24 டிசம்பர் 2013

வெள்ளையானை - ஜெயமோகன்

யானை ஒரு வலிமையான மிருகம். அதைவிட வலிமையானது அதன் மனம். யானை எதையும் மறப்பதில்லை அதன் வலிமையை கூட, அதை தேவையில்லாமல் பயன்படுத்துவதில்லை. அது தன்னை அடக்கியாள்வதை அனுமதிக்கின்றது. ஒரு சிறிய தளைக்கு கட்டுபட்டு நிற்கின்றது. ஒரு எல்லை வரை. அதை தாண்டினால் எல்லாம் தூசு. நமது இந்தியாவையும் அப்படி ஒரு யானையுடன் ஒப்பிடலாம். நமது நாட்டின் வலிமை அளப்பறியது. அந்த வலிமையை பலர் அடக்கியாண்டார்கள். இன்று வரை வேறு வேறு வடிவங்களில் அது அடக்கி ஆளப்பட்டு வருகின்றது. கடைசியில் காந்திவழியே தன் வலிமையை அறிந்து திருப்பி அடித்தது. ஆனால் இன்று மீண்டும் அடங்கியுள்ளது. எப்போது மறுபடியும் தன் வலிமையறியுமோ? அந்த யானையை கட்டியிருந்தது வெள்ளையர்களின் தளை. பயம் என்னும் இழையாலும், அதிகாரம் என்னும் இழையாலும் செய்யப்பட்ட தளை. அதன் ஊடே அதை உறுதியாக்க உதவியது நமது ஜாதியடுக்கு என்னும் மற்றொரு இழை.
வெள்ளையானை - கதையின் ஆரம்பத்தில் வரும் ஐஸ் ஹவுஸின் பெரிய பனிப்பாளத்திற்கு உவமையாக வருகின்றது. இறுதியில் கூறப்படுவது போல வெள்ளையானை என்பது ஒரு நோயுற்ற யானை. நம் நாட்டிற்கும் உவமையாகலாம்.

நம்மை முழுவதும் சுரண்டியவர்கள் ஆங்கிலேயர்கள். அந்த சுரண்டலின் விளைவு கொடிய பஞ்சங்கள். அத்தகைய கொடிய பஞ்சம், தாது வருட பஞ்சம் என்றழைக்கப்பட்ட பஞ்சம். 1876 - 78ல் கொடிய பஞ்சம் தாக்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் ஒரு கோடிக்கு மேல் எனப்படுகின்றது. கணக்கில் வந்ததே ஒரு கோடி என்றால் கண்டிப்பாக அதற்கு மேலாகவே இருக்கும். 

19 டிசம்பர் 2013

தீராக்காதலி - சாருநிவேதிதா

தமிழகத்தின் முக்கிய உணவு சினிமா. அது இல்லாமல் பலர் வாழ்வது கடினம். பலருக்கு சினிமா மீதான காதல் அபரிமிதமானது. ஆட்சியையே தூக்கி கொடுக்கும் மனதுடையவர்கள் நாம். அத்தகைய சினிமா நாயகர்களில் சிலரை பற்றிய குறிப்புகள்தான் இப்புத்தகம். உயிர்மையில் வெளிவந்து புத்தகமாகவும் வந்துள்ளது.

ரஜினி - கமல் என்றுதான் என் சிறுவயது சண்டைகள், இன்று விஜய் - சூர்யா என்று நடந்து கொண்டிருக்கின்றது. ஏனோ அஜித் சிறுவர்கள் மனம் கவரவில்லை. அவர் அடுத்த படிக்கு போய்விட்டாரோ என்றுதான் எண்ண தோன்றுகின்றது, அது வேறு கவலை. இதற்கு எல்லாம் முன்னோடி, எம்.ஜி.ஆர் - சிவாஜி? இல்லை. அதற்கும் முன்னும் தமிழ்சினிமா இருந்திருக்கின்றதல்லவா? எம்.கே.டி - பி.யூ. சின்னப்பா. இப்புத்தகம் அவர்களில் ஆரம்பித்து பல முன்னோடிகளை பேச விருப்பப்பட்டு, விரைவில் முடிந்து விட்டது.

இதில் வரும் சினிமா பிரபலங்கள்

எம்.கே.டி
பி.யூ.சின்னப்பா
எஸ்.ஜி.கிட்டப்பா
கே.பி.சுந்தராம்பாள்
எம்.ஆர்.ராதா
எம்.ஜி.ராமசந்திரன்

11 டிசம்பர் 2013

கடலுக்கு அப்பால் - ப. சிங்காரம்

கடலுக்கு அப்பால். ஒரு வகையில் புயலிலே ஒரு தோணியின் தொடர்ச்சி எனலாம், அதே சமயம் இரண்டும் வேறு வேறு கதைகள். ஒன்றை விட்டு இன்னொன்றை படிக்கலாம். கதையின் கால வரிசைப்படி புயலிலே ஒரு தோணி முதலில், எழுதப்பட்ட கால வரிசைப்படி முதலில் எழுதப்பட்டது கடலுக்கு அப்பால்,சில கதாபாத்திரங்கள் இரண்டிலும் வருகின்றன. அவ்வளவுதான். இரண்டு கதைகளையும் அவர் யோசித்து வைத்திருக்கலாம். புயலிலே ஒரு தோணியின் ஒரு லீட், கடலுக்கு அப்பாலில் இருக்கின்றது. இதில் வரும் செல்லையா, அதில் ஒரு காட்சியில் தோன்றி மறைகின்றான். 

கடலுக்கு அப்பால் வாழும் தமிழர்களின் கதை. செல்லையா வானா யீனால் மார்க்காவின் அடுத்தாள். ஐ.என்.ஏவில் லெப்டினெட்டாக இருக்கும் செல்லையாவிற்கு, வயிரமுத்துப் பிள்ளையின் மகள் மீது காதல். வான யீனா, சண்டைக்கு போய்ட்டு வந்த பயலால், வட்டித் தொழில் செய்ய முடியாது என்று மகளை வட்டி தொழிலுக்கென்று பிறந்த ஒருவனுக்கு கட்டி தருகின்றார். செல்லையா தன் வழியில் போகின்றான்.

செல்லையா ஒரு சாதரண அடுத்தாள், ஐ.என்.ஏவில் சேர்ந்ததும் அவன் ஒரு போர் வீரனாக மாறுகின்றான். நேதாஜி இறந்ததும், வேறு வழியின்றி முகாமில் இருந்து வெளியேறி வீரர்களை சட்டை மாற்றி விடுகின்றனர். பின் மீண்டும் நெற்றியில் பட்டையுடன் பழைய செல்லையாவாக மாறுகின்றான். பாண்டியனின் ஒரு எதிர் துருவம் செல்லையா எனலாம். பாண்டியன் தேடிக் கொண்டே இருக்கின்றான், எதிலும் அவன் தன்னை முழுக்க ஈடுபடுத்திக் கொள்வதில்லை. செல்லையா அனைத்தாலும் பாதிக்கப்படுவன், உணர்ச்சிகளால் தூண்டப்படுவன். பாண்டியன் தேடி தேடி அடுத்தடுத்து போகின்றான், செல்லையா வாழ்வின் யதார்த்தை எதிர்கொண்டு அமைதியாகின்றான். ஐ. என். ஏவில் இருந்தவரைதான் போர் வீரன், அதற்கு பின் அவன் ஒரு சாதரணன் என்பதை உணர்ந்து கொள்கின்றான். மரகதத்தின் மீதான காதல் தோற்றபின் செல்லையா உணர்வது அவனை, அவனின் காதல் தோல்வியல்ல அவனது ஆணவத்தின், அகங்காரத்தின் தோல்வி. அதை அறிவதுடன் கதை முடிகின்றது.

08 டிசம்பர் 2013

புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று எழுதிவைத்ததால் தேடினார்களோ இல்லை அப்படி தேடியதால் எழுதி வைத்தார்களோ தெரியவில்லை. பல நூறு ஆண்டுகளாக நமது மக்கள், பல நாடுகளுக்கு சென்று திரவியம் தேடி வந்துள்ளனர். அதில் முக்கிய இடங்கள் மலேசியா,பர்மா, சிங்கப்பூர், இந்தோனேஷியா. இரண்டாம் உலகப் போரில் அதிக பாதிப்பு அடைந்தவர்களும் இங்கிருந்தவர்கள். அப்படி இரண்டாம் உலகப்போர் காலத்து தமிழர்களின் வாழ்வினை காட்டுகின்ற ஒரு நாவல் புயலிலே ஒரு தோணி. ஒரு சாகசக் கதை என்று பலர் குறிப்பிடுகின்றார்கள். எனக்கு இதில் வரும் சாகசம் எல்லாம் போதாது. கொஞ்சம் சாகசம் உள்ள கதை என்று வைத்துக் கொள்ளலாம்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில்தான் நேதாஜி இந்திய தேசியப் படையை அமைத்தார். ஐ.என்.ஏ ஜப்பானியர்களுடன் சேர்ந்து கொண்டு பிரிட்டாஷாரை எதிர்த்து போரிட்டது. நேதாஜியுடன் சேர்ந்தவர்களில் தமிழர்கள் அதிகம். வெளிநாட்டில் பிழைக்க சென்ற ஏராளமான தமிழர்கள், நேதாஜியுடன் சேர்ந்து கொண்டனர். அப்படி சேர்ந்த ஒரு தமிழனின் கதை.


பாண்டியன் தென்பாண்டி நாட்டை சேர்ந்தவன்.  அன்னெமெர் பாண்டியன் இந்தோனேஷியாவில் கெர்க் ஸ்ட்ரீட்டில் அறிமுகமாகி, அங்கிருந்து பினாங் சென்று வியாபாரம் செய்கின்றான். நேதாஜியின் ஐ.என்.ஏவில் சேரும் அவன், அங்கு ஒரு முகாமில் நடந்த சண்டையின் காரணமாக தண்டனை அடைந்து வெளியேற்றப்படுகின்றான். பின்னர் ஒரு முக்கிய பணியில் அமர்த்தப்பட்டு அதில் வெற்றி பெறுகின்றான். நேதாஜியின் திடீர் மரணம், ஐ.என்.ஏவில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. பெரும்பாலனவர்கள் பிரிந்து அவரவர் பழைய தொழிலை பார்க்க திரும்புகின்றனர். பாண்டியனால் அது முடியவில்லை. இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் சுதந்திர போரில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றான். 

27 நவம்பர் 2013

புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்

ஓரு குடும்பத்தின் ஐந்து தலைமுறையை சேர்ந்தவர்களை பற்றிய கதை. படிக்கும் போது முதலில் நினைவில் வந்தது அசோகமித்திரனின் யுந்தங்களுக்கிடையில் நாவலும், பாலகுமாரனின் அப்பம் வடை தயிர்சாதமும். பாலகுமாரனின் நாவல் ஒரு குடும்பத்தின் / சமூகத்தின் வெற்றியை பற்றியது, அசோகமித்திரனின் நாவல் முழுக்க முழுக்க குடும்பத்தின் மாறுதல்கள், அதன் விளைவுகள். இக்கதை குடும்பத்தில் அரசியல், சமூகத்தின் தாக்கத்தை பற்றி பேசும் நாவல். ஒரு குடும்பக்கதையாக ஆரம்பித்து ஒரு அரசியல் கதையாக முடிகின்றது. 

பொன்னா என்னும் ஒரு பாட்டியின் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் கதை, முன்னும் பின்னும் போகின்றது. பொன்னாதான் மையம். பொன்னாவின் தாத்தாவின் கதையில் ஆரம்பித்து, பொன்னாவின் எள்ளு பேத்தி பிறக்கும் வரை போகின்றது. மிகப்பெரிய நாவலாக போயிருக்க கூடிய அபாயம் இருந்தும், சுருக்கமாக தாவி தாவி செல்கின்றது.

கதை நேர்கோடாக செல்வதில்லை. முன்னும் பின்னும் நடக்கின்றது. பொன்னாவின் தாத்தா ஒரு ஜோசியர், அப்பா ஒரு சமையல்க்காரர், கணவன் ஒரு சாப்பாட்டு ராமன். குடும்பத்தின் ஒரு சாபக்கேடு, அகால, துரித மரணம். பொன்னாவின் பிள்ளைகள் நம்மாழ்வார், பட்சிராஜன், ஆண்டாள். நம்மாழ்வாரின் மனைவி ஒரு குழந்தையை பெற்று இறக்க, ஆழ்வார் எங்கோ போகின்றார். ஆண்டாளின் கணவன் கலியாணம் ஆன வேகத்தில் இறக்கின்றான். ஆண்டாளுக்கு துணை மதுரகவி; நம்மாழ்வாரின் மகன். அவனும் அகாலத்தில் இறக்க, அவனின் மகன் நம்பி, பட்சியின் மகன் திருமலையால் வளர்க்கப்படுகின்றான். நம்பி, திருமலையின் பிள்ளைகள் கண்ணன், ராதா, நம்பியின் மனைவி ரோசா, மகள் இந்து, கண்ணனின் காதலி உமா இவர்கள் கதையில் வரும் இறுதி தலைமுறையினர். நம்பி இறப்பதுடன் கதை முடிகின்றது.

17 நவம்பர் 2013

ஒரு நதியின் மரணம் - மிஷல் தனினோ

முகம்மது பின் துக்ளக்கில் வரும் ஒரு காட்சி
"உங்களுக்கு தமிழ் தெரியும்ன்னு சரித்திரத்துல இல்லையே"
"உங்கள் சரித்திரம் எல்லாம் பேத்தல்"
"எங்க பசங்க படிக்கின்றதெல்லாம் பேத்தலா"
"அது உங்கள் பிள்ளைகளை பார்த்தாலே தெரியுமே"

சரித்திரம் என்பது அன்றைய தேதிக்கு கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு புனையப்படுவது. ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள பல வழிமுறைகள் உண்டு என்பார்கள். நேரில் பார்ப்பது, அனுமானிப்பது என்று பல வழிகள். சரித்திரத்தில் பாதி அனுமானம்தான். கல்வெட்டுகள் மட்டுமே ஒரளவு நம்பகமானது என எண்ணலாம், ஆனால் அக்கல்வெட்டுகள் இன்றைய ஆட்சியாளர்கள் தம் சாதனைகளை அடித்து விடுவது போல இருந்திருந்தால்? புலவர்களின் பாடல்கள் என்பது, இன்றைய சினிமாக்காரர்கள் முதல்வர்களை பற்றி பேசுவதை போல இருந்திருந்தால்? சரித்திரம் என்பது இது போன்று ஒன்றிரண்டு விஷயங்களை கொண்டு அறியப்படுவதில்லையே? அதே போல் முழுமையான ஆதாரங்கள் இல்லை என்பதால் மட்டும் ஒரு விஷயம் நடக்கவில்லை என்றும் கூறமுடியாது.

