01 நவம்பர் 2013

ஒரு பார்வையில் சென்னை நகரம் - அசோகமித்திரன்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

சென்னை எனக்கு பிடிக்காத நகரம். படிப்பிற்காகவும், வேலைக்காகவும் அங்கு சுமார் 2.5 ஆண்டுகள் இருந்தேன். இப்போது மாமனார் ஊர் வேறு ஆகிவிட்டது. முழுமுதல் காரணம் சென்னையின் வெப்பம் (இரண்டு வரிகளுக்கு நடுவில் ஒரு முற்றுப்புள்ளி உள்ளது, சேர்த்து படித்துவிட வேண்டாம்) . என்னுடைய ஊர் மலையடிவாரம். வருடத்தில் மூன்று மாதங்கள் கடும் வெயில் இருந்தாலும், வெக்கை தெரியாது. மற்ற மாதங்களில் சாரல் அல்லது குறைவான வெயில். அதை விட்டு சென்னையில் ஒரு அடுக்குமாடியில் ஒரு வீட்டில், புழுக்கத்தில் தங்குவது ஒரு தண்டனைதான். அடுத்தது அந்த நெரிசல், அவசரம். மரங்களை பார்ப்பது என்பதே அரிதான ஒரு விஷயமாகிப் போன அவலம். 

சிலருக்கு சென்னை சொர்க்கலோகம். பா.ராவிற்கு சென்னை சத்தம் ஒரு பாதுகாப்பை தருகின்றது. என் பாதுகாப்பிற்கு இப்பொதைக்கு பெங்களூரு சத்தமும், எங்களூரின் அமைதியான சத்தமுமே போதுமானதாக இருக்கின்றது. இனி தலைப்பிற்கு சம்பந்தமாக :

அசோகமித்திரன் ஒரு சென்னைவாசி. ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்து, பல ஆண்டுகளாக சென்னையில் வாழ்ந்துவருபவர். ஒரு காலத்திய சென்னையை பற்றிய ஒரு சித்திரம் இப்புத்தகம். சென்னையின் பல பகுதிகளை பற்றிய சின்ன சின்ன குறிப்புகள். அக்காலத்தில் எப்படி இருந்தது,எப்படி மாறியுள்ளது என்பதை அவருக்கே உரிய நடையில் எழுதியுள்ளார்.

தகவல்களை திரட்டுவது எளிது, அதை எழுதிவைப்பதும் எளிது. வெறும் தகவல்கள் என்பது வாய்ப்பாடு மாதிரி. அதை சுவாரஸ்யமாக்குவதுதான் திறமை. பாடபுத்தகத்தில் இருக்க கூடிய தகவல்களை, சுவாரஸ்யமான கட்டுரையாக்குவது எப்படி என்பதை இப்புத்தகத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். "எப்படி" என்பதை விட, அது சாத்தியம் என்பதுதான் அறிந்து கொள்ள முடிவது. எப்படி என்று தெரிந்தால், அசோகமித்திரனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

பண்டைய சென்னையை பற்றி நான் என் மாமாவிடமிருந்து கேள்விப்பட்டுள்ளேன். அக்காலத்து மவுண்ட் ரோட், திருவல்லிக்கேணி எப்படி இருக்கும் என்று ஒரு சித்திரம் இருந்தது. இப்புத்தகம் அதை இன்னும் தெளிவாக்குகின்றது. அவர் கூறிய ஒரு நிகழ்ச்சி இன்னும் நினைவில் உள்ளது. திருவல்லிக்கேணியில் அவர் ஒரு மெஸ்ஸில் சாப்பிட முப்பது நாளுக்கான டொக்கனை வாங்கி வைத்திருந்திருக்கின்றார். இரண்டு நாள் கழித்து போன போது அங்கு பரிமாறப்பட்டது பாகற்காய். இவர் அது பிடிக்காது என்று சாப்பிடவில்லை. மெஸ் ஓனர் பார்த்துவிட்டு கேட்டதற்கு, பிடிக்காது என்று கூற, அடுத்து வந்த அனைத்து நாளும் பாகற்காய், விதவிதமாக. கடைசியில் வேறு வழியின்றி சாப்பிட ஆரம்பித்தாரம். அசோகமித்திரன் காட்டும் மெஸ்க்காரர்களை படித்ததும் இதுதான் நினைவில் வந்தது.

