26 நவம்பர் 2012

யாருக்கு முதல் பத்திரிக்கை?

எச்சரிக்கை

இது ஒரு சொந்த அனுபவம். அங்கங்கு என் கற்பனை ஊற்றை (????)  கொண்டு மறந்து போன இடைவெளியை நிரப்பியுள்ளேன். ஏதாவது ஒரு கல்யாணப் பத்திரிக்கையை பார்த்தால் என் மனதில் வந்து போகும் இச்சம்பவத்தை எழுதிப்பார்த்தால் என்ன என்று முயற்சி செய்து பார்த்தேன். சனி ஞாயிறு வீட்டில் தனியாக வெட்டியாக அமர்ந்து பொழுதைப் போக்கினால் வேறு என்ன தோன்றும்?

முயற்சி கொஞ்சம் மோசமாகவோ இல்லை மிக மோசமாகவோ இருக்கலாம். படித்துவிட்டு மன உளைச்சல் அடைபவர்கள் (66A எல்லாம் உதவாது இதற்கு), அடுத்த முறை இது போன்ற எச்சரிக்கையை படித்து விட்டு தப்பிக்கவும். சொற்குற்றம் இருந்தால் மன்னிக்க.

சொந்தக் கதை எழுதும் போது கண்டிப்பாக இது போன்ற எச்சரிக்கை இருக்கும். டோண்ட் ஒர்ரி. பயப்பட வேண்டாம் அடிக்கடி இது போல் நிகழாது.

24 நவம்பர் 2012

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

சில வருடங்களுக்கு முன்பு அலுவலகத்தில் வேலை வெட்டி ஏதுமில்லாத போது சேகரித்தது. சென்னை லைப்ரேரி தளத்தில் தனித்தனி பக்கங்களில் இருந்ததை அடிக்கடி கிளிக்கி கிளிக்கி படிக்க சோம்பல் பட்டுக் கொண்டு, ஒரே நாளில் காப்பி பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டேன்.

முழுவதும் படித்ததில்லை. படித்த சிலவும் எனக்கு அவ்வளவாக பிடித்ததாகவும் இல்லை. ஒன்றிரண்டு கதைகள் நன்றாக இருந்தன. ஒரு விதமான எள்ளல் தொனியுடனே கதைகள் இருப்பது போல் தோன்றியது.

எனக்கு கணிணி திரையில் படிப்பது அலுப்பூட்டுவதாக உள்ளது. எப்போதாவது பொழுது போகாவிட்டால் படிப்பதற்காக வைத்துள்ளேன்


புதுமைப்பித்தன் கதைகள் பகுதி 1
புதுமைப்பித்தன் கதைகள் பகுதி 2

புதுமைப்பித்தன் கதைகள் பகுதி 4
புதுமைப்பித்தன் கதைகள் பகுதி 5
புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு கதைகள் 

முகம்மது பின் துக்ளக் - சோ

சோ இவரை எந்த வகையில் சேர்ப்பது. எழுத்தளாரா, பத்திரிக்கையாளரா, நாடக ஆசிரியரா, சினிமா நடிகரா, நாடக நடிகரா, அரசியல்வாதியா, வழக்கறிஞரா, இயக்குனாரா? எல்லா துறைகளிலும் காலைவைத்துள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார். நடுநிலைமை என்றால் சோ என்று கூறப்படும். இப்போது அதிமுகவிற்கு பாஜக விற்கும் அதிகம் சப்போர்ட் செய்வது போல்தான் தோன்றுகின்றது.

தமிழ்நாட்டின் நாடக உலகில் சோ ஒரு முக்கிய மைல் கல். இன்று நாடகம் நடத்து கிரேஸி மோகன், மெளலி போன்றவர்களுக்கு இன்ஸ்பெரெஷன். சில வருடங்களுக்கு முன்பு அவர் மீண்டும் நாடகம் போட்ட போது அரங்கு நிறைந்தது. பெரும்பாலனவர்கள் இளைஞர்கள்.