நமது சரித்திரம் என்பது முழுக்க முழுக்க ஆங்கிலேயர்களால் பல உள் நோக்கங்களை கொண்டு எழுதப்பட்டது. அது இங்குள்ள பலரின் பிழைப்புக்கு வசதியாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

அன்றைய தேதிக்கு சரித்திரம் உண்மை, நாளை அது மாறலாம். பள்ளியில் அனைவரும் படித்த ஒரு விஷயம் ஆரிய படையெடுப்பு. ஆரியர்கள் கைபர் போல கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்பது. பின்னர் படையெடுப்பு ஆரியர் இடப்பெயர்வாகியது. நாளை என்னவாகும் யாருக்கு தெரியும்.

சரஸ்வதி நமது புராணங்களிலும், வேதங்களிலும், இதிகாசங்களிலும் போற்றப்படும் நதி. திரிவேணி சங்கமத்தில் கங்கையுடனும் யமுனையுடனும் கண்ணிற்கு தெரியாமல் கலக்கும் நதி என்று நம்பப்படும் சரஸ்வதியின் சரித்திரத்தை பற்றிய புத்தகம்.

09 நவம்பர் 2013

கலங்கிய நதி - பி. ஏ. கிருஷ்ணன்

கலங்கிய நதி. பி. ஏ கிருஷ்ணனின் இரண்டாவது 'தமிழ்' நாவல். ஆங்கிலத்தில் மட்டி ரிவர் என்ற பெயரில் எழுதப்பட்டு, அவரே மீண்டும் தமிழில் எழுதிய கதை. அஸ்ஸாம் மாநிலத்தில் கடத்தப்பட்ட ஒருவனை மீட்க செல்லும் ஒருவனின் கதை . சினிமா மாதிரி காட்டிற்குள் தலையில் டார்ச் லைட் அடித்துக் கொண்டு சென்று அல்ல. இங்கு கடத்தல் என்பது ஒரு சின்ன முடிச்சு. அதை சுற்றி ஏகப்பட்ட முடிச்சுகள். அனைத்திற்கும் மேலே இப்புத்தகம் பேசுவது அதிகாரத்தை பற்றி, நமது அரசியலை பற்றி, அரசாங்கத்தை பற்றி, அதிகாரிகளை பற்றி.

முதலில் கவர்ந்தது கதை சொல்லும் முறை. கதையின் நாயகனான ரமேஷ் சந்திரன் ஒரு நாவல் எழுதுகின்றான், அதை அவன் நண்பர்களுக்கு படிக்க அனுப்புகின்றான். அவர்களின் பதில், அவன் மனைவியின் பதில். இப்புத்தகமே ஏதோ ஒரு உண்மை சம்பவத்தி அடிப்படையில் எழுதப்பட்டதோ என்னவோ? ரமேஷ் சந்திரன் கடத்தலை பற்றி எழுதுகின்றான். உண்மை சம்வத்தை கொஞ்சம் மாற்றி அவன் எழுதுகின்றான். உண்மையில் நடந்தது என்ன என்பதை அவன் மனைவி, நாவலை பற்றி பேசும் போது கூறுகின்றாள். சந்திரன் உண்மை என்று நம்பியதை அப்படியே எழுத, அதன் பின்னால் இருந்த உண்மையான உண்மையை மனைவி கூறுகின்றாள். குழப்பமாக இருப்பது போல தோன்றினாலும், படிக்கும் போது ஒன்றும் தோன்றவில்லை.

கடத்தல்தான் மைய இழை போல தோன்றினாலும், அதைச் சுற்றி பல கதைகள். அஸ்ஸாமில் நடக்கும் தீவிரவாதம், கம்யூனிசம், அஸ்ஸாம் பூர்வீக குடிகளுக்கும் பங்களாதேஷ் முஸ்லீம்களுக்குமான பிரச்சினை, காந்தி, சந்திரனின் சொந்த வாழ்க்கை, அரசாங்க திட்டங்களில் நடக்கும் முறைகேடுகள் என பல விஷயங்களை தொட்டு செல்கின்றது. சந்திரன் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டு மெதுவாக காந்தியை வந்தடைகின்றான். அதுதான் கதையின் உச்சம்.

01 நவம்பர் 2013

ஒரு பார்வையில் சென்னை நகரம் - அசோகமித்திரன்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

சென்னை எனக்கு பிடிக்காத நகரம். படிப்பிற்காகவும், வேலைக்காகவும் அங்கு சுமார் 2.5 ஆண்டுகள் இருந்தேன். இப்போது மாமனார் ஊர் வேறு ஆகிவிட்டது. முழுமுதல் காரணம் சென்னையின் வெப்பம் (இரண்டு வரிகளுக்கு நடுவில் ஒரு முற்றுப்புள்ளி உள்ளது, சேர்த்து படித்துவிட வேண்டாம்) . என்னுடைய ஊர் மலையடிவாரம். வருடத்தில் மூன்று மாதங்கள் கடும் வெயில் இருந்தாலும், வெக்கை தெரியாது. மற்ற மாதங்களில் சாரல் அல்லது குறைவான வெயில். அதை விட்டு சென்னையில் ஒரு அடுக்குமாடியில் ஒரு வீட்டில், புழுக்கத்தில் தங்குவது ஒரு தண்டனைதான். அடுத்தது அந்த நெரிசல், அவசரம். மரங்களை பார்ப்பது என்பதே அரிதான ஒரு விஷயமாகிப் போன அவலம். 

சிலருக்கு சென்னை சொர்க்கலோகம். பா.ராவிற்கு சென்னை சத்தம் ஒரு பாதுகாப்பை தருகின்றது. என் பாதுகாப்பிற்கு இப்பொதைக்கு பெங்களூரு சத்தமும், எங்களூரின் அமைதியான சத்தமுமே போதுமானதாக இருக்கின்றது. இனி தலைப்பிற்கு சம்பந்தமாக :

அசோகமித்திரன் ஒரு சென்னைவாசி. ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்து, பல ஆண்டுகளாக சென்னையில் வாழ்ந்துவருபவர். ஒரு காலத்திய சென்னையை பற்றிய ஒரு சித்திரம் இப்புத்தகம். சென்னையின் பல பகுதிகளை பற்றிய சின்ன சின்ன குறிப்புகள். அக்காலத்தில் எப்படி இருந்தது,எப்படி மாறியுள்ளது என்பதை அவருக்கே உரிய நடையில் எழுதியுள்ளார்.

தகவல்களை திரட்டுவது எளிது, அதை எழுதிவைப்பதும் எளிது. வெறும் தகவல்கள் என்பது வாய்ப்பாடு மாதிரி. அதை சுவாரஸ்யமாக்குவதுதான் திறமை. பாடபுத்தகத்தில் இருக்க கூடிய தகவல்களை, சுவாரஸ்யமான கட்டுரையாக்குவது எப்படி என்பதை இப்புத்தகத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். "எப்படி" என்பதை விட, அது சாத்தியம் என்பதுதான் அறிந்து கொள்ள முடிவது. எப்படி என்று தெரிந்தால், அசோகமித்திரனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

28 அக்டோபர் 2013

செம்பருத்தி - தி. ஜானகிராமன்

செம்பருத்தி மோகமுள்ளிற்கு கீழே அன்பே ஆரமுதா வகையறாவிற்கு மேலே.சட்டநாதன் குடும்பத்தின் மூன்றாவது பிள்ளை. அவனது ஆசிரியர் மகளான குஞ்சம்மாளை காதலிக்கின்றான். பழைய சினிமா பாணியில் அவள் அவனது இரண்டாவது அண்ணனுக்கு மணமுடிக்கப் படுகின்றாள். சட்டநாதன் சின்ன அண்ணனுடன் கடையில் இருக்கின்றான். பெரிய அண்ணன் வெளியூரில் வசதியாக இருக்க, சின்ன அண்ணன் இறந்து போகின்றான். சட்டநாதனுக்கு சின்ன அண்ணன் பார்த்து வைத்திருந்த பெண் புவனாவுடன் திருமணம் நடக்கின்றது. கடையையும் நடத்த ஆரம்பிக்கின்றான். தன் குடும்பம், சின்ன அண்ணன் குடும்பம் என இரண்டு குடும்பங்களையும், பின்னர் பெரிய அண்ணன் குடும்பம் என மூன்று குடும்பங்களையும் சட்ட நாதன் பல பக்கங்களுக்கு காப்பாற்றுகின்றான். ஹாவ்வ்வ்

வழக்கமான தி. ஜா ப்ராண்ட் பெண்கள். காதலும் காமமும் கலந்த பெண்கள். ஜெயமோகன் எழுதியிருந்தது, "அம்மா வந்தாளின் இந்து தான் குஞ்சம்மாள், அலங்காரத்தம்மாள்தான் பெரிய அண்ணி, ஒரு சிறிய காட்சியில் தோன்றி மறையும் பெண் (அப்புவிற்கு அவனது அப்பா பார்த்து வைத்திருக்கும் பெண்) புவனா". சரிதான். குஞ்சம்மாள் கணவனை இழந்த பின்னும், சட்டநாதனின் காதலை மறவாமல் அவனை பார்த்துக் கொண்டிருப்பது மட்டும் போதும் என்று அங்கேயே இருக்கின்றாள். புவனாதான் செம்பருத்தி, தலைப்பின் நாயகி.

23 அக்டோபர் 2013

மரப்பசு - தி. ஜானகிராமன்

மரப்பசு. தலைப்பை பார்த்தவுடன் என்ன மாதிரியான கதை என்று யூகிக்க முடியாமல் தி. ஜானகிராமன் என்ற பெயரை பார்த்து வாங்கியது. மோகமுள்ளை பற்றி கேள்விபட்டு அதை தேடி அது இல்லாததால் இதை வாங்க நேர்ந்தது. அதோடு சற்று விலை குறைவாகவும் இருந்தது. இது நான் படித்த தி.ஜாவின் முதல் புத்தகம். வழக்கமான தி. ஜாவின் தஞ்சாவூர் பிண்ணணியில் ஆரம்பிக்கும் கதை எங்கெங்கோ போகின்றது.

அம்மிணி - கோபாலி. அம்மிணி ஒரு கல்லூரியில் படிக்கும் பெண், கோபாலி ஒரு பெரிய பாடகர். கோபாலியிடம் ஒரு தேங்காய் மூடி கச்சேரிக்காக வரும் அம்மிணியை கோபாலி மடக்கி போடுகின்றார். இது வரை ஏதோ ஒரு வகையில் கோப்பாக சென்ற கதை பின் தறிகெட்டு பாய்கின்றது. பார்ப்பவர்களை எல்லாம் தொட்டு பேச விரும்பும் அம்மிணி, அவளின் வெளிநாட்டு பயணம், அங்கு விளையாடும் விபச்சார விளையாட்டு, சந்திக்கும் ஒரு போர்வீரன், கோபாலியின் உறவினன், வேலைக்காரி. என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதே குழப்பம்தான். கடைசியில் தலை வெள்ளையாய் போய் அமர்கின்றாள். 

17 அக்டோபர் 2013

ஜெயமோகன் குறுநாவல்கள்

ஜெயமோகனின் குறுநாவல்களின் தொகுப்பு. அவரின் மொத்த குறுநாவல்கள் அனைத்தும் உள்ளதா, இல்லை தேர்ந்தெடுத்த கதைகளா என்று தெரியவில்லை. விதவிதமான கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான களத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒரு சில கதைகள் குறுநாவல் என்பதை விட பெரிய சிறுகதைகள் என்று கூறலாம்.

ஜெயமோகனின் பெரிய பலமான தளம் தொன்மம் சார்ந்த கதைகள். அவரின் மற்ற கதைகளை விட அந்த மாதிரியான கதைகளே மிகவும் பிடித்தமாக உள்ளது.


கிளிக்காலம்

கிளிக்காலம், இரண்டுங்கட்டான் என்று கூறப்படும் வயதிலுள்ள சிறுவர்களை(?)ப் பற்றிய கதை. கதைநாயகன் பெயர் ஜெயன் (!). சிறுவர்கள் என்ற இடத்திலிருந்து பெரியவர்கள் என்ற இடத்திற்கு நகரும் கதை. அந்த பருவத்தினருக்கு இருக்கும் விபரீத சந்தேகங்கள், பெண்களை பற்றிய மயக்கங்கள் எல்லாம் இயல்பான உரையாடல்களில் வெளிப்படுகின்றது. மிகவும் கவரவில்லை.

பூமியின் முத்திரைகள்

பாதி கதையிலேயே தூக்கம் வருகின்றது. பயங்கர போரான கதையாக படுகின்றது எனக்கு. கதை உள்ளேயே போக மறுக்கின்றது. யாருக்காவது மிகவும் பிடித்திருக்கலாம்.  அவர்களுக்கு வாழ்த்துக்கள். கிறிஸ்துவ பிண்ணனியில் அமைந்த கதை.

15 அக்டோபர் 2013

கனவு தொழிற்சாலை - சுஜாதா

சமீபத்தில் சாரு நிவேதிதா அவரது தளத்தில் அசோகமித்திரனை போட்டு சாத்தியிருந்தார். காரணம் அ.மி ஜெயமோகனை பெரிய எழுத்தாளர் என்று கூறிவிட்டார். அந்த பாட்டை மட்டும் பாடி விட்டிருந்தால் பரவாயில்லை, அதோடு மற்றவர்கள் எல்லாம் சும்மா என்று அனுபல்லவியையும் பாடிவிட்டார். சாரு நிவேதிதாவின் தாக்குதலில் அவர் அசோகமித்திரனின் கரைந்த நிழல்களையும், சுஜாதாவின் கனவு தொழிற்சாலையையும் ஒப்பிட்டிருந்தார், இரண்டும் ஒரே மாதிரி என்று, இது கனவு தொழிற்சாலையை மீண்டும் எடுத்துப் படிக்க தூண்டியது.

கரைந்த நிழல்களையும், கனவு தொழிற்சாலையையும் ஒப்பிடவே முடியாது. இரண்டும் சினிமா சம்பந்தப்பட்ட கதை என்றாலும், கரைந்த நிழல்களின் உலகம் தனி, கனவு தொழிற்சாலையின் இடம் தனி. கரைந்த நிழல்கள் சில படிகள் மேலேதான் அமர்ந்திருக்கின்றது.

கனவுதொழிற்சாலை, சினிமாவின் பெரும்பாலான தளங்களை தொட்டு செல்கின்றது. அருண், அருமைராசன், மனோன்மனி என்று மூன்று ட்ராக். அருண் வெற்றி பெற்ற சினிமா நடிகன், வெற்றியை தக்கவைக்க போராடும் நடிகன். அருமைராசன் சினிமாவில் நுழைய போராடி, பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து ஜெயிப்பவன், மனோன்மணி போராடி கடையில் பொசுங்கி போகின்றாள்.

