31 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 6


முந்தைய பகுதிகள்


பகுதி 1
பகுதி 4

51. நடராஜக் கால்

       என் உறவினர் ஒருவர், நான் பி.எஸ்.ஸி கம்யூட்டர் சைன்ஸ் சேர்ந்த போது அவர் அவர் பெண்ணிற்கும் அதே சீட் தேடினார். கிடைக்காமல் பி.சி.ஏ சேர்த்து விட்டார்.  அதோடு நில்லாமல் எங்கள் வீட்டில் வந்து, பி.எஸ்.ஸி எல்லாம் வேஸ்ட், இப்ப எல்ல்ல்லாம் பி.சி.ஏ தான் என்று கொளுத்தி போட ஒரு வாரம் எரிந்தது. எல்லா ஊரிலும் இது போல வெட்டிப் பந்தா மாகானுபாவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு சகலமும் தெரியும், எல்லாம் தூசி. தாம் வாழும் வாழ்க்கை எப்படி இருந்தாலும் அது பெரிது, மற்றவர்களின் வாழ்க்கை எல்லாம் வெறும் வெற்றுவேட்டு. அப்படி பட்ட நடராஜரின் தாண்டவம். வெட்டியாக பூர்வீக சொத்தை உக்கார்ந்து அழிக்கும் நடராஜர், ஊரான் பெண்ணின் திருமணத்திற்கு உபதேசம் செய்கின்றார். அக்கால மிராசுதார்களின் வெட்டி பஞ்சாயத்தை சரியாக கிண்டலடித்துள்ளார்.

52. நடேசண்ணா

       தன்னை போல பிறரையும் நினை என்பதை வேறு விதமாக புரிந்து கொண்டுள்ள மக்கள் நிறைந்த உலகம். தன் மன அழுக்குகளை அடுத்தவர் மேல் ஏற்றி, தான் அவ்விடத்தில் இருந்தால் நாம் எப்படி நடப்போமோ அப்படித்தான் அவரும் நடப்பார் என்று நினைப்பவர்கள்தான் அதிகம். ஒரு பாடகருக்கும் அவரது ரசிகைக்கும் இடையிலான் உறவை கொச்சைப் படுத்தி ஊரே பேச, பாடகரின் பாடல் வெளியில் யாருக்கும் கேட்காமல், உள்ளே இறைவனுக்கு மட்டும் கேட்கும் படியாகின்றது. நல்ல கதை. விவரிப்பு, உள்ளாடும் மெல்லிய கேலி.

53. ஆயிரம் பிறைகளுக்கு அப்பால்

    டைப்ரைட்டர் சொல்லும் கதை. யாரையோ, எதையோ மையப்படுத்தி எழுதியது போல இப்பொது ஒன்றும் புரியவில்லை.

30 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 5


முந்தைய பகுதிகள்


பகுதி 1

41. இவனும் அவனும் நானும்
            தி. ஜாவின் கதைகள் சில கொஞ்சம் வரம்பு மீறிய உறவுகளை, மன விகாரங்களைப் பற்றி நாசுக்காக தொட்டுச் செல்லும். பல இசையுடன் இழைந்து செல்லும். இவன் அவன் மனைவியைப் பற்றி மனதில் சேர்த்து வைத்திருக்கும் குப்பையை அவன் தன் இசையால் சுத்தப்படுத்துகின்றான். நான் என்னும் மனசாட்சி மீண்டும் குப்பை சேருமா? என கேட்டுக் கொண்டுள்ளது. பிடித்த கதையில் ஒன்று. அவன் பாடும் வர்ணனை நாமும் ஒரு தூய இசையை கேட்கும் அனுபவத்தை தருகின்றது. ஒரு அருமையான கதை.

           பல பழங்கால பெரியவர்கள் பேசுவதைக் கேட்டால் அப்படிப்பட்ட காலத்தில் நாம் இல்லையே என்று ஒரு ஏக்கம் உண்டாகும், சில சமயம் நமக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். இப்போது நேர்மைக் குறைவு என்பது அப்போது மரியாதை, அந்தஸ்த்தாக இருந்திருக்கின்றது. ராஜா காலத்து காணிக்கை மரியாதை சில காலம் வரை அதிகாரிகளுக்கும் இருந்து வந்துள்ளது. இப்போது உள்ளது. அப்படிப்பட்ட ஒரு பெரியவர் கதை. தி. ஜாவின் தஞ்சாவூர் வர்ணனை ஒரு கிராமத்திற்கு அழைத்து செல்கின்றது. லஞ்சமாக பெற்ற பணத்தை பெருமையாக பேசும் அவர் நித்திய நியமை தருவது ஒரு அருவெருப்பைத்தான்.