அரசியல் கலந்த நாடகங்களை எம்.ஆர். ராதாவிற்கு பின் வெற்றிகரமாக நடத்தியவர் சோ. சோவின் நாடகங்களும் பலத்த கலவரங்களுக்கு நடுவில் நடந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டுள்ளேன். படம் வெளிவந்த போது கலட்டா நடந்துள்ளது.

22 நவம்பர் 2012

விழா மாலைப் போதில் - அசோகமித்திரன்

கிழக்கு வெளியிட்டுள்ள குறுநாவல் தொகுப்பு. மொத்தம் நான்கு குறுநாவல்கள்.

பெரும்பாலன புத்தகங்கள் எல்லாம் ஏற்கனவே அவசர கதியில் படித்தவை. இப்போது அனைத்தும் இரண்டாம் ரவுண்ட்.

1. இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
2. விழாமாலைப் போதில்
3. என்றும் இன்று
4. மணல்

இன்ஸ்பெக்டர் செண்பகராமன்

ஒரு சிறுவனுக்கும் ஒரு இன்ஸ்பெக்டருக்கும் இடையிலான நட்பை பற்றிய கதை. ஐந்தாவது பாரம் படிக்கும் ஒரு சந்திரசேகரன் கூடப் படிக்கும் சினேகிதன் காந்திமதி. காந்திமதியின் மாமா இன்ஸ்பெக்டர் செண்பகராமன். ஒரு நாள் காந்திமதியுடன் வீடு திரும்பும் சந்திரசேகரனை சந்திக்கும் செண்பகராமன், அவனைப் பிடித்து போக அவனுடன் நட்பாகின்றார்.

சினிமாவிற்கு சந்திரசேகரனின் குடும்பத்தை அழைத்து செல்கின்றார், அவன் உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றார். அதோடு அவனை வேறு ஒரு இடத்திற்கும் அழைத்து செல்கின்றார். அந்த இடத்தில் இருக்கும் பெண், செண்பகராமனின் மனைவிக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவளாக இல்லை.

ஒரு நாள் செண்பகராமன் இறந்து போகின்றார். செண்பகராமன் தொடர்பில் இருக்கும் பெண்ணை பார்க்க விரும்புகின்றார், அது நிறைவேறாமல் இறந்து போகின்றார். அந்த பெண்ணை கண்டு சந்துரு செண்பகராமன் குடுத்த பணத்தை தந்துவிட்டு விஷயத்தை சொல்கின்றான். கதை முடிந்தது.

இந்த சந்துருவும் 18ம் அட்சக்கோடு சந்துருவும் ஒரே ஆள் என்ற எண்ணம் தோன்றுகின்றது. அவனின் நாடக அனுபவம், லான்சர் பாரெக்ஸ் எல்லம் அதே போல் உள்ளது.  மிகச்சிறிய கதை, கொஞ்சம் பெரிய சிறுகதை என்றுதான் சொல்ல வேண்டும்.

18 நவம்பர் 2012

ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா

சாரு நிவேதிதாவின் பத்திகளை விகடனில் படித்ததுண்டு. அவரின் தளத்திலும் படிப்பதுண்டு. அவரின் எழுத்து நடை, சொல்வதை மிக எளிமையாக சொல்வதும் எனக்கு பிடிக்கும். உள்ளடக்கம் சில சமயம் எரிச்சலாக இருக்கும், ஆனாலும் சுவாரஸ்யமான நடைக்கு சொந்தக்காரர். சில சிறுகதைகள் மிகச் சிறப்பாக இருக்கும்.