25 செப்டம்பர் 2013

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

விகடனில் வந்த தொடர்கதை. அந்த காலத்தில் பலரையும் கவர்ந்த கதை. ஆனந்த தாண்டவம் என்ற பெயரில் சினிமாவாகவும் வந்திருக்கின்றது.

மதுமிதா, ரகுபதி, ரத்னா, ராதா கிஷண். இவர்களை மையமாக வைத்து ஓடும் கதை. ரகுபதிக்கு நிச்சயம் செய்யப்பட்ட மதுமிதாவை புயல் போல கடத்திக்கொண்டு அமெரிக்கா போகும் ராதாகிஷண். அந்த தோல்வியினால் தூண்டப்பட்டு படிக்க அமெரிக்கா போகும் ரகுபதி, அங்கு அமெரிக்காவால் ஜீரணம் செய்யப்பட்ட மதுமிதாவை மீண்டும் சந்திக்கின்றான். மதுமிதாவால் அறிமுகம் செய்யப்பட்ட ரத்னாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் போது, மதுமிதாவின் மறு பிரவேசம். கடைசியில் அமெரிக்கா மதுமிதாவை ஒரு பெட்டியில் அடக்கி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கின்றது.

கதை ஒரு சாதாரண கதை. அதை சொல்லும் விதத்தில்தான் கதையின் முழு வெற்றியும் அடங்கியுள்ளது. சுஜாதாவின் கதை சொல்லும் திறன் கதைக்குள் நம்மை இழுக்கின்றது. அழகான வர்ணனை, சின்ன ட்விஸ்டுகள், சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், சுவாரஸ்யமான சம்பவங்கள் என்று அடுத்தடுத்து இழுத்து கொண்டு போய்விடுகின்றார். முதல்பாகத்தில் பாபநாச சிலுசிலுப்பில் இருக்கும் கதை, அடுத்த பகுதியில் அமெரிக்க வேகத்தில் பறக்கின்றது.

14 செப்டம்பர் 2013

வேதபுரத்து வியாபரிகள் - இந்திரா பார்த்தசாரதி

கல்கியில் 1994ல் வந்த அங்கத நாவல் (அப்படின்னா என்னா?).  எதை வேண்டுமானாலும் மிகைப்படுத்தலாம், அரசியலில் அதை செய்ய முடியாது. நமது அரசியல்வாதிகள் அதை உண்மையாக்கி தொலைத்து விடுவார்கள். கற்பனை நாவலுக்கு பதிலாக எதிர்கால குறிப்பு கிடைக்கும். சோ அப்படித்தான் ஒரு தீர்க்கதரிசியாகிவிட்டார். அது போன்ற ஒரு நாவல்.

இது போன்ற நாவலுக்கு கதை எல்லாம் தேவைதானா? இருந்தும் அப்படி ஒரு வஸ்து இருக்கின்றது. வேதபுரம் என்பது ஒரு கற்பனை நகரம். நமது தமிழகத்தின் பிரதிபலிப்பு. வேதபுரத்து தலைவர் அரூபமாக ஆண்டு கொண்டிருக்கின்றார். அவரை கண்டு, வேதபுரத்தை வைத்து பேட்டி எடுக்க வரும் அபூர்வா, எப்படி வேதபுர ராணியாகின்றாள் என்பது கதை. 

முழுக்க முழுக்க திராவிட இயக்கத்தவர்களை தான் வாரியிருக்கின்றார். தமிழ் கலாச்சாரம் என்று பேசிவிட்டு இரண்டு மனைவி வைத்துக் கொள்வது, அடை மொழி வைத்துக் கொண்டு திரிவது, சுயமரியாதை என்று பேசிவிட்டு தலைவருக்கு ஜால்ரா அடித்துப் பிழைப்பது, கடவுள் சிலையை வணங்குவதை கிண்டலடித்துவிட்டு தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்குவது, புராணங்களை தூற்றி விட்டு தலைவர்கள் மீது புராணங்கள் எழுதிக் குவிப்பது, அரசியலுக்கும் சினிமாவிற்குமான தொடர்பு, என்று கடைத்த இடத்தில் எல்லாம் போட்டு தாக்கியுள்ளார். படிக்க சந்தோஷமாக இருந்தது.

அவர் எழுதிய சில நடந்தும் தொலைத்து விட்டன, இஷ்டப்படி மந்திரிகளை மாற்றுவது, 8450 நொடி உண்ணாவிரதம் இருப்பது, மிருகங்களுக்கு ஒன்று மனிதர்களுக்கு ஒன்று என்று கஞ்சி தொட்டி திறப்பது, கமிட்டி போடுவது, அதன் முடிவை ஆராய இன்னொரு கமிட்டி என்று. 

இன்னும் சில நடப்பதற்கு அதிக காலம் ஆகாது, அன்னிய முதலீடு அதிகமாகி, சி.பி.ஐயை ஒரு வெளிநாட்டு நிறுவனம் வாங்குவது, முடியாட்சி, கஜானாவை காணாமல் அடிப்பது எல்லாம் விரைவில் நடக்கு என எதிர்பார்க்கலாம். 

அங்கத நாவல் என்கின்றார்கள், என்ன அங்கதமோ. இ.பாவின் அங்கதம் எல்லாம் என்னை அவ்வளவாக கவரவில்லை.கிருஷ்ணா கிருஷ்ணாவில் இருந்த அளவிற்கு கூட இதில் இல்லை. சிறிய புன்னகை கூட வருவதில்லை. பேச்சும் மிகுந்த மிகை படுத்தப்பட்டதாகினறது.தனி மண்டை வேண்டும் போல இதை புரிந்து சிரிக்க. இதே போன்ற மிகைப்படுத்தலை சேர்ந்ததுதான் முகம்மது பின் துக்ளக் நாடகமும், ஆனால் அதில் இருந்த சுவாரஸ்யம் இதில் இல்ல. 

படிக்கலாம் ஓசியில் கிடைத்தால்.

07 செப்டம்பர் 2013

ராமாயணம் - சோ, ராஜாஜி

ராமாயணமும், பாரதமும் இதிகாசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதிகாசம் என்றால் நடந்தது என்று பொருள். இந்த இரண்டில் ராமாயணம் நாடு முழுவதும் பரவியுள்ளது. நம் நாட்டில் மட்டுமின்றி அண்டை அயல் நாடுகளில் கூட ராமாயணம் பரவியுள்ளது.


ராமாயணத்தில் எத்தனையோ வகையான ராமாயணங்கள் வழக்கத்தில் உள்ளது. நூற்றுக் கணக்கான ராமாயணங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.  அது பாடப்படும் இடத்திற்கு தகுந்த மாதிரியும், பாடுபவர்களின் மனோ தர்மப்படியும் விதவிதமாக வழங்கப்படுகின்றது. சில காலப் போக்கில் மாறியும் இருக்கலாம். அனைத்திற்கும் மூலம் வால்மீகி ராமாயணம். தமிழ் ஹிந்துவில் படித்தது "சீதை ராமனிடம் தன்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறுகின்றாள், ராமன் அதை மறுத்து பலவிதமாக சமாதானப்படுத்துகின்றான். கடைசியில் சீதை அது எப்படி இதற்கு முன்னால் இருந்த அத்தனை ராமாயணங்களிலும் சீதையை ராமன் அழைத்து செல்கின்றான், நீங்கள் மட்டும் எப்படி விட்டு விட்டு போக முடியும் என்று கேட்க, அவனும் அழைத்து செல்கின்றான்". படிக்க சுவாரஸ்யமாகவும், ராமாயணம் எந்த அளவிற்கு நமது கலாச்சாரத்தில் கலந்துள்ளது என்பதையும் காட்டுகின்றது. 

புத்த, ஜைன மதம் தோன்றி வளர்ந்த போது அவர்களும் ராமாயணத்தை தம் போக்கில் எழுதியுள்ளனர். 


தென்னிந்தியாவில் அதிகம் பேர் அறிந்தது, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், துளசிதாசரின் ராம மானச சரிதம்.

ராமாயணத்தை அனைவரும் படிக்கும் படி எளிதாக ஆக்கி தந்தவர்களில் முதன்மையானவர், ராஜாஜி. கல்கியில் சக்ரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதிவந்த தொடர் ராமாயணம் என்ற பெயரில் வானதி பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெகு எளிமையான நடையில், சுருக்கமாகவும் அதே சமயம் படிப்பவர்களுக்கு தேவையானதை தந்திருக்கின்றார். முக்கியமான விஷயம் இது சிறுவர்களும் படிக்கும் அளவிற்கு எளிமையாக இருக்கின்றது.

04 செப்டம்பர் 2013

அன்பே ஆரமுதே - தி. ஜா

ஒரு சன்னியாசியின் கதை.

1961ல் கல்கியில் தொடராக வந்த கதை. 

ஒரு சன்னியாசி அனந்தசாமி, சிறு வயதில் திருமண மண்டபத்திலிருந்து ஓடி போய் சன்னியாசியானவர். ஆனால் முழு சன்னியாசியல்ல. உலக கவலைகள் அனைத்தும் படும் ஒரு சன்னியாசி. மற்றவர்களுக்கு வைத்தியம் பார்க்கும் சன்னியாசி.

அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த பெண் ருக்மணி. அவள் அனந்தசாமியை தற்செயலாக காண்கின்றாள். திருமண முறிவின் கசப்பில் அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றாள். அவளின் உறவினர் பெண் சந்திரா. அவள் ஒருவனுடன் பழகி அவன் அவளை விட்டு போன கசப்பில் வாழ்ந்து வருகின்றாள்.

சினிமா நடிகன் அருண் குமார். அனந்தசாமி அவனின் பையனுக்கு வைத்தியம் செய்ய வருகின்றார். அருண் குமாரால் சினிமா சான்ஸ் என்னும் கவர்ச்சியில் ஏமாறும் பெண் டொக்கி. அவளை காப்பாற்றுவதற்காக அவளை திருமணம் செய்ய முடிவு செய்யும் ரங்கன். ரங்கன் சந்திராவுடன் பழகிக் கொண்டிருந்தவன்.

இவர்களுக்கு நடுவில் அனந்தசாமி. கடைசியில் ருக்மணியின் வீட்டு மாடியில் குடியேறுகின்றார். கூடவே டொக்கி. அவள் படிக்க புறப்படுகின்றாள். அப்பாடா, ஒரு வழியாக கதை சுருக்கம் முடிந்தது

30 ஆகஸ்ட் 2013

யயாதி - காண்டேகர்

அனைவருக்கும் ஒரு கட்டத்தில் வரும் பயம் முதுமையை பற்றியது. முதுமையின் பயம் நம் இளமையின் அழிவைக் கண்டு. பாரதம் படித்தவர்களுக்கு இளமை என்றவுடன் நினைவில் வருவது யயாதி. மகாபாரதத்தில் வரும் ஒரு சிறிய நிகழ்ச்சி யயாதியின் வாழ்க்கை. அது பாரதத்தின் ஒரு முக்கிய பகுதி. யயாதியின் மகன் புரு வழியாகத்தான் பாண்டவர்கள் / கெளரவர்களின் வம்சம் வளர்கின்றது.

அச்சிறிய பகுதியை இரண்டு பாகங்களாக விரியக் கூடிய பெரிய நாவலாக எழுத முடியும் என்பதே ஆச்சர்யம்தான். அதற்கு கண்டிப்பாக அசாத்ய கற்பனை வளம் வேண்டும். வி. எஸ். காண்டேகர் அதை சாதித்துள்ளார். ஒரு காலத்தில் பெரிய ஹீரோ எழுத்தாளர். படிப்பவர்கள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் என்று கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் இப்புத்தகத்தில் அது போன்று ஏதுமில்லை.

தேவயானி அசுர குரு சுக்ராச்சாரியாரின் புதல்வி. தேவர்களின் குரு பிரகஸ்பதியின் மகன் கசன், சுக்ராச்சாரியாரிடமிருந்து சஞ்சீவீனி வித்தையை கற்றுக்கொள்ள வருகின்றான். சுக்ராச்சாரியார் அம்மந்திரத்தை கொண்டுதான் தேவர்களால் கொல்லப்படும் அசுரர்களை உயிர்ப்பித்து வருகின்றார். தேவயானி கசன் மீது அன்பு கொள்கின்றாள், கசனின் நோக்கத்தை அறிந்து அசுரர்கள் அவனை இரண்டு முறை கொல்ல, சுக்ராச்சாரியார் தன் மகளுக்காக அவனை உயிர்ப்பிக்கின்றார். கடைசியில் அவனை எரித்து சாம்பலை சுக்ராச்சாரியாருக்கு கள்ளில் கலந்து தருகின்றனர். சுக்ராச்சாரியாரின் வயிற்றில் இருந்த படி சஞ்சீவீனி வித்தையை கற்றுக் கொண்ட கசன், சுக்ராச்சாரியாரின் வயிற்றை கிளித்து வெளியே வந்து, சுக்ராச்சாரியாரை உயிர்ப்பிக்கின்றான். சுக்ராச்சாரியாரின் வயிற்றில் வாசம் செய்ததால் தேவயானி சகோதரி முறையாகின்றாள் என்று அவளின் அன்பை மறுத்து செல்கின்றான் கசன். இது ஒரு கதை

23 ஆகஸ்ட் 2013

அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்

மோகமுள்ளை படித்துவிட்டு வைத்த போது இரவு 12. தண்ணீர் குடித்துவிட்டு வரும் போது கண்ணில் பட்டது அம்மா வந்தாள். படித்துவிட்டு படுக்கும் போது இரண்டு.

சின்ன நாவல். இரண்டு மணி நேரத்தில் படித்துவிடலாம். வெளிவந்த காலத்தில், படித்தவர்களுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியை தந்திருக்கலாம். தி. ஜாவை விலக்கி வைக்கும் அளவிற்கு கொந்தளிப்பை ஏற்படுத்திய கதை. இன்றும் ஜீரணக்க கொஞ்சம் கடினமான கதைதான்.

இரண்டு பெண்களை பற்றிய கதை. இந்து, அலங்காரம். இவர்களுக்கு இடையில் அப்பு. அப்பு வேதபாடசாலையில் படித்து முடித்துவிட்டு கிளம்ப தயாராக இருக்கின்றான். இந்து வேதபாடசாலை நடத்திவரும் பவானியின் மருமகள். சிறுவயது முதல் அங்கு வளர்ந்து, கணவனை இழந்து மீண்டும் அங்கு வந்து இருக்கின்றாள். இந்துவிற்கு அப்புவின் மீது காதல். சிறுவயது முதல். அதை மறுக்கும் அப்பு அவளை தன் அம்மாவுடன் ஒப்பிடுகின்றான், இந்து அவனின் அம்மாவை பற்றி கூறி ("அவ யாரையோ நினைஞ்சிண்டு உங்கப்பாவ ஏமாத்திட்டு இருக்கா, நான் உன்ன தவிர யாரையுன் நினைச்சதில்டா பாவி"), அவளோடு என்னை ஒப்பிடாதே என்று கத்துகின்றாள். சென்னை செல்லும் அப்பு அவள் கூறுவது உண்மை என்று கண்டு கொள்கின்றான்.

