பிரசவிக்க போகின்றாள் என்பதில் ஆரம்பித்த அதிர்ச்சி கடைசிவரை போகவில்லை.


பெரிய கோவில்கள், தெருக்கள், பஸ் ஸ்டாண்ட் என்று பல இடங்களில் நாம் பார்க்கும் பிச்சைக்காரர்கள் பின்னால் இப்படி ஒரு மிகப்பெரிய வலை இருக்கும் என்பதும், இது ஒரு மிகப்பெரிய தொழில் என்றும் இதைப் படிக்கும் முன் வரை தெரியாது. நான் கடவுள் படத்திற்கு பின் இதை வாங்கினேன். அதில் காட்டியது இப்புத்தகத்தில் உள்ளதில் ஒரு பத்து சதவீதம் கூட இருக்காது.

பண்டாரம் ஒரு மிகப் பெரிய முருக பக்தர். அவர் மனைவி, குழந்தைகளிடம் பாசமாக இருக்கும் ஒரு குடும்பத்தலைவர். பெண் அழுவதால் நடு இரவில் ஓடிப் போய வளவி செய்து போடும் பாசமுள்ள தகப்பன். ஆனால் அவரது மறுபக்கம் பிச்சைக்காரர்களை வைத்து சம்பாதிக்கும் தொழில்.