ஜீரோ டிகிரி புத்தகத்தை பலரும் ஆஹோ, ஓஹோ என்று பாராட்டுகின்றார்களே என்று வாங்கினேன். பல முறை படித்து விட்டேன். ஒரு எழவும் புரியவில்லை. இதைப் பாராட்டுபவர்கள் இதைப் பற்றி எழுதுவது அதைவிட குழப்பமாக உள்ளது. //முதலில் படித்தேன் புரியவில்லை சனிகிழமை மட்டும் புரியும், இருவது வயதில் புரியவில்லை, இருபத்திரண்டு வயதில் புரிகின்றது//. கடவுள், இசை, ஆன்மீகம் என அனைத்தையும் அதனுடன் சம்பந்தப்படுத்தி பேசுகின்றனர். அப்புத்கத்தின் ஒவ்வொரு அந்தியாயத்திற்கும் பிண்ணனி இசை அமைக்கின்றனர். இது ஏதோ பல்கலை கழகத்தில் பாடபுத்தகமாக உள்ளாதாம்!

நான் லீனியர் புத்தகம் என்பதால் நாமும் நான் லீனியராக படிக்க வேண்டும் போல என்று, கையில் கிடைத்த பக்கங்கள், கடைசி அந்தியாயத்திலிருந்து முதல் அந்தியாயம் வரை (நம்புங்கள், நிஜமாகவே செய்து பார்த்தேன்) படித்து பார்த்தாகி விட்டது. அப்படி ஏன் படிக்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு; என் மூளைக்கு இதை புரிந்து கொள்ளும் சக்தி இல்லையா என்று எனக்கு சந்தேகம வந்து விட்டது. எனக்கான சவாலாக தோன்றியது. கடைசியில் தோல்வியை ஒத்துக் கொள்ள வேண்டிய நிலைதான் வந்துள்ளது.

மெமெண்டோ பாணியில் படிக்க வேண்டுமோ என்னவோ அது ஒன்றுதான் பாக்கி.

இப்புத்தகத்தை பற்றி "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்னும் கதைதான். அனுபவித்தால்தான் புரியும் என்கின்றனர்.

ஒழுக்கமானவர்களுக்குதான் ராஜாவின் உடை கண்ணிற்கு தெரியும் என்பது போல ஆகிறதோ என்ற சந்தேகம். ஜெயமோகன் இதை தமிழின் முக்கிய முயற்சி என்கின்றார். அவரின் விஷ்ணுபுரம் கூட என்றாவது ஒரு நாள் முழுவதும் புரியும் என்ற நம்பிக்கை உள்ளது, ஆனால் இது .....

உண்மையில் இதை யாராவது விளக்க முடியுமா?


17 நவம்பர் 2012

சில புத்தகங்கள் - எச்சரிக்கைகள் 2

கல்கி அலைஓசை முன்னுரையில் ஒரு சம்வத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முறை ரயிலில் பிராயணம் செய்ய நேரிட்ட போது எனக்கும் அத்தகைய அவசியம் ஏற்பட்டது. "தூக்கம்தான் வருவதில்லை! ஏதேனும் ஒரு புத்தகமாவது படித்து வைக்கலாம்!" என்று எண்ணி, திருச்சி ரயில் சந்திப்பில் உள்ள புத்தகக் கடையில் ஒரு புத்தகம் வாங்க சென்றேன். .....
 
புத்தகத்தை பிரித்து படிக்கலானேன். படிக்க ஆரம்பித்ததுமே ஓர் ஐயம் தோன்றியது, ஒரு பாரா படித்ததும் சந்தேகம் அதிகமாயிற்று. ஒரு பக்கத்தை தொடங்கியதும் சந்தேகம் ஊர்ஜிதமாகியது. "அட சட்! இந்த புத்தகத்தை முன்னொருதடவை படித்து தொலைத்திருக்கிறோமே? இதையா மறுபடியும் விலை கொடுத்துவாங்கினோம்? ஐந்தேமுக்கால் ரூபாய் தண்டம்

 அது போன்ற ஒரு அனுபவம் எனக்கும் கிடைத்தது. என்ன அவருக்கு ஐந்தே முக்கால் ரூபாய் எனக்கு எழுபத்தைந்து ரூபாய்.