20 ஆகஸ்ட் 2013

மோகமுள் - தி.ஜானகிராமன்

சிறுவயது முதல் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தாலும், அது தீவிரமானது வேலை கிடைத்த பின்னர்தான். (புத்தகங்களை காசு குடுத்தும் வாங்கி படிக்கு வழி ஒன்று இருக்கின்றதல்லவா?) முதலில் ஆரம்பம் சுஜாதா. அதற்கு பின்னர் தி. ஜானகிராமன். தி. ஜானகிராமனின் முள்முடி சிறுகதை பள்ளியில் ஒரு துணைப்பாடம். அதைத் தவிர அவரைப் பற்றி தெரிந்த ஒரே விஷயம் மோகமுள்ளின் ஆசிரியர். 

மோகமுள் திரைப்படம் ஏற்கனவே பார்த்திருந்தேன். அது பிடித்தும் இருந்தது. மோகமுள்ளை படித்ததும், படம் நாவலின் அருகில் கூட வர முடியாது என்பது மிகத்தெளிவானது. வாங்கிய பின் அதை பல முறை படித்திருப்பேன். இன்றும் 
என்னால் அதை புதிது போல் ரசித்து படிக்க வைக்கின்றது. 

கதை, தன்னை விட பத்து வயது பெரிய பெண்ணின் மீது கொண்ட காதல். அந்த மோகம் முப்பது நாளில் போகாமல் முள்ளாக இருக்கின்றது. பாபுவை விட பத்து வயதில் பெரியவள் யமுனாவின் உடல் வனப்பும், அவளின் குணமும் பாபுவிடம் இரண்டு வித தோற்றம் கொண்டு நிற்கின்றது. அவளை தெய்வம் போல தொழும் பாபுவிற்கு அவள் அழகு அவனின் மோகத்தையும் தூண்டுகின்றது. மோகம், அனைவரையும் அர்ச்சகராக்காத வருத்தம் போல பாபுவின் நெஞ்சில் தைக்கின்றது.

12 ஆகஸ்ட் 2013

என் பேர் ஆண்டாள் - சுஜாதா தேசிகன்

தேசிகனின் புதிய புத்தகம். அவரது கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலனவை அவரது தளத்தில் வெளிவந்தவை. ஏற்கனவே சிலவற்றை படித்திருந்தாலும், ஆன்லைனில் படிப்பதை விட புத்தகத்தில் படிப்பது எனக்கு பிடித்திருக்கின்றது. 

கட்டுரைகளை அவரே வகைப்படுத்தியுள்ளார்.அனுபவம், சுஜாதா, பொது, அறிவியல், பயணங்கள்.

முகவுரையில் கடுகு அவர்கள் கூறுவது போல யூசர் ஃப்ரெண்ட்லிதான் இப்புத்தகம். எளிமையாக சொல்வது எளிதல்ல, அதுவும் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும், அதோடு மிகவும் எளிமையாக போய் தினதந்தி ஸ்டைலில் போய்விடக் கூடாது. தேசிகன் இவையனைத்தையும் சமாளித்து எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதியுள்ளார்.

தலைப்பு கட்டுரை என் பெயர் ஆண்டாள். ஆண்டாள் அழகான தமிழ் பெயர். அப்பெயரின் சரித்திரம் சுவாரஸ்யமானது. அனைவருக்கும் தினமும் அனைவருக்கும் பற்பல அனுபவங்கள் கிடைக்கின்றன, அதை எழுத்தில் அப்படியே கொண்டுவருவது கடினம், அப்படியே வந்தாலும் அது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பாதியிலேயே தூக்கம் வந்துவிடும். இவரின் கட்டுரையில் அந்த சுவாரஸ்யம் குறையாமல் இருக்கின்றது. அனுபவத்துடன் கொஞ்சம் கைச்சரக்கும் இருக்கும்தான். அதில் எது கைச்சரக்கு என்று கண்டுபிடிப்பது வாசகனுக்கான சவால். 

27 ஜூலை 2013

மகாபாரதம் - கும்பகோணம் பதிப்பு - முன் வெளியீட்டு திட்டம்.

இட்லி வடையில் மகாபாரதம் கும்பகோணம் பதிப்பின் முன் வெளியீட்டு திட்டம் பற்றிய பதிவு

http://idlyvadai.blogspot.in/2013/07/blog-post_27.html

தொடர்பு விபரங்கள் அதில் உள்ளன.

நான் இணைய விருப்பம் தெரிவித்துள்ளேன். வாங்கினாலும் முழுவதையும் படிக்க எத்தனை வருடங்களாகப் போகின்றதோ.

எங்கே பிராமணன்? - சோ

சில பல வருடங்கள் முன்பு நான் விகடன் ஆன்லைன் வாசகன்.(இப்போது அந்த குப்பையை ஓசியில் படிப்பதுடன் சரி). அப்போது பிரபலமான ஒரு தொடர் வரலாற்று நாயகர்கள். அதில் அம்பேத்கரை பற்றி எழுதிவந்தார்கள். முதல் பத்தியிலேயே, ஆரியர் வருகை, ஆரியர்கள் வந்து இங்குள்ளவர்களை ஏமாற்றினார்கள் என்று  அளந்து விடப்பட்டிருந்தது. பின்னூட்ட பெட்டியில், அந்த புளுகை எதிர்த்து எழுதியிருந்தேன். 

உடனே அடுத்தடுத்து பல வாசகர்கள் சண்டைக்கு வந்துவிட்டார்கள். விவாதம் என்று முழுவதும் கூற முடியாது. அப்போது அலுவலகத்திலும் எனக்கு வேலை அவ்வளவாக இல்லை. எனவே, இச்சண்டையை முழு நேர தொழிலாக கொண்டேன். அந்த சண்டைக்கு பாயிண்ட் தேடவே இதை வாங்கினேன். -இதிலிருந்து மகாபாரதம், இந்துமகா சமுத்திரம் என்று அவரது மற்ற புத்தகங்களும் அலமாரிக்கு வந்தன. எதற்கு சோ? என்றால், சண்டை போட வக்கீலின் துணை வேண்டுமல்லவா.

அனைவருக்கும் ஒரு முன் முடிவு இருந்தது. அதை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. அடுத்தவர் கூறுவதை கேட்பதை விட, அதில் குற்றம் காண்பது மட்டுமே வேலையாக இருந்தது. விளக்கம் சொன்ன கேள்வியையே மாற்றி மாற்றி கேட்டு, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்தது. ஒரு கட்டத்தில் சலிப்பு வந்துவிட்டது. இதனால் ஒரு பயனுமில்லை என்ற ஞானமும் வந்தது. இதற்கு பதில் நாய் வாலை நிமிர்த்தலாம் என்ற உண்மையும் தெரிந்தது.

08 ஜூன் 2013

யுத்தங்களுக்கிடையில் - அசோகமித்திரன்

"கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் வரிசை மாறிக் கூறுவதுதானே கதை" என்று முன்னுரையில் கூறுகின்றார்.

 "இது வெற்றிக் கதையுமல்ல தோல்விக் கதையுமல்ல. பிழைத்திருத்தல் - அதுவும் கூடியவரை நியாயத்தையும் கண்ணியத்தையும் கைவிடாமல் பிழைத்திருத்தல். இவர்களை வீரர்களாகவும் கூறலாம்; சந்தர்ப்பவாதிகளாகவும் கூறலாம்" கதையை பற்றிய அவரது அறிமுகம்.

ஒரு குடும்பத்தின் கதை. கதை நடக்கும் காலம் இரண்டு உலக யுந்தங்களுக்கு நடுவில் நடக்கின்றது. ஒரு பள்ளி ஆசிரியருக்கு பிறந்த ஏகப்பட்ட குழந்தைகளில் மிஞ்சியவர்களின் கதை. 

ஒற்றனில் வரும் ஒரு கதையில், பல கதாபாத்திரங்கள், அவர்களின் உறவுகள் பற்றி வரைபடம் வரைந்து நாவல் எழுதுவது பற்றி எழுதியிருப்பார். அதே போல் எழுதியிருப்பார் போல், அத்தனை பாத்திரங்கள், அத்தனை உறவு முறைகள். இக்கதையில் வராத ஒரு உறவினர் மானசரோவரில் வருகின்றார். 

வழக்கமான ஆரம்பம் முடிவு என்ற அமைப்பு இல்லாத கதை. வாழ்க்கையின் ஒரு பகுதி. நான் லீனியர் கதை. அந்த ஆசிரியரின் பல குழந்தைகளில் மிச்சம் இருக்கும் மூன்று ஆண்கள், மூன்று பெண்களை பற்றி முன் பின்னாக சொல்லி வருகின்றார். 

முதலாம் உலக யுத்த முடிவில் ஒருவனுக்கு வேலை கிடைத்து ஊரை விட்டு போகின்றான், அவனுடன் சேர்த்து அவனது தம்பிகளுக்கும் வேலை தேடி தருகின்றார்ன். ரயில்வே. அசோகமித்திரன் அப்பா ஹைதராபாத்தில் ரயில்வேயில் வேலை செய்திருப்பாரோ. பல கதைகளில் நிஜாம் அரசும், ரயில்வேயும் வருகின்றது.


கதை ஆண்களை பற்றியே பேசினாலும், அடிநாதமாக இருப்பது பெண்கள்தான். பதினாறு குழந்தைகளை பெற்ற பெண், தன்னை விட இரண்டு மூன்று வயது அதிகமான கணவனை அடைந்த பெண், இருபது வயதில் கணவனை இழந்த பெண். 


//யார் இருந்தால் என்ன, யார் மறைந்தால் என்ன, பெண்கள் சுகப்படுவதில்லை//

முன்னுரையில் கூறுவது போல கதை மாந்தர்கள் அனைவரும் சாதரணர்கள். சாதரணர்கள் வீரன் கிடையாது, கோழையும் கிடையாது. வாழ்க்கையை முடிந்த வரை வாழ பார்க்கின்றார்கள். சிறிது சமரசத்துடன். பெண்கள் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு ஓடுகின்றனர்.

ஐம்பது வருடங்களுக்கு முந்தைய சமூகத்தை நமக்கு காட்டுகின்றார். யுந்த களேபரங்கள். ரயில்வேயின் பெருமை. 

சின்ன நாவல்தான். ஏகப்பட்ட கிளைகள். யார் யாருக்கு என்ன உறவு என்று மனதில் வரிசைப்படுத்திக் கொள்ளும் முன் கதை முடிந்துவிடுகின்றது. அசோகமித்திரனின் கூறாமல் கூறிச் செல்வதைப் பற்றி தனியாக சொல்லத்தேவையில்லை. அவரது வழக்கமான நகைச்சுவை இதில் அவ்வளவாக இல்லை. சர்வசாதரணமாக ஒரு வரியில் பெரிய திருப்பத்தை கூறிவிட்டு அடுத்த பகுதிக்கு போய்விடுகின்றார். சின்ன சின்ன வரிகள். ஆனால் சொல்ல வந்ததை கச்சிதமாக கூறிவிடுகின்றது. முதல் முறை படிக்கும் போது கொஞ்சம் குழப்பும். இரண்டாம் முறை படிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கின்றது.

ஒரு வரியில் சொன்னால், நமது பாட்டிகள், தாத்தாக்களின் கதை.

18 மே 2013

மத்தகம் - ஜெயமோகன்

அலுக்காமல் பார்த்து ரசிக்க கூடிய விஷயங்கள் என்று சில உண்டு. குழந்தை. யானை. கடல். அதில் ஒன்றான யானையை பற்றிய கதை. யானை என்னும் ஒரு மிருகத்தை இத்தனை நெருக்கமாகவும், அதன் மனதை படிப்பவர்களும் உணரும் படி படைக்க முடியுமா என்ற பிரமிப்பு படித்து முடித்த பின்னும் போகவில்லை.

யானையை ரசிப்பது என்பது ஒரு குழந்தையை ரசிப்பது போலத்தான். யானையின் செய்கை எல்லாம் ஒரு கபடமற்ற குழந்தையின் செய்கை போலத்தான் தோன்றும். அவ்வளவு பெரிய உருவம் ஒரு சின்ன சங்கிலிக்கு கட்டுப்பட்டு அடங்கி இருப்பது என்பது ஒரு பார்வைக்குதான். அது நினைத்தால் அச்சங்கிலி தூள்தூளாகும். காட்டிலிருந்தாலும் நாட்டிலிருந்தாலும் யானை யானைதான். அது போனால் போகின்றது என்று மனிதனுக்கு கட்டுப் பட்டு இருக்கின்றது. 

கேசவன் கஜராஜ கேசரி. திருவனந்தபுர மன்னரின் தோழன். அவனின் பாகன்களில் ஒருவன் பரமன். பரமன்தான் கதை சொல்லி. மொத்தம் ஐந்து அந்தியாயங்கள். தவறுதலாக குழியில் விழுந்த யானை அக்குழியிலியே பிரசவித்த குட்டி. குட்டி கொஞ்சம் வளர்ந்ததும் அரச கொட்டடிக்கு வருகின்றது. யானை வந்த வேளையில் நோய்வாய்ப்பட்ட தம்புரான் எழுந்து நடக்க, யானை  அவரின் தோழனாகின்றது. வளர்ந்ததும் திருவெட்டாறு கோவிலிக்கு விடப்படும் கேசவன், தம்புரான் பட்டத்திற்கு வந்தது அதுவும் ஒரு பட்டத்து யானையாக மாறுகின்றது. கடைசியில் தம்புரான் மறைந்ததும், பட்டத்திலிருந்து கீழே இறங்கி வருகின்றது. 

கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் அது காட்டும் உலகம் வித்தியாசமானது. சாதரணர்கள் காண, கண்டிருக்க முடியாத உலகம். யானை, யானை வளர்ப்பு, யானைகளின் சுபாவம் என்று ஒரு சரடு. யானைகளுடனே வாழும் பாகன்களின் உலகம் என்று ஒரு சரடு.இரண்டிற்கும் ஊடே அதிகாரம் என்னும் ஒரு சரடு. இது அனைத்தும் பின்னி பிணைந்ததுதான் மத்தகம். 

மத்தகம் என்பது பாகன் அமரும் இடம். கேசவன் அம்மத்தகத்தில் யாரையும் அமர விடுவதில்லை. தம்புரானை மட்டுமே அவ்விடத்தில் அனுமதிக்கும். கதை உள்ளே பேசுவது அதிகாரத்தை பற்றி. தம்புரானின் தோழனாக இருக்கும் போது கம்பீரமாக ஒரு ராஜாவைப் போல இருக்கும் கேசவன், தம்புரான் இல்லை என்று தெரிந்ததும், அதிகார மாற்றத்தை உணர்ந்து சாதரண பாகனிடம் தன்னை ஒப்படைத்து கீழ்படிவதாக மாறுகின்றது. கஜகேசரியாக இருக்கும் வரை பாகனின் தவறுக்காக அவனை நெருங்க விடாத கேசவன், அவனை தன் மத்தகத்தில் ஏற்றி வைத்துக் கொள்கின்றது.

