27 பிப்ரவரி 2013

துப்பறியும் சாம்பு - தேவன்

தேவனின் மிகவும் பிரபலமான கதாபாத்திரம் துப்பறியும் சாம்பு. விளாங்காய் தலையும், ஜாடிக் காதுகளும், வழுக்கை தலையும், வளைந்த மூக்கும் கொண்ட ஒரு முட்டாள் (அ) அசடு சாம்பு. ஒரு நாள் ஒரு ஜவ்வாது வாசனையால் சாம்புவின் வாழ்க்கை மாறுகின்றது. ஒன்றுமில்லை வேலை போகின்றது. வேலை போன சாம்பு, வேறு குழப்பத்தில் சிக்கி ஏதோ உளற, அது வேலை செய்கின்றது. சாம்பு துப்பறிபவனாகின்றான். கோபாலன் என்னும் போலிஸ் இன்ஸ்பெக்டர் கூட சேர, சாம்புவின் திறமை (!) ஊரெங்கும் பரவுகின்றது. தமிழ் நாட்டிலும் பம்பாயிலும் பிரக்யாதி பெற்ற சாம்பு, லண்டனிலும் சென்று தன் திறமையை காட்டுவதில் முடிகின்றது.

ஐம்பது கதைகள் மொத்தம். தொடர்ச்சியாக எழுதினாரா, இல்லை விட்டு விட்டு அவ்வப்போது எழுதினார என்று தகவலில்லை. கதைகளை பார்த்தால் தொடர்ச்சியாக எழுதியதுபோலத்தான் உள்ளது.

அனைத்து கதைகளும் ஒரு சில டெம்ப்ளேட்டுகளில் அடைத்துவிடலாம். ஒரு குற்றம், சாம்பு ஏதாவது அச்சு பிச்சு என செய்ய போக, குருட்டு அதிர்ஷ்டத்தில் குற்றவாளி மாட்டிகொள்வான். கோபாலன் கண்ணில் நீர் வழிய சாம்பு நீர் கெட்டிக்காரனய்யா என்று புகழ, சாம்பு மெளனமாக முழிப்பான இல்லை மூர்ச்சையாகி விடுவான். குற்றம் பெரும்பாலும் நகை திருட்டு / வைரக்கடத்தல் / பணதிருட்டு. கொலைகள் பக்கம் சாம்பு அதிகம் போவதில்லை. கொஞ்சம் பயந்தாங்கொள்ளி.

ஐம்பதும் ஒரே மாதிரி என்றாலும், அனைத்தையும் ரசிக்கும் படி எழுதியுள்ளார். குழந்தைகள் விரும்பும் கதைகள் என்றாலும், நாமும் ரசிக்கலாம். சிரிப்பின் அளவு அவரவர் மனநிலையை பொருத்தது. குழந்தைமனமுடையவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கலாம். மிக சீரியசான, ஐம்பது வார்த்தைகளால் ஆன வாக்கியங்கள் கொண்ட குண்டு குண்டு புத்தகங்களை படிப்பவர்களும், எழுத்துக்களை கலைத்து போட்ட கவிதைகளை படிப்பவர்களும், எப்போதும்  வர்க்க வேறுபாடுகளை பேசி பேசி, பேசி பேசி களைத்து போகும் நபர்களும் யோசித்து படிக்கவும்.

24 பிப்ரவரி 2013

வேங்கடநாத விஜயம் - விஷ்ணுவர்த்தன்

திருப்பதி என்றால் நினைவிற்கு வருவது லட்டு என்றால் தப்பில்லை. அதற்கு பின்னால் தான் அங்குள்ள பெருமாள். அனைவரும் திருப்பதி திருப்பதி என்றாலும் திருப்பதி என்பது மலையின் கீழ் உள்ள ஊர். வேங்கடநாதன் குடி கொண்டுள்ள இடம் திருமலை. அத்திருமலையின் வரலாறுதான் இப்புத்தகம்.

ரிலையன்ஸ் டைம் அவுட்டில் தமிழ் புத்தகங்களும் கொஞ்சமே கொஞ்சம் உண்டு. பல சமையல் புத்தகங்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, யார் ..... என்பதற்கு நடுவில் ஒரு ஓரமாக கிடந்தது இப்புத்தகம். பக்திகதைகளை புத்தகமாக வாங்கியதில்லை. இது வரலாறு என்று கூறுகின்றதே என்ன என்று பார்க்கலாம் என்று வாங்கினேன். வீண் போகவில்லை. திருமலை பற்றிய பல புதிய செய்திகளை கூறுகின்றது.