அசோகமித்திரனின் புத்தகங்களை கிழக்கில் ஆர்டர் செய்தேன். அதில் ஒரு புத்தகம் "இன்று". வந்தவுடன் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன், முதலில் ஒரு சந்தேகம் வந்தது எங்கோ படித்த மாதிரி உள்ளதே என்று. முதல் பக்கம் தாண்டியவுடன் முழுவதும் தெரிந்து விட்டது அது ஏற்கனவே வேறு ஒரு குறுநாவல் தொகுப்பில் உள்ள கதை என்று. தலைப்பை மாற்றி உள்ளனர். "விழா மாலைப் போதில்" என்னும் குறுநாவல் தொகுப்பில் அதன் பெயர் "என்றும் இன்று". நொந்து கொண்டு அலமாரியில் பத்திரமாக வைத்தேன்.

இதை விட எரிச்சல் இரண்டும் கிழக்கு பதிப்பகம். "இன்று" 75, அதோடு சேர்த்த 4 நாவல்களின் தொகுப்பு 150. பதிப்பு வருடம் வேறு, "இன்று" 2006, தொகுப்பு 2009. நாவலின் பெயரை மாற்றாமலிருந்திருந்தால் தெரிந்திருக்கும்.

இப்பொது அனைத்து புத்தகங்களும் முழுத் தொகுப்பாக வருகின்றன. எனவே புத்தகம் வாங்கும் முன் தெளிவாக பார்த்து விட்டு வாங்கவும். ஆன்லைனில் புரட்டி பார்த்து வாங்கும் வசதி இல்லை, அவர்கள் சேர்க்கும் ஒன்றிரண்டு வரிகளை படித்து எந்த முடிவிற்கும் வர முடிவதில்லை.

பதிப்பகத்தாரும் என்ன செய்வார்கள் அனைத்து விவரங்களையும் ஆன்லைனில் அப்டேட் செய்ய முடியாது, அட்லீஸ்ட் அவர்கள் சொந்த பதிப்பகத்தில் வரும் புத்தகங்களை பார்த்து அப்டேட் செய்தால் புண்ணியம் கட்டிக் கொள்வார்கள். இது போன்ற நாவல் தொகுப்புகளில் பெயரை மாற்றாமலும், அது தனியாக வந்துள்தா என்று ஒரு சிறிய குறிப்பும் இருந்தால் என்னைப் போன்ற ஆன்லைன் சோம்பேறிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

முடிந்தவரை நன்றாக தெரிந்த புத்தகத்தை மட்டும் ஆன்லைனில் வாங்கவும். இல்லையென்றால் என் போல் "ஙே" என்று முழிக்க வேண்டியதுதான்.

அப்பம் வடை தயிர்சாதம் - பாலகுமாரன்

பாலகுமாரனின் எழுத்துக்களை முதலில் பார்த்தது கல்லூரியில், என்னுடன் படித்த ஒருவன் கையில். இரும்பு குதிரைகள். அவனுடன் கல்லூரியில் ஒரு கோஷ்டி கையில் பாட புத்தகங்களை விட பாலகுமாரன், ஜெயகாந்தன் புத்தகங்களை வைத்துக் கொண்டு திரியும். இதோடு ஓஷோ புத்தக்ங்கள் வேறு. அவர்களைப் படிப்பதாலே அவர்களின் இடத்தில் தான் இருப்பதாக நினைத்து கொண்டு, கொஞ்சம் ஓவராக பேசித்திரியும் அந்தக் கூட்டம்.