பாகன்களின் வாழ்க்கை. யானையின் காலடியில் வாழ்வது என்பது மரணத்துடன் இருப்பது போலத்தான். யானை கோபம் கொண்டால், ஒரு வினாடி போதும் பாகன் போய் சேர வேண்டியதுதான். பாகனின் சொல் பேச்சு கேட்கும் யானை எப்படி அவர்களை தாக்கும் என்பதற்கான் விடை இங்குள்ளது. பாகன்களின் பார்வையில் யானை, என்று அருமையாக காட்டியுள்ளார். கதை வெகுகாலத்திற்கு முன்பு நடக்கின்றது. பாகன்களின் பரிதாப நிலையை விட அவர்களின் மனைவிகளின் நிலை, எப்போது வேண்டுமானாலும் வாழ்க்கை பறி போகும் அபாயம், அதன் பின்னால் வாழ வேண்டிய கட்டாயம், அதற்காக அவர்கள் தரும் விலை. 

முக்கியமானது யானையின் குணாதியங்கள். காட்டிற்கு ராஜா சிங்கம் என்கின்றார்கள். உண்மையான ராஜா யானைதான். சிங்கம் ஒரு சோம்பேறி வேறு. யானையின் கம்பீரம், பலம் அனைத்தையும் விட அப்பலத்தை தன் கட்டிற்குள் வைத்திருக்கும் மனம். காட்டில் வாழும் மிருகங்களில் அசாத்தியமான நினைவாற்றலுடனும், பலத்துடனும், புத்திசாலித்தனத்துடன் இருக்கும் ஒரே மிருகம் யானைதான். எல்லா யானையும் ராஜா இல்லை. அனைவரும் தலைவராக முடியாதல்லவா. கேசவன் அப்படிப்பட்ட தலைவன். கஜராஜன். கேசவன் அவனுக்கு முந்தைய கஜராஜனான நாரயணனை கண்டு பயந்தாலும் அதை சீண்டிபார்க்கின்றான். கேசவனை சீண்ட கடைசியில் கொச்சு கொம்பன் வருகின்றான். 

ஜெ.மோவிற்கு யானை என்றால் மிகவும் பிடிக்கும் போல. காடு நாவலில் வரும் கீறக்காதன், குட்டப்பன் யானையை பற்றி பேசும் விஷயங்கள். யானை டாக்டர். விஷ்ணுபுரத்தில் வரும் வீரன், பைரவன். ஊமைச் செந்நாயில் வரும் கொம்பன், மண் கதையில் வரும் இன்னொரு கொம்பன் என பல யானைகள். ஆனால் கதை முழுக்க வந்து கதையையே தன் மத்தகத்தில் கொண்டு செல்வது இந்த கேசவன் மட்டும் தான்.

ஜெயமோகனின் கதைகளில் என்னை அதிகம் கவர்வது இது போன்ற கதைகள்தான். காடு, மலை, தொன்மம் போன்ற விஷயங்களை இவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. ஒரு யானையுடன் ஒரு மணி நேரம் பயணம் செய்த உணர்வை தருகின்றது இக்கதை.



01 மே 2013

பாம்பு

கருப்பாக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்த அந்த பாம்பை முதலில் பார்த்தது என் பெரியம்மா பெண்தான்.

 "டேய் அங்க பாரு பாட்டி வீட்டு பக்கத்துல என்னமோ போகுது, பாம்பு போல இருக்கு"

எனக்கு ஒன்றும் தெரியவில்லை. இருட்ட தொடங்கும் நேரம். அவளின் கண்ணாடி பவர் வேறு என்னைவிட இரண்டு பாய்ண்ட் அதிகம்.

 "கண்ணாடிய துடச்சு பாரு" என்றேன்.

"நல்ல பாருடா அங்க, நெளிஞ்சு நெளிஞ்சு போகுது"

கண்ணாடியை துடைத்துதான் போட்டிருக்கின்றாள். நல்ல நீளமான பாம்பு, சுமார் ஐந்து அடிக்கு மேல் இருக்கும். நல்ல பருமன். பளபளவென்று உடல். அசங்கி அசங்கி தூக்கத்தில் நடப்பவன் போல் போய்க் கொண்டிருந்தது.

"ப்பா என்ன பெருசு, பளபளன்னு இருக்குல்ல, தோல பாரு நல்ல லேடிஸ் ஹேண்ட் பேக் போல வளவளன்னு இருக்கு'

"ரசிக்ற மூஞ்சிய பாரு, இப்ப என்ன பண்றது"

எனக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. பாதுகாப்பான தூரம் என்பதை உறுதி செய்து கொண்டு குறி பார்த்து ஒரு கல்லை எடுத்து எறிந்தேன். விளைவு விபரீதமாகி, பாம்பு பாட்டி வீட்டிற்குள் விறுவிறுவென நுழைந்தது.

"ஐயஐயோ பாட்டி"

29 ஏப்ரல் 2013

சொர்க்கத் தீவு - சுஜாதா

சுஜாதாவின் முதல் சைன்ஸ் ஃபிக்‌ஷன். ஒரு அய்ங்காரின் (கவனிக்க அய்யங்காரின் அல்ல) அனுபவம். எதில் தொடராக வந்தது என்று தெரியவில்லை. எப்படி சைன்ஸ்ஃபிக்‌ஷன் என்பதற்கு பதில் சுஜாதாவின் முன்னுரையிலேயே இருக்கின்றது. ஒரு எதிர்கால சமுதாயம் இப்படி இருக்க வாய்ப்புள்ளது. 

அய்ங்கார் ஒரு கம்ப்யூட்டர் ஆசாமி. பழைய கம்ப்யூட்டர். (கதை எழுதப்பட்டது ). மாதம் 2000 ரூபாய் சம்பளத்தை எப்படி செல்வு செய்வது என்பதை வேலைக்கு நடுவில் யோசிக்கும் ஒருவன். அலமேலு என்னும் ஒரு மசால்வடை மூலம் அய்ங்காரை பிடித்துக் கொண்டு சொர்க்கத்தீவிற்கு செல்கின்றனர் ஒரு கூட்டம். அவனை தூக்கிக் கொண்டு போகக் காரணம் அங்கிருக்கும் ஒரு கம்ப்யூட்டரை சரி செய்ய.

முதலில் முரண்டு பிடிக்கும் அவன் மெதுவாக ஒத்துழைக்க எண்ணும் அவனுக்கு அத்தீவின் நடைமுறைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. //இன்று எத்தனை பேர் பிறக்க வேண்டும், எத்தனை பேர் இறக்க வேண்டும் என்பதை சரியாக கணிக்கவில்லை. அதனால் சிலர் கொல்லப்படவில்லை// தீவின் தலைவர் ஆத்மா. ஒரே ஒரு மூன்றெழுத்துக்காரர். மற்றவர்கள் எல்லாம் பெரி, பொரி, சரி என்று இரண்டெழுத்து ஆசாமிகள்.

எல்லருக்கும் ஒரே மாதிரியான ஆடை, ஒரே மாதிரி உணவு, ஒரே மாதிரி உறைவிடம். ஒரிஜினல் கம்யூனிசம். சர்வமும் கம்ப்யூட்டர் கையில். யார் இருக்கலாம், யார் இறக்கலாம், யார் என்னெ செய்ய வேண்டும் எல்லாம் கம்ப்யூட்டர். மனிதனின் ஆதார உணர்ச்சிகளை மருந்துகள் மூலமும், பயிற்சிகள் மூலமும் மட்டுப் படுத்தி ஒரு பொம்மைகளை போல வைத்திருக்கும் தீவு. சொர்க்கத்தீவு.

" ஆடு கூட தழை தின்னாமல் இருக்க நினைத்தால் தின்னாமல் இருக்கலாம், இங்கு மக்களால் அது கூட முடியாது".

"எங்கள் தமிழில் மொத்தம் ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் கிடையாது"

"அம்மா என்று கூறும் போதெல்லாம் அக்குழந்தைகளுக்கு மெல்லிய மின் அதிர்ச்சி குடுப்போம்"

இதில் ஒருவனுக்கு மட்டும் எப்படியோ சுய உணர்ச்சி வருக்கின்றது. அவனால் உணர்ச்சி பெற்ற அவன் காதலியும் இணைந்து சொர்க்கத்தீவை மாற்ற முயன்று அய்ங்காரிடம் உதவி கேட்கின்றனர். அய்ங்காரின் உதவியும் தோல்வியில் முடிகின்றது.

ஊருக்கு கிளம்பும் முன் ஒரு சிறிய வேலையால் அய்ங்கார் அத்தீவை மாற்றத்தின் பாதையில் திருப்பி விட்டு வருகின்றான். மீண்டும் கடத்திக் கொண்டு போகப்பட்டால் புதிய தீவைக் காணலாம்.

சைன்ஸ்ஃபிக்‌ஷனுக்கு சைன்ஸ்தேவையில்லை என்கின்றார் சுஜாதா. அவரின் கருத்துப்படி பாரதியாரின் காக்கை பார்லிமெண்ட்டே ஒரு சைன்ஸ்ஃபிக்‌ஷன். எதிர்கால சமூகம் முழுக்க முழுக்க எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர்களால் நடத்தப்படும் என்னும் அவரது கற்பனை / யூகம் கொஞ்ச கொஞ்சமாக நடந்துவருகின்றது.

கதை வழக்கமான சுஜாதாத்தனமான விறுவிறுப்பு. கதாநாயகன் தேவையற்ற சாகசங்கள் எல்லாம் செய்வதில்லை. நமக்கு தெரியும் கதநாயகன் எப்படியும் அம்மக்களை காப்பாற்றி விடுவான் என்று, அதை எப்படி செய்வான் என்பதே முடிச்சு. அதை தெளிவாக, புத்திசாலித்தனமாக அவிழ்த்துள்ளார்.

கம்ப்யூட்டர் சம்மந்தப்பட்ட தகவல்கள் இன்றைக்கு பழையதாக தெரியலாம். ஒவ்வொரு பதிப்பின் போது மாற்றிக் கொண்டிருப்பது சாத்தியமல்ல. அதை விட்டு பார்த்தால் ஒரு விறுவிறுப்பான கதை.

எழுதிவிட்டு தேடினால் பால்ஹனுமான் தளத்தில் ஒரு விமர்சனம் கிடைத்தது. தோத்தாத்ரி என்பவரின் விமர்சனத்தை படித்து அசந்துவிட்டேன். ஆய்வு கட்டுரையாம். ப்ரமாதம்.// ஒரு வகையான கம்யூனிச எதிர்ப்பை காணலாம்// இது உண்மையென்றால் அதற்காகவே அனைவரும் படிக்கலாம்.

23 ஏப்ரல் 2013

என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ - சுஜாதா

விஞ்ஞான கதைகள் என்றால் முதலில் நினைவிற்கு வருவது சுஜாதாதான். அதன் பின்னால்தான் மற்றவர்கள். யார் அந்த மற்றவர்கள் என்று யோசிப்பவர்களுக்கு எனக்கு தெரிந்து சில ராஜேஷ்குமார், ஆர்னிகா நாசர், மாலன், ஜெயமோகன். விஞ்ஞான சிறுகதைகள் சுலபம், நாவல்கள் சற்று கடினம்.

என் இனிய இயந்திராவும், மீண்டும் ஜீனோவும் விகடனில் தொடராக வந்தது. நாவலின் வெற்றிக்கு காரணம் ஜீனோ. ஒரு பெரிய கிரேக்க மேதையின் பெயரைக் கொண்ட நாய். ரோபாட். இயந்திரம். அது அனைவரையும் கவர்ந்ததற்கு காரணம், அதன் மனிதத்தன்மை. இதே ஒரு இயந்திர மனிதனை அங்கு வைத்திருந்தால் இந்தளவிற்கு கவர்ந்திருக்காது. ஒரு நாய் விஞ்ஞான முன்னேற்றத்தினால் மனிதனைப் போல சிந்திக்க ஆரம்பித்ததுதான் கதையின் பெரிய பலம்.

கதை எதிர்காலத்தில் ஏதோ ஒரு நாளில் ஆரம்பிக்கின்றது. மனிதர்களின் பெயர்கள் சுருக்கப்பட்டு, பிறப்பும் இறப்பும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் ஒரு காலம். நிலா - சிபி. அவர்களின் வீட்டில் உள்ள அறையில் தங்க அனுமதிக்கப்பட்ட விருந்தாளி ரவி. ரவியுடன் வரும் நாய். தத்துவம் படிக்கும் நாய். நிலாவின் கணவன் காணமல் போக, கதை சுறுசுறுப்பாகின்றது. தலைவர் ஜீவாவை சந்திக்கும் நிலா கடைசியில் ரவியின் கூட்டத்துடன் சேர்ந்து ஜீவாவை கொல்ல துணிகின்றாள். ஜீனோவின் உதவியுடன் ஜீவாவின் பின்னால் உள்ள சதியை கண்டுபிடிக்கின்றாள். பெரும்பாலானவர்கள் படித்திருப்பார்கள் அதனால் கதையின் முடிவை சொல்வதில் தப்பில்லை. படிக்காதவர்கள் கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்.

20 ஏப்ரல் 2013

மகாபாரதம்

நான் அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் டவண்டை அடிக்கும் விஷயம், நான் ஒரு மகாபாரத பைத்தியம். சிறுவயதில் இதை ஆரம்பித்த பெருமை தூர்தர்ஷனுக்குத்தான்.ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும் போது டிவியில் தொடராக வந்தது. அதோடு தினமலர். தினமலரில் முதல் நாள் அடுத்த நாள் காட்சிகளின் வசனம் வரும். சிறுவயதில் புத்தகம் படிக்கும் வழக்கம் இருந்ததால் அதை சுவாரஸ்யமாக படிக்கவும் முடிந்தது. வசனம் புரிந்து பார்க்கும் போது இன்னும் பிடித்து போனது.

முதலில் பிடித்ததற்கு காரணம் அதில் வரும் சாகசங்கள். போர் முறைகள், சண்டை, வில் அம்பு, கதை என்று சிறுவர்களை கவரும் அனைத்தும் போதுமான அளவிற்கு இருந்தது. இன்னும் என்னால் அதன் கதாபாத்திரங்களை கண் முன் கொண்டுவர முடிகின்றது. நல்ல காஸ்டிங், சகுனி, துரியோதனன், பீமன், கிருஷ்ணன் (நிகில் பரத்வாஜ்?), பீஷ்மர் எல்லாம் கனகச்சிதம். இதை எழுதும் போது கர்மம் புதிய மகாபாரதம் நினைவில் வந்து தொலைக்கின்றது. சை.