இன்று மிகப்பெரிய பணக்கார கடவுள் (இந்த வரியே கொஞ்சம் அபத்தமாக உள்ளது, இருந்தும் வேறு வழியில்லை). தினம் தோறும் உற்சவம், லட்சக்கணக்கான பக்தர்கள், கோடிக்கணக்கான காணிக்கைகள் என்று காட்சியளிக்கும் திருமலை ஒரு காலத்தில் வெறும் வனாந்திரம். காட்டு மிருகங்கள் சுற்றி திரிந்த அடர்ந்த பிரதேசம். இரண்டு நாழி அரிசியும், இரண்டு நந்தா விளக்குகளுடனும்,  தனியாக நின்று கொண்டிருந்திருக்கின்றார். 

இன்று திருப்பதி ஆந்திராவில் இருந்தாலும் அவர் முழுக்க முழுக்க தமிழ்நாட்டை சேர்ந்தவர். (நல்ல வேளை அங்கு போனார், இங்கிருந்தால் நமது கடவுள் நம்பிகையற்ற அறங்காவலர்கள் கையில் தந்து அவரை மொட்டையடித்திருப்பார்கள்). அங்கிருப்பது பெருமாளே அல்ல, முருகன்; சிவன்; இன்னும் பல கதைகளை கேட்டிருக்கின்றேன். இப்புத்தகமும் அதையே சொல்கின்றது. மூலத்திருமேனியில் சங்கு சக்கரம் கிடையாது. இடையில் வாளும் உள்ளது. அவருக்கு பெயரும் வேங்கடத்துறைவர். இன்று திருமலை அருகில் உள்ள பெரிய ஊர் திருப்பதி, அன்று சந்திரகிரி.

17 பிப்ரவரி 2013

ராமானுஜர் - இந்திரா பார்த்தசாரதி

தமிழகத்தை பொறுத்தவரை சீர்திருத்தவாதி என்றவுடன் அனைவரும் கூறுவது ஈ.வெ.ராவைத்தான். அதற்கு முன்னால் செயல்பட்ட அனைவரும் மிகச்சுலபமாக மறக்க (மறக்கடிக்கப்) பட்டுள்ளனர். ராமானுஜர் அப்படிப்பட்ட மறக்கடிக்கப்பட்ட சீர்திருத்தவாதி. ராமானுஜர் விசிஷ்டாத்தைவத்தை நிலைநிறுத்தியவர், வைஷ்ணவ சம்பிராதயத்தை வழிமுறைப் படுத்தியவர் என்ற அளவிலேயே நினைவில் நிறுத்தப்படுகின்றார். மறக்கப்பட்டது அவரின் சீர்திருத்தக் கருத்துக்கள். 


எனக்கும் சோவின் புத்தகத்தை படிக்கும்வரை ராமானுஜரைத் பற்றி அதிகம் தெரியாது. எங்கோ அவர் கோபுரத்தில் ஏறி கூறிய கதையை படித்த நினைவு. அவர் அவ்வாறு கூறியதின் பின்னால் உள்ள தைரியம், அதன் நோக்கம் எல்லாம் தெரியாது. அவர் செய்த சீர்திருத்தங்கள், அனைத்து மக்களையும் அரவணைத்த பண்பு, ஆழ்வார் பாசுரங்களை பரப்பியது எல்லாம் தெரிந்து கொண்டது வெகு பின்னால்.


ராமானுஜர் இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ள ஒரு நாடகம். ஆனால் இது நாடகமல்ல. ஒரு கதை வடிவில் ராமனுஜரைப் பற்றி எழுதியுள்ளார். கதையுமல்ல ஒரு வாழ்க்கை குறிப்பு. அவரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை கோர்த்து எழுதியுள்ளார்.

14 பிப்ரவரி 2013

சின்ன எச்சரிக்கை

ஏதோ ஆர்வத்தில் நானும் ஒரு பிளாக் ஆரம்பித்து எனது குப்பையை இங்கு கொட்டிக் கொண்டிருக்கின்றேன். இந்த பிளாக் என் பெண்ணை விட 13நாட்கள் வயதில் மூத்தது. பெண் வளரும் போது, ப்ளாக் மட்டும் அப்படியே இருக்கின்றதே என்று ஒரே வருத்தமாக இருக்கின்றது. அதனால் இப்போதுதான் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கின்றேன். சின்ன சின்ன மாற்றங்கள், விபரீத தோற்றம் எல்லாம் நேரிடலாம். வருகின்ற இரண்டு மூன்று பேரும் பயந்து ஓடி விட வேண்டாம் என்பதற்கு தான் இந்த எச்சரிக்கை.

சும்மா ஒரு டெஸ்டிங்காக லைவ் ட்ராபிக் ஃபீடரை இணைத்து பார்த்தேன். வேலை செய்கின்றது (அதில் நான் மட்டும் தனியாக உள்ளது கொஞ்சம் பயமாக உள்ளது)

அடுத்தடுத்து ஏதாவது வரும். நீரை விட்டு பாலை உண்ணும் அன்னம் போல, பயத்தை விடுத்து பதிவை படிக்க.