பாலகுமாரன் பலரிடம் பெரிய மாற்றத்தை உண்டாக்கி இருந்தாலும் இது போன்ற அறைகுறைகளையும் உண்டாக்கியிருக்கின்றார். கதையின் நடுவே அவர் பேசுவது போலவே பேசுவது, தேவையில்லாத நாடகத்தனம். மொத்தத்தில் எல்லாம் தெரிந்த ஏகாம்பர பெருங்காய டப்பாக்களை உண்டாக்கி இருந்தார் என்ற எண்ணம் எனக்கு வலுவானது.இது ஜெயகாந்தனுக்கும் பொருந்தும் அதனாலேயே எனக்கு கொஞ்சம் ஜெயகாந்தனை, பாலகுமாரனை படிக்க தயக்கமாக இருந்தது.

அதே சமயம் விகடனில் ஒரு புதிய தொடர் ஆரம்பித்தனர் "அப்பம் வடை தயிர்சாதம்"  என்னடா பாலகுமாரன் சமையல் குறிப்பு ஆரம்பித்து விட்டாரா என்று எண்ணிக் கொண்டுதான் படித்தேன். பின்னர் புத்தகமாக வாங்கினேன்.




09 நவம்பர் 2012

நில்லுங்கள் ராஜாவே - சுஜாதா

இரவு தூக்கம் வராமல் கைக்கு கிடைத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அது "நில்லுங்கள் ராஜாவே". நல்ல விறுவிறுப்பான நாவல்.

ஒரு நாள் அலுவலகத்திற்கு போகும் போது உங்களுக்கு பதில் வேறு யாரோ உங்கள் பெயரில் உங்கள் இடத்தில் அமர்ந்து கொண்டு, யார் நீ என்றால் எப்படி இருக்கும்? ஒருவனின் ஐடென்ட்டி இன்னொருவனால் உபயோகப் படுத்தப் பட்டு, இரண்டு நான் கள் இருந்தால் என்ன ஆகும்.

ஜவகர்விட்டல் அலுவலகத்திலும், வீட்டிலும் அவன் அவனிலை என்று விரட்டப் படுகின்றான். குழந்தை, மனைவி, மச்சினிச்சி முதல் பக்கத்து வீட்டுக்காரன் வரை அடையாளம் தெரியவில்லை. காவல் துறையும் அவனை ஏற்க மறுக்கின்றது.

கடைசியில் தன் இடத்தில் உள்ளவனை கொலை செய்ய முயற்சி செய்து, போலிஸ் கஸ்டடியில் செல்கின்றான். அவனை பரிசோதித்த மருத்துவர், அவன் நார்மல் என்று அறிக்கை அளித்தாலும், சந்தேகப் பட்டு கணேஷிடம் அவன் கேஸை ஒப்படைக்கின்றார். ஜாமினில் கொண்டுவரப்படும் அவன் காணாமல் போக, கதை அதன் பின் ஒரே மூச்சில் பாய்கின்றது. 

டிபிகல் சுஜாதா டச். வசந்தின் குறும்பு "மச்சினிச்சி அடையாளம் ஏதாவது சொல்லுங்க", மருத்துவ விஷயங்கள், மூளையை வசப்படுத்துவது பற்றிய விஷய்ங்கள், சிஐஏ, கம்யூனிசம் என்று எங்கெங்கோ போகின்றது. கடைசியில் ஒரு சர்வதேச சதியை கண்டறிவதில் முடிவடைகின்றது.

கதையின் தலைப்பை முதலில் தந்து விட்டு கதையை யோசித்திருப்பார் போல, சும்மா அதை நடுவில் சேர்த்திருக்கின்றார். (ஒரு பெண் தன்னைத் தேடும் அவனைப் பார்த்து "நில்லுங்க ராஜா" என்கின்றாள், அவ்வளவுதான் கதைக்கும் தலைப்பிற்கும் தொடர்பு) தொடர்கதையை எந்த வேகத்தில் எழுதினாரோ, மருத்துவமனை ரிசப்ஷனிஸ்டுக்கு ஒரு பெயரை வைத்து, அடுத்த அந்தியாயத்திலேயே மீண்டும் வேறு ஒரு நாமகரணம் செய்து வைத்துள்ளார். 