          பிடித்த சிறுகதை. முத்து ஒரு சமையல்காரர். வயது அவரின் திறமையின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. அவரது ஒரே மகன் அக்கண்ணா குட்டி, உருப்படாதது என்று ஆசிர்வதிக்கப்பட்டும், வெளியே எங்கோ வேலைக்கு சேர்ந்து அப்பாவிற்கும் பணம் அனுப்புகின்றான். அவனுக்கு சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் தரும் புண்ணியவானைப் பார்க்க போகும் முத்து, அவ்வளவு பணம் தரக்காரணத்தைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றார். முடிவில் அவர் மனம் மெதுவாக மாறக் காரணம் பணமா? இல்லை உண்மையான அறிதலா?

28 டிசம்பர் 2012

சிங்கிள் ஸீட்

திருமணம் ஆனபின் நான் அடைந்த முக்கிய நன்மை பஸ்ஸில் சிங்கிள் ஸீட் புக் செய்ய வேண்டியதில்லை. எனக்கும் என் மனைவிக்கும் இரண்டு இருக்கைகள். அவள் பிரசவத்திற்கு போன பின் மறுபடியும் அப்பிரச்சினை.

சிங்கிள் சீட் முன்பதிவு செய்வதென்றால் எப்போதும் எனக்கு கொஞ்சம் பயம். பஸ்ஸில் ஏறி எல்லாம் செட் செய்துவிட்டு அமர்ந்தால், யாராவது ஒரு பெண்மணி / ஆண்மணி வந்து "சார், கொஞ்சம் மாறி உட்கார முடியுமா?" என்பார்கள். சிலர் அதிகாரமாக "சார் என் ஸீட் அங்க இருக்கு, நீங்க அங்க போய்டுங்க" என்பதுண்டு.

இது அடிக்கடி நிகழ்வதுண்டு. என்னைப் பார்த்தால் அவர்களுக்கு இவன் சொன்னபடி கேட்பான், மாற்றிக் கொண்டு போய்விடுவான் என்று எப்படித் தெரியும் என்று தெரியவில்லை. எப்போதும் நான் மாறி அமரும் சீட்டின் அடுத்து இருப்பவனிடம் கேட்பதில்லை. டிரெயினில் ஒரு தடவை ஏழு இடம் மாறி இருக்கின்றேன், ஏழாவது D1 ல் இருந்து D7. அதனாலேயே எப்போதும் அப்பர் பெர்த் வாங்கி ஏறி படுத்து விடுவது. எவனும் கேட்க மாட்டான். பஸ்ஸில் ஏற்கனவே யாரவது புக் செய்த இருக்கைக்கு அடுத்த இருக்கையை புக் செய்து விடுவேன். அதனால் கொஞ்ச காலம் நிம்மதியாக இருந்தேன்.

பேசும் பொம்மைகள் - சுஜாதா

கணேஷ் வசந்த் வரும் சைன்ஸ் ஃபிக்‌ஷன். டவுன்லோடிங் என்பதை அடிப்படையாக கொண்ட ஒரு நாவல். 90களில் குங்குமத்தில் தொடராக வந்துள்ளது. மனிதனின் மூளை என்றும் அனைவருக்கும் புதிர். விஞ்ஞானிகளின் பல ஆராய்ச்சிகளால் இன்னும் முழுவதும் புரிந்து கொள்ள முடியாத ஒரு பகுதி. மனம் என்பது ஒரு தனியான பகுதியா, மூளையின் ஒரு பகுதியா, வெறும் நினைவுகளா அதுவே இன்னும் குழப்பம்.

உலகின் மிக வேகமான கம்ப்யூட்டர் மனித மூளை. எப்போதோ சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பார்த்த ஒருவரை, அவரது சாயல் மாறியிருந்தும் சில நிமிடங்களில் கண்டு பிடிக்கும் ஒரு கம்ப்யூட்டர். அது வைத்திருக்கும் டேட்டாக்களை சேமிக்க எத்தனை டெரா பைட் தேவைப்படும். அதை அலசி ஆராய எத்தனை வேகமான ப்ராசசர்கள் தேவை. அப்படிபட்ட மூளையின் அமைப்பை கண்டு கொள்ள முடிந்தால் என்னாவாகும், அதுதான் கதை.

கதை மனிதனின் நினைவுகளை இயந்திரத்திற்கு மாற்றி மீண்டும் அதை மனிதனுக்கு மாற்றும் சாத்தியத்தை பேசுகின்றது. எப்படி அது சாத்தியம் என்பது எல்லாம் இங்கு தேவையில்லை. அது தெரிந்தால் ஏன் கதை எழுத வேண்டும், நோபல் பரிசு வாங்கப் போயிருக்கலாம்.