ஏழாவது படிக்கும் போது என் தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டிற்கு போகும் போது அங்கு பாரதம் அனாதையாக கிடந்தது. திரும்பி வரும்போது பதுக்கிக் கொண்டு வந்துவிட்டேன். வந்த வேகத்தில் படித்தேன். பல நாட்களுக்கு அது உள்ளேயே ஓடிக் கொண்டிருந்தது. நான்கு புத்தகங்கள். ஆதி பர்வம், சபாபர்வம், வன பர்வன் இரண்டு புத்தகங்கள், யுந்த பர்வங்கள் ஒரு புத்தகம், சாந்தி பர்வம் முதல் ஒரு புத்தகம். யார் எழுதியது ஒரு விவரமும் நினைவில் இல்லை. 

14 ஏப்ரல் 2013

தண்ணீர் - அசோகமித்திரன்

தண்ணீர் ஒரு மணி நேரத்தில் படித்து முடித்துவிடக் கூடிய் ஒரு குட்டி நாவல். ஆனால் அது எளிதல்ல. அது தரும் தாக்கம் அதை அப்படி எளிதில் படிக்க விடாது. 

"யாரோ ஒரு பெண் தண்ணீருக்காக இங்கும் அங்கும் அலைந்ததை தொடர்ச்சியாக பார்த்ததன் விளைவு இக்கதை" என்கின்றார் அசோகமித்திரன்.

தண்ணீர் பிரச்சினை என்றுமுள்ள ஒரு விஷயம். என் ஊரில் முன்பு தண்ணீர் பஞ்சம் படு பயங்கரம், பக்கத்து தெருவில் போய் தண்ணீர் சுமந்து வருவார்கள். வீட்டில் விஷேஷம் என்றால் தண்ணீரை விலைக்கு வாங்கி கொண்டு வருவோம். மழை பெய்யும் போது பிடித்து வைத்துக் கொள்வோம். பின்னர் முல்லையாற்றிலிருந்து தண்ணீர் வீட்டிற்கே வர ஆரம்பித்தது. கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டோம். ஆனால் இப்போதும் சில சமயம் வாரக்கணக்கில் தண்ணீர் வராமல் போய்விடும். இன்றும் தண்ணீரை ட்ரம்மில் கொண்டு வருவது நடக்கிக்ன்றது. ஆனால் முன்பிருந்த கொடுமை இல்லை. இப்போது தண்ணீருக்கு பதில் மின்சாரம்.

இக்கதை அது போன்ற ஒரு கொடுமையான தண்ணீர் பிரச்சினை காலத்தை பேசுகின்றது. அது ஒரு பின்புலம், அதன் மேல் இரண்டு சகோதரிகளின் கதை. அசோகமித்திரனின் தனிப்பட்ட பேட்டிகளை படிக்கும் போது அவர் கூறுவது வாழ்க்கை மேல் எவ்வித குற்றச்சாட்டுமில்லை, வருவதை ஏற்றுக் கொண்டேன் என்பது. அவரது கதைகளும் அவரைப் போலவே, வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து நம்மை கூறுபோடுவதில்லை. வாழ்க்கையை ஒரு அடி தள்ளி நின்று நமக்கு காட்டுகின்றது. நாம் அதை புரிந்து கொள்ள வேண்டியதுதான். 

08 ஏப்ரல் 2013

என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

பெங்களூர் புத்தக கண்காட்சிக்கு சென்ற போது கண்ணில் பட்டது. ஏற்கனவே கேள்வி பட்டிருந்ததால் வாங்கினேன். ஸ்டாலில் இருந்தவர், "சார் இவரின் காகித மலர்கள், படிச்சிருக்கீங்களா. நல்லா இருக்கும் சார்" என்றார்." ஏற்கனவே சில புத்தகங்களில் வாங்கிய சூடு இன்னும் ஆறாததால் "முதல்ல இத படிப்போம் சார், நல்லா இருந்தா அப்புறம் வாங்கலாம்" என்று கூறிவிட்டு வந்தேன். வாங்கியிருக்கலாம்.

புத்தகத்தின் அட்டைப்படமே கதையை முழுவதும் காட்டுகின்றது. முகமூடி அணிந்த ஒரு கோமாளி. ராம்சேஷ் என்னும் ஒரு காசனோவாவிற்கு உள்ளே ஒளிந்திருக்கும் ராமசேஷனின் கதை.

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ள ஒரு முகமூடி இருக்கும். மனைவியிடம் ஏன் உற்ற நண்பர்களிடம் கூட மாட்டிக் கொள்ள ஒரு முகமூடி இருக்கும். தனிமையில் இருக்கும் போது நம்மையே இது தான் நாம் என்று நம்ப வைக்க ஒரு முகமூடி இருக்கும். அதை ஒரு கை திறக்க விரும்பினாலும், மறு கை அதை விடாமல் இழுத்து மாட்டிக் கொண்டே இருக்கும்.அந்த முகமூடிகளை கிழித்து தோரணம் கட்டியுள்ள புத்தகம். ஒவ்வொருவருக்கும் அடுத்தவரிடம் நிரூபிக்க ஏதோ ஒன்று இருக்கின்றது. அந்த அபத்தத்தை வெட்ட வெளிச்சமாக காட்டுகின்றது இப்புத்தகம்.

ராமசேஷன். ஒரு கர்நாடக பெயர். கேட்டாலே ஒரு படு ஆச்சரமான மாமாதான் நினைவில் வருகின்றார். ஏதோ அது போல ஒருவர்தான் கதை நாயகன் என்று நினைத்தேன். ராமசேஷன் ஒரு நடுத்தர வர்க்கத்து பிராமண பையன். அவன் கல்லூரிக்கு செல்வதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது. ராம்சேஷன் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள், ஒவ்வொருவரிடமும் அவன் ஆடும் விளையாட்டு.

24 மார்ச் 2013

தாயார் சன்னதி - சுகா

டீவியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த போது அதில் யாரோ திருநெல்வேலித் தமிழை பேசிக் கொண்டிருந்தனர். நானும் விளையாட்டாக அதே போல் என் பெண்ணுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த தமிழ் கொஞ்ச நேரத்தில் என் மனைவிக்கு தலைவலியை உண்டாக்குகின்றது என்று தெரிந்தவுடன் இன்னும் பலமாக ஆரம்பித்து பேசிக் கொண்டிருந்தேன். ஒரிஜினல் திருநெல்வேலிக்காரர்கள் கேட்டிருந்தால் உதை கிடைப்பது நிச்சியம். அப்படியே இப்புத்தகம் நினைவிற்கு வந்தது, எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

தாயார் சன்னதி என்ற தலைப்பை பார்த்த உடன் ஸ்ரீரங்கத்தை பற்றிய கதை என்றுதான் நினைத்தேன். அட்டைப்படமும் அதே போல் இருந்தது. ஒரு கோபுரம் ஒரு யானை, எனக்கு ஸ்ரீரங்கம் நினைவே வந்தது. வாங்கியபின் ஒரு சிறிய ஏமாற்றம். 

ஆனால் அது முழு  ஏமாற்றமல்ல. ஸ்ரீரங்கக்கதையல்ல தின்னவேலி கதை. திருநெல்வேலி என்றால் நினைவிற்கு வருவது அல்வா, அதே போல் அந்த தமிழ். இப்புத்தகத்தை படிக்கும் போது அந்த அல்வாவையும் அந்த தமிழையும் ருசித்து மகிழ்ந்த ஒரு திருப்தி கிடைக்கின்றது.

பாலுமகேந்திராவின் சிஷ்யர் சுகா. அவரின் தளத்தில் (அ) சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. புதிதான சரக்கை தன் கடையில் உடனே சூடாக போடும் விகடன் மூங்கில் மூச்சு என்ற பெயரில் தொடர்ந்தது. இப்போது வேறு பெயரில் வேறு யாரோ ஒருவரால் வருகின்றது. ஒரிஜினல் போல் அது இல்லை. கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்துவிட்டது.

தாயார் சன்னதி என்பது சுகா எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு. அவரது தாயாரை மருத்துவமனையில் சேர்ந்திருந்த போது அவர் கண்ட மற்ற தாயார்களை பற்றிய ஒரு கட்டுரை. மிகவும் நெகிழ்ச்சியான கட்டுரை.

13 மார்ச் 2013

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்

பேய்கள் சுவாரஸ்யமானவை. அனைவருக்கும் ஏதாவது பேய்க்கதைகள் கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பேய்கள் பரிச்சியமாயிருக்கும். சிறுவயதில் சாதாரண கதைகளை கேட்பதில் உள்ள சுவாரஸ்யத்தை விட அமானுஷ்யக்கதைகள் தரும் சுவாரஸ்யம் அதிகம். என் பேய்கள் எனது பள்ளியிலேயே இருந்தது, தேடி அலைய வேண்டியதில்லை. பற்றாக் குறைக்கு எதிரில் இருந்த பள்ளிவாசல் மாடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஜின் வேறு. 

பெரும்பாலும் பேய்கள் என்பது நமது மனதில் உருவாவதுதான். தேவதைகளும் அது போலத்தான். சிலரின் பேய்கள் சிலருக்கு தேவதையாகக் கூடும். பேய் பயம் என்பது பெரும்பாலும் உருவாக்கப்படுவதுதான். தானாக அது உருவாவது, உண்மையான பேயை பார்க்கும் போதுதான். தனியாக பல நாள் இருந்த வீட்டில், கூட இருந்தவனின் பேய் அனுபவம் என்னை தூங்க விடாமல் தடுத்தது. 

தமிழகத்தை விட மலையாளத்தில் அதிக அமானுஷ்ய கதைகள் உண்டு என்று நினைக்கின்றேன். தமிழில் அமானுஷ்யக் கதைகளுக்கு என்று வெகு சிலரே இருக்கின்றனர். சிறுவயதில் படித்தது கலாதர் என்பவரின் கதை. அஷ்டமாசித்திகளை விஞ்ஞானத்துடன் கலந்து எழுதியிருந்தார். பிறகு பேய்க்கதை மன்னன் :) பி.டி சாமி. ஆனால் அந்தளவிற்கு உவப்பாயில்லை. சிறுவயதில் படிக்கும் போதே பயம் வரவில்லை. 

இவ்விஷயத்தில் ஓரளவு வெற்றி அடைந்தவர் இந்திரா சவுந்திரராஜன். அவரது ரகசியம், விட்டுவிடு கறுப்பா, ருந்திர வீணை, சிவம், சிவமயம், காற்று காற்று உயிர் என்று அனைத்தும் படிக்க விறுவிறுப்பானவை.  ரகசியம் விகடனில் படு ஆர்வத்துடன் படித்த கதை. கதையின் சஸ்பென்ஸ் உடையும் இடம் கடைசி வரி. அது டி.வி தொடராக இன்னும் அட்டகாசமாக வந்தது. (டிவிடி கூட வந்துள்ளது, செம காஸ்ட்லி. வாங்க நினைத்தவன், மனைவியின் முறைப்பை கண்டு வைத்துவிட்டேன்) காற்று... கதையை இரவில் தனியாக படிக்க ஆரம்பித்து பயந்து வைத்துவிட்டேன். விஞ்ஞானத்தையும், அமானுஷ்யத்தையும் கலந்து, முடிக்கும் போது இரண்டில் எதை நம்புவது என்பதை வாசகனிடம் விட்டு விடும் திறமை இவரது சிறப்பு.

09 மார்ச் 2013

உதயசூரியன் - தி. ஜானகிராமன்

உதயசூரியன் உதிக்கும் நாடு ஜப்பான். ஜப்பானுக்கு சென்ற ஜானகிராமனின் அனுபவங்கள்தான் உதயசூரியன். ஜப்பானுக்கும் நமது பாரதம் போல நீண்ட பாரம்பர்யம் உண்டு. அணுகுண்டு என்னும் பெரிய அடிக்கு பின் அவர்களின் முன்னேற்றம் அளப்பரியது. எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும், விவசாயத்திலும் அவர்களின் நவீன் உத்திகள் மற்றவர்களை விட ஒரு மேலானாதாகவே இருக்கின்றது.

ஜப்பானில் போய் வத்தல்குழம்பு சாப்பிட்ட கதை மட்டும் இல்லை. ஜப்பானைப் பற்றி பல செய்திகளை கூறுகின்றார். வெறுமனே கூறிக் கொண்டு சென்றால் டாக்குமென்டரி படம் பார்த்த மாதிரி இருக்கும். ஆனால் தி. ஜாவின் பண்பட்ட எழுத்தில் அது அழகான சிறுகதை போல அமைந்துவிட்டது. 

கட்டுரை ஏதோ பத்திரிக்கையில் தொடராக வந்துள்ளது போல, ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சின்ன அழகான முடிவுடன் அமைந்துள்ளது. ஜப்பானிற்கு சென்றாலும் அங்கும் நாம் காண்பது மனிதர்களைத்தான். அனைத்து மனிதற்களுக்கும் உள்ள உணர்ச்சிகள் அவர்களுக்கு உண்டு, ஆனால் ஜப்பான் என்னும் தேசம் அவர்களை எப்படி வடித்துள்ளது என்பதை காட்டுகின்றார். அதனுடன் ஜப்பானை பற்றியும் அதன் அழகையும் பழமையையும் நகைச்சுவையுடன் எழுதியுள்ளார்.

ஜப்பான் போக விமானத்தில் ஏறும் போது ஆரம்பிக்கின்றது. விமான பயம் என்பது பொதுவானது, அந்த பயத்துடம் ஆரம்பிக்கும் அவரது பயணம் அதே விமானத்தில் ஒரு அழகான சிறுகதைக்கான முடிவுடன் நிறைவடைகின்றது. 

06 மார்ச் 2013

வாஷிங்டன்னில் திருமணம் - சாவி

வீட்டைக் கட்டி பார், கல்யாணம் செய்து பார் என்ற பழமொழி எக்காலத்திற்கும்  பொருந்தும் போல. இன்று இந்த இரண்டும் காண்டிராக்டர்களால் செவ்வனே நடத்தி முடிக்கப்படுகின்றது. இருந்தும் கல்யாண பையனுக்கு மனைவி மட்டும் அல்ல, கல்யாண காண்டிராக்டரும் அமைவது இறைவன் கொடுத்த வரம். 

காண்டிராக்டர் கையில் அனைத்தையும் கொடுத்துவிட்டாலும், உள்ளே ஒரு டென்ஷன் ஓடிக் கொண்டே இருக்கும். அதை யாரிடமும் தர முடியாது. அந்த கடவுளே வந்து கவலையை விடு நான் பார்த்து கொள்கின்றேன் என்றாலும், நமக்கு அவர் யாரவது ஆதிமூலமே என்று கூப்பிட்டு ஓடிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் இருக்கும். 