அங்கங்கு கொஞ்சம் காதுல பூ என்றாலும் நல்ல விறுவிறுப்பான நாவல். இதைப் படிக்கும் போது எப்போதோ படித்த "மூன்று நிமிஷம் கணேஷ்" நினைவிற்கு வருகின்றது.ஒருவன் "நிமிஷா நிமிஷா நிமிஷா" என்று கூறிவிட்டு இறக்க, அது கணேஷையும் வசந்தையும் எங்கோ கொண்டு செல்லும். இரண்டிற்கும் அடிப்படை ஒன்றுதான் இதில் மருத்துவம், அதில் பொறியியல்.

உயிர்மையின் சுஜாதா குறுநாவல் தொகுப்பு பாகம் 4ல் உள்ளது.

07 நவம்பர் 2012

மானசரோவர் - அசோகமித்திரன்

அசோகமித்திரனைப் பற்றி நான் புதிதாக சொல்ல ஏதுமில்லை. இது அவரின் மற்றுமொரு சினிமா துறை பற்றிய நாவல். ஒரு எழுத்தாளனுக்கும், ஒரு சினிமா நடிகனுக்கும் உள்ள நட்பை பற்றிய கதை. கரைந்த நிழல்கள் போல் முழுவதும் சினிமா பின் சுற்றாமல் அந்த இருவரைச் சுற்றியே வருகின்றது.

கதையை எழுத்தாளனும் அவரது நண்பன் சினிமா நடிகனும் மாறி மாறி கூறிச்செல்கின்றார்கள். தமிழ் சினிமாவில் நடிக்கும் இந்தி நாயகன் சத்தியன் குமார், அவன் சினிமா தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரியும் ஒரு  எழுத்தாளர் கோபாலைக் கண்டு அவரிடம் நட்பு கொள்கின்றான். அந்த நட்பால் கோபாலுக்கு  அந்த கம்பெனியில் ஒரு மதிப்பு ஏற்படுகின்றது. ஒரு நாள் கோபாலனின் மகன் இறந்து போகின்றான், மனைவியின் மனநிலையும் தவறுகின்றது. மகன் இறந்ததை விட அவன் இறப்பிற்கு காரணம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது. வீட்டை விட்டு கிளம்பி எங்கோ செல்கின்றார்.

சத்தியன் குமார் அவரைத் தேடி அலைகின்றான் இதனிடையில் கோபாலனுக்கு தெரிந்த ஒரு பெண்ணை கூட்டிக் கொண்டு சென்று தன் வீட்டில் வைத்துக் கொள்கின்றான். கடைசியில் ஒரு கிராமத்தில் ஒரு ஓடைக் கரையில் ஒரு சித்தருடன் இருக்கும் எழுத்தாளரை சந்திக்கின்றான். சித்தர் அவனின் மானசரோவரை அவனுக்கு அடையாளம் காட்டுகின்றார்.

06 நவம்பர் 2012

கிருஷ்ணா கிருஷ்ணா - இந்திரா பார்த்தசாரதி

 
"இந்நாவலில் உங்களுக்கு திரேதாயுகத்து கிருஷ்ணனும் தெரிவான்;21ம் நூற்றாண்டுக் கிருஷ்ணனும் தெரிவான். காலம் கடந்தவன் என்பதால் அல்ல; காலமாகவே நிற்பவன் என்பதால்" புத்தகத்தின் பின்னட்டையில்
 
இந்திய இதிகாச நாயகர்களுள் முக்கியமானவன் கிருஷ்ணன். பாகவதம், மகாபாரதம் போன்ற காவிய இதிகாசங்களின் முக்கிய பாத்திரம். அவற்றின் நாயகன் அவனல்ல, அவனில்லாமல் அக்காவியங்களில் ஒன்றுமில்லை. ராமாயணம், பாரதம் என்ற இரண்டு பெரும் இதிகாசங்களில் ராமாயணம் மக்களை சேர்ந்த அளவிற்கு பாரதம் போய்ச் சேரவில்லை என்பது என் எண்ணம்.