19 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 4

முந்தைய பகுதிகள்


31. அர்த்தம்

          அனைவரின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை போரடித்து விடும். திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அண்ணன், புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பி. அண்ணன் ஒண்டி என்பதால் எதற்கு சரிபாதி தரவேண்டும் என்று நினைக்கும் தம்பிக்காக தன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தேடும் அண்ணன். "சிவன் கோயிலில் விளக்கணைத்து கொண்டிருப்பவன்" இதற்கு என்ன அர்த்தம்?

32.  ராம ஜெயம்

         கெட்டவர்கள் மேலும் மேலும் கெட்டது செய்தால் யாரும் அதை பெரும் தவறாக நினைப்பதில்லை. அவன் அப்படித்தான் செய்வான் என்று நினைத்து விட்டு விட்டு போய்விடுவார்கள். நமது அரசியல்வாதிகள் செய்கின்ற ஊழல் மாதிரி. நல்லவர்கள் ஒரு தவறு செய்தாலும் ஏறி மிதித்துவிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பார்கள். அவர்களும் சரியாக தவறை செய்ய தெரியாமல் மாட்டியும் கொள்வார்கள் வாழ்வில் ஒரே ஒரு முறை ஒரு முறை அல்ப காரணத்திற்கு தவறு  செய்யும் ராகவாச்சாரி மாட்டியும் கொள்கின்றார். 

18 டிசம்பர் 2012

கல்கி சிறுகதைகள்

புதுமைபித்தன் சிறுகதைகளுடன் சேர்த்து சேகரித்தது இது. html பேஜிலிருந்து pdf ஆக மாற்றி வைத்துள்ளேன்

பெரும்பாலன சிறுகதைகள் அக்காலத்தை சேர்ந்தவை. என்றைக்குமான் சிறுகதைகள் குறைவு. சில இன்று பொருத்தமாக இல்லாமல் போகலாம். அனைத்து சிறுகதைகளிலும் கல்கியின் மெலிதான நகைச்சுவை அம்சம் இருக்கின்றது. பிரச்சார தொனி அதிகம்.


கல்கி சிறுகதைகள் பகுதி - 1
கல்கி சிறுகதைகள் பகுதி - 2
கல்கி சிறுகதைகள் பகுதி - 3
கல்கி சிறுகதைகள் பகுதி - 4
கல்கி சிறுகதைகள் பகுதி - 5
கல்கி சிறுகதைகள் பகுதி - 6
கல்கி சிறுகதைகள் பகுதி - 7

பெங்களூரு புத்தக கண்காட்சி 2012

வருடா வருடம் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகின்றது. அதற்கு செல்ல முடியாமல் தடுப்பது அது நடைபெறும் காலம். பொங்கல் சமயம். பொங்கல் விடுமுறையில் ஊருக்கு செல்லும் போது, இதற்கு தனியாக செல்ல முடியாது. நேற்று பத்ரி அவர்களின் தளத்தில் பெங்களூருவில் புத்தக கண்காட்சி நடைபெறுகின்றது என்று அறிவித்திருந்தார். நடக்கும் இடம் என் அலுவலகத்திற்கு மிக அருகில், பேலஸ் கிரவுண்டில்.

பேலஸ் கிரவுண்ட் என்பது பெரிய இடம், எந்த பகுதி என்பது சரியாக தெரியவில்லை. அவ்வழியாக செல்லும் அலுவலக நண்பருடன் வண்டியில் தொற்றிக் கொண்டேன். ரீட் புக்ஸ் என்று பெரிய பேனர். புத்தக கண்காட்சி நடப்பதே தெரியவில்லை. இருபது ரூபாய் கட்டணம்.

அதிக கூட்டமில்லை. திருப்பதி போன்று அனைத்துப் பக்கமும் தடுப்புகள் வைத்து, உள்ளே நுழைபவர்கள் அனைத்து கடைகளையும் தரிசனம் செய்த பின்பே வெளியே செல்ல முடியும் என்பதாக செய்து வைத்துள்ளனர். இது அறியாமல் வெட்டியாக போன வழியிலும், பின்புறமும் முன்புறமுமாக அரைமணி நேரம் சுற்றித் திரிந்தேன்.

12 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 3

முந்தைய பகுதிகள்

பகுதி - 1
பகுதி - 2

21. திண்ணை வீரா !

         நாம் அடிக்கடி பார்க்கும் மனிதர்தான். வாயால் பேசியே காரியம் சாதிக்கும் ஒருவர். ஊரார் பஞ்சாயத்தை தீர்க்கும் பெரிய மனிதர். "எழுந்து வந்தேன்னா என்ன ஆகும் தெரியுமா" என்று மிரட்டியே அனைவரின் பஞ்சாயத்தை தீர்ப்பவரின் மிரட்டலின் முரண் கடைசியில். நடக்காத மிரட்டல் என்றாலும் அதற்கு கீழ்படியும் மக்கள். தி. ஜாவின் விவரிப்பும், வட்டார வழக்கும்  மிகவும் கவர்ந்துவிட்டது.