12 பிப்ரவரி 2013

நான்காவது கொலை - ஜெயமோகன்

சனி, ஞாயிறு வேலை வெட்டி ஏதுமில்லை. டீவியும் டமார். இன்டர்நெட்டே கதி. வகை தொகையில்லாமல் கண்டதையும் படித்து களைத்து, மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இருந்த நகைச்சுவை வகை கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். 

பெரும்பலானவை சிரிக்க வைத்தது. சில புன்னகைக்கவும், சில அழவும் வைத்தது.அய்யோ பாவம், இலக்கியம் எழுதி எழுதி நகைச்சுவை கட்டுரைகளில் கூட பெரிய பெரிய வரிகளாகவும், கடின வார்த்தைகளை போட்டும் எழுதுகின்றாரே என்று நினைத்துக் கொண்டேன். அப்போதுதான் இக்கதை நினைவில் வந்தது. திண்ணையில் எப்போதோ படித்தது. திண்ணை புது திண்ணையாகி பழைய திண்ணையில் தூங்கியவர்களை எங்கோ விரட்டி விட்டுவிட்டார்கள். இக்கதை பத்திரமாக சொந்தக்காரர் திண்ணையில் இருந்தது.

ஆரம்பித்ததில் இருந்து சிரித்துக் கொண்டே இருந்தேன். கிண்டல் கிண்டல் கதை முழுவதும் கிண்டல். திகம்பர சாமியாரில் ஆரம்பித்து, பரத் சுசீலா வரை. சூப்பர் மேனிலிருந்து ஜேம்ஸ்பாண்ட் வரை அனைவரையும் கிண்டலடித்துள்ளார். 

அனைத்து எழுத்தாளர்களின் நடையையும், கதாபாத்திரங்களையும் அவர் இஷ்டத்திற்கு உலாவ விட்டுள்ளார்.  கணேஷ் வசந்த், சங்கர் லால், ஆழ்வார்க்கடியான், இன்ஸ்பெக்டர் கோபாலன், துப்பறியும் சாம்பு, ஷெர்லக் ஹோம்ஸ் வாட்சன், சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன், இரும்புக்கை மாயாவி, திகம்பர சாமியார் பெயரில்லா பாலகுமாரன் கதாபாத்திரம். அனைத்து எழுத்தாளர்களின் நடையும் இவருக்கு சரளமாக வருகின்றது. சுஜாதாவின் நடை அச்சு அசலாக பொருந்தி போகின்றது. இவர் அதே நடையில் ஒரு கதை எழுதி சுஜாதா எழுதினார் என்றால் கண்டிப்பாக நம்பிவிடுவார்கள். விஷ்ணுபுரமும், உபபாண்டவ புரமும் துணைக்கு வருகின்றது.

பகுதி 1, 234, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1314 

மனசு ரிலாக்ஸாகும்.

11 பிப்ரவரி 2013

ஸ்ரீரங்கத்து கதைகள் - சுஜாதா

ஸ்ரீரங்கம் எனக்கு பிடித்த கோவில். காரணம் எங்கள் ஊர்க்காரர்தான் அங்கும் பள்ளி கொண்டுள்ளார். எப்போதும் எங்கும் தனியாக போகப் பிரியப்படாத நான், தனியாக போக வேண்டும் என்று நினைத்து, காலையில் மூன்று மணிக்கு எழுந்து (அது ஒரு அதிசய நிகழ்வு என்று பின்னால் அனைவராலும் வர்ணிக்கப்பட்டது) யாரின் தொந்தரவுமின்றி சுற்றிப் பார்த்தேன். ரங்கநாதரை கூட்டமில்லா நேரத்தில் நிம்மதியாக பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு ஒரு ஆர்வத்தை உண்டாக்கியதற்கு மற்றுமொரு காரணம் சுஜாதா.

விகடனில் வரிசையாக வந்த கதைகளைப் படித்து ஸ்ரீரங்கத்தையும் கோவிலையும் பார்க்க அவ்வளவு ஆர்வம் வந்துவிட்டது. சுஜாதாவைப் பற்றிய முழு அறிமுகமும் அதுதான். அதுவும் அவரது தூண்டில் கதைகள் ஸீரிஸும்.

நான் பார்த்த ஸ்ரீரங்கம் அவரின் வார்த்தைகளிலேயே " ஆறாம் நூற்றாண்டிலிருந்து தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட கோயில் தம்மிடையே துருத்திக் கொண்டிருப்பதைப் பற்றி கவலை இல்லாத இன்றைய நகரம், மன்மத ராசாவையும் மாத்தி யோசியையும் பாடிக்கொண்டிருக்கின்றது" கோவிலும் தடுப்பு கட்டைகள், சங்கிலிகள், அர்ச்சனை டிக்கெட் என்று வருமானத்தை பெருக்கும் வேலையில் உள்ளது.