ராமாயணத்தைப் பற்றி எத்தனை விவாதம், எத்தனை மொழிபெயர்ப்பு, வித விதமான ராமாயணம். ஆனால் பாரதம்? தமிழில் கம்பராமாயணம் அனைவருக்கும் தெரியும், ஆனால் பாரதம் என்றால் சற்றே யோசித்தால் தான் வில்லிபுத்துரார் நினைவிற்கு வருகின்றார். அதைவிட்டால் பாரதியாரின் பாஞ்சாலி சபதம்.

பாரதம் மக்களிடம் முழுமையாக போய் சேராவிட்டாலும், அதன் கதைகள், கிளைக் கதைகள் மக்களிடம் உள்ளது. அதில் முக்கியமானது கிருஷ்ணனின் கதைகள்.

02 நவம்பர் 2012

சி.ஐ.டி சந்துரு - தேவன்


 தேவனின் புத்தகங்களை ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கலாம் என்று எண்ணினேன். புதிய புத்தகங்களுடன் இதுவும் ஒரு சைட் டிராக்காக ஓடட்டும் என்று. சி.ஐ.டி சந்துருவை படித்திருந்தாலும் அதை விட்டு விட்டு படித்ததில் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. எனவே ஒரே மூச்சில் படிக்கலாம் என்று நினைத்தேன் முடிக்க மூன்று நாளாகியது.


தேவனின் எழுத்து திறமை பற்றி சுதர்சனத்திலேயே கூறிவிட்டாலும் மீண்டும் ஒரு முறை. அவர் எழுத்து புதிதாக தமிழ் படிப்பவர்கள் படிக்க வேண்டிய எழுத்து. சிறு வயதினருக்கு ஒரு தலையணை போன்ற நவீன நாவலை தந்தால் அவர்கள் அதோடு புத்தகம் பக்கம் செல்லும் நினைப்பை மறந்துவிடுவர். தேவன், கல்கி எல்லாம் ஒரு நல்ல ஆரம்பம்.

சி.ஐ.டி சந்துரு தேவனின் மற்றுமொரு கதாபாத்திரம். சாம்புவிற்கு நேர் எதிரிடையான கதாபாத்திரம். சாம்பு குருட்டு அதிர்ஷ்டத்தால் கண்டுபிடிப்பதை, சந்துரு தன் மூளையால் கண்டுபிடிக்கின்றான். கதை விகடனில் தொடராக வந்துள்ளது. தொடர்கதைக்கு ஏற்ற திருப்பங்களுடன் பரபரவென இருக்கின்றது.

01 நவம்பர் 2012

ஆகாயத்தாமரை - அசோகமித்திரன்

"உடனே அங்குமிங்கும் சுற்றிப் பார், அலைந்து பார், தேடிப் பார். இந்த வேலையை விட்டொழித்துவிட்டு உடனே வேறிடத்தில் சேர்ந்துக்கொள். சொல்லாதே, என்னிடம் சொல்லாதே."

"உன்னுடைய இன்றைய எஜமானனுக்கு உன்னைத் துரோகம் செய்ய வைப்பவனாக என்னை மாற்றாதே."

ஒரு இளைஞனுக்கு இரவில் முகமறியா ஒருவர் செய்யும் உபதேசத்தில் ஆரம்பிக்கின்றது.

ஆகாயத்தாமரை என்பது குளம் குட்டைகளை நாசப்படுத்தும் ஒரு தாவரம் என்றுதான் தெரியும். ஆனால் ஆகாயத்தாமரை என்பதை, ஆகாயத்தில் உள்ள தாமரை என்று இல்லாத ஒரு பொருளுக்கு உவமையாக்குகின்றார்.