22. அடுத்த

          பிரசவத்திற்கு ஆம்புலேடத்திற்கு காத்திருக்கும் தம்பதியினரின் கதை. ஒரு குழந்தையை வளர்க்கவே அவனவன் திணறும் போது அக்காலத்தில் எப்படி இரட்டை இலக்க குழந்தைகளை வளர்த்தனரோ. செல்வம் உடையவருக்கும் மேலும் செல்வமும், இல்லாதவர்க்கு இல்லாமையே தொடர்வதும் குழந்தைச் செல்வத்திற்கும் பொருந்தும். எல்லாம் பகவான் செயல் (எஸ்.வி சேகர் குரலில் படித்துக் கொள்ளவும்)

11 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 2

இதன் முந்தைய பகுதி

11. இசைப் பயிற்சி

            சிலருக்கு பழமை மீது கோபம் இருக்கும், பழைய பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். அதே சமயம் அவர்களின் சூழல், வளர்ப்பு, அக்கம்பக்கம் அவர்களை மா(ற்)ற விடாது. அப்படிப்பட்ட ஒருவர் மல்லி. ஒரு கிறிஸ்தவனுக்கு சங்கீதம் சொல்லித்தர ஆசைப்படும் அவர், அவரின் சுற்றத்தை தாண்ட முடியாமல், தோட்டத்தில் நாற்பதடி தூரத்தில் வைத்துக் கற்றுத்தருகின்றார். கடைசியில் அவர் உணரும் பயமும், தனிமையும் யதார்த்தம்

12. விளையாட்டு பொம்மை

           ஒரு கட்டத்திற்கு மேல் உடலுக்கு வயது ஏற ஏற முதியவர்கள் மனம் இளமையாகிக் கொண்டே வருகின்றது. சிங்கம் போன்ற ஒரு வக்கீல், வயதாகி ஒரு குழந்தை போல் அனைத்தையும் மறந்து, மூன்று வயது குழந்தை சொல் படி கேட்டு நடக்கின்றார். நல்ல கதை, அப்பெரியவருக்கும் மனைவிக்கும் உண்டான பாசம், காதல் உருக்கம். பல வருடம் வாழந்தவரை விட்டு பிரிவது என்பது சாதரணமல்ல.

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 1

தி.ஜா ஒரு மிகச்சிறந்த நாவலாசிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியரும் ஆவர் என்பதை காட்டுகின்றது, அவரின் சிறுகதை தொகுப்பு. இது அவரின் படைப்புகளின் முதல் தொகுதி. மொத்தம் 70 கதைகள் பகுதி பகுதியாக வரும்.

அவர் சிறுகதைகளையும் நாவல்களைப் படிக்கும் போது ஒரு அமைதியான நதி அருகில் அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்ப்பது போன்ற சித்திரம் உண்டாகின்றது. இதிலும் பெரும்பான்மையானவை தஞ்சாவூர் ஜில்லா கதைகள் போலத் தெரிகின்றது. அனைத்து கதைகளிலும் பலம் உரையாடல்.


            கங்கைக்கு தன் அக்காவிற்காக வரும் சின்னசாமி, அங்கு தன்னை ஏமாற்றிய அன்னதாதா துரையப்பாவை பார்க்கின்றார். கதை என்று பெரிதாக இல்லை, ஏமாற்றும் மனிதர்களையும், தன்னை ஏமாற்றியவனின் பாவத்தை சேர்த்து கங்கையில் கரைக்கும் மனிதர்களையும் பற்றியது.

04 டிசம்பர் 2012

ப்ரியா - சுஜாதா

ஒரு கணேஷ் வசந்த் கதை. வசந்த் பாவம் இதில் முதல் அத்தியாயத்துடன் கிளம்பிவிடுகின்றான். கதை நடக்குமிடம் லண்டன் என்பதால் எதற்கு வீண் செலவு என்று விட்டு விட்டு கணேஷ் மட்டும் போய்விட்டான்.

ப்ரியா ஒரு சினிமா நடிகை அவளின் கணவன் ஜனார்த்தனன் அவள் காதலனுடன் ஓடிவிடக் கூடாது என்று கண்காணிக்க கணேஷை ப்ரியாவுடன் லண்டன் அனுப்புகின்றான்.  ஜனார்த்தனன் லண்டன் வரும் போது ப்ரியா காணாமல் போகின்றாள். அவளை கடத்தி வைத்து பணம் பறிக்கும் முயற்சி நடக்கின்றது. இரு நாட்களில் ப்ரியா கொலை செய்யப்பட்டு கிடக்கின்றாள். யார் கொலை செய்தது என்பதை ஸ்காட்லாண்ட் யார்டுடன் சேர்ந்து கணேஷ் கண்டுபிடிப்பது மிச்சக் கதை.