கடவுள் பக்தி இல்லாதவர்களின் நிர்வாகத்தில் வேறு என்ன நடக்கும். தில்லை நடராஜனை, திருவரங்க ரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களா கோவிலை பாதுகாக்க போகின்றார்கள்.


முதல் செட் 1983ல் எழுதியுள்ளார். நான் ஒரு வயது குழந்தையாக இருந்த போது எழுதப்பட்ட கதைகள்.  அடுத்த செட், 2003ல். கல்லூரி படிக்கும் போது வரிசையாக படித்தது. நடுநடுவே வெவ்வேறு வருடங்களில் ஸ்ரீரங்கத்தை மையமாக வைத்து நிறைய எழுதியுள்ளார். இது ஸ்ரீரங்கத்தை மையமாக கொண்டதால், இது அந்த ஊரின் கதையல்ல. அம்மனிதர்கள் எந்த ஊரிலும் இருக்கலாம். அவரே சொல்வது போல "ஸ்ரீரங்கம் என்பது ஒரு மெட்ஃபோர், ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென்று ஒரு ஸ்ரீரங்கம் இருக்கும், அதை நினைவுபடுத்தவே இக்கதைகள்". 

சுஜாதா ரங்கராஜனாக ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது கிடைத்த அனுபவங்கள் கதையாகியுள்ளன. சில கற்பனை கதைகளையும் ஸ்ரீரங்கத்திற்கு ஏற்றி அனுப்பியிருக்கலாம்.

04 பிப்ரவரி 2013

பனிமனிதன் - ஜெயமோகன்


புத்தகம் படிக்கும் வழக்கம் எப்படி ஆரம்பித்தது என்று யோசித்து பார்த்தால், தினமலர் சிறுவர்மலல் ஆரம்பித்தது. பலமுக மன்னன் ஜோ, சோனி பையன், லக்கி (மறந்துவிட்டது, படம் வரைந்தால் அது நிஜமாக மாறும்), ஜாக்பாட் ஜாக்கி, இன்னும் பல கேரக்டர்கள். பின்னால் காமிக்ஸ், கோகுலம், அம்புலிமாமா, பூந்தளிர் என்று முன்னேற்றம்.

இருபது வருடங்களுக்கு முன்பு காணப்பட்ட அப்புத்தகங்கள், கேரெக்டர்கள் எல்லாம் இப்போது மறைந்து வருவதைக் கண்டு வருத்தமாக உள்ளது. என் குழந்தைகள் எதைப் படிக்கும் என்று வருத்தம் ஏற்படுகின்றது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் இன்னும் வருகின்றனவா என்று தெரியவில்லை.

நன்றாக மீண்டும் யோசித்துப் பார்த்தால் புத்தகங்கள் மேல் ஒரு ஆர்வம வர மற்றும் ஒரு முக்கிய காரணம், சிறு வயது முதல் கேட்ட கதைகள். பக்கத்து வீட்டு பாட்டி சொன்ன கதைகள், துருவன் கதை, குசேலன் கதை, தியாகராஜர் கதை, ராமதாசர் கதை, பாரதக் கதைகள். சிறுவயதில் கேட்ட அக்கதைகள் தான் பின்னால் புத்தகங்கள் படிக்க காரணம். கதைகள் கேட்க கேட்க கற்பனை உலகம் திறக்கின்றது.

பெரும்பாலான குழந்தைகள் கதைகள் முழுவது சாகசக் கதைகளாகத்தான் இருக்கின்றன. குழந்தைகளின் கற்பனைத்திறன் என்பது பெரியவர்களை விட கண்டிப்பாக அதிகம். அவர்களின் கற்பனை உலகில் எவ்வித தடைகளும் இல்லை, தர்க்க நியாயங்களும் இல்லை. எல்லையில்லாதது. பெரியவர்களின் கற்பனை அவர்களின் படிப்பு, அனுபவத்தால் குறைப்பட்டது. பஞ்சதந்திரக் கதைகள் போன்றவை சாகசத்துடன் ஒரு நீதியையும் குழந்தைகளுக்கு கற்பிக்கின்றது. தத்துவங்களை குழந்தைகள் மேல் திணிக்க முடியாது, அறிமுகப்படுத்தலாம்.

01 பிப்ரவரி 2013

அடடே...

மதியின் கார்டூன்களின் ரசிகன். வழக்கமாக கலைஞர் விவ்காரம் என்றால் அவருக்கு ஏக குஷி. இன்று வந்துள்ள அவர் கார்டூன் பிரமாதம். உண்மையில் அது போல வந்திருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

நன்றி தினமணி & மதி