இன்றைய விஞ்ஞான வசதிகள் நிறைந்த காலத்திலேயே ஒரு திருமணத்தை நடத்தி வைப்பது இவ்வளவு சிரமம் என்றால், ஒரு ஐம்பது, அறுபது வருடம் முன்பு எப்படி இருக்கும். இங்கு நடக்கும் கல்யாணத்தை அமெரிக்காவில் செய்தால் என்னவாகும்? 

திருவையாறில் வெள்ளைக்காரர்களை பார்த்த சாவி, அதை கொஞ்சம் மாற்றி யோசித்ததன் விளைவு இக்கதை. விகடனில் தொடராக வந்து பெரிய வெற்றி பெற்றது. நாடகமாக கூட வந்துள்ளது என்று நினைக்கின்றேன்.

02 மார்ச் 2013

ஏழாம் உலகம் - ஜெயமோகன்


அதிகாலையிலேயே முழிப்பு வந்த பண்டாரத்திற்கு நிலைகொள்ளாமல் தவிக்கின்றார். அவரது சினைகண்ட மாட்டை நினைத்து. எப்போது பிரசவமாகும், காவலுக்கு ஆளிருந்தும் ஒரு முறை ஒரு குட்டியை நரி கொண்டு போய்விட்டது என்று பயந்து கொண்டிருக்கின்றார். மனைவி தான் பிரசவிக்கும் போது கூட இப்படி இல்லை, இப்போது என்ன இவ்வளவு தவிப்பு என்று அலுத்துக் கொள்கின்றாள். அவர் அவசர அவசரமாக அவரது மாட்டை காண போகின்றார். இப்படி நினைத்துக் கொண்டுதான் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு கையும் காலும் கண்ணும் இல்லாத முத்தம்மைதான் பிரசவிக்க போகின்றாள் என்பதில் ஆரம்பித்த அதிர்ச்சி கடைசிவரை போகவில்லை.


பெரிய கோவில்கள், தெருக்கள், பஸ் ஸ்டாண்ட் என்று பல இடங்களில் நாம் பார்க்கும் பிச்சைக்காரர்கள் பின்னால் இப்படி ஒரு மிகப்பெரிய வலை இருக்கும் என்பதும், இது ஒரு மிகப்பெரிய தொழில் என்றும் இதைப் படிக்கும் முன் வரை தெரியாது. நான் கடவுள் படத்திற்கு பின் இதை வாங்கினேன். அதில் காட்டியது இப்புத்தகத்தில் உள்ளதில் ஒரு பத்து சதவீதம் கூட இருக்காது.

பண்டாரம் ஒரு மிகப் பெரிய முருக பக்தர். அவர் மனைவி, குழந்தைகளிடம் பாசமாக இருக்கும் ஒரு குடும்பத்தலைவர். பெண் அழுவதால் நடு இரவில் ஓடிப் போய வளவி செய்து போடும் பாசமுள்ள தகப்பன். ஆனால் அவரது மறுபக்கம் பிச்சைக்காரர்களை வைத்து சம்பாதிக்கும் தொழில்.

27 பிப்ரவரி 2013

துப்பறியும் சாம்பு - தேவன்

தேவனின் மிகவும் பிரபலமான கதாபாத்திரம் துப்பறியும் சாம்பு. விளாங்காய் தலையும், ஜாடிக் காதுகளும், வழுக்கை தலையும், வளைந்த மூக்கும் கொண்ட ஒரு முட்டாள் (அ) அசடு சாம்பு. ஒரு நாள் ஒரு ஜவ்வாது வாசனையால் சாம்புவின் வாழ்க்கை மாறுகின்றது. ஒன்றுமில்லை வேலை போகின்றது. வேலை போன சாம்பு, வேறு குழப்பத்தில் சிக்கி ஏதோ உளற, அது வேலை செய்கின்றது. சாம்பு துப்பறிபவனாகின்றான். கோபாலன் என்னும் போலிஸ் இன்ஸ்பெக்டர் கூட சேர, சாம்புவின் திறமை (!) ஊரெங்கும் பரவுகின்றது. தமிழ் நாட்டிலும் பம்பாயிலும் பிரக்யாதி பெற்ற சாம்பு, லண்டனிலும் சென்று தன் திறமையை காட்டுவதில் முடிகின்றது.

ஐம்பது கதைகள் மொத்தம். தொடர்ச்சியாக எழுதினாரா, இல்லை விட்டு விட்டு அவ்வப்போது எழுதினார என்று தகவலில்லை. கதைகளை பார்த்தால் தொடர்ச்சியாக எழுதியதுபோலத்தான் உள்ளது.

அனைத்து கதைகளும் ஒரு சில டெம்ப்ளேட்டுகளில் அடைத்துவிடலாம். ஒரு குற்றம், சாம்பு ஏதாவது அச்சு பிச்சு என செய்ய போக, குருட்டு அதிர்ஷ்டத்தில் குற்றவாளி மாட்டிகொள்வான். கோபாலன் கண்ணில் நீர் வழிய சாம்பு நீர் கெட்டிக்காரனய்யா என்று புகழ, சாம்பு மெளனமாக முழிப்பான இல்லை மூர்ச்சையாகி விடுவான். குற்றம் பெரும்பாலும் நகை திருட்டு / வைரக்கடத்தல் / பணதிருட்டு. கொலைகள் பக்கம் சாம்பு அதிகம் போவதில்லை. கொஞ்சம் பயந்தாங்கொள்ளி.

ஐம்பதும் ஒரே மாதிரி என்றாலும், அனைத்தையும் ரசிக்கும் படி எழுதியுள்ளார். குழந்தைகள் விரும்பும் கதைகள் என்றாலும், நாமும் ரசிக்கலாம். சிரிப்பின் அளவு அவரவர் மனநிலையை பொருத்தது. குழந்தைமனமுடையவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கலாம். மிக சீரியசான, ஐம்பது வார்த்தைகளால் ஆன வாக்கியங்கள் கொண்ட குண்டு குண்டு புத்தகங்களை படிப்பவர்களும், எழுத்துக்களை கலைத்து போட்ட கவிதைகளை படிப்பவர்களும், எப்போதும்  வர்க்க வேறுபாடுகளை பேசி பேசி, பேசி பேசி களைத்து போகும் நபர்களும் யோசித்து படிக்கவும்.

24 பிப்ரவரி 2013

வேங்கடநாத விஜயம் - விஷ்ணுவர்த்தன்

திருப்பதி என்றால் நினைவிற்கு வருவது லட்டு என்றால் தப்பில்லை. அதற்கு பின்னால் தான் அங்குள்ள பெருமாள். அனைவரும் திருப்பதி திருப்பதி என்றாலும் திருப்பதி என்பது மலையின் கீழ் உள்ள ஊர். வேங்கடநாதன் குடி கொண்டுள்ள இடம் திருமலை. அத்திருமலையின் வரலாறுதான் இப்புத்தகம்.

ரிலையன்ஸ் டைம் அவுட்டில் தமிழ் புத்தகங்களும் கொஞ்சமே கொஞ்சம் உண்டு. பல சமையல் புத்தகங்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, யார் ..... என்பதற்கு நடுவில் ஒரு ஓரமாக கிடந்தது இப்புத்தகம். பக்திகதைகளை புத்தகமாக வாங்கியதில்லை. இது வரலாறு என்று கூறுகின்றதே என்ன என்று பார்க்கலாம் என்று வாங்கினேன். வீண் போகவில்லை. திருமலை பற்றிய பல புதிய செய்திகளை கூறுகின்றது.

இன்று மிகப்பெரிய பணக்கார கடவுள் (இந்த வரியே கொஞ்சம் அபத்தமாக உள்ளது, இருந்தும் வேறு வழியில்லை). தினம் தோறும் உற்சவம், லட்சக்கணக்கான பக்தர்கள், கோடிக்கணக்கான காணிக்கைகள் என்று காட்சியளிக்கும் திருமலை ஒரு காலத்தில் வெறும் வனாந்திரம். காட்டு மிருகங்கள் சுற்றி திரிந்த அடர்ந்த பிரதேசம். இரண்டு நாழி அரிசியும், இரண்டு நந்தா விளக்குகளுடனும்,  தனியாக நின்று கொண்டிருந்திருக்கின்றார். 

இன்று திருப்பதி ஆந்திராவில் இருந்தாலும் அவர் முழுக்க முழுக்க தமிழ்நாட்டை சேர்ந்தவர். (நல்ல வேளை அங்கு போனார், இங்கிருந்தால் நமது கடவுள் நம்பிகையற்ற அறங்காவலர்கள் கையில் தந்து அவரை மொட்டையடித்திருப்பார்கள்). அங்கிருப்பது பெருமாளே அல்ல, முருகன்; சிவன்; இன்னும் பல கதைகளை கேட்டிருக்கின்றேன். இப்புத்தகமும் அதையே சொல்கின்றது. மூலத்திருமேனியில் சங்கு சக்கரம் கிடையாது. இடையில் வாளும் உள்ளது. அவருக்கு பெயரும் வேங்கடத்துறைவர். இன்று திருமலை அருகில் உள்ள பெரிய ஊர் திருப்பதி, அன்று சந்திரகிரி.

17 பிப்ரவரி 2013

ராமானுஜர் - இந்திரா பார்த்தசாரதி

தமிழகத்தை பொறுத்தவரை சீர்திருத்தவாதி என்றவுடன் அனைவரும் கூறுவது ஈ.வெ.ராவைத்தான். அதற்கு முன்னால் செயல்பட்ட அனைவரும் மிகச்சுலபமாக மறக்க (மறக்கடிக்கப்) பட்டுள்ளனர். ராமானுஜர் அப்படிப்பட்ட மறக்கடிக்கப்பட்ட சீர்திருத்தவாதி. ராமானுஜர் விசிஷ்டாத்தைவத்தை நிலைநிறுத்தியவர், வைஷ்ணவ சம்பிராதயத்தை வழிமுறைப் படுத்தியவர் என்ற அளவிலேயே நினைவில் நிறுத்தப்படுகின்றார். மறக்கப்பட்டது அவரின் சீர்திருத்தக் கருத்துக்கள். 


எனக்கும் சோவின் புத்தகத்தை படிக்கும்வரை ராமானுஜரைத் பற்றி அதிகம் தெரியாது. எங்கோ அவர் கோபுரத்தில் ஏறி கூறிய கதையை படித்த நினைவு. அவர் அவ்வாறு கூறியதின் பின்னால் உள்ள தைரியம், அதன் நோக்கம் எல்லாம் தெரியாது. அவர் செய்த சீர்திருத்தங்கள், அனைத்து மக்களையும் அரவணைத்த பண்பு, ஆழ்வார் பாசுரங்களை பரப்பியது எல்லாம் தெரிந்து கொண்டது வெகு பின்னால்.


ராமானுஜர் இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ள ஒரு நாடகம். ஆனால் இது நாடகமல்ல. ஒரு கதை வடிவில் ராமனுஜரைப் பற்றி எழுதியுள்ளார். கதையுமல்ல ஒரு வாழ்க்கை குறிப்பு. அவரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை கோர்த்து எழுதியுள்ளார்.

14 பிப்ரவரி 2013

சின்ன எச்சரிக்கை

ஏதோ ஆர்வத்தில் நானும் ஒரு பிளாக் ஆரம்பித்து எனது குப்பையை இங்கு கொட்டிக் கொண்டிருக்கின்றேன். இந்த பிளாக் என் பெண்ணை விட 13நாட்கள் வயதில் மூத்தது. பெண் வளரும் போது, ப்ளாக் மட்டும் அப்படியே இருக்கின்றதே என்று ஒரே வருத்தமாக இருக்கின்றது. அதனால் இப்போதுதான் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கின்றேன். சின்ன சின்ன மாற்றங்கள், விபரீத தோற்றம் எல்லாம் நேரிடலாம். வருகின்ற இரண்டு மூன்று பேரும் பயந்து ஓடி விட வேண்டாம் என்பதற்கு தான் இந்த எச்சரிக்கை.

சும்மா ஒரு டெஸ்டிங்காக லைவ் ட்ராபிக் ஃபீடரை இணைத்து பார்த்தேன். வேலை செய்கின்றது (அதில் நான் மட்டும் தனியாக உள்ளது கொஞ்சம் பயமாக உள்ளது)

அடுத்தடுத்து ஏதாவது வரும். நீரை விட்டு பாலை உண்ணும் அன்னம் போல, பயத்தை விடுத்து பதிவை படிக்க.

12 பிப்ரவரி 2013

நான்காவது கொலை - ஜெயமோகன்

சனி, ஞாயிறு வேலை வெட்டி ஏதுமில்லை. டீவியும் டமார். இன்டர்நெட்டே கதி. வகை தொகையில்லாமல் கண்டதையும் படித்து களைத்து, மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இருந்த நகைச்சுவை வகை கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். 

பெரும்பலானவை சிரிக்க வைத்தது. சில புன்னகைக்கவும், சில அழவும் வைத்தது.அய்யோ பாவம், இலக்கியம் எழுதி எழுதி நகைச்சுவை கட்டுரைகளில் கூட பெரிய பெரிய வரிகளாகவும், கடின வார்த்தைகளை போட்டும் எழுதுகின்றாரே என்று நினைத்துக் கொண்டேன். அப்போதுதான் இக்கதை நினைவில் வந்தது. திண்ணையில் எப்போதோ படித்தது. திண்ணை புது திண்ணையாகி பழைய திண்ணையில் தூங்கியவர்களை எங்கோ விரட்டி விட்டுவிட்டார்கள். இக்கதை பத்திரமாக சொந்தக்காரர் திண்ணையில் இருந்தது.

ஆரம்பித்ததில் இருந்து சிரித்துக் கொண்டே இருந்தேன். கிண்டல் கிண்டல் கதை முழுவதும் கிண்டல். திகம்பர சாமியாரில் ஆரம்பித்து, பரத் சுசீலா வரை. சூப்பர் மேனிலிருந்து ஜேம்ஸ்பாண்ட் வரை அனைவரையும் கிண்டலடித்துள்ளார். 

அனைத்து எழுத்தாளர்களின் நடையையும், கதாபாத்திரங்களையும் அவர் இஷ்டத்திற்கு உலாவ விட்டுள்ளார்.  கணேஷ் வசந்த், சங்கர் லால், ஆழ்வார்க்கடியான், இன்ஸ்பெக்டர் கோபாலன், துப்பறியும் சாம்பு, ஷெர்லக் ஹோம்ஸ் வாட்சன், சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன், இரும்புக்கை மாயாவி, திகம்பர சாமியார் பெயரில்லா பாலகுமாரன் கதாபாத்திரம். அனைத்து எழுத்தாளர்களின் நடையும் இவருக்கு சரளமாக வருகின்றது. சுஜாதாவின் நடை அச்சு அசலாக பொருந்தி போகின்றது. இவர் அதே நடையில் ஒரு கதை எழுதி சுஜாதா எழுதினார் என்றால் கண்டிப்பாக நம்பிவிடுவார்கள். விஷ்ணுபுரமும், உபபாண்டவ புரமும் துணைக்கு வருகின்றது.

பகுதி 1, 234, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1314 

மனசு ரிலாக்ஸாகும்.

11 பிப்ரவரி 2013

ஸ்ரீரங்கத்து கதைகள் - சுஜாதா

ஸ்ரீரங்கம் எனக்கு பிடித்த கோவில். காரணம் எங்கள் ஊர்க்காரர்தான் அங்கும் பள்ளி கொண்டுள்ளார். எப்போதும் எங்கும் தனியாக போகப் பிரியப்படாத நான், தனியாக போக வேண்டும் என்று நினைத்து, காலையில் மூன்று மணிக்கு எழுந்து (அது ஒரு அதிசய நிகழ்வு என்று பின்னால் அனைவராலும் வர்ணிக்கப்பட்டது) யாரின் தொந்தரவுமின்றி சுற்றிப் பார்த்தேன். ரங்கநாதரை கூட்டமில்லா நேரத்தில் நிம்மதியாக பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு ஒரு ஆர்வத்தை உண்டாக்கியதற்கு மற்றுமொரு காரணம் சுஜாதா.

விகடனில் வரிசையாக வந்த கதைகளைப் படித்து ஸ்ரீரங்கத்தையும் கோவிலையும் பார்க்க அவ்வளவு ஆர்வம் வந்துவிட்டது. சுஜாதாவைப் பற்றிய முழு அறிமுகமும் அதுதான். அதுவும் அவரது தூண்டில் கதைகள் ஸீரிஸும்.

நான் பார்த்த ஸ்ரீரங்கம் அவரின் வார்த்தைகளிலேயே " ஆறாம் நூற்றாண்டிலிருந்து தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட கோயில் தம்மிடையே துருத்திக் கொண்டிருப்பதைப் பற்றி கவலை இல்லாத இன்றைய நகரம், மன்மத ராசாவையும் மாத்தி யோசியையும் பாடிக்கொண்டிருக்கின்றது" கோவிலும் தடுப்பு கட்டைகள், சங்கிலிகள், அர்ச்சனை டிக்கெட் என்று வருமானத்தை பெருக்கும் வேலையில் உள்ளது.

கடவுள் பக்தி இல்லாதவர்களின் நிர்வாகத்தில் வேறு என்ன நடக்கும். தில்லை நடராஜனை, திருவரங்க ரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களா கோவிலை பாதுகாக்க போகின்றார்கள்.


முதல் செட் 1983ல் எழுதியுள்ளார். நான் ஒரு வயது குழந்தையாக இருந்த போது எழுதப்பட்ட கதைகள்.  அடுத்த செட், 2003ல். கல்லூரி படிக்கும் போது வரிசையாக படித்தது. நடுநடுவே வெவ்வேறு வருடங்களில் ஸ்ரீரங்கத்தை மையமாக வைத்து நிறைய எழுதியுள்ளார். இது ஸ்ரீரங்கத்தை மையமாக கொண்டதால், இது அந்த ஊரின் கதையல்ல. அம்மனிதர்கள் எந்த ஊரிலும் இருக்கலாம். அவரே சொல்வது போல "ஸ்ரீரங்கம் என்பது ஒரு மெட்ஃபோர், ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென்று ஒரு ஸ்ரீரங்கம் இருக்கும், அதை நினைவுபடுத்தவே இக்கதைகள்". 

சுஜாதா ரங்கராஜனாக ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது கிடைத்த அனுபவங்கள் கதையாகியுள்ளன. சில கற்பனை கதைகளையும் ஸ்ரீரங்கத்திற்கு ஏற்றி அனுப்பியிருக்கலாம்.

04 பிப்ரவரி 2013

பனிமனிதன் - ஜெயமோகன்


புத்தகம் படிக்கும் வழக்கம் எப்படி ஆரம்பித்தது என்று யோசித்து பார்த்தால், தினமலர் சிறுவர்மலல் ஆரம்பித்தது. பலமுக மன்னன் ஜோ, சோனி பையன், லக்கி (மறந்துவிட்டது, படம் வரைந்தால் அது நிஜமாக மாறும்), ஜாக்பாட் ஜாக்கி, இன்னும் பல கேரக்டர்கள். பின்னால் காமிக்ஸ், கோகுலம், அம்புலிமாமா, பூந்தளிர் என்று முன்னேற்றம்.

இருபது வருடங்களுக்கு முன்பு காணப்பட்ட அப்புத்தகங்கள், கேரெக்டர்கள் எல்லாம் இப்போது மறைந்து வருவதைக் கண்டு வருத்தமாக உள்ளது. என் குழந்தைகள் எதைப் படிக்கும் என்று வருத்தம் ஏற்படுகின்றது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் இன்னும் வருகின்றனவா என்று தெரியவில்லை.

நன்றாக மீண்டும் யோசித்துப் பார்த்தால் புத்தகங்கள் மேல் ஒரு ஆர்வம வர மற்றும் ஒரு முக்கிய காரணம், சிறு வயது முதல் கேட்ட கதைகள். பக்கத்து வீட்டு பாட்டி சொன்ன கதைகள், துருவன் கதை, குசேலன் கதை, தியாகராஜர் கதை, ராமதாசர் கதை, பாரதக் கதைகள். சிறுவயதில் கேட்ட அக்கதைகள் தான் பின்னால் புத்தகங்கள் படிக்க காரணம். கதைகள் கேட்க கேட்க கற்பனை உலகம் திறக்கின்றது.

பெரும்பாலான குழந்தைகள் கதைகள் முழுவது சாகசக் கதைகளாகத்தான் இருக்கின்றன. குழந்தைகளின் கற்பனைத்திறன் என்பது பெரியவர்களை விட கண்டிப்பாக அதிகம். அவர்களின் கற்பனை உலகில் எவ்வித தடைகளும் இல்லை, தர்க்க நியாயங்களும் இல்லை. எல்லையில்லாதது. பெரியவர்களின் கற்பனை அவர்களின் படிப்பு, அனுபவத்தால் குறைப்பட்டது. பஞ்சதந்திரக் கதைகள் போன்றவை சாகசத்துடன் ஒரு நீதியையும் குழந்தைகளுக்கு கற்பிக்கின்றது. தத்துவங்களை குழந்தைகள் மேல் திணிக்க முடியாது, அறிமுகப்படுத்தலாம்.

01 பிப்ரவரி 2013

அடடே...

மதியின் கார்டூன்களின் ரசிகன். வழக்கமாக கலைஞர் விவ்காரம் என்றால் அவருக்கு ஏக குஷி. இன்று வந்துள்ள அவர் கார்டூன் பிரமாதம். உண்மையில் அது போல வந்திருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

நன்றி தினமணி & மதி

30 ஜனவரி 2013

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 11



முந்தைய பகுதிகள்


பகுதி 9
பகுதி 10



101. பாரிமுனை டு பட்ணபாக்கம்

   
       இரு போன்ற மனிதர்களை பல முறை பல இடங்களில் பார்த்திருப்போம். அதை எப்படி ஒரு கதையாக்குவது என்பதுதான் சூட்சுமம். ஒரு குடிகாரன் டிராமில் செய்யும் அட்டகாசம். அவனது பேச்சுதான் கதை முழுவது. நன்கு ரசிக்கலாம்

102. கம்ப்ளெய்ண்ட்

       அரசாங்க அலுவலகத்தில் நாம் தரும் கம்ப்ளெய்ண்ட்களின் கதி என்ன? சாதாரண சிறு அலுவலகங்களிலேயே கஷ்டம். மிகப்பெரிய ஒரு யந்திரமான ரயில்வே பற்றி புகார் அளித்தால்? சாப்பாடைப் பற்றி ஒரு புகார், அது என்னவாகின்றது?

103. வேதாந்தியும் உப்பிலியும்

       வேதாந்தி முஸ்லீமாக மதம் மாறிவர், உப்பிலி ஒரு வாய்ச்சவடால் ஆசாமி. சீமாண்டி உப்பிலியின் அண்ணா பையன். அவர்களின் உரையாடல் தான் இக்கதை.


        நமது அரசியல்வாதிகளை நக்கலடிக்கும் கதை. டெல்லியில் யாரையாவது பார்த்திருப்பார் போல, தனியாக பார்க்க வேண்டுமா என்ன எல்லாரும் ஒரே மாதிரிதானே. உளுந்து வாரியத்தலைவருக்கு ஏகப்பட்ட மரியாதை, அதைக் கண்டு வியக்கும் ஒரு சாதரணர். அவர் ஒரு நாட்டின் மந்திரி.


        மீண்டும் உப்பிலியும் சீமாண்டியும். அவரைக் காண வரும் கோவிந்து. அவர்தான் நாதரட்சகர். தனக்குதானே அட்சதை போட்டுக் கொள்ளும் ஒரு கேரெக்டர்.

106. மிஸஸ் மாதங்கி.

        அதிகார வர்கத்தின் முகத்தைக் காட்டும் கதை. பெரிய பதவியில் இருப்பவர்கள் ஒரு தனி ரகம். அதுவும் அரசாங்க பதவியில் இருப்பவர்களை தனியாக கண்டு பிடிக்கலாம். ரயில் நிலையத்தில் நிற்கும் போது அவர்களை தனியாக கண்டு பிடிக்கலாம். ஒரு விரைத்த முகம், ஒரு அலட்சிய பார்வை, வித்தியாசமான உடல் மொழி. அப்படி பட்ட ஒரு அதிகார கோத்திரத்தின் ஒரு புள்ளி மாதங்கி. அவரிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு சாதாரண கோத்திரன்.


       ஒரு பெரிய மனிதர். அக்கால கிசு கிசு. பல பெரிய மனிதர்களின் ரசனை இப்படித்தான் இருக்கும் போல.

27 ஜனவரி 2013

சொந்த ஊர் புராணம்

எனது சொந்த ஊர் கோம்பை. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையத்திற்கு அருகில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோம்பை என்றால் மலைகள் சூழ்ந்த பகுதி என்பார்கள். ஏகப்பட்ட கோம்பைகள் தமிழகத்தில் உள்ளது. 

கோம்பை நாய்களுக்கு பெயர் போனது. வேட்டை நாய்கள். இப்போது உள்ளது போல் தெரியவில்லை. நான் பார்த்ததும் இல்லை. இரண்டு கோம்பை நாய்கள் சேர்ந்தால் ஒரு சிறுத்தையைக் கூட கொல்லும் என்பார்கள். கோம்பை நாய்களுக்கு பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கிடையாது, நேரடி நடவெடிக்கை.   எதிரியைக் கண்டு குலைத்து நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக பாய்ந்துவிடும்.

கோம்பையின் மற்றொரு பெருமை, தேர். மிகப்பெரிய தேர் திருவாருர் தேர். அது அகலம், உயரம் குறைவு. உயரமான தேர் ஶ்ரீவில்லிபுத்தூர் தேர். அதற்கு அடுத்த உயரமான தேர் கோம்பைத் தேர். இத்தேர்க்கு சொந்தக்காரரும் ரங்கமன்னார் தான். இக்கோவிலில் குடி கொண்டுள்ளவரும் ரெங்கநாதர்தான். ஊருக்கு வெளியில் மலையடிவாரத்தில் நிம்மதியாக தூங்கிக் கொண்டுள்ளார். யாரும் அவரை தொந்தரவு செய்வதுமில்லை. சனிக்கிழமைகளில், மாத முதல் தேதியில் மட்டும் அவரை எழுப்பி தங்கள் வருகையை பதிவு செய்வார்கள் பக்தர்கள். புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளும் அவர் பிசி. காலை ஆறு முதல் மாலை ஏழு வரை. மற்ற நாட்களில் அவரும் என் அப்பாவும் மட்டும்தான்.

அந்த அழகான தேர் ஜாதிக் கலவரத்தால் நின்று போனது. பத்துநாள் உற்சவம். எனக்கு தெரிந்து தேரோட்டம் மொத்தம் நான்கு முறை தான் நடைபெற்றுள்ளது இந்த முப்பது வருடங்களில்.

ஊரில் எனக்கு தெரிந்து வேறு சிறப்புகள் இருக்கலாம், ஆனால் நான் கோவிலைச் சுற்றி வளர்ந்ததால் அதைப் பற்றி தான் அதிகம் பேச முடியும். கோவில் அமைந்துள்ள அழகிய மலையடிவாரம், மேலேறினால் கேரளா. ராமக்கல் மெட்டு என்று அழைக்கப்படும். அப்பெயருக்கு காரணம் இக்கோவில்தான். 

ராமக்கல் மெட்டு பற்றி ஜெயமோகன் தளத்தில் இங்கே. அதில் குறிப்பிடப்பட்டுள்ள குறவன் குறத்தில் சிலை, இம்மலை மேல் உள்ளது. அங்கிருந்து கீழிறங்கினால் கோம்பை. 

ராமக்கல் மெட்டு பெயர்க் காரணத்தை கீழேயுள்ள புகைப்படங்கள் சொல்லும்.

24 ஜனவரி 2013

தி.ஜானகிராமன் சிறுகதைகள் - 10


முந்தைய பகுதிகள்


       அனைவரும் விரும்பும் தபால்க்காரர் தாத்தாச்சாரி, தள்ளாத வயதிலும் ஊர் ஊராக நடக்கும் பெரியவர். அவர் நடந்து நடந்து மறக்க நினைப்பது அவர் மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையை. ரயிலில் தவறான பாதையில் ஒரு முறை சென்ற மனைவியுடன் ஒரே வீட்டில் இரண்டு குடித்தனங்கள் நடத்திய நினைவை மறக்க நடக்கின்றார், நடந்து கொண்டே இருக்க நினைக்கின்றார்.

92. பஞ்சத்து ஆண்டி

     தொழில் நசிந்து போன ஒரு நெசவாளி. பஞ்சம் பிழைக்க ஊர் விட்டு ஊர் வந்து கடைசியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வருகின்றான். அவனின் நிலையைக் கண்டு பரிதாபப்படும் குரங்காட்டி அவனது மற்றொரு குரங்கை அவனிடம் தந்து அவனை அதை வைத்து பிழைக்குமாறு கூறுகின்றான். பஞ்சத்து ஆண்டிக்கு பரம்பரை ஆண்டியைப் போல் இருக்க முடியாமல், குரங்கை சாக விட்டு விடுகின்றான். பாவம்.

93. நான்தான் ராமன் நாயர்

       ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒரு வித்தியாசமான கேரெக்டர். பிழைக்க வழியில்லாமல் மருத்துவமனையில் நோயாளி என்ற போர்வையில் உண்டு உறங்கும் ஒரு ஆள். கடைசியில் அதுவே ஒரு தொழிலாகின்றது, அங்குள்ள நோயாளிகளுக்கு எடுபிடி வேலை செய்து வாழ்கின்றான். கடைசியில் ஒரு நாள் வெளியேற்றப் படுகின்றான்