மாம்பலம், வேளச்சேரி, குரோம்பேட்டை, அடையாறு, சைதாப்பேட்டை என்று பல பேட்டையை பற்றி பல தகவல்கள். இப்புத்தகத்தை படித்தால் தெரிவது, ஒரு காலத்தில் சென்னையை சுற்றியும், சென்னைக்குள்ளூம் ஏகப்பட்ட குளங்களும், ஏரிகளும் இருந்திருக்கின்றன. அனைத்தும் மெதுவாக மறைந்த கட்டிடங்களாக நிற்கின்றது. இன்றைய தி. நகர் பஸ் நிலையம் இருந்த இடத்தில் எருமைகளும், ஆமைகளும் இருந்த குளத்தை கற்பனை செய்யக் கூட என்னால் முடியவில்லை. சென்னையில் பிரசித்தி பெற்ற பல வெள்ளங்கள், மவுண்ட் ரோடில் மூன்றடிக்கு ஓடிய தண்ணீர் எல்லாம். இன்றும் தண்ணீர் தேங்குகின்றது. ஆனால் வெள்ளத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.

புத்தகம் முழுக்க அவரது நகைச்சுவை உணர்வும், எளிய சொற்களும் படிக்க இழுக்கின்றன. குரோம்பேட்டை (ரயில் நிலைத்தில் பட்டும் இது கிரோம்பேட்டை, ஏனோ?) பெயர் காரணம், அங்கு வசிப்பவர்களின் நிலை. இன்றும் பஸ் வசதி கிடையாது என்றுதான் நினைக்கின்றேன். "ரயில் நிலையத்திற்கு நடந்து நடந்து, அவர்களின் வியாதிகள் மறைந்தன" என்று கிண்டலடிக்கின்றார்."அந்த தியேட்டரை தாண்டும் போது மாடுகள் வாலை தூக்கிக் கொள்ளும், சென்னையில் அதிக உரச்சத்துமிக்க இடம் என்றால் அது இதுதான்".

சில முக்கிய இடங்களில் வாழ்ந்த மனிதர்கள், முக்கிய நிகழ்வுகள், நமக்கு தெரியாத பல புதிய தகவல்கள் என்று சென்னையை பற்றி ஏராளமான தகவல்கள். மாம்பலத்தின் யானைக்கால் வியாதி, சைதாப்பேட்டை பாலம் (200 வருட பழைய பாலம்), வேளச்சேரியின் தெருப்பெயர்கள். ஒரு காலத்தில் பாழடைந்த மாளிகை இருந்த குமரன் குன்றம், வயல்வெளிகளுக்கு நடுவில் இருந்த சூளைமேடு.

வெறும் தகவல் சரமாக இல்லாமல், சாதரண மனிதர்களின் வாழ்க்கையையும் தொட்டு செல்கின்றார்.

எட்டு வருடங்களுக்கு முந்தைய சென்னையை இன்றுள்ள சென்னையுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு வியப்புடன் இருக்கும் எனக்கு, அசோகமித்திரனை போன்று அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் அடையும் உணர்வுகள் எப்படி இருக்கும் என்று யோசிக்க முடியவில்லை. இப்போதுள்ள சென்னையை பற்றி கூட அவர் எழுதி வைக்கலாம். ஒரு ஐந்து வருடம் கழித்து சென்னைக்கு புதிதாக வருபவர்களுக்கு அது பெரிய ஆச்சர்யமூட்டும் புத்தகமாக இருக்க கூடும்.

சென்னை என்னும் அழகான நகரம் மக்களின் படையெடுப்பால் எப்படி நாசமாகியுள்ளது என்பதை காட்டும் புத்தகம். நீர்நிலைகளை அழித்து கட்டப்பட்ட நகரம், இன்று நீருக்கும், மழைக்கும